Samstag, 9. April 2016

பூவரசு கட்டுரைப் பக்கங்கள் -4

பூவரசு - இனிய தமிழ் ஏட்டின் பக்கங்களில்
திருமதி மகேஸ்வரி வரதராஜா [1949- 2014]  என்னும் படைப்பாளி


ஜெர்மன் வாழ் தமிழ் மாணவர்களிடையே மூத்த தமிழ் ஆசிரியையாக அறியப்பட்டவர் திருமதி மகேஸ்வரி வரதராஜா.

பரிவும் பாசமும் நிறைந்த அந்தத் தாயுள்ளத்தில் இயல்பாகவே இனப்பற்று மொழிப்பற்று நாட்டுப்பற்று என்பன மிகுந்திருந்தன.

ஒரு இல்லத் தலைவிக்குரிய அத்தனை பொறுப்புக்களையும் சுமந்து கொண்டு,  என் இனம் என் சனம் என்று சமூகப்பணிகளையும் சளைக்காது ஆற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான்!

ஊடகச் செம்மல் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் துணைவியாக, கணவரின் சமூகப் பணிகளிலும் அவருக்கு உறுதுணையாக அவர் இருந்தார். அதனால்தானோ என்னவோ எழுத்தாற்றலும் அவரிடத்தே இயல்பாகத் தோன்றியிருந்தது.



பூவரசு இனிய தமிழ் ஏட்டின் ஆரம்ப காலங்களில் இளையோர்க்கான ஆக்கங்களை வெளியிட்டபோது புஷ்பா அக்கா என்னும் புனைபெயருக்குள்  நின்று அவர் இளையோர்க்கான ஆக்கங்கள் பலவற்றை எழுதினார்.

நாளடைவில் கதை, கவிதை, கட்டுரை என்ற வகைகளுக்குள் அமைந்த அவரது பல ஆக்கங்கள் பூவரசில் இடம்பிடித்துக் கொண்டன.
பூவரசுக்கும் அதன் படைப்பாளர்கள் வாசகர்களுக்கும் படைப்பாளியான மகேஸ்வரி வரதராஜா மிகவும் பரிச்சயமானவர்.

பூவரசு விழாமேடைகளில்  அறிஞர்களோடு அறிஞராய் கருத்தரங்குகளிலும், கவிஞர்களோடு கவிஞராய் கவியரங்குகளிலும், பேச்சாளர்களில் ஒருவராய் பட்டிமன்றங்களிலும் அவர் தன் கலை இலக்கிய ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார். தனது இறுதி மூச்சுவரை மொழிக்காக இனத்துக்காக நாட்டுக்காக என்று அவர் ஆற்றிய பணிகள் என்றும் அவரது நினைவை எம்மிடம் நிலைநிறுத்தி வைத்திருக்கும்.

அன்பன்
இந்துமகேஷ்
(ஆசிரியர்: பூவரசு);

(நினைவுமலர் 2014)







தமிழ் இலக்கியத்தில் பெண்கள்
திருமதி மகேஸ்வரி வரதராஜா
உலகம் தோன்றி, மலைகள் தோன்றி, அவை பாறையாகி, அவை கரைந்து மணலாக மாறிய காலத்தில் தமிழ் மக்கள் தோன்றினர் என்றும், அவர்கள் பைய நாவை அசைத்தபோதே தோன்றிய மொழி தமிழ்மொழி என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

உலகில் இன்று பேசப்படும் மொழிகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவை. அவற்றுள் எழுத்து உள்ள மொழிகள் எழுநூற்றுக்கும் உட்பட்டவை. அவற்றுள் சிறந்த இலக்கண இலக்கியங்கள் உள்ள மொழிகள் இருநாற்றுக்கும் சற்று அதிகமானவை. இத்தனை மொழிகளுக்கும் இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு.
சிறப்புகள்: ஒன்றிரண்டு அல்ல பதினாறு! அவை

1. தொன்மைச்சிறப்பு      9. ஒலிச்சிறப்பு
2. சுழிச்சிறப்பு                   10. கலைச்சிறப்பு
3. எழுத்துச்சிறப்பு           11 கவிதைச்சிறப்பு
4. சொற்சிறப்பு                  12 மருத்துவச் சிறப்ப
5. பெயர்ச்சிறப்பு               13. இசைச்சிறப்பு
6. இனிமைச்சிறப்பு         14. நாடகச்சிறப்பு
7. எளிமைச்சிறப்பு           15 இலக்கியச் சிறப்பு
8. தனிமைச்சிறப்பு          16. இலக்கணச் சிறப்பு என்பன.

உலகம் எப்படித் தோன்றியது? மலைகள் எங்கிருந்து தோன்றின? மண், நீர் நெருப்பு, முதலியவை எப்படித் தோன்றின? என்று மிகப் பழங்காலத்தில் நிகழ்ச்சிகளை அறிந்துகூறும் ஆற்றல்படைத்த வல்லுனர்களாலும் தமிழ் தோன்றிய காலத்தை அறிந்து கூறமுடியாது என்பது தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாருடைய கருத்து.

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் அறிந்திடும்
தொல்புவி வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய் - என்பது அவரது வாக்கு.

உலகத்தில் மிகத் தொன்மையான நாடு தமிழ்நாடு. உலகத்தில் தொன்மையான மொழி தமிழ் மொழி, உலகத்தின் தொன்மையான இசை தமிழிசை உலகத்தின் தொன்மையான மருத்துவம் தமிழ் மருத்துவம் என்பன தமிழறிஞர்கள் கருத்து. இன்று உலகில் அமெரிக்காவோடும் ரஷ்யாவோடும் சமமான வல்லரசாகத் திகழ்ந்து நிற்கின்ற ஜப்பானிய மக்கள் மட்டுமல்லர் ஜப்பானிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும் எங்களின் தாய்மொழி தமிழ்மொழியிலிருந்து தோன்றியதெனக் கூறி மகிழ்கின்றனர். இது நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

தமிழகத்தின் தமிழ்ச் சான்றோர்களால் எழுதப்பட்டிருந்த தொன்மையான பழஞ்சுவடிகள் பல அழிந்துபோயின. அவை இன்றில்லை.

தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதியை பெண்களே ஆக்கிரமித்துள்ளனர். தேன்மொழியாள் என்றும் கயல்விழியாள் என்றும் சித்திரப் பாவை என்றும் இப்படி எத்தனை விதமான வர்ணனைகள். இவற்றை வாசிக்கும்போது தங்கள் உடலமைப்பு இவ்வளவு அழகு மிகுந்ததா என்ற சந்தேகம் பெண்களுக்கே ஏற்படுவதுண்டு. இயற்கை அழகை இறைவன் பெண்களிடம் அள்ளிக் கொடுத்துள்ளான். சித்திரக் கலையானால் முதலில் பெண்ணை வரையவேண்டும். சிலை வடிப்பவர்கள் முதலில் பெண்ணைச் சிலைவடிக்கவேண்டும். கவி படைக்கும் கவிவாணர்கள் முதலில் பெண்ணைப்பற்றித்தான் கவி படைக்கவேண்டும். இவை மரபுவழி வந்தவை.

ஊர்ப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு
உண்பதற்குப் பிடிவாதம் பிடித்தபோது -நான்
ஓங்கிய கோல்கண்டு ஓடிய என் மகனா
மார்பில்தாங்கிய கணையுடனே
தாயகத்தை மீட்கும் போரில்
தன்னுயிரைத் தருவதற்கு துணிந்துநின்றான்?

வீரத்தாயைப் புகழ்ந்துபாடும் புறநானூற்றுப் பாடலின் தெளிவான வரிகள் இவை. சங்கப்புலவர் பொன்முடியார் பாடிய பாடல் இது.
தாயகத்தை மீட்பதற்கு சிறுவர்களும் போர்க்களம் புகுந்து மாண்டுள்ளனர் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள இலக்கிய இதிகாசங்கள் விளக்குகின்றன. இருப்பினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வகையான போர்க்கால இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன.


உதாரணத்திற்கு தமிழ்ப்பெண் இன்று பனைமரம் ஏறுகிறாள். ஆண்களால் மாத்திரமே பாவிக்கப்படும் யுத்தக் கருவிகளை தமிழ் வீரப்பெண் அனாயாசமாகக் கையாள்கிறாள்.

உடலில் அதி பயங்கரமான வெடிமருந்துகளைக் கட்டிக்கொண்டு தம்மையும் அழித்து எதிரிகளின் பாதுகாப்பு அரண்களையும் பெண்கள் தகர்த்து எறிகின்றார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழீழ விடுதலைப்போரில் ஆண்களுக்கு சரிநிகர் சமமாக தமிழ்ப்பெண்களும் போர்க்களத்தில் சாதனை நிகழ்த்திவருகிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற பூநகரித்தாக்குதலில் முதலில் அழிக்கப்பட்ட நாகதேவன் துறை அதிரடித் தாக்குதலில் தமிழ்ப்பெண்புலிகள் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் எதிர்கால இலக்கியங்களாக பரிணமிக்கத்தான் போகின்றன.
ஆயிரமாயிரம் வருடங்களின்பின் வீரத் தமிழ்ப்பெண்களின் சாதனைகளாக இடம் பெறப்போகின்றன. தமிழீழப் பாடசாலைகளில்; மாணவர்கள் இவற்றை சரித்திரங்களாகவும் போர்க்கால இலக்கியங்களாகவும் கல்விகற்கப் போகின்றார்கள்.
புறநானூற்று கால சங்கத்தமிழ்ப்; புலவர்கள் இயற்றிய கவிதைகளை விட தத்ரூபமாக புரட்சிகரமாக இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளருக்கு இந்த யுகத்தில் அரிய சந்தர்ப்பம ஏற்பட்டுள்ளது.
(1994 இல் பூவரசு 3வது ஆண்டுநிறைவுக் கலை, இலக்கிய விழாவில் திருமதி மகேஸ்வரி வரதராஜா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் இவை.)