Sonntag, 22. Januar 2017

சில நினைவுகள்...

சில நினைவுகள்


- இராஜன் முருகவேல்.



பூவரசு 5வது ஆண்டை நிறைவுசெய்து 6வது ஆண்டில் காலெடுத்து வைக்கிறது.
ஐரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகளுள் இலக்கிய நயத்துடனும் பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இதழுக்கு இதழ் வித்தியாசங்களுடனும் நடுநிலை பிறழாது அனைத்துத் தரப்பு வாசகர்களையும் அணைத்துச் செல்லும் பூவரசு மாதசஞ்சிகையையும் அதன் ஆசிரியர் திரு. இந்துமகேஷ் அவர்களையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.


தாயகத்தில் ஈழத்து எழுத்துலகில் நியூவேவ் எழுத்தாளர் எனத் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த இந்துமகேஷின் எழுத்தின் இனிமை- நியூவேவ் என்ற பதத்திற்கு அர்த்தம் சேர்த்த அந்தக் கனவுகளைத் தூண்டிவிடும் போக்கு ஜெர்மனியில் குறுநாவல்கள் வெளியிடும்வரை தொடர்ந்து பூவரசில் குறைந்தது அல்லது மறைந்தது பெருங்குறையாயினும் அவரது எழுத்தின் முதிர்ச்சி சஞ்சிகைக்கு இலக்கியநயம் சேர்ப்பதை மறுக்கமுடியாது.
ஒரு தனிமனித முயற்சியில் புகலிட இலக்கியத்தில் ஆழவேரூன்றி வளரும் பூவரசு சஞ்சிகையைப் பாராட்டும் வேளையில் கடந்த காலங்களில் ஜேர்மனியில் தோன்றி மறைந்த சஞ்சிகைகளையும் மறக்கமுடியாது.

அதிலும் 1985 ஆனிமாதம் வசந்தம் என்ற சஞ்சிகையை உருவாக்க நானும் என்னுடன் லங்கென்பீல்ட் நகரில் வசித்த சில நண்பர்களும் அடைந்த சிரமங்களை பூவரசு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

1985ல் சஞ்சிகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடான நேரம்
எங்காவது தூர இடங்களுக்குச் சென்றே சஞ்சிகைகளையோ கதைப் புத்தகங்களையோ தேடி வாங்கவேண்டிய நிலை. இந்த நிலையில்தான் நாமே ஏன் ஒரு சஞ்சிகையை உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது.

சஞ்சிகை ஒன்றைத் தொடங்கத் தீர்மானித்தோமே தவிர அதைப்பற்றிய முன் அனுபவம் எம்மில் எவருக்குமே கிடையாது. எனினும் குமுதம், கல்கி போன்ற இந்தியச் சஞ்சிகைகளையும் சிரித்திரன், மல்லிகை, கதம்பம், மாணிக்கம், கலாவல்லி, கலகலப்பு போன்ற ஈழத்துச் சஞ்சிகைகளையும் வாசித்த அனுபவங்களையும் கொண்டு வசந்தம் வெளிவந்தது.

1985ஆம் ஆண்டு ஒரு நகரத்தைவிட்டு இன்னோர் நகரத்துக்குச் செல்லமுடியாது தடை. தற்போது உள்ளதுபோல் இருபக்கமும் பிரதி பண்ணக் கூடிய போட்டோக்கொப்பி இயந்திரம் லங்கென்பீல்ட் என்ற சிறிய நகரத்தில் கிடைக்கவில்லை. அதனால் வசந்தம் ஆரம்பத்தில் ஒவ்வொரு பக்கம் ஆக்கமும் மறுபக்கம் வெறுமையாகவும் வெளிவந்தது.

இந்தவேளையில் திரு. இந்துமகேஷ் அவர்களின் கையெழுத்தில் அவரது குறுநாவல்கள் வெளிவந்தன. அவை தரத்திலும் வடிவமைப்பிலும் வசந்தத்திலும் ஒருபடி மேலே நின்றன. இதனால் வசந்தத்தின் வடிவமைப்பில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம்  ஏற்பட்டது. ஒருவாறாக இருபக்கமும் பிரதி செய்யக்கூடிய போட்டோப்பிரதி இயந்திரத்தை டுசில்டோவ் என்ற நகரில் கண்டுபிடித்தோம். ஆனால் அந்த நகரத்திற்குச செல்ல அனுமதி இல்லை.
அப்போது அந்த நகரப் புகையிரத நிலையத்தில் பொலிசாரின் தொல்லைகளும் அதிகம். எனினும் சஞ்சிகை வெளிவரவேண்டும் என்ற ஆவல் சட்டத்தை மீறவைத்தது.
முதலாவது வசந்தம் சஞ்சிகை 1985 ஆனி மாதம் லங்கன்பீல்ட், சோலிங்கன், இராட்டிங்கன், ஒபகௌசன் போன்ற நகரங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு சஞ்சிகையைப் புதிதாக வெளியிடுவதானால் ஏனைய சஞ்சிகைகளிலோ பத்திரிகைகளிலோ விளம்பர்ம செய்வதன் மூலமாக சஞ்சிகையைப் பரவலாக்கலாம். அன்று அந்த வசதி இல்லாவிட்டாலும் வசந்தம் நாம் விநியோகித்த நகரங்களைவிட வேறு சில நகரங்களுக்கும் மெதுவாகப் பரவி சில எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் தாங்கியது. இவ்வாறு வசந்தத்தை அலங்கரித்த எழுத்தாளர்களுள் பாலா(எசன்) சிவம் (லூனன்) ரூபன் (முல்கைம்) பாபு, கலைநிலா, நந்தன் (ஒபகௌசன்) போன்றோர் நினைவில் நிற்கிறார்கள்.
நாம் எதிதர்பார்த்தவாறு வசந்தம் பரவாவிட்டாலும் மாதாமாதம் எம்மை நாடி வந்த வாசகரின்  நாலைந்து கடிதங்கள்கூட எமக்கு உற்சாகமூட்டக் கூடியனவாக இருந்தன.

எனினும் சஞ்சிகை உற்பத்திச் செலவு, விநியோகப் போக்குவரத்துச் செல்வு ஆகியன எமக்குப் பொருளாதாரச் சுமைகளை ஏற்படுத்தியதால் வசந்தம் தொடர்ந்து வெளிவரமுடியாமல் நின்றது.

வசந்தம் மூன்று  இதழ்கள் வெளிவந்தவேளையில் நொயிஸ் நகரத்திலிருந்து நம்நாடு என்ற சஞ்சிகையும், அதனைத் தொடர்ந்து அறுவை, கலைவிளக்கு, ஏலையா போன்ற சஞ்சிகைகளும், தட்டெழுத்தில் தூண்டில், பிரளயம் போன்ற சஞ்சிகைகளும் தோன்றி காலப்போக்கில் சஞ்சிகைகளின் தோற்றம் பரவலாகினாலும் இவற்றில்பல முக்கியமாகப் பொருளாதாரப் பிரச்சினைகளால் தொடர்ந்து வெளிவராமை துரதிர்ஷ்டமே. 

ஆரம்பத்தில் தென்றல் கலைவிளக்கு சஞ்சிகைகளின் வெளிப்பாட்டுக்குப் பின்புதான் தமிழ்ச் சஞ்சிகைகளுக்குச் சில ஸ்தாபனங்களின் உதவிகளைப் பெறலாம் எனத் தெரியவந்தது. ஆனால் இந்த உதவிகள்கூட மிகச்சொற்பமானதாகவும் சஞ்சிகைகளின் சுதந்திரமான போக்கை மட்டுப்படுத்துவதாகவுமே அமைகின்றன.

பொதுவாக எழுத்தாளர்களின் படைப்புக்களில் பல, சிகரட்டுக்கு அடிமையாகாதே குடிக்கு அடிமையாகாதே என்ற பாணியில் அறிவுரை கூறும். ஆனால் எழுத்தாளர்களை எழுதாமல் இருக்கச் சொல்லுங்கள் - அவர்களால் முடியாது! ஏனெனில் அவர்கள் எழுத்துக்கு அடிமையானவர்கள். அதில் ஒருவித சுகத்தை அனுபவிப்பவர்கள். அவர்களால் இந்தச் சுகத்தில் இருந்து சுலபமாக மீள முடியாது.
அதுவும் ஜெர்மனியில் ஒரு சஞ்சிகையை உருவாக்கும் வேலை இருக்கிறதே....
ஆக்கங்களைத் தரம்பிரிப்பது. பின் சஞ்சிகைக்கு ஏற்றாற்போல் எழுதுவதோ அல்லது கணணியில் அச்சாக்குவது, பக்கங்களாக அமைப்பது, எஞ்சும் வெற்றிடங்களை நிரப்பத் தலையைப் பிய்ப்பது, போட்டோப் பிரதியெடுக்கப் போவது, பக்கங்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து சஞ்சிகையாகக் கோர்ப்பது, முகவரி எழுதுவது, முத்திரை ஒட்டுவது அவற்றைச் சுமந்துகொண்டு தபாற்கந்தோருக்குச் செல்வது, இவ்வாறு ஒரு மாதம் கழிய மீண்டும் வாசகரின் கடிதங்களையும் ஆக்கங்களையும் படித்துத் தரம்பிரிப்பது, சுயமாக எழுத முயற்சிப்பது இவற்றிற்கு மத்தியில் தன் குடும்பத்தைக் கவனிப்பது....
இவ்வாறான ஒரு கஷ்டத்துடன் சஞ்சிகை வெளியிடுவதன் நோக்கம் என்ன என்பதைப்பற்றிச் சில தாயக எழுத்தாளர்கள் சிறிதும் சிந்திக்காமல் தமது சாந்த குணம் களைந்து காழ்ப்புணர்ச்சியோடு எரிமலையாகக் குமுறி இத்தகைய புகலிட முயற்சிகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை அறியும்போது வேதனையாகக்கூட இருக்கிறது. ஆனால் இத்தகைய கொச்சைப்படுத்தும் போக்கானது அவர்களது எழுத்தாளத் தன்மையை வாசகர்களுக்கு அம்பலப்படுத்தி உண்மையைத் தெளிவாக்கும் என்பதுதான் கண்கூடு.


(பிரசுரம் - பூவரசு ஐந்தாவது ஆண்டுநிறைவுமலர் தை-1996)