Mittwoch, 4. September 2019

நீங்காத நினைவுகள் - பூவரசு வாசகர் அரங்கம் 2004



பூவரசு கலை இலக்கியப்பேரவையின் 
வாசகர் அரங்கம் 2004.




மலர்களின் தோட்டமாய் அரங்கினை நிறைத்த இளந்தளிர்களின் 
இன்பத்தமிழ் மணம் கமழ, பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 13வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் பிறேமன் நகரில் 21.02.2004 சனிக்கிழமை நடைபெற்றது.

திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி யமுனாவதி நடராஜா ஆகியோர் மங்கள விளக்கேற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அமைதி வணக்கமும், திரு.சு.நடராஜா அவர்களால் இறைவணக்கப்பாடலும், எங்கள் இளந்தளிர்களால் |உலகமே நம் இல்லம், எனும் பூவரசின் தமிழ்வணக்கப் பாடலும் இடம்பெற்றன.
வரவேற்புரையை பூவரசு கலை இலக்கியப்பேரவையின் இணைச் செயலாளர் திருமதி ஆனந்தஈஸ்வரி திவ்வியமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.
திருமதி வில்ரூட் கடெல்கா ஜெர்மன் மொழியில் பூவரசுக்கான தனது வாழ்த்துக்களை வழங்கினார்.
தொடர்ந்து இளந்தளிர்கள் வழங்கிய |இது எங்கள் நேரம்| எனும் தலைப்பிலான மழலையர் நிகழ்வுகள் ஆரம்பமாயின. பங்குகொண்ட அத்தனை மழலைச்செல்வங்களும் தத்தம் மொழித் திறனை வெளிக்கொணர்ந்து தமிழின் அழகை வெளிப்படுத்தினர். பாட்டுக்கள் பாடியும், கதைகள் சொல்லியும் அவுர்கள் தமது மொழித்திறனை வெளிப்படுத்திய பாங்கு அருமையாக இருந்தது.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக இளையோர் பங்குகொண்ட புதியதோர் உலகம் கவியரங்கு இடம்பெற்றது.
சமகாலத்தில் நம்மிடையே வரும் பாரதியார் தற்காலப் பெண்களின் முன்னேற்றம் குறித்து மகிழ்வுகொள்வதாக இந்துமகேஷ் எழுதிய கவிதைகளை இளந்தளிர்கள் அற்புதமாக வெளிக்கொணர்ந்தனர். இந்த இளையோர் கவியரங்கின் நெறியாள்கையை திருமதி சாந்தராணி பத்மகுமார் அவர்களும் ஒப்பனையை செல்வி ஜெயராணி செல்லத்துரை அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.

 "புலம்பெயர் மண்ணில் தமிழ் தேய்கிறது என்று புலம்புகிறவர்கள் வந்து பார்த்திருக்கவேண்டும் இந்தப் பூவரசுமேடையை!" என்று பார்வையாளர்கள் பலர் புகழ்ந்துரைப்பதைக் கேட்கக்கூடியதாக இருந்தது.

அடுத்து பூவரசு கலை இலக்கியப்பேரவையின் செயலாளர் திரு. க.பாலசுப்பிரமணியம் அவர்கள் பூவரசு இதுவரையும் இனியும் என்னும் தலைப்பில் பூவரசின் செயற்திட்டங்கள் குறித்ததான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இசைக்கோலம் நிகழ்ச்சியில் சுயமாக இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்களால் பூவரசு மேடை பொலிவு பெற்றது. இசைக்கலைஞர்கள் திருவாளர்கள் சு.நடராஜா, க.பாலசுப்பிரமணியம் ஆகியோரோடு இளங்கலைஞர்கள் பலரும் பங்குகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.


அடுத்து பூவரசு 13வது ஆண்டு நிறைவுமலர் வாசகர்முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற்பிரதியை கவிஞர் திரு. கொற்றையூர் வாசன் அவர்களிடம் திருமதி இந்துமகேஷ் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பூவரசில் எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகளில் பங்குபற்றிய இளையோர்க்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேடை நிகழ்வுகளில் பங்குகொண்ட ஏனைய மழலைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.




அடுத்த நிகழ்வாக வெற்றிமணியின் பதின்மூன்றாவது வெளியீடான, இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி எனும் ஆன்மீகத் தேடல் சார்ந்த நூல் ஒன்று இவ் வாசகர் அரங்கில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

வெற்றிமணி ஆசிரியர், கலாநிதி மு.க.சு. சிவகுமாரன் அவர்கள் இந்நூலின் முதற்பிரதியை பிறேமன் குமரன்ஸ் வர்த்தக நிலைய உரிமையாளரும், வாசகருமான திரு.கனகநாதன்(குமரன்) அவர்களிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

இந்நூலுக்கென கனடாவிலிருந்து மதுரகவி, கலாநிதி வி.கந்தவனம் அவர்கள் வழங்கியிருந்த வாழ்த்துரையை கவிஞர் கொற்றையூர் வாசன் வாசித்தளித்தார். அடுத்து எழுத்தாளர் திரு.இராஜன் முருகவேல் இந்நூலினை மதிப்பீடு செய்து உரையாற்றினார்.

ஐரோப்பிய நூல்களுக்கு இணையாக அழகிய தாள்களில் அழகுற வடிவமைக்கப்பட்ட இந்நூலின்மூலம் தரமானதொரு படைப்பு தமிழுக்குக் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். தரமான படைப்பு கவர்ச்சியாகத் தரப்படுவதனால் அது எளிதாக வாசகர்களைச்சென்றடையும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தனது கட்டுரைகளைத் தொகுத்து அழகிய நூல்வடிவில் கொணர்ந்திருப்பதற்காக வெற்றிமணிக்கும், அதன் ஆசிரியரும் தனது இனிய நண்பருமான கலாநிதி சிவகுமாரனுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட திரு.இந்துமகேஷ் வாசகர்களின் ஆதரவிலேயே படைப்பாளர்களினதும் படைப்புக்களினதும் வளர்ச்சி தங்கியிருக்கிறது என்பதையும் சொல்லிவைத்து அவர்களது ஆதரவு பெருகும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இளமைபொலிந்த வெற்றிமணியில் தனது ஆன்மீக சிந்தனைகளை  வேறொரு கோணத்தில் வெளிக்கொணர வைத்தமைக்காக நண்பர் திரு. சிவகுமாரன் அவர்களுக்கு எனது இரட்டிப்பு நன்றிகளைச் செலுத்துகிறேன் என்றார் அவர்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டிஅவர்களுக்கும், கலாநிதி அ.சண்முகதாஸ் அவர்களுக்கும், மதுரகவி கலாநிதி வி.கந்தவனம் அவர்களுக்கும், சிந்தனைச்செல்வர் எழிலன் அவர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

வாசகர் அரங்கத்தின் இறுதி நிகழ்வாக சும்மா சும்மா சும்மா என்னும் தலைப்பிலான துணுக்குத் தோரணம் இளைஞர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

உலகவாழ்வில் வெறுப்புணர்வும், காழ்ப்புணர்வும் மனிதர்களைச் சீரழிப்பதிலிருந்து அவர்களைமீட்டு சிரித்த முகத்தோடும் மகிழ்ச்சியோடும் நிறைவான மனத்தோடும் வாழவைப்பது ஒவ்வொரு மனிதனுடைய தலையாய கடமையுமாகும் என்பதை சொல்லாமல் சொல்லிவைத்த இந்தத் துணுக்குத் தோரணம் இரசிகர்களின் பெருவரவேற்பைப் பெற்றிருந்தது. 
இந்துமகேஷ் அவர்களின் கற்பனைக்கு ம.அனாசுயன், இரா.சிவசுதன், தெ.விபூஷன், ம.அருணோதயன், ஞா.நிக்சன், ஜெ.பிரசன்னா, த.அரவிந்த், இரா.சரோன், தி.தீபகன் ஆகிய இளைஞர் குழாம் அற்புதமாக வடிவம் கொடுத்திருந்தனர்.
இதுவரைகாலமும் மேடைகள் கண்டிராத ஒரு வித்தியாசமான நிகழ்வாக இது அமைந்திருந்ததைக் குறிப்பிட்டாகவேண்டும்.

இந்துமகேஷ் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.
நிகழ்ச்சிகளை செல்வன் ம. பிரசன்னா தொகுத்து வழங்கினார்.

இலக்கிய நிகழ்வாக ஆரம்பித்த இந்த விழா இளந்தளிர்களின் தமிழ்விழாவாகப் பரிணமித்து, பூவரசின் கலை இலக்கியப் பயணத்தில் தமிழன்னைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மற்றுமொரு தமிழ்மாலையாக அமைந்திருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

-பார்வையாளன். 



(பிரசுரம்: பூவரசு பங்குனி - சித்திரை 2004 )