Dienstag, 2. Mai 2017
தாயே உனக்காக!
இன்றுடன் ஆண்டுகள் 30 நிறைந்தது
எனது இளமையும் எங்கோ மறைந்தது
அம்மா உந்தன் வடிவம் மட்டும்
அப்படியேதான் என்னுள் உள்ளது.
கிழவனாய் ஆன போதும் உந்தன்
மடியில் இன்னும் குழந்தையாய் தவழ்கிறேன்.
கனவிலும் நினைவிலும் என்னை அணைத்து
கதைகள் சொல்கிறாய் கேட்டு மகிழ்கிறேன்
கவலைகள் என்னைச் சூழும்போதும்
கலங்கி நான் சோர்ந்து துவள்கிறபோதும்
இனியென்ன வாழ்வென சலித்திடும்போதும்
எழுந்துநில் மகனே! என்றொரு குரல் வரும்
அந்தத் திசையில் அம்மா உன்முகம்!
ஆறுதல் அளிக்கும் அன்பின் திருமுகம்!
உன்னைப் பிரிந்தும் உயிர்வாழ்கின்ற
தைரியம் அதையும் தந்தவள் நீயே!
எத்துயர்வரினும் அத்தனையும் உன்
நினைவால் என்னிடம் நிலையாதொழியும்!
இன்னும் உன்னிடம் என்ன நான் கேட்பேன்?
பிறப்பில் என்னைக் காத்தவள் நீயே
என் இறப்பிலும் என்னருகில் இருந்தால் போதும்!
உன் சின்னமகன்
சின்னையா மகேஸ்வரன்
(இந்துமகேஷ்)
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen