Dienstag, 12. November 2019

குறள் கவிதைகள். - கவிஞர் நா.தேவதாசன்.

ஒரு அறிமுகம்.
குறள்  கவிதைகள்.
- கவிஞர் நா.தேவதாசன்.


(சில ஆண்டுகளுக்கு முன்பு பூவரசு இதழ்களில்  வெளியான குறள் கவிதைகளின் சொந்தக்காரரான கவிஞர் நா.தேவதாசன் 1330 குறள்களுக்குமான பொருளைக் கவிதைகளாக்கி முழுமைப்படுத்தியிருக்கிறார். அவரது முகநூல் பக்கத்தில் அவை வெளியாகியிருக்கின்றன. 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெளியிடவிருந்த வேறொரு கவிதை நூலுக்கென நான் எழுதியிருந்த  முன்னுரை இது.)



பாடும் குயிலுக்கு பக்கத்திலே அமர்ந்து 
போடு ஒரு தாளத்தை என்பார் - அருகிருந்து 
போடுகின்ற தாளத்தால் பொசுக்கென்று குயில் பறந்து 
போகாமல் மெல்ல புனைகின்றேன் ஒருதாளம்-
முன்னுரையாய்.....
        --------------------------------- --------- இந்துமகேஷ். 


கவிதைகள் எங்கே தொடங்கி எங்கே முற்றுப் பெறுகின்றன?
விடைசொல்ல முடியாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு கேள்வி இது?
கவிதை எது என்பதும் கவிதையின் இலக்கணம் எது என்பதும் கடந்துவிட்ட ஒரு காலம் இது.
எதையோ எழுதி இதுதூன் கவிதை என்பார் முன்-
ஆம் இதுதான் கவிதை என்பாரும், இதுவும் கவிதையா என்பாரும் விமர்சகர்களாகப் பவனிவரும்போது கவிதைகளை இனம் கண்டுகொள்வதில் ஓருவித மயக்கம் வருகிறது.
ஆனாலும் கவிதைகள் என்று நம்முன்னால் காட்சிக்கு வருபவை எல்லாம் கவிதைகள் என்ற ஓரு பெயருக்குள்ளேயே அடங்கிப் போய்விடுகின்றன.

மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் மாற்றான் தோட்டத்திலிருந்து நம்மால் கவரப்பட்ட ஹைக்கூ கவிதைகள் என்று கவிதை உலகத்தை அலங்கரிக்கும் கவிதைகள் தினமும் பூத்தவண்ணமிருக்கின்றன.
படிப்பவன் அங்கீகரித்தால் அது கவிதை. இல்லாவிட்டால் இல்லை.

எழுதுபவன் அல்லது எழுதுபவள் தாம் எழுதுவதற்கு ஒரு காரணத்தைச் சொல்லக்கூடும்.  
ஆனால் பெரும்பாலும் ஏன் எழுதுகிறோம் என்று தெரியாமலே பலரும் எழுதிக்கொண்டிருப்பது எழுத்துலகில் இன்று நிரந்தரமாகிவிட்ட ஒரு விதி.
எழுதவேண்டும் போலிருந்தது எழுதினேன் என்பாரிடத்து எந்த நோக்கமும் இல்லாதிருப்பினும் அவரவர் கவிதைகள் அவர்களைக் காட்டிக்கொடுக்கும்.

எவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சமுதாயம் அவர்களுக்குத் தந்த பாதிப்புக்களை வார்த்தைகளில் தொடுக்கவே அவர்கள் எழுத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

இதில் அவரவர் மொழித் தேர்ச்சிக்கேற்ப வார்த்தைகள் கவிதைகளை அலங்கரிக்கின்றன.
வார்த்தைகளில் வறுமைப்பட்டவரிடத்திலிருந்து வளமான கவிதைகளை நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. என்றாலும் கவிதைகளுக்குப் பயன்படுத்தும் சின்னச் சின்ன வார்த்தைகளிலே கூட வளமான கவிதைகளைத் தருவாரும் இருக்கிறார்கள் என்பதும் ஒப்புக்கொள்ளப்படவேண்டியதே.

மௌனம் என்பதுகூட மிகச் சிறந்த மொழி என்பார் சிலர்.
ஆம் அது உண்மைதான். ஆந்த மௌனத்தைப் புரிந்துகொள்ளும் அழகான வார்த்தைகளைத் தெரிந்துவைத்திருப்பவனுக்கு அந்த மௌனம் ஒரு சிறந்தமொழி.

பட்டங்கள் ஏதுமில்லை 
பதவிகளும் தானுமில்லை 
சிட்டாகப் பறந்து சிறுதூரம் சென்ற எந்தன்
சிந்தனையில் ஊறியதை- சிறு
கவிதைகளாய் வடித்துவிட்டேன் 
சிந்தித்தால் என் கவியோ -சிறு 
மொட்டாகத்தானிருக்கும் 
என்று சொல்லும் கவிஞர் நா. தேவதாசன் தனது இந்தச் சிறு கவிதை நூலுக்கு முன்னுரை தரும்படி என்னை அன்புடன் அழைத்திருந்தார்.

புலம்பெயர் மண்ணில் நமது படைப்பாளர்களின் ஆக்கங்கள் அதிகளவில் பெருகவேண்டும் என்பதிலும் அவர்களது ஆற்றல்கள் வெளிக்கொணரப்படவேண்டும் என்பதிலும் அதிக விருப்புடையவன் என்ற காரணத்தால் இதற்கு மகிழ்வோடு ஒப்புதல் சொன்னேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவரது எழுத்தார்வத்தையும் தமிழ்  இலக்கியங்களில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் நன்கறிந்தவன் என்ற முறையில் இதற்கு நான் ஒப்புதல் அளித்தபோதும் ஓரு இரசிகனாக காய்தல் உவத்தலின்றி என் கருத்துக்களை முன்மொழியும் கடப்பாடு எனக்கிருப்பதையும் சுட்டிக்காட்டினேன். 

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தையும் ஒருசேரப் படித்துவிட்டு இதுபற்றி உங்களோடு எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தக் பக்கத்தைப் பயன்படுத்துகிறேன்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் - என்று தாய்மையின் மகிழ்வுக்கு உதாரணம் காட்டும் குறள் ஒன்றுளது.
நாம் பெரும்பாலும் அந்தத் தாயின் மகிழ்வை உணர்கிறோமே அன்றி அந்த மகனைச் சான்றோன்  என்று சொல்வதற்குள்ள உரிமை பெற்றிருந்த சமுதாயம்பற்றி நினைப்பதில்லை.
சமுதாயம் அந்த மகனை ஏற்றுக்கொண்டு அவனுக்குச் சான்றோன் என்ற பட்டமளிப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. நல்லவனை நல்லவனாக ஏற்றுக்கொள்வதற்கு அவனைச் சார்ந்துள்ள சமுதாயமும் நல்லதாக இருக்கவேண்டும் என்ற ஒரு நியதியும் உள்ளதல்லவா?

ஆக, மகவைப் பெறுதல்மட்டும் தாயின் கடன் என்று கொண்டாலும்கூட அந்த மகவு பிறகு அந்தச் சமுதாயத்துக்கே உரித்துடையவனாகிறான். 
படைப்பாளி படைப்புக்கு உரித்துடையவன் என்றாலும் படைப்புக்கள் சமுதாயத்துக்கு உரித்துடையவை.
ஆக படைப்புக்கள்பற்றிய மதிப்பீடு சமுதாயத்திலிருந்து வந்தாகவேண்டும்.
அந்த மதிப்பீடே படைப்பாளியை அங்கீகரிக்கும் அல்லது புறந்தள்ளும்.

தேவதாசன் சொல்வதுபோல் - சிந்தித்தால் அவர்கவியோ சிறு மொட்டாகத் தானிருக்கும்.
ஆனால் இந்த மொட்டுக்கள் காலத்தால் மலரும் தன்மைகொண்டவை.
மலரும் மலர்கள் வெறும் காகித மலர்களாக அல்லாமல் நறுமணம் கமழும் நன்மலர்களாக மலரும் என்பதில் நம்பிக்கை கொள்ளத்தக்கவகையில் இவை அமைந்திருக்கின்றன.

தனது கூட்டைவிட்டு சிறுதூரம் பறந்துசெல்லும் சிட்டுக்கும் தனது கூடுதான் நிரந்தர நினைப்பாக இருக்கும்.
நிழலாடும் நிலப்பெருமை சொல்லும் தேவதாசனுக்கும் தான்பிறந்த சிறு தீவு நெஞ்சில் நிழலாடுவதில் வியப்பதற்கெதுவுமில்லை.

நிழலாடும் நிலப்பெருமை சொல்லும் அவரது கவிதை எனக்கு மிகப்பிடித்தமானது.
அந்த நிலத்தில் பிறந்து தவழ்ந்தவன் என்பதனாலோ என்னமோ, தேவதாசனோடு இணைந்து அந்தமண்ணில் புரண்ட நினைவுகள் என்னுள்ளும் நிழலாடக்காண்கிறேன்.

சின்னச் சின்னக் கிராமங்கள் ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் என்று பெயர்சூட்டிக்கொண்டிருக்க, நீரலையால் பிரிந்து சின்னச் சின்னத் தீவுகளாய் சிதறியும் யாழ்ப்பாணத்தோடு ஒட்டிக்கிடக்கும் சின்னச் சின்னச் கிராமங்களில் ஒன்றைச் சொன்னால் அது அத்தனை கிராமங்களுக்கும் பொருத்தமானதாகத்தானே இருக்கமுடியும்.
நிழலாடும் நிலப்பெருமை கவிதையும் அப்படி எல்லாக் கிராமத்துக்கும், சின்னச்சின்ன ஊர்களுக்கும் பெருமைசேர்க்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது அவர் புனைந்த சில கவிதைகளைமட்டுமே தொகுத்து அவர் இந்தச் சிறுநூலை தனது தந்தையின் நினைவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

இதிலுள்ள கவிதைகள் சமுதாயத்தின் பல பகுதிகளை ஆங்காங்கே படம்போட்டுக்காட்ட முயன்றாலும் பக்திக் கவிதைகளே அதிகம் இடம்பிடித்திருக்கின்றன.

மனித சக்கியை மீறிக் காரியங்கள் நடைபெறத் தொடங்கிவிட்டால் அதன் எல்லை கடவுள் என்கின்ற முற்றுப்புள்ளியில் முடிவடைந்தாக வேண்டியிருக்கிறது. வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் அவசியப்படுகின்றன.
அவைதாம் வாழ்விலும் ஒரு நம்பிக்கையைத் தரமுடியும்.

நா.தேவதாசன் இன்னும் தொட வேண்டிய, தொடரவேண்டிய நிகழ்வுகள் பல இருக்கின்றன.
அவரது தெள்ளிய தமிழில் அவர் இன்னும் பன்னூறு கவிதைகளைப் பிரசவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பூவரசு இனிய தமிழ் ஏட்டில் அவர் தொடராக எழுதிவரும் குறள்கவிதைகள்-
(திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒவ்வோர் கவிதையாக சாறுபிழிந்து அவர் தரும் கவிதைகள்) வாசகர்களிடம் வரவேற்புப் பெற்று வருகின்றன என்பதையும் இங்குசொல்லி அவரது எழுத்து முயற்சிகள் மேலும் வளம்பெற வாழ்த்துவதோடு, இந்தக் கவிதைகளோடு உறவாடப்போகும் நீங்கள் உங்கள் கருத்துகளையும் அவருக்கு அறியத்தருவது அவரது வளர்ச்சிக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகுக்கும் பயனுடையது என்பதைச்சொல்லி முடிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
தொடர்வோம்:
அன்புடன்
இந்துமகேஷ்
(ஆசிரியர் , பூவரசு)






நா.தேவதாசனின் முகநூல் பக்கம்:
facebook.com/ thevathasan.nagalingam







Mittwoch, 4. September 2019

நீங்காத நினைவுகள் - பூவரசு வாசகர் அரங்கம் 2004



பூவரசு கலை இலக்கியப்பேரவையின் 
வாசகர் அரங்கம் 2004.




மலர்களின் தோட்டமாய் அரங்கினை நிறைத்த இளந்தளிர்களின் 
இன்பத்தமிழ் மணம் கமழ, பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 13வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் பிறேமன் நகரில் 21.02.2004 சனிக்கிழமை நடைபெற்றது.

திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி யமுனாவதி நடராஜா ஆகியோர் மங்கள விளக்கேற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அமைதி வணக்கமும், திரு.சு.நடராஜா அவர்களால் இறைவணக்கப்பாடலும், எங்கள் இளந்தளிர்களால் |உலகமே நம் இல்லம், எனும் பூவரசின் தமிழ்வணக்கப் பாடலும் இடம்பெற்றன.
வரவேற்புரையை பூவரசு கலை இலக்கியப்பேரவையின் இணைச் செயலாளர் திருமதி ஆனந்தஈஸ்வரி திவ்வியமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.
திருமதி வில்ரூட் கடெல்கா ஜெர்மன் மொழியில் பூவரசுக்கான தனது வாழ்த்துக்களை வழங்கினார்.
தொடர்ந்து இளந்தளிர்கள் வழங்கிய |இது எங்கள் நேரம்| எனும் தலைப்பிலான மழலையர் நிகழ்வுகள் ஆரம்பமாயின. பங்குகொண்ட அத்தனை மழலைச்செல்வங்களும் தத்தம் மொழித் திறனை வெளிக்கொணர்ந்து தமிழின் அழகை வெளிப்படுத்தினர். பாட்டுக்கள் பாடியும், கதைகள் சொல்லியும் அவுர்கள் தமது மொழித்திறனை வெளிப்படுத்திய பாங்கு அருமையாக இருந்தது.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக இளையோர் பங்குகொண்ட புதியதோர் உலகம் கவியரங்கு இடம்பெற்றது.
சமகாலத்தில் நம்மிடையே வரும் பாரதியார் தற்காலப் பெண்களின் முன்னேற்றம் குறித்து மகிழ்வுகொள்வதாக இந்துமகேஷ் எழுதிய கவிதைகளை இளந்தளிர்கள் அற்புதமாக வெளிக்கொணர்ந்தனர். இந்த இளையோர் கவியரங்கின் நெறியாள்கையை திருமதி சாந்தராணி பத்மகுமார் அவர்களும் ஒப்பனையை செல்வி ஜெயராணி செல்லத்துரை அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.

 "புலம்பெயர் மண்ணில் தமிழ் தேய்கிறது என்று புலம்புகிறவர்கள் வந்து பார்த்திருக்கவேண்டும் இந்தப் பூவரசுமேடையை!" என்று பார்வையாளர்கள் பலர் புகழ்ந்துரைப்பதைக் கேட்கக்கூடியதாக இருந்தது.

அடுத்து பூவரசு கலை இலக்கியப்பேரவையின் செயலாளர் திரு. க.பாலசுப்பிரமணியம் அவர்கள் பூவரசு இதுவரையும் இனியும் என்னும் தலைப்பில் பூவரசின் செயற்திட்டங்கள் குறித்ததான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இசைக்கோலம் நிகழ்ச்சியில் சுயமாக இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்களால் பூவரசு மேடை பொலிவு பெற்றது. இசைக்கலைஞர்கள் திருவாளர்கள் சு.நடராஜா, க.பாலசுப்பிரமணியம் ஆகியோரோடு இளங்கலைஞர்கள் பலரும் பங்குகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.


அடுத்து பூவரசு 13வது ஆண்டு நிறைவுமலர் வாசகர்முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற்பிரதியை கவிஞர் திரு. கொற்றையூர் வாசன் அவர்களிடம் திருமதி இந்துமகேஷ் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பூவரசில் எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகளில் பங்குபற்றிய இளையோர்க்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேடை நிகழ்வுகளில் பங்குகொண்ட ஏனைய மழலைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.




அடுத்த நிகழ்வாக வெற்றிமணியின் பதின்மூன்றாவது வெளியீடான, இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி எனும் ஆன்மீகத் தேடல் சார்ந்த நூல் ஒன்று இவ் வாசகர் அரங்கில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

வெற்றிமணி ஆசிரியர், கலாநிதி மு.க.சு. சிவகுமாரன் அவர்கள் இந்நூலின் முதற்பிரதியை பிறேமன் குமரன்ஸ் வர்த்தக நிலைய உரிமையாளரும், வாசகருமான திரு.கனகநாதன்(குமரன்) அவர்களிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

இந்நூலுக்கென கனடாவிலிருந்து மதுரகவி, கலாநிதி வி.கந்தவனம் அவர்கள் வழங்கியிருந்த வாழ்த்துரையை கவிஞர் கொற்றையூர் வாசன் வாசித்தளித்தார். அடுத்து எழுத்தாளர் திரு.இராஜன் முருகவேல் இந்நூலினை மதிப்பீடு செய்து உரையாற்றினார்.

ஐரோப்பிய நூல்களுக்கு இணையாக அழகிய தாள்களில் அழகுற வடிவமைக்கப்பட்ட இந்நூலின்மூலம் தரமானதொரு படைப்பு தமிழுக்குக் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். தரமான படைப்பு கவர்ச்சியாகத் தரப்படுவதனால் அது எளிதாக வாசகர்களைச்சென்றடையும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தனது கட்டுரைகளைத் தொகுத்து அழகிய நூல்வடிவில் கொணர்ந்திருப்பதற்காக வெற்றிமணிக்கும், அதன் ஆசிரியரும் தனது இனிய நண்பருமான கலாநிதி சிவகுமாரனுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட திரு.இந்துமகேஷ் வாசகர்களின் ஆதரவிலேயே படைப்பாளர்களினதும் படைப்புக்களினதும் வளர்ச்சி தங்கியிருக்கிறது என்பதையும் சொல்லிவைத்து அவர்களது ஆதரவு பெருகும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இளமைபொலிந்த வெற்றிமணியில் தனது ஆன்மீக சிந்தனைகளை  வேறொரு கோணத்தில் வெளிக்கொணர வைத்தமைக்காக நண்பர் திரு. சிவகுமாரன் அவர்களுக்கு எனது இரட்டிப்பு நன்றிகளைச் செலுத்துகிறேன் என்றார் அவர்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டிஅவர்களுக்கும், கலாநிதி அ.சண்முகதாஸ் அவர்களுக்கும், மதுரகவி கலாநிதி வி.கந்தவனம் அவர்களுக்கும், சிந்தனைச்செல்வர் எழிலன் அவர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

வாசகர் அரங்கத்தின் இறுதி நிகழ்வாக சும்மா சும்மா சும்மா என்னும் தலைப்பிலான துணுக்குத் தோரணம் இளைஞர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

உலகவாழ்வில் வெறுப்புணர்வும், காழ்ப்புணர்வும் மனிதர்களைச் சீரழிப்பதிலிருந்து அவர்களைமீட்டு சிரித்த முகத்தோடும் மகிழ்ச்சியோடும் நிறைவான மனத்தோடும் வாழவைப்பது ஒவ்வொரு மனிதனுடைய தலையாய கடமையுமாகும் என்பதை சொல்லாமல் சொல்லிவைத்த இந்தத் துணுக்குத் தோரணம் இரசிகர்களின் பெருவரவேற்பைப் பெற்றிருந்தது. 
இந்துமகேஷ் அவர்களின் கற்பனைக்கு ம.அனாசுயன், இரா.சிவசுதன், தெ.விபூஷன், ம.அருணோதயன், ஞா.நிக்சன், ஜெ.பிரசன்னா, த.அரவிந்த், இரா.சரோன், தி.தீபகன் ஆகிய இளைஞர் குழாம் அற்புதமாக வடிவம் கொடுத்திருந்தனர்.
இதுவரைகாலமும் மேடைகள் கண்டிராத ஒரு வித்தியாசமான நிகழ்வாக இது அமைந்திருந்ததைக் குறிப்பிட்டாகவேண்டும்.

இந்துமகேஷ் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.
நிகழ்ச்சிகளை செல்வன் ம. பிரசன்னா தொகுத்து வழங்கினார்.

இலக்கிய நிகழ்வாக ஆரம்பித்த இந்த விழா இளந்தளிர்களின் தமிழ்விழாவாகப் பரிணமித்து, பூவரசின் கலை இலக்கியப் பயணத்தில் தமிழன்னைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மற்றுமொரு தமிழ்மாலையாக அமைந்திருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

-பார்வையாளன். 



(பிரசுரம்: பூவரசு பங்குனி - சித்திரை 2004 )