Dienstag, 12. November 2019

குறள் கவிதைகள். - கவிஞர் நா.தேவதாசன்.

ஒரு அறிமுகம்.
குறள்  கவிதைகள்.
- கவிஞர் நா.தேவதாசன்.


(சில ஆண்டுகளுக்கு முன்பு பூவரசு இதழ்களில்  வெளியான குறள் கவிதைகளின் சொந்தக்காரரான கவிஞர் நா.தேவதாசன் 1330 குறள்களுக்குமான பொருளைக் கவிதைகளாக்கி முழுமைப்படுத்தியிருக்கிறார். அவரது முகநூல் பக்கத்தில் அவை வெளியாகியிருக்கின்றன. 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெளியிடவிருந்த வேறொரு கவிதை நூலுக்கென நான் எழுதியிருந்த  முன்னுரை இது.)



பாடும் குயிலுக்கு பக்கத்திலே அமர்ந்து 
போடு ஒரு தாளத்தை என்பார் - அருகிருந்து 
போடுகின்ற தாளத்தால் பொசுக்கென்று குயில் பறந்து 
போகாமல் மெல்ல புனைகின்றேன் ஒருதாளம்-
முன்னுரையாய்.....
        --------------------------------- --------- இந்துமகேஷ். 


கவிதைகள் எங்கே தொடங்கி எங்கே முற்றுப் பெறுகின்றன?
விடைசொல்ல முடியாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு கேள்வி இது?
கவிதை எது என்பதும் கவிதையின் இலக்கணம் எது என்பதும் கடந்துவிட்ட ஒரு காலம் இது.
எதையோ எழுதி இதுதூன் கவிதை என்பார் முன்-
ஆம் இதுதான் கவிதை என்பாரும், இதுவும் கவிதையா என்பாரும் விமர்சகர்களாகப் பவனிவரும்போது கவிதைகளை இனம் கண்டுகொள்வதில் ஓருவித மயக்கம் வருகிறது.
ஆனாலும் கவிதைகள் என்று நம்முன்னால் காட்சிக்கு வருபவை எல்லாம் கவிதைகள் என்ற ஓரு பெயருக்குள்ளேயே அடங்கிப் போய்விடுகின்றன.

மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் மாற்றான் தோட்டத்திலிருந்து நம்மால் கவரப்பட்ட ஹைக்கூ கவிதைகள் என்று கவிதை உலகத்தை அலங்கரிக்கும் கவிதைகள் தினமும் பூத்தவண்ணமிருக்கின்றன.
படிப்பவன் அங்கீகரித்தால் அது கவிதை. இல்லாவிட்டால் இல்லை.

எழுதுபவன் அல்லது எழுதுபவள் தாம் எழுதுவதற்கு ஒரு காரணத்தைச் சொல்லக்கூடும்.  
ஆனால் பெரும்பாலும் ஏன் எழுதுகிறோம் என்று தெரியாமலே பலரும் எழுதிக்கொண்டிருப்பது எழுத்துலகில் இன்று நிரந்தரமாகிவிட்ட ஒரு விதி.
எழுதவேண்டும் போலிருந்தது எழுதினேன் என்பாரிடத்து எந்த நோக்கமும் இல்லாதிருப்பினும் அவரவர் கவிதைகள் அவர்களைக் காட்டிக்கொடுக்கும்.

எவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சமுதாயம் அவர்களுக்குத் தந்த பாதிப்புக்களை வார்த்தைகளில் தொடுக்கவே அவர்கள் எழுத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

இதில் அவரவர் மொழித் தேர்ச்சிக்கேற்ப வார்த்தைகள் கவிதைகளை அலங்கரிக்கின்றன.
வார்த்தைகளில் வறுமைப்பட்டவரிடத்திலிருந்து வளமான கவிதைகளை நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. என்றாலும் கவிதைகளுக்குப் பயன்படுத்தும் சின்னச் சின்ன வார்த்தைகளிலே கூட வளமான கவிதைகளைத் தருவாரும் இருக்கிறார்கள் என்பதும் ஒப்புக்கொள்ளப்படவேண்டியதே.

மௌனம் என்பதுகூட மிகச் சிறந்த மொழி என்பார் சிலர்.
ஆம் அது உண்மைதான். ஆந்த மௌனத்தைப் புரிந்துகொள்ளும் அழகான வார்த்தைகளைத் தெரிந்துவைத்திருப்பவனுக்கு அந்த மௌனம் ஒரு சிறந்தமொழி.

பட்டங்கள் ஏதுமில்லை 
பதவிகளும் தானுமில்லை 
சிட்டாகப் பறந்து சிறுதூரம் சென்ற எந்தன்
சிந்தனையில் ஊறியதை- சிறு
கவிதைகளாய் வடித்துவிட்டேன் 
சிந்தித்தால் என் கவியோ -சிறு 
மொட்டாகத்தானிருக்கும் 
என்று சொல்லும் கவிஞர் நா. தேவதாசன் தனது இந்தச் சிறு கவிதை நூலுக்கு முன்னுரை தரும்படி என்னை அன்புடன் அழைத்திருந்தார்.

புலம்பெயர் மண்ணில் நமது படைப்பாளர்களின் ஆக்கங்கள் அதிகளவில் பெருகவேண்டும் என்பதிலும் அவர்களது ஆற்றல்கள் வெளிக்கொணரப்படவேண்டும் என்பதிலும் அதிக விருப்புடையவன் என்ற காரணத்தால் இதற்கு மகிழ்வோடு ஒப்புதல் சொன்னேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவரது எழுத்தார்வத்தையும் தமிழ்  இலக்கியங்களில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் நன்கறிந்தவன் என்ற முறையில் இதற்கு நான் ஒப்புதல் அளித்தபோதும் ஓரு இரசிகனாக காய்தல் உவத்தலின்றி என் கருத்துக்களை முன்மொழியும் கடப்பாடு எனக்கிருப்பதையும் சுட்டிக்காட்டினேன். 

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தையும் ஒருசேரப் படித்துவிட்டு இதுபற்றி உங்களோடு எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தக் பக்கத்தைப் பயன்படுத்துகிறேன்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் - என்று தாய்மையின் மகிழ்வுக்கு உதாரணம் காட்டும் குறள் ஒன்றுளது.
நாம் பெரும்பாலும் அந்தத் தாயின் மகிழ்வை உணர்கிறோமே அன்றி அந்த மகனைச் சான்றோன்  என்று சொல்வதற்குள்ள உரிமை பெற்றிருந்த சமுதாயம்பற்றி நினைப்பதில்லை.
சமுதாயம் அந்த மகனை ஏற்றுக்கொண்டு அவனுக்குச் சான்றோன் என்ற பட்டமளிப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. நல்லவனை நல்லவனாக ஏற்றுக்கொள்வதற்கு அவனைச் சார்ந்துள்ள சமுதாயமும் நல்லதாக இருக்கவேண்டும் என்ற ஒரு நியதியும் உள்ளதல்லவா?

ஆக, மகவைப் பெறுதல்மட்டும் தாயின் கடன் என்று கொண்டாலும்கூட அந்த மகவு பிறகு அந்தச் சமுதாயத்துக்கே உரித்துடையவனாகிறான். 
படைப்பாளி படைப்புக்கு உரித்துடையவன் என்றாலும் படைப்புக்கள் சமுதாயத்துக்கு உரித்துடையவை.
ஆக படைப்புக்கள்பற்றிய மதிப்பீடு சமுதாயத்திலிருந்து வந்தாகவேண்டும்.
அந்த மதிப்பீடே படைப்பாளியை அங்கீகரிக்கும் அல்லது புறந்தள்ளும்.

தேவதாசன் சொல்வதுபோல் - சிந்தித்தால் அவர்கவியோ சிறு மொட்டாகத் தானிருக்கும்.
ஆனால் இந்த மொட்டுக்கள் காலத்தால் மலரும் தன்மைகொண்டவை.
மலரும் மலர்கள் வெறும் காகித மலர்களாக அல்லாமல் நறுமணம் கமழும் நன்மலர்களாக மலரும் என்பதில் நம்பிக்கை கொள்ளத்தக்கவகையில் இவை அமைந்திருக்கின்றன.

தனது கூட்டைவிட்டு சிறுதூரம் பறந்துசெல்லும் சிட்டுக்கும் தனது கூடுதான் நிரந்தர நினைப்பாக இருக்கும்.
நிழலாடும் நிலப்பெருமை சொல்லும் தேவதாசனுக்கும் தான்பிறந்த சிறு தீவு நெஞ்சில் நிழலாடுவதில் வியப்பதற்கெதுவுமில்லை.

நிழலாடும் நிலப்பெருமை சொல்லும் அவரது கவிதை எனக்கு மிகப்பிடித்தமானது.
அந்த நிலத்தில் பிறந்து தவழ்ந்தவன் என்பதனாலோ என்னமோ, தேவதாசனோடு இணைந்து அந்தமண்ணில் புரண்ட நினைவுகள் என்னுள்ளும் நிழலாடக்காண்கிறேன்.

சின்னச் சின்னக் கிராமங்கள் ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் என்று பெயர்சூட்டிக்கொண்டிருக்க, நீரலையால் பிரிந்து சின்னச் சின்னத் தீவுகளாய் சிதறியும் யாழ்ப்பாணத்தோடு ஒட்டிக்கிடக்கும் சின்னச் சின்னச் கிராமங்களில் ஒன்றைச் சொன்னால் அது அத்தனை கிராமங்களுக்கும் பொருத்தமானதாகத்தானே இருக்கமுடியும்.
நிழலாடும் நிலப்பெருமை கவிதையும் அப்படி எல்லாக் கிராமத்துக்கும், சின்னச்சின்ன ஊர்களுக்கும் பெருமைசேர்க்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது அவர் புனைந்த சில கவிதைகளைமட்டுமே தொகுத்து அவர் இந்தச் சிறுநூலை தனது தந்தையின் நினைவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

இதிலுள்ள கவிதைகள் சமுதாயத்தின் பல பகுதிகளை ஆங்காங்கே படம்போட்டுக்காட்ட முயன்றாலும் பக்திக் கவிதைகளே அதிகம் இடம்பிடித்திருக்கின்றன.

மனித சக்கியை மீறிக் காரியங்கள் நடைபெறத் தொடங்கிவிட்டால் அதன் எல்லை கடவுள் என்கின்ற முற்றுப்புள்ளியில் முடிவடைந்தாக வேண்டியிருக்கிறது. வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் அவசியப்படுகின்றன.
அவைதாம் வாழ்விலும் ஒரு நம்பிக்கையைத் தரமுடியும்.

நா.தேவதாசன் இன்னும் தொட வேண்டிய, தொடரவேண்டிய நிகழ்வுகள் பல இருக்கின்றன.
அவரது தெள்ளிய தமிழில் அவர் இன்னும் பன்னூறு கவிதைகளைப் பிரசவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பூவரசு இனிய தமிழ் ஏட்டில் அவர் தொடராக எழுதிவரும் குறள்கவிதைகள்-
(திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒவ்வோர் கவிதையாக சாறுபிழிந்து அவர் தரும் கவிதைகள்) வாசகர்களிடம் வரவேற்புப் பெற்று வருகின்றன என்பதையும் இங்குசொல்லி அவரது எழுத்து முயற்சிகள் மேலும் வளம்பெற வாழ்த்துவதோடு, இந்தக் கவிதைகளோடு உறவாடப்போகும் நீங்கள் உங்கள் கருத்துகளையும் அவருக்கு அறியத்தருவது அவரது வளர்ச்சிக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகுக்கும் பயனுடையது என்பதைச்சொல்லி முடிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
தொடர்வோம்:
அன்புடன்
இந்துமகேஷ்
(ஆசிரியர் , பூவரசு)






நா.தேவதாசனின் முகநூல் பக்கம்:
facebook.com/ thevathasan.nagalingam







Keine Kommentare: