Samstag, 17. Dezember 2016

எனதன்பு இராஜன்! ஏனிந்த நீள் உறக்கம்?

எனதன்பு இராஜன்!
ஏனிந்த நீள் உறக்கம்?


 


காலன் வகுத்த கணக்கு நம் வாழ்வெனினும்
வேளை இதுவல்ல - விடைபெற்றுப் போவதற்கு!

இந்துமகேஷ் எழுத்துக்கு வாசகன் நான் எனச் சொல்லி
எனைக்காண வந்த அந்த நாளதனை நினைக்கின்றேன்.
அந்தநாள் முதலாக அன்பினால் எனைக்கட்டி
அகமகிழ்ந்த அன்புருவை இன்றிழந்து தவிக்கின்றேன்!

எந்தன் எழுத்துக்கு வாசகனாய் வந்த உந்தன்
ஆக்கத் திறனறிந்து அதிசயித்து நான் மகிழ்ந்தேன்.
கதை, கவிதை, கட்டுரைகள் என விரிந்த எழுத்தாற்றல்
கவியரங்கு, பட்டிமன்றம் எனத் தொடர்ந்த பேச்சாற்றல்
பூவரசு இதழ்களிலும்  மேடையிலும் பொலிந்திருக்க
இராஜன் எனும் படைப்பாளி எழுத்துலகில் வலம்வந்தான்!

இணையத் தளத்தினிலே தமிழ் எழத்துலகம் விரிகையிலே
தமிழமுதம் ஊட்டித் தமிழ்த்தாய்க்கு வளம் சேர்த்தான்
எழுத்தாளர் கலைஞர் என எவரிடத்தும் பேதமின்றி
எல்லோரும் நேசிக்கும்  சோழியான் என வளர்ந்தான்.

பத்தாண்டு மூத்தவன் நான் என்பதனால் அண்ணை என
பாசத்தோடெனை அழைத்துப் பழகிய என் நண்பனவன்
நேசக்குரல் என்னை இனி நெருங்கிவர மாட்டாதோ?
வாசிப்பதற்கென்றும் நேசிப்பதற்கென்றும்
வழியான விழிகளிலே வாஞ்சை இனித் தோன்றாதோ?

உயிரோடு உயிராக உன்னோடு கலந்த உந்தன்
காதல் மனையாளை, கண்மணிபோல் பிள்ளைகளை,
உன்னன்பில் கட்டுண்ட உறவுகளை, நண்பர்தமை
ஆதரவாய் இணைக்கின்ற கரங்கள் இனி நீளாதோ?
நிலையற்ற வாழ்விதென்று நிதர்சனம் உரைத்தாலும்
நீ இல்லை என்றெண்ண நெஞ்சம் மறுக்குதையா!

எழுதியவன் எழுதியதை இனி மாற்றி எழுதுதற்கு
எவர்க்கிங்கு உரிமையுண்டு! எல்லாமே விதிவழியாம்!
உறவின்பின் பிரிவுவரும் உண்மையெனில் அதுபோல
பிரிவின்பின் உறவு வரும்! மறுபடியும் சந்திப்போம்!
மரணமது முடிவல்ல - மனங்களை நாம் தேற்றுகிறோம்!
மறுபடியும் உனைக்காணும் நாள்வரையில் நினைந்திருப்போம்!

மானிடர்கள் இந்தமண்ணுக்கு வருவதற்கும்
மீண்டும் ஒருபொழுது விண்ணுலகம் செல்வதற்கும்
பாதை வகுத்த பரமனவன் திருவடியில்
ஆன்மா இளைப்பாற அன்பனே நீ அமைதி பெறு!
ஆண்டவனை வேண்டி அழுது தொழுகின்றோம்.

ஓம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
 
உன் அன்பில் கலந்த
இந்துமகேஷ்





Keine Kommentare: