Mittwoch, 21. Dezember 2016

என்ன சொல்லி வாழ்த்த...?!

(கதை, கவிதை,  கட்டுரை, நாடகம், விமர்சனம்  என படைப்பிலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தியவர் திரு இராஜன் முருகவேல் அவர்கள். பூவரசுமீது அவர்கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக அவர் நிறையவே எழுதினார். பூவரசு 10வது ஆண்டு நிறைவு மலருக்கென - 2001 தை இதழில்-  அவர் எழுதிய வாழ்த்துச்செய்தி இது)





என்ன சொல்லி வாழ்த்த...?!


கொஞ்சநாளாக ஒரே தலைச் சொறியல்.
தலையைச் சொறிஞ்சு சொறிஞ்சு ஏற்கனவே கொட்டுண்டுற மயிரோடை இன்னும் கொஞ்சம் சேர்ந்து கொட்டுண்டுற மாதிரி ஒரு பிரமை.
அட.. முடி போனாலும் பரவாயில்லை உதுக்கொரு முடிவு வரவேணும் பாருங்கோ..!

“இஞ்சேருங்கோ.. இஞ்சேருங்கோ!…"
தெனாலி வந்தாலும் வந்தது இதுக்கொண்டும் குறைச்சலில்லை.
இது அன்பான அழைப்பில்லை லேட்டஸ்ட் ஃபாஷனாம் பாருங்கோ..!
“என்னப்பா..? தலையிலை சொடுகு கிடுகு பிடிச்சிட்டுதே..?”

பத்திக்கொண்டு வந்தது.
இசகு பிசகாய்க் கதைச்சால் பேந்து காரியம் அவ்வளவுதான்.
இண்டைக்கு எப்பிடியாகிலும் எழுதிப்போடவேணும். இந்தவட்டைக்குப் புத்தகம் முடிஞ்சுதோ தெரியேல்லை

ஒவ்வொரு முறையும் இப்பிடித்தான்.
பூவரசு ஆண்டுமலருக்கு ஒரு வாழ்த்து எழுதவேணும் எண்டு யோசிக்கேக்க ஏதாவது வந்து குழப்பிப்போடும். இந்தமுறை பத்தாவது ஆண்டு நிறைவுமலர். எழுதவேணும் எப்பிடியும் ரண்டு வரியாலும் எழுதவேணும்  எண்டு வெளிக்கிட்டால் இன்னும் எழுதினபாடாய்க காணேல்லை.
ஏதாலும் ஒண்டு வந்து குறுக்கிடுது...
ரண்டு வரி எழுதவேணும் எண்டு குந்தினபேந்துதான் இந்தத் தலைச்சொறியல் வேலை.
ரண்டு வரியோடை முடிஞ்சுபோற சங்கதியா இது?

ஒருமுறை எனது மதிப்புக்குரிய கவிஞர் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் சொன்னது அப்பதானா நினைவுக்கு வரவேணும்?
"ராஜன் நீர் பல சஞ்சிகைகளில் சிறுகதைகள் எழுதினாலும் பூவரசில் எழுதிற கதையள்தான் நல்லாய் இருக்கிறது.!"

ஏன் அப்படி..?
-எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.

தரமான சஞ்சிகைக்கு எழுதுகிறோமே என்ற பயமா, அல்லது கவிஞர் எழிலன், திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் போன்றவர்களின் ஆக்கங்களுக்கு சோடைபோகக் கூடாதென்ற ஆசையா, அல்லது எனது அபிமான எழுத்தாளரின் கேலிக்கு (அவர் வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும்) ஆளாகக் கூடாதே என்ற விருப்பமா என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இத்தனைக்கும் மேலாக ஒன்றுண்டு என நினைக்கிறேன். அதாவது ஆசிரியர் எனது முகத்துக்காக எனது ஆக்கத்தைப் பிரசுரித்தாலும் அதனால் பூவரசின் தரம் குறைந்துவிடக்கூடாதென்ற அவா என்று கூறலாம்.

வாழ்த்து விசயத்திலும் இந்தப் பிரச்சினைதானுங்க  இடையிலை பூந்து என்ரை தலையைச் சொறிய வைச்சு....
இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ சொடுகே? எண்டும் கேக்கவைச்சு.. மூட் அவுட்!

மற்றநாள் எழுதியே தீரவேணும் எண்டு குந்தினால் அந்தநேரம் பார்த்துத்தானா ரெலிபோன்.

„ஹலோ!“
„என்ன செய்யிறாய்?“
இதுக்கு என்ன பதில் சொல்லுறது?
„இருக்கிறன்!“
„ஒரு இடத்துக்குப் போகவேணும் வாறியே..?“
„இப்ப நேரமில்லை.!“
„வீட்டிலை என்ன செய்யிறாய்? எந்தநேரம் பார்த்தாலும் படுக்கையாக்கும்!“
„இல்லை ...எழுதவேணும்!“
„காயிதமோ?“
„இல்லை ..வேறை!“
“உனக்கு இந்தப் பைத்தியம் உதை எப்பத்தான் விட்டுப்போட்டு உருப்படுற வழியைப் பார்க்கப் போறியோ தெரியேல்லை.. இப்ப வாறியோ இல்லையோ.. ஒருத்தன் வாறனெண்டு சொன்னவன் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேணும்! பேச்சுத் துணைக்குத்தான் கேக்குறன்.!”

ம்.. எழுதி உருப்படாதது..பேசினால் உருப்படுமாம்.
“இல்லை மச்சான் கனபேர் பாவிக்காமை ஆனா ஆவன்னா எழுத்துக்கள் எல்லாம் குவிஞ்சுபோய்க் கிடக்கு. என்னைப்போலக் கொஞ்சப்பேராலும் அதுகள் எல்லாம் அழுகிறதுக்கு முந்திப் பாவிச்சுப் போடவேணும் எண்டு எழுதுறமாதிரி நானும் எழுதவேணும். அதாலை நான் இப்ப வரேல்லை!
- சொல்ல நினைத்ததும் சொல்லாமல் போனதும் இதுதான்
பேந்தென்ன அண்டைக்கும் - மூட் அவுட்.

இண்டைக்கு எப்படியாகிலும் எழுதிப்போடவேணும்.
எப்பிடித் தொடங்கிறது?
தனியொரு மனிதனாக பத்தாண்டுகள் ஒரு தரமான சஞ்சிகையை மட்டுமல்லாமல் தரமான ஆக்கதாரர்களையும் வாசகர்களையும் தக்கவைத்துள்ள செயலைக் குறிப்பிடலாமா? ஒரு தசாப்தத்தை நிறைவுசெய்யும் வேளையில் அதன் மூச்சாகப் பின்னணியில் தசாவதானியாக இயங்கிப் பல்வேறு விசயங்களையும் இலக்கிய நயத்துடன் தரும் ஆசிரியரின் உணர்வு பூர்வமான சேவையில் தோய்ந்த பணியைக் குறிப்பிடலாமா?
எழுத்தாளர்களை மட்டுமன்றி கலைஞர்களுக்கும் களம்தந்து கரம்பற்றி முன்னிறுத்தி நிறைகுடமாக தழும்பாமல் நிலைத்து நிற்கும் மகேஷண்ணையின் தாய்மையுணர்வைப்பற்றி (மன்னிக்கவும் வேறு எப்படிச் சொல்லலாம்) குறிப்பிடலாமா?

„மடையா ...மடையா..!”
என்னைத்தான் ஒருவன் அதட்டி அழைத்தான். 
சோழியான்தான்!
“உதையெல்லாம் எழுதுறதுக்கு முந்தி உன்னைப்பற்றி எழுதடா.. உனக்கு பூவரசு தந்த கௌரவத்தை எழுதடா.. உன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமனத்துடன் தோளில்தட்டிப் புல்லரிக்க வைத்த அந்தப் பிரபலமான எழுத்தாளரைப்பற்றி எழுதடா..உனது கதைகளைப் புத்தகமாக்க என எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது தனது சொந்த அலுவல்களைப் புறந்தள்ளி தனது கைகளால் புத்தமாக்கி வெளியிட்டு உனக்கொரு மகுடம் தந்த அந்தப் பேருள்ளத்தைப் பற்றி எழுதடா.. அந்த உள்ளம் உன்னைப் பொறுத்தளவில் வேறெங்கு சந்திக்கும்?

சோழியான் சொல்லச்சொல்ல எங்கோ ஒரு நெருடல்..
என்னைப்போல எத்தினைபேரைக் கண்டிருப்பார் மகேஷண்ணை!
மறுபடியும் மூட் அவுட்

ம் பொறுத்தது போதும் இதுதான் கடைசி முயற்சி. சோட் அன்ட் சுவீற்றாய் நறுக்கென்று எழுதவேணும்

அந்தநேரம் பார்த்து என்ரை வாரிசு...
„அப்பா பூவரசு எங்கை இளந்தளிர் பாக்கவேணும்!“.
அடடா இளஞ்சந்ததிக்கு பூவரசு செய்த சேவையையும் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஆண்டு விழாக்களிலே மேடையேறி திறமையால் உள்ளம்  கவர்ந்த இளம் கலைஞர்களின் திறமையைக் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஒரு தலைமுறையின் காலத்தைப் பத்தாண்டுகள் என்பார்கள்.
அவ்வாறாயின் பூவரசு ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டது.

இதை எல்லாவற்றையும எழுதி வாழ்த்திறதெண்டால்..
டென்ஷன் டென்ஷன்.. மறுபடியும் மூட் அவுட்டாவதற்குள் ..
„வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என் இதயத்தில் குடிகொண்ட பூவரசே
நீ இன்றுபோல் என்றும் பல்லாண்டு காலம்  வாழ்க வாழ்க!
அவசரமாக நான் எழுதியதைக்கண்டு சிரித்த சோழியானைப் பார்த்தேன்.
„என்ன சொல்லி வாழ்த்த எப்படி வாழ்த்த என்று முழிக்கிறியே அதுதான் புவரசின் சிறப்பு. அதுதான பூவரசின் பெருமை! வெறும் எழுத்துக்களால் அடக்கிவிட முடியாமல் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் வியாபித்து நிற்கும் சஞ்சிகைதான் பூவரசு.“
அவன் சொல்வது உண்மைதான்.
ம்.. மறுபடியும் மூட் அவுட்

இந்த மலருக்கு வாழ்த்தெழுத முடியாவிட்டால் பரவாயில்லை இருபதாவது ஆண்டு நிறைவு மலர் வரும் அப்ப அந்தமாதிரி ஒரு வாழ்த்து எழுதித்தான் தீருவன்.
மறுபடியும் பார்.. அந்த மாதிரி எண்டேக்கைதான் என்ரை நாடகம் ஞாபகம் வருகுது ஜேர்மனியிலை நான் எழுதின முதல் நாடகம் 
அதுக்கும் களம் தந்தது பூவரசுதானே !
இதுக்கு மேலையும் தலையைச் சொறிய ஏலாதுங்க..

-இராஜன் முருகவேல் (சோழியான்)

(பூவரசு 10வது ஆண்டு நிறைவு மலர் - தை 2001- இல் பிரசுரமானது)


 
 அமரர் இராஜன் முருகவேல்
(தோற்றம்: 15.04.1960  மறைவு:15.11.2016)

Keine Kommentare: