Donnerstag, 16. Februar 2017

பூவரசம்பொழுது 98- ஒரு படைப்பாளியின் பார்வையில்!

பூவரசம்பொழுது 98





நானும் துணைவரும் துளிர்த்திட்ட வனப்பு
புலம் பெயர்ந்த காலங்களின் படைப்பிலக்கிய
வரலாற்றில் பதியமிட்ட சஞ்சிகைகளில் .
பூவரசு சஞ்சிகை தனித்துவமானது -கவி 
கதை கட்டுரை சிற்றிலக்கியப் பக்கமாக விரிந்த மலரது !





கை யூட்டீனை நோக்காது பணியைத் தளராது
தாங்கி எழுத்தாளர்களை இந்துமகேசு நூலாசிரியராய் 
அந்தக் காலங்கள் அருமைகளை இனங்காட்டியவர் 
துறைசார் படைப்பிலக்கியங்களாக பகிர்ந்த நாளவை !
உசாத்துணையும் ஊக்கமும் விழாக்களும் 
வித்தகம் பெருக்கின எத்தனை நவீனங்கள் 
எகிறிய போதும் இவை எங்கள் மனதை தைக்கும் 
இதற்காக நானூறு கிலோமீற்றர் தாண்டி -
இணையவைக்கும் என்துணைவரை நெஞ்செந்தும் 
கிரமாக எனது படையல் பூவரசில் பூத்திட 
உறுதுணையானவர் ! 

 - கோசல்யா சொர்ணலிங்கம்
 -(கோசல்யா கவி வரிகள் 199வது )










நினைக்கிறேன்!


உடன்பிறவா சோதரனாய்
உருவெடுத்த என்தம்பி!



நீங்காத நினைவுகளாய்
நெஞ்சத்தில் நிழலாடும்
மகிழ்வான தருணங்கள்
வடிவமைத்தேன் - புதியவர்க்காய்!

அன்றையப் பொழுதுகளில்
உடனிருந்து மகிழ்ந்தவர்கள்
எங்கெங்கோ...?!
ஒரு சிலரோ 
இவ்வுலகை மறந்தார்கள்!
உறவுகளாய் நண்பர்களாய் 
உறவாடிக் களித்தவர்கள்
உலகிழந்தபோதும் எந்தன்
உள்ளத்தைப் பிரியவில்லை!


  (அமரர் சுப்பிரமணியம் சொர்ணலிங்கம்)

உடன்பிறவா சோதரனாய்
உருவெடுத்த என்தம்பி
சொர்ண லிங்கமாகத் 
துடிப்போடு இயங்கியவன்
கோசல்யா என்னும் 
கவிக்குயிலின் உயிரானான்
நேசமிகு மனத்தோடு
நிறைவாக வாழ்ந்திருந்தான்!

கலையார்வம் நிறைநெஞ்சம்
காணாமல் போனதின்று
நிலையாக எம்மோடு
வாழ்ந்திருக்கும் என்றென்றும்!

- இந்துமகேஷ்.








Dienstag, 14. Februar 2017

பூவரசம் பொழுது 98


பூவரசு கலை இலக்கியப் பேரவையின்

பூவரசம் பொழுது 98



பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 7வது ஆண்டு நிறைவுவிழா பூவரசம் பொழுதாக 24.01.1998 சனிக்கிழமையன்று ஜெர்மனி- பிறேமன் நகரில் சிறப்புற மலர்ந்தது.

திருமதி கோசல்யா சொர்ணலிங்கம், திருமதி வில்ரூட் கடெல்கா ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தனர்.
அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் இறைவணக்கப் பாடலைப் பாடினார். செல்வி பிரதீபா மகேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். பேரவைக் கீதமும் அதனைத் தொடர்ந்து மழலையர் நடனமும் இடம்பெற்றன.
 

ஜேர்மனியின் பல பாகங்களிலுமிருந்துவந்த முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்களோடு பிறேமன்வாழ் கலைஞர்கள் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.

பூவரசு 7வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசைப் பெற்றுக் கொண்டவரும் முன்னணி எழுத்தாளரும் விமர்சகருமான
திரு பொன்னையா கருணாகரமூர்த்தி (பேர்லின்) இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பூவரசு கலை இலக்கியப் பேரவையின் பிரதம ஆலோசகரான ஜெர்மானிய அம்மையார் திருமதி வில்ரூட் கடெல்கா கௌரவவிருந்தினராகக் கலந்து கொண்டு பூவரசின் கலை இலக்கிய சேவைகளைப் பாராட்டினார். வளரும் இளைய தலைமுறையினர் மத்தியில் தாய்மொழி கலை கலாச்சாரம் இவைகளை வளர்த்தெடுப்பதில் பூவரசு கொண்டுள்ள அக்கறை மெச்சத்தக்கதாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

செல்வன் ஆனந்த் குலதாசன், செல்வன் கஜிநாத் தவம், செல்வன் சிவஞ்ஜீவ் சிவராம் ஆகியோர் எங்கள் இளந்தளிர்கள் சார்பில் கலந்துகொண்ட இளம் சிறப்புரையாளர்கள்.


செல்வி ஆன் வினோலினி நடேசன் அவர்களின் நடனம் அடுத்து இடம்பெற்றது.
 

தொடர்ந்து நடன ஆசிரியை செல்வி ஸ்ரீரஞ்சனி குணரத்தினம் அவர்களின் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் இடம்பெற்றது.

அடுத்து கவிஞை திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் „மானல்ல தேனல்ல மலரல்ல பெண்!“ என்னும் தலைப்பில் மகளிர் கவியரங்கு இடம்பெற்றது.  பூவரசு கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் திருமதி சசிகலா தேவராஜாவின் வரவேற்புக் கவியைத்தொடர்ந்து கவியரங்கு ஆரம்பமாயிற்று.
திருமதி விஜயா அமலேந்திரன், திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி மகேஸ்வரி வரதராஜா, திருமதி ஜெகதீஸ்வரி சிவகுமார் ஆகியோர் பங்குகொண்டனர். பெண்விடுதலை, பெண்ணடிமைத்தனம் ஆணாதிக்கம், பெண்சுதந்திரம் என்பனவற்றை மையக்கருவாகக் கொண்டு கவிமலர்கள் தொடுக்கப் பட்டன.








புதுமையான முறையில் அரங்கேறிய „வீட்டுக்குப் போகவிடு!“ என்னும் இளந்தளிர்கள் பங்குகொண்ட இசை நாடகம் அனைவரையும் கவர்ந்தது.
தங்கக்கூண்டில் சிறைவைக்கப்பட்ட கிளி ஒன்று விடுதலக்காய் ஏங்குவதைச் சித்தரித்தது இந்த நாடகம். இந்துமகேஷ் அவர்கள் எழுதி இசைவடிவம்கொடுத்த இந்த நாடகத்தை பூவரசு கலை இலக்கியப்பேரவை உறுப்பினர் திருமதி சாந்தராணி பத்மகுமார் நெறிப்படுத்தியிருந்தார்.
ஒப்பனையாளர்களான செல்வன் அருண், செல்வி ஜெயராணி செல்லத்துரை ஆகியோர் இந்நாடகத்தின் வெற்றிக்குப் பக்கபலமாயிருந்தனர்.

அடுத்து இடம்பெற்ற செல்வி லக்சி கருணைராஜனின் „கிழக்கும் மேற்கும்“ கவிதை இசை நாடகம் மேலைத்தேச கீழைத்தேசக் கலாச்சாரத்தோடு பெண் விடுதலையையும் சித்தரித்தது.
இந்துமகேஷின் கவிதைவரிகளுக்கு அவரே குரல் கொடுத்திருந்தார். பங்குகொண்ட இளங்கலைஞர்கள் அனைவரும் தத்தம் நடிப்புத்திறனால் நாடகத்தை மெருகுபடுத்தியிருந்தார்கள்.

விழாவின் இறுதிநிகழ்ச்சியாக எழுத்தாளர் இராஜன் முருகவேல் அவர்களின் „அந்தமாதிரி“ நகைச்சுவை நாடகம் இடம்பெற்றது.
நகைச்சுவை என்ற பெயரில் எவர் மனதையும் புண்படுத்தாமல் எளிமையான வசனங்களில் நகைச்சுவை இழையோட எழுதப்பட்டிருந்த  இந்நாடகம் வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களின் அறியாத்தனங்களாலும் அனாவசியச் செயற்பாடுகளினாலும் ஏற்படக் கூடிய பாதிப்பக்களைத் தொட்டுக்காட்டியது. புதிய நாடகக் கலைஞர்கள் பலர் முன்னணிக் கலைஞர்களோடு இணைந்து இந்நாடகத்தில் பங்கேற்றனர். 
 
திருவாளர்கள் மனோஹிமன், உதயகுமார், ரமேஷ், ஞானச்செல்வம், லட்சுமிகாந்தன், குலதாசன் ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோருடன் இந்நாடகத்தின் இயக்குனரான திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வமும் இணைந்து நடித்திருந்தார்.
பூவரசு 7வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் பரிசுபெற்றவர்களுக்கும், பூவரசு இளையோர்க்கென வெளியிடும் எங்கள் இளந்தளிர்கள் நடாத்திய ஆண்டுப் போட்டிகளில் வெற்றயீட்டியவர்களுக்குமான பரிசுகளும் விழாவில் வழங்கப்பட்டன.



„புதியதல்ல புதுமையுமல்ல“ நூலுக்காகக் தமிழகத்தில் பரிசுபெற்ற கவிஞர் எழிலன் அவர்களைப் பாராட்டி பூவரசு கலை இலக்கியப் பேரவை பூவரசம்பொழுது 98இல் சிறப்பித்து விருது வழங்கியது.




பூவரசு கடந்த காலங்களில் நடாத்திய கலை வடிவங்களிலிருந்து தொகுக்கப்பட்ட பூவரசம்பூ வீடியோமலர் விழாவில் வெளியிடப்பட்டது.
இதன் முதற்பிரதியை பூவரசின்  வாசகர் திரு கந்தையா சிவபாலன்  அவர்களிடம் திருமதி புவனேந்திரன் வழங்கினார். பூவரசு 7வது ஆண்டு நிறைவு மலரின் முதற்பிரதியை பூவரசு வாசகர் திரு சுப்பிரமணியம் தயாபரன் அவர்களிடம் திருமதி இந்துமகேஷ் வழங்கினார்.
அறிவிப்பாளர்களாக செல்வன் பிரசன்னா, திரு விஜயகுமார் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
பூவரசு ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதாய் நிறைவு பெற்றது.

-இரசிகன்


நிகழ்வின் நிழல்கள்:
படப்பிடிப்பு
புகைப்படக் கலைஞர் திரு. எஸ்.தேவராஜா


Dienstag, 7. Februar 2017

பூவரசு - வாசகர் விழா 1997



பூவரசு கலை இலக்கியப் பேரவையின்
வாசகர் அரங்கம் 97


பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 6வது ஆண்டு நிறைவுக் கலைவிழா, வாசகர் அரங்கம் 97 என்னும் தலைப்பில் பிறேமன் நகரில் 18.01.1997 அன்று நடைபெற்றது.
முற்றிலும் பூவரசு வாசகர்கள், படைப்பாளர்கள் முன்னின்று நடாத்திய இந்த விழாவில் வழக்கம்போல் பூவரசு புதிய பல அம்சங்களை மேடைக்குக் கொணர்ந்தது.



பூவரசு இனிய தமிழ் ஏட்டின் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் பூவரசுர என்னும் ஒரு கலை இலக்கியக் குடும்பத்தினர்களாக நின்று நடாத்தி முடித்த விழாவாக இது அமைந்திருந்தது ஒரு தனிச்சிறப்பு.

பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வாசகி திருமதி ஆனந்தஈஸ்வரி திவ்வியமூர்த்தி அவர்களும் ஜெர்மானிய மாது திருமதி வில்ரூட் கடெல்கா அம்மையார் அவர்களும் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்கள்.

தாயகமண்ணின் விடிவுக்காகத் தம்முயிர் தந்த புனித ஆத்மாக்களுக்காக மௌனாஞ்சலியும் அதனைத்தொடர்ந்து திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் அவர்களின் இறைவணக்கப் பாடலும் இடம்பெற்றன. பூவரசு கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் திருமதி சசிகலா தேவராஜா வரவேற்புரை வழங்கினார்.

உலகமே நம இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம் என்னும் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் தாரகமந்திரம் பல ஆண்டுகளுக்கு முன்னரே பாடலாய் உருப்பெற்றது. இந்துமகேஷ் அவர்கள் எழுதி ஜெர்மானிய இசைக்கலைஞர் பீற்றர் என்பவரால் இசையமைக்கப்பட்டிருநத் இந்தப் பாடல் இப்போது பூவரசு மேடைகளில் ஒற்றுமைப்பாடலாக  ஒலித்து வருவது வாசகர்கள் அறிந்ததே.
இம்முறை வழக்கமான பாடகர்களுடன் இளந்தளிர்கள் பலர் இணைந்து இந்த ஒற்றுமைப் பாடலைப் பாடினார்கள். தபேலா வாத்தியக் கலைஞர் பத்மஸ்ரீ இந்தப் பாடலுக்கு வாத்திய இசை வழங்கினார்.

மழலைகள் பங்குகொண்ட புள்ளிக்கோழி நடனமும் தொடர்ந்து பூவரசு வாசகர்கள் திருமதி சித்திராதேவி தங்கராஜா, திருவாளர்கள் மா. குலதாசன் (முத்துக்கள் மூன்று அமைப்பாளர்) , செ. யோகநாதன் (கலை நிலா இசைக்குழு அமைப்பாளர்) க. மகேந்திரராஜா, சச்சிதானந்தமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரைகளும்  விமர்சன உரைகளும் வழங்கினர்.



பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 6வது ஆண்டுமலரை திருமதி  இந்துமகேஷ் வழங்க கவிஞர் எழிலன் பெற்றுக்கொண்டார். தொடாந்து அவரது சிறப்பரை இடம்பெற்றது.

கலியுகதெய்வமாம் கந்தனின் புகழ்பாடும் பக்திப்பாடல்களுடன் புதுவை இரத்தினதுரை எழுதி வர்ண ராமேஸ்வரன் பாடிய தேரில் ஏறினாய் என்னும் நல்லூர் முருகன் பாடலையும் இணைத்து இந்துமகேஷ் தொகுத்த திருமுருகா ஒருமுறைவா ஈழத்தமிழர் இன்றைய நிலைகுறித்து இறையருள்வேண்டும் புதிய பாணியிலமைந்த இசைநாடகமாக இளந்தளிர்களின் அற்புதத் திறமைகளுடன் மேடைக்கு வந்தது.


பூவரசு கலை இலக்கியப் பேரவை உறுப்பினர் திருமதி சாந்தராணி பத்மகுமார் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தி வழங்கினார்.



அடுத்து முற்றிலும் வித்தியாசமான முறையில் இடம்பெற்றது உனக்காகவா எனக்காகவா விவாதமேடை. எழுத்தாளர்கள் திருவாளர்கள் இராஜன் முருகவேல், கொற்றையூர் வாசன,; எழிலன் ஆகியோருடன் திரு இலட்சுமிகாந்தனும் விவாதமேடையில் பங்குகொண்டார்கள். புலம்பெயர் தமிழர்தம் பொதுப்பணிகள் சுயநலம் சார்ந்ததா பொதுநலம் சார்ந்ததா என்ற வினாவுக்கு இவ்விவாத மேடை விடையளித்தது.




பூவரசு 6வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசை வென்றிருந்த ராட்டிங்கள் இரா சம்பந்தன் பரிசளிப்பின்பொது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் பணியைப்பாராட்டி வாழ்த்தக் கவிதையொன்றினை வழங்கினார்.

இளந்தளிர்களுக்கென நடாத்தப்பட்ட போட்டிகளில் பரிசுபெற்ற சிறுவர்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இளந்தளிர்களுக்கும் பூவரசு பரிசளித்துச் சிறப்பித்தது. பூவரசு கலை இலக்கியப் பேரவையின் சார்பில் எழுத்தாளர்கள் திருமதி மகேஸ்வரி வரதராஜா, திருமதி விஜயா அமலேந்திரன், திருமதி மாலினி குணராஜன்,மற்றும் பூவரசு வாசகர்கள் திரு செல்வரட்ணம் உதயகுமார் ஆகியோர் இளந்தளிர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

பூவரசு அதீர்ஷ்டவாசகர் தெரிவுப்போட்டியில் பிறேமன் வாசகர்கள் திரு. மா.குலதான், திரு ப.பத்மகரன் ஆகியோரும் ஐரோப்பிய வாசகர்மட்டத்தில் திரு எழிலன் அவர்களும் அதிர்ஷ்ட வாசகர்களானார்கள் பூவரசு அவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தது.

இவ்வாசகர் அரங்கின் சிறப்பு நிகழ்ச்சியாக சிறுகதைநாடகம் என்னும் புதிய கலைவடிவம் ஒன்று மேடைக்கு அறிமுகமாயிற்று. இலங்கை வானொலியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பாளர் திரு. பி.எச்.அப்துல்ஹமீது அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கலைவடிவத்தை மேடைக்குக் கொணர்வதாக இந்துமகேஷ் தெரிவித்தார். முன்னரே வானொலியில் ஒலிபரப்பான தனது சிறுகதைநாடகங்களின் பாணியில் பூவரசு இனிய தமிழ் ஏட்டில் வெளியான தனது கதையொன்றினை உன்னைத்தேடினேன் என்னும் தலைப்பில் சிறுகதைநாடக வடிவமாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.



திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வத்தின் நெறியாள்கையில் திருவாளர்கள் பாலசுப்பிரமணியம், ஞானச்செல்வம் ஆகியோருடன் திரு. மனோஹிமன் திருமதி அனுலா மனோஹிமன் மற்றும் பிரசன்னா, ஜயதீபன் ஆகியோர் தமது நடிப்பாற்றலால் இந்நாடகத்தைச் சிறப்பித்திருந்தனர்.

திரு திருமதி மனோஹிமன், திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வம், திருமதி சாந்தராணி பத்மகுமார் ஆகியோருக்கு கலைஞர் கௌரவிப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

திரு.தே.தங்கராஜா, செல்வன் பிரசன்னா  மகேஸ்வரன், செல்வி பிரியா மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாக என்னைக் கவர்ந்தது இவ்விழா குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு பெற்றதேயாகும்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்தபோதும் தன் வாசகர்கள்மீது கொண்ட நம்பிக்கையுடன் தன் கலை இலக்கியப் பணியில் 7வது ஆண்டில் கால்பதித்திருக்கிறது பூவரசு.

வாசகர் அரங்கம் 97இல் வாசகர்களும் பூவரசுமீது தங்களுக்குள்ள அளவுகடந்த பற்றுதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தன்னுடைய காலத்துக்குப் பிறகும் பூவரசு தமிழ்த் தொண்டாற்றவேண்டும் என்று ஒவ்வொரு பூவரசு மேடையிலும் சொல்லிவருகிறார் இந்துமகேஷ் அவர்கள். அவரது எண்ணம் நிச்சயம் நிறைவேறும். படைப்பாளர்கள் வாசகர்களாகிய எமது ஆதரவு அதற்கு அத்தாட்சி

-இரசிகன்.


நிகழ்வுகளிலிருந்து நிழற்படங்கள்:
எஸ்:தேவராஜா