Dienstag, 7. Februar 2017

பூவரசு - வாசகர் விழா 1997



பூவரசு கலை இலக்கியப் பேரவையின்
வாசகர் அரங்கம் 97


பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 6வது ஆண்டு நிறைவுக் கலைவிழா, வாசகர் அரங்கம் 97 என்னும் தலைப்பில் பிறேமன் நகரில் 18.01.1997 அன்று நடைபெற்றது.
முற்றிலும் பூவரசு வாசகர்கள், படைப்பாளர்கள் முன்னின்று நடாத்திய இந்த விழாவில் வழக்கம்போல் பூவரசு புதிய பல அம்சங்களை மேடைக்குக் கொணர்ந்தது.



பூவரசு இனிய தமிழ் ஏட்டின் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் பூவரசுர என்னும் ஒரு கலை இலக்கியக் குடும்பத்தினர்களாக நின்று நடாத்தி முடித்த விழாவாக இது அமைந்திருந்தது ஒரு தனிச்சிறப்பு.

பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வாசகி திருமதி ஆனந்தஈஸ்வரி திவ்வியமூர்த்தி அவர்களும் ஜெர்மானிய மாது திருமதி வில்ரூட் கடெல்கா அம்மையார் அவர்களும் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்கள்.

தாயகமண்ணின் விடிவுக்காகத் தம்முயிர் தந்த புனித ஆத்மாக்களுக்காக மௌனாஞ்சலியும் அதனைத்தொடர்ந்து திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் அவர்களின் இறைவணக்கப் பாடலும் இடம்பெற்றன. பூவரசு கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் திருமதி சசிகலா தேவராஜா வரவேற்புரை வழங்கினார்.

உலகமே நம இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம் என்னும் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் தாரகமந்திரம் பல ஆண்டுகளுக்கு முன்னரே பாடலாய் உருப்பெற்றது. இந்துமகேஷ் அவர்கள் எழுதி ஜெர்மானிய இசைக்கலைஞர் பீற்றர் என்பவரால் இசையமைக்கப்பட்டிருநத் இந்தப் பாடல் இப்போது பூவரசு மேடைகளில் ஒற்றுமைப்பாடலாக  ஒலித்து வருவது வாசகர்கள் அறிந்ததே.
இம்முறை வழக்கமான பாடகர்களுடன் இளந்தளிர்கள் பலர் இணைந்து இந்த ஒற்றுமைப் பாடலைப் பாடினார்கள். தபேலா வாத்தியக் கலைஞர் பத்மஸ்ரீ இந்தப் பாடலுக்கு வாத்திய இசை வழங்கினார்.

மழலைகள் பங்குகொண்ட புள்ளிக்கோழி நடனமும் தொடர்ந்து பூவரசு வாசகர்கள் திருமதி சித்திராதேவி தங்கராஜா, திருவாளர்கள் மா. குலதாசன் (முத்துக்கள் மூன்று அமைப்பாளர்) , செ. யோகநாதன் (கலை நிலா இசைக்குழு அமைப்பாளர்) க. மகேந்திரராஜா, சச்சிதானந்தமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரைகளும்  விமர்சன உரைகளும் வழங்கினர்.



பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 6வது ஆண்டுமலரை திருமதி  இந்துமகேஷ் வழங்க கவிஞர் எழிலன் பெற்றுக்கொண்டார். தொடாந்து அவரது சிறப்பரை இடம்பெற்றது.

கலியுகதெய்வமாம் கந்தனின் புகழ்பாடும் பக்திப்பாடல்களுடன் புதுவை இரத்தினதுரை எழுதி வர்ண ராமேஸ்வரன் பாடிய தேரில் ஏறினாய் என்னும் நல்லூர் முருகன் பாடலையும் இணைத்து இந்துமகேஷ் தொகுத்த திருமுருகா ஒருமுறைவா ஈழத்தமிழர் இன்றைய நிலைகுறித்து இறையருள்வேண்டும் புதிய பாணியிலமைந்த இசைநாடகமாக இளந்தளிர்களின் அற்புதத் திறமைகளுடன் மேடைக்கு வந்தது.


பூவரசு கலை இலக்கியப் பேரவை உறுப்பினர் திருமதி சாந்தராணி பத்மகுமார் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தி வழங்கினார்.



அடுத்து முற்றிலும் வித்தியாசமான முறையில் இடம்பெற்றது உனக்காகவா எனக்காகவா விவாதமேடை. எழுத்தாளர்கள் திருவாளர்கள் இராஜன் முருகவேல், கொற்றையூர் வாசன,; எழிலன் ஆகியோருடன் திரு இலட்சுமிகாந்தனும் விவாதமேடையில் பங்குகொண்டார்கள். புலம்பெயர் தமிழர்தம் பொதுப்பணிகள் சுயநலம் சார்ந்ததா பொதுநலம் சார்ந்ததா என்ற வினாவுக்கு இவ்விவாத மேடை விடையளித்தது.




பூவரசு 6வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசை வென்றிருந்த ராட்டிங்கள் இரா சம்பந்தன் பரிசளிப்பின்பொது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் பணியைப்பாராட்டி வாழ்த்தக் கவிதையொன்றினை வழங்கினார்.

இளந்தளிர்களுக்கென நடாத்தப்பட்ட போட்டிகளில் பரிசுபெற்ற சிறுவர்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இளந்தளிர்களுக்கும் பூவரசு பரிசளித்துச் சிறப்பித்தது. பூவரசு கலை இலக்கியப் பேரவையின் சார்பில் எழுத்தாளர்கள் திருமதி மகேஸ்வரி வரதராஜா, திருமதி விஜயா அமலேந்திரன், திருமதி மாலினி குணராஜன்,மற்றும் பூவரசு வாசகர்கள் திரு செல்வரட்ணம் உதயகுமார் ஆகியோர் இளந்தளிர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

பூவரசு அதீர்ஷ்டவாசகர் தெரிவுப்போட்டியில் பிறேமன் வாசகர்கள் திரு. மா.குலதான், திரு ப.பத்மகரன் ஆகியோரும் ஐரோப்பிய வாசகர்மட்டத்தில் திரு எழிலன் அவர்களும் அதிர்ஷ்ட வாசகர்களானார்கள் பூவரசு அவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தது.

இவ்வாசகர் அரங்கின் சிறப்பு நிகழ்ச்சியாக சிறுகதைநாடகம் என்னும் புதிய கலைவடிவம் ஒன்று மேடைக்கு அறிமுகமாயிற்று. இலங்கை வானொலியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பாளர் திரு. பி.எச்.அப்துல்ஹமீது அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கலைவடிவத்தை மேடைக்குக் கொணர்வதாக இந்துமகேஷ் தெரிவித்தார். முன்னரே வானொலியில் ஒலிபரப்பான தனது சிறுகதைநாடகங்களின் பாணியில் பூவரசு இனிய தமிழ் ஏட்டில் வெளியான தனது கதையொன்றினை உன்னைத்தேடினேன் என்னும் தலைப்பில் சிறுகதைநாடக வடிவமாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.



திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வத்தின் நெறியாள்கையில் திருவாளர்கள் பாலசுப்பிரமணியம், ஞானச்செல்வம் ஆகியோருடன் திரு. மனோஹிமன் திருமதி அனுலா மனோஹிமன் மற்றும் பிரசன்னா, ஜயதீபன் ஆகியோர் தமது நடிப்பாற்றலால் இந்நாடகத்தைச் சிறப்பித்திருந்தனர்.

திரு திருமதி மனோஹிமன், திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வம், திருமதி சாந்தராணி பத்மகுமார் ஆகியோருக்கு கலைஞர் கௌரவிப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

திரு.தே.தங்கராஜா, செல்வன் பிரசன்னா  மகேஸ்வரன், செல்வி பிரியா மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாக என்னைக் கவர்ந்தது இவ்விழா குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு பெற்றதேயாகும்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்தபோதும் தன் வாசகர்கள்மீது கொண்ட நம்பிக்கையுடன் தன் கலை இலக்கியப் பணியில் 7வது ஆண்டில் கால்பதித்திருக்கிறது பூவரசு.

வாசகர் அரங்கம் 97இல் வாசகர்களும் பூவரசுமீது தங்களுக்குள்ள அளவுகடந்த பற்றுதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தன்னுடைய காலத்துக்குப் பிறகும் பூவரசு தமிழ்த் தொண்டாற்றவேண்டும் என்று ஒவ்வொரு பூவரசு மேடையிலும் சொல்லிவருகிறார் இந்துமகேஷ் அவர்கள். அவரது எண்ணம் நிச்சயம் நிறைவேறும். படைப்பாளர்கள் வாசகர்களாகிய எமது ஆதரவு அதற்கு அத்தாட்சி

-இரசிகன்.


நிகழ்வுகளிலிருந்து நிழற்படங்கள்:
எஸ்:தேவராஜா

Keine Kommentare: