Donnerstag, 28. August 2014

பூவரசு - நடந்துவந்த பாதை













- புஷ்பராணி ஜோர்ஜ்.


உலகமே நம் இல்லம் 
உள்ளமெல்லாம் நம் சொந்தம்
-இதுவே தாரக மந்திரமாகிப் பதினைந்து ஆண்டுகளின் முன்னே தைத்திங்கள் 1991இல் (தை-மாசி) முதலாவது பூவரசு சிற்றிதழ் ஒன்று சிறு பதியம்போட்டு பந்தற்கால் இட்டு இரண்டு மாதங்களுக்கொன்றாகத் துளிர்த்த காலமது. நாமும் அதன் நிழலினிலே இளைப்பாற மருவியிருந்த நேரமது.
அன்று மொட்டவிழ்ந்த இதழ் இன்று 2006இல் பதினாறாவது ஆண்டில் ஆடி - ஆவணியில் 100வது இதழாகி மணம்பரப்பி மகிழ்கின்றது.
இந் நீள்கால விரிப்பினிலே அதனை முகர்ந்து பார்த்து அதனைப் பற்றிய விடயங்களை எண்ணிப்பார்க்கும் வேளையிது.

பூவரசுக்கும் எமக்குமிடையிலே உள்ள பிணைப்பு ஒன்றிலிருந்து இன்று தொண்ணூற்றொன்பதுவரை (1 - 99) நீண்டதொரு காலமாகும்.
இவ்விடைக்காலத்திலே அதன் முக்கிய இதழ்களைக் கொய்து எடுத்து அதன் வளர்ச்சிப் படிகள் எப்படியானது என்பதைச் சொல்லவேண்டிய கடப்பாடும் எமக்குண்டு நாம் உயர வழிதந்த ஏணிப்படிகள் அவை.

பூவரசு 1991 தை-மாசி 1வது மலரில் பூவரசு என்ற தலைப்பில் ஆசிரியர் கருத்து அமைந்திருந்தது. அத்தோடு நாங்களும் நானும் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருந்தது.(இவ்விரண்டும் 2001 தை மாதம் வெளியான பூவரசு 10வது ஆண்டு மலரிலே புதிய வாசகர்களுக்காக மீளவும் பூவரசும் நானும் என்ற தலைப்பிலே பிரசுரமாகி இருந்தன)
அடுத்த அதே பக்கத்தில் தொடுவானம் என்ற தலைப்பில் கவிதை ஒன்று வரையப்பட்டிருந்தது. இதன்படி பூவரசு வானத்தைத் தொடவேண்டும் என்பதற்காகவே என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆசிரியர் இந்துமகேஷ் உட்பட ஏழு எழுத்தாளர்களும், சிறுவர் பக்கம் அருண் அண்ணாவும் இணைந்திருந்த இவ்விதழ் 1வதாக அரும்பியது.

இளஞ்சந்ததிக்காகவே களம் அமைக்கப் புறப்பட்டது பூவரசு.
பூவரசு (பங்குனி-சித்திரை 1991) 2வது இதழிலேயே இளந்தளிர்களுக்காகவும் துளிர்க்கத் தொடங்கியது 

முதலாவது மலரில் என் அன்பு வாசக நண்ப..! என விளித்த ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட மனிதனைத் தேடுகிறேன் என்ற நெடுங்கதை முதலாவதாகத் தொடராகிப் பல மலர்களை அலங்கரித்திருந்தது.

கைகளிலே சின்ன மலராகத் தவழ்ந்த ஒரு மாதக் குழந்தை, மேலும் பலர் கைகளிலே  தவழ்ந்து வளர்ந்த பொழுதுகளிலே என் வாசக நண்ப, என் வாசகர்களைத்தேடி, நாங்கள் நாலுபேர் சேர்ந்து, மனம்விட்டுக் கொஞ்சம், மனதோடு கொஞ்சம் பேசி, வாசகர் வட்டம் சேர்ந்து, பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுப் பாடி, வாசகர் அரங்கமைத்து எழுத மறந்த எழுத்துக்களால் பூவரசும் நானும் நட்புடன் கைகோர்த்து பலர் ஒன்றாகி பூவரசை வளர்த்தெடுப்பதில் தோள்கொடுத்தனர் என்பதையும் நாம நன்றியுடளன் நோக்கவேண்டியதும் அவசியமானது.

ஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழா மேடைகள்கண்டு பூவரசுமூலம் அன்பைப் பகிர்ந்து வந்தனர். மனிதத்தைத் தேடி மக்கள் நடக்க பூவரசில் அதன் தேன்கூட்டைக்கட்டி எழுப்பத் தேனீக்களாய் பிரதிபலன் கருதாது செயல்பட்டனர் இவர்கள்.

1991 தை-மாசி 40 பக்கங்களைக் கொண்டு கையெழுத்துப் பதிவாக உருவாகியது பூவரசின் முதலாவது இதழ்.
அவ்வாண்டு கார்த்திகை மார்கழி 6வது இதழ் தமிழ் அச்சு எழுத்தாகியது.
இது அதன் மலர்ச்சியாகும்.

1992 தை மாசி இதழ் 72 பக்கங்களைக் கொண்ட ஆண்டு மலராக பரிமாணம் பெற்றதுமல்லாது ஓவியர் சித்தன் அவர்களால் பூவரசுக்கென்றொரு சின்னமும் உருவாக்கம் ஆனது.

இந்த ஆண்டிலேயே நமது கலைஞர்கள் என்ற ஒரு பேட்டியை ஆரம்பித்திருந்தது. எம் நாட்டுக் கலைஞர்களை கௌரவப்படுத்தியிருந்தது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயம் 2002ம் ஆண்டிலும் தொட்டுப் பார்க்கப்பட்டுள்ளது.

இதைவிட ஆண்டுதோறும் போட்டிகளை நடாத்தி பல திறமையான ஆக்கதாரர்கள், சிறுவர்களை வெளிக்கொண்டுவர பூவரசு அவர்களுக்கான வெற்றிக்களமாய் அமைந்திருந்தது வெள்ளிடை மலை.

93ம் ஆண்டு வைகாசி - ஆனி இங்கே உறங்கிக்கிடக்கும் தமிழ் ஏட்டுச் சுவடிகள் இதனையும் பூவரசே எமக்கு அறிமுகமாக்கியது. இதனை பிறிதொரு இதழிலும் மறு பிரசுரமாக்கியிருந்தது. (பூவரசு 50வது மலர் 98 பங்குனி சித்திரையில்)

எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, கவிதாயினிகளாக, கதாசிரியர்களாக, கட்டுரையாளர்களாக பலர் பூவரசுப் பயணத்தில் இணைந்திருந்ததனால் அது படிப்படியாக தனது பயணத்தை முன்னோக்கித் தொடர்ந்து சென்றது.

94இல் வெளியான ஆண்டுமலர் 100 பக்கங்களைத் தொட்டு நிறைத்திருந்தது.
95இல் பூவரசு மாதம் ஒரு மலராகி சித்திரையில் பூத்த மலர் நகைச்சுவைச் சிறப்பிதழாகி எம்மை மகிழ்வில் திளைக்க வைத்தது.

மீண்டும் 96இல் இரண்டு மாதத்திற்கு ஒன்றாகி ஆடி - ஆவணி சிறுகதைச் சிறப்பிதழாக அலங்காரமாய் மலர்ந்திருந்தது.
97இல் தை - மாசி 37வது மலர் பூவரசின் கலை இலக்கியப் பேரவையாய் முகையவிழ்த்து வண்ணமாய்ப் பிறப்பெடுத்திருந்தது.


98இல் ஆடி - ஆவணி இதழ் இப்பேரவையின் நூலகக் கண்காட்சியில் புலம்பெயர் நாடுகளில் வெளியான வேறும்பல இலக்கியச் சஞ்சிகைகளையும் காட்சிப்படுத்தி பெருமிதம் கொண்டது.

இதே ஆண்டு புரட்டாதி - ஐப்பசி மலர் இவர்கள் யார் எனக் கேள்வி எழுப்பி இதுவரை நடைபெற்ற பூவரசின் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களை வரிசையாய் வகைப்படுத்தி அடையாளங்காட்டி நின்றது.

24. 01. 98இல் பூவரசம்பூ ஒளிப்பேழையும் அறிமுகமானது.

ஆண்டுதோறும் விழாக்கள், வாசகர் ஒன்று கூடல் அரங்கம் அமைத்து போட்டியாளர்களைக் கௌரவிக்கவும் அது தவறியதில்லை.

ஆண்டு மலர்களாகவும் வருடா வருடம் 25, 50, 75வது விசேட மலர்களாகவும் தன்னை இனங்காட்டி விரிந்தது. 2000 ஆண்டு மலர்ந்த மலர்கள் ஆறும் சிறப்பிதழ்களாகி அவை நெடுங்கதைகளாகப் புன்முறுவல் பூத்தன.

1991-2001வரையான இதழ்களின் அட்டைப்படங்களை வரைந்த ஓவியர்களையும் 2001ம் ஆண்டு தை-மாசி 67வது மலரிலே அடையாளங் காட்டி அவர்களின் திறமைகளை எமக்கும் அறிமுகப்படுத்தியதையும் இங்கே எடுத்தியம்புகின்றோம்.

2002ம் ஆண்டிலே கார்த்திகை - மார்கழி இதழ் ஆன்மீக மலராகி எம் ஆன்மாக்களைத் தொட்டுப்பேசியது.

2003 தை - மாசி ஆண்டு மலரிலே ஐந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நெடுங்கதை ஒன்று (இனி அவர்கள்) இடம் பெற்றிருந்தது.

அன்று 1991இல் ஆகக் குறைந்த எழுத்தாளர்களுடன் 1வது இதழாக மலர்ந்த பூவரசு 16வதுஆண்டில் 2006 வைகாசி - ஆனிவரை 99 இதழ்களாய் மலர்ந்து மணம் கமழ்ந்தது. இன்று 100வது இதழை விரிக்கத் தயாராகும் வேளையிலே கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைத் தன்னகத்தே தாங்கி எண்ணிலடங்கா வாசகர்களையும் தன்னோடு இணைத்து உலகளாவிய ரீதியில்; தனக்கென்றொரு முத்திரையையும் பொறித்துக் கொண்டுள்ளது.

மழலைகள் நலனுக்காய், மனித நேயத்திற்காய் பலன் தந்த பூவரசு காலத்தால் மறக்கப்படாதது. அதன்சேவை எண்ணிலடங்காதது. இதுவரை பூத்த அதன் இதழ்கனைக் கோர்த்து மாலைசூடிப் பாராட்டிப் பணிகின்றோம்.

என்றும் நலமுடன் வாழ்க! வளர்க! வெல்க! 
தொடுவானமாய் உயர்க! ஆயுள் கெட்டியாக வாழ்த்துகின்றோம்!
படைப்பவர் ஆக்கம் தருக! படிப்பவர் ஊக்கம் தருக!

( பூவரசு இனிய தமிழ் ஏட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான  திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் அவர்கள் பூவரசு 100வது இதழுக்கென வரைந்த கட்டுரை. பூவரசு 100வது இதழில் ஆடி ஆவணி 2006இல் பிரசுரமானது)

Montag, 25. August 2014

பூவரசு மலர்ந்தது


பூவரசு முதலாவது இதழிலிருந்து...


பூவரசு
மேற்கு ஜெர்மனியின் பிறேமன் நகரிலிருந்து
புதிதாய்த் துளிர்விட்டிருக்கும்
பூவரசு என்கின்ற இந்தப் புதிய தமிழ் ஏட்டினை
உங்கள் கரங்களில் தவழவிடுவதில்
நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
பூவரசு
புதிய படைப்பாளிகளையும் வரவேற்பதோடு
மனிதநேயத்துடன் வரையப்படும் அனைத்து
ஆக்கங்களையும் ஆதரிக்கும்.
எழுத்தாளன் என்பவன் யாருக்கும் கைதியில்லை
அவன் சுதந்திரமாய்ச் சிந்திக்கவேண்டும்
சுதந்திரமாய்ச் சொல்ல வேண்டும்
சுதந்திரமாய் எழுதவேண்டும்.
ஆனால் சிந்திப்பதும் சொல்வதும் எழுதுவதும்
ஒரு சமுதாய நலனோடு இணைந்திருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட படைப்புக்களையே கலைஞர்கள்
தரவேண்டும்.
உங்கள் சிந்தனைகளை கற்பனைகளை
எழுத்தில் வடியுங்கள். உங்கள் கருத்துக்கள்
எங்களோடு ஒத்திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.
மனிதநேயத்தோடு தமிழர்க்காய் அது ஏதேனும் சொல்வதெனில்
எங்களுக்குச் சம்மதமே. பூவரசு அதைப் புனிதமாய் வரவேற்கும்.
மனிதநேயத்தைத் தேடுவோர் பூவரசைப் புரிந்து வரவேற்பர்
என்று நம்புகிறோம்.
பூவரசு இப்போது இரு திங்களுக்கு ஒருமுறை என்று
ஆரம்பித்திருக்கிறோம். உங்கள் ஆதரவு கண்டு இது
மாதம் ஒருமுறை மலரும் சாத்தியமுண்டு.
நமது சந்திப்புக்கள் தொடரும்.

அன்புடன்
சின்னையா மகேஸ்வரன்

(1991 தைத்திங்களில் வெளியான பூவரசு முதல் இதழில் ஆசிரியர் குறிப்பு)

மீண்டும் துளிர்க்கும்




தேடல் தொலைத்துத் தனித்துப்போன சிறுதீவாய் ஒதுங்கிக் கிடக்கிறது இதயம். எழுதுகோல் ஏந்தியவர்களும் இரசனையுணர்வு மிகுந்தவர்களுமாய் மொழியோடு உறவாடி அதுவே மூச்சுக் காற்றென முகம்காட்டிய மனிதர்களில் பலரை இன்று காணோம். என்னைப்போலவே உலகத்தின் பல்வேறு மூலைகளிலும் ஒவ்வொருவராய் தனித்துத் தனித்து ஒதுங்கிக் கிடக்கிறார்கள்.


வாழும் காலத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும் புதிய வரவுகளும் பூத்த உறவுகளும் காலப்போக்கில் எல்லாம் வெறும் கனவுகளே என்று உரத்துச்சொல்லி ஓரம்கட்டுகின்றன. எதுவும் நிரந்தரமில்லை என்றாலும் இன்றையப் பொழுதுமட்டும் நிரந்தரமானது என்ற உணர்வோடு கடமைபுரியவேண்டும் என்பதைக் காலம் கற்பித்துத் தந்திருக்கிறது.


எழுத்து எனக்குத் தொழில் அல்ல.

சிறுவயதில் அது இனிமையானதொரு உணர்வாய் இருந்து என்னை இயக்கியது உண்மை. இலங்கை வானொலியும் பத்திரிகைகள் சஞ்சிகைகளும் எழுத்தாளன் என்று என் பெயர் படித்தபோது, என் படைப்புக்களை இரசித்துவிட்டு கன்னியரும் காளையருமாய் எனக்குக் கடிதங்கள் வரைந்தபோது, இளமை உலகத்துக்கு எழுத்து இன்பமூட்டுவது என்ற உண்மை என்னைத் தொடர்ந்து எழுதவைத்தது.


கற்பனைகளில் கதைபண்ணிக்கொண்டிருந்த என்னை அனுபவங்கள் அடித்து நெறிப்படுத்தின. என்னைப்போலவே எழுத்தை நேசித்துக் கொண்டிருந்த வர்களுக்காக "இதயம்" என்ற சஞ்சிகையை எழுபதுகளில் எடுத்துவந்தேன்.

புலம்பெயர் மண்ணில் பூவரசு.
"இனிய தமிழ் ஏடு இரு திங்கள் ஒன்று" என்று முகவரியிட்டு, "உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம்!" என்று உரக்கச்சொல்லி உற்சாகமாகத்தான் ஆரம்பித்தோம். பூவரசுக்கு இப்போது வயது பதினெட்டு. ஆனால் புலம்பெயர்மண்ணில் என் எழுத்துப்பணிக்கு அகவை இருபத்திரெண்டு. (1986இல் கையெழுத்துப்பிரதிகளாக வெளியான என் குறுநவீனங்கள் மூலம் புலம்பெயர்மண்ணில் என் எழுத்துப்பணி மீண்டும் ஆரம்பித்தது)


பூவரசு இனிய தமிழ் ஏட்டை மனப்பூர்வமாக நேசித்துக்கொண்டிருக்கும் இதயங்கள் புலம்பெயர்மண்ணில் அதிகம் என்பதை நான் அறிவேன். ஆனால் தொடர்ச்சியாக பூவரசை வெளிக்கொண்டுவரமுடியாத சூழலுக்குள் நானும், தொடர்ச்சியாக அதற்கு ஒத்துழைக்க முடியாத சூழலுக்குள் நீங்களும் இருக்கும்போது பூவரசின் அச்சு வடிவிலான வெளியீட்டில் தொடர் வருகையை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொண்டுதானாகவேண்டும்.
இயன்றவரை முயற்சிக்கிறேன்.
படைப்பாளர்களினதும் வாசகர்களினதும் ஆர்வம் தொடர்ந்திருக்குமாயின் இது சாத்தியமாகலாம்.


வழக்கமாக எல்லா ஊடகங்களும் பசித்தழும் குரல்களோடுதான் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. நெருக்கும் பொருளாதாரப் பற்றாக் குறையும், தாம்தாம் சார்ந்த துறைகளில் தத்தம் திறமைகளை வெளிப்படுத்த தயக்கம்காட்டுகிற திறமைசாலிகளும் கலை, இலக்கிய முயற்சிகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார்கள்.
இந்தத் தடைகள் நீக்கப்பட்டால்-ஊடகங்கள் மீண்டும் துளிர்க்கும்.
உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
உங்கள்
இந்துமகேஷ்.

பூவரசு 100




வெளிவந்துவிட்டது பூவரசு இனிய தமிழ் ஏட்டின் நூறாவது இதழ். 
ஜேர்மனி, பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு' நூறாவது இதழில், 'எதிர்ப்படும் தடைகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேலும் இலகுவாக்குவதற்கு உங்களால்மட்டுமே இயலும். உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும்வரை பூவரசு இன்னும் பல தமிழ்ப் பூக்களைப் பூத்துச் செழிக்கும்' என்ற ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் முகவுரையானது, 'பூவரசு தொடர்ந்து வருமா வராதா' என்ற வாசகர்களதும் படைப்பாளிகளதும் சந்தேகத்தைப் போக்கும்வண்ணம் உள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். 

ஊடகங்களின் வளர்ச்சி, இணையத்தின் வீக்கம், சூழலின் தாக்கம் எனப் புகலிடத் தமிழர்களது நேரங்கள் சுமைகளாகக் கழியும்போதும், பதினாறு வருடங்களாக புகலிடத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென்றொரு தரமான இடத்தைத் தக்கவைத்தவாறு, புதிய படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வந்ததோடு, ஏற்கெனவே அறிமுகமாகிய படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் களமமைத்து அவர்களையும் உற்சாகப் படுத்தி, சிறுவர்களையும் தமிழால் வளைத்திழுக்கும் பூவரசானது நூறாவது இதழை எட்டிப்பிடித்திருப்பதானது, இந்துமகேஷ் என்பவரது தனிமனித சாதனையே என்றால் மிகையாகாது. 
வாசகமலர்கள் பகுதியை கவனித்தால், 'எனது எழுத்துறவுக்கே அத்திவாரமிட்ட தாயேடு அல்லவா இந்த நற்றமிழ் ஏடு?' என விஜயா அமலேந்திரன் அவர்கள் மெய்சிலிர்க்க, லண்டனில் இருந்து த.சு.மணியம் அவர்கள் 'புலம்பெயர்ந்த மண்ணில் பல படைப்பாளிகளை வளர்த்துவிட்ட பெருமை பூவரசுக்குண்டு' என மெய்பகர, 'தாய்மண்ணின் வாசத்தோடு தரமான சஞ்சிகையாக தொடர்ந்து வரும் பூவரசு' என சுவிஸிலிருந்து ஏ.ஜே.ஞானேந்திரன் அவர்கள் பாராட்ட, ஜேர்மனியிலிருந்து நகுலா சிவநாதன் அவர்கள் 'ஆவரசாக ஒளிர்ந்து நாவரசாக நல்ல தமிழ் வளர்க்கும் பூவரசே, பாவரசெடுத்து வாழ்த்துகின்றேன்' என வாழ்த்துகிறார். 

இப்படி வாச(க)மலர்களின் வாழ்த்துக்கள் வளர்ந்து செல்கின்றன. 

இதுவரை வெளிவந்த பூவரசின் 99 இதழ்களின் பார்வையில் திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் நடந்து செல்ல, 'அழகும் ஆபத்தும்' என சிந்தைக்கு தீனி தருகிறார் ஏ.ஜே.ஞானேந்திரன். 'என்னோடு பூவரசு' என மட்டுவில் ஞானக்குமாரன் அகமகிழ, 'பற்றும் வரவும்' என கோசல்யா சொர்ணலிங்கம் புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு தரமான வரவொன்று தர, த.சு. மணியம் வாழும் வழி சொல்ல, 'இணைய இதழா, அச்சுப் பதிப்பா சிறந்தது?' என சந்திரவதனா செல்வகுமாரன் நிஜங்களின் பக்கம் அழைக்க, 'பாதை தெரிந்திருந்தால் பயணம் இலகுவாகும்' எனச் சிந்தனைச் செல்வர் எழிலன் உற்சாகப்படுத்த, 'குழந்தைகளின் ஆளுமையை வளர்ப்பது எப்படி?' என நகுலா சிவநாதன் பாதை காட்ட அழைக்க, 'அன்புப் பிணைப்பை' பகீரதி சுதேந்திரன் முன்வைக்க, நடுவே 'எங்கள் இளந்தளிர்கள்' கண்சிமிட்டி நிற்கின்றன. 

'தேடுங்கள்' என திருமதி பு. சண்முகரத்தினம் விழிக்க, 'இருப்பவையும் இழப்பவையும்' என செ.பவானி விபரிக்க, 'பருந்துகள் பறக்கும் தேசத்தை' கொண்டு வருகிறார் என்.கே. மகாலிங்கம். 'சலிப்பு எதற்கு?' என மீண்டும் இந்துமகேஷ் அவர்கள் கேட்க, 'அம்மாவுக்குத் தெரிந்தது' என்று கதை சொல்கிறார் சந்திரவதனா செல்வகுமாரன். 'சொல்லமாட்டன்' என இராஜன் முருகவேல் அடம்பிடிக்க, 'சிரித்து வாழவேண்டும்' என்றவாறு டாக்டர் எவ்.ஆர். காப்மேயர் வர, 'உயர்வது எக்காலம்?!' என்ற ஆக்கத்தோடு பரம. விசுவலிங்கம். 'எங்கும்' என அம்பலவன் புவனேந்திரன் கவிதைச் சுவைக்குள் அமிழ்த்த, 'ஆசை'பற்றி இரா. சம்பந்தன் பகுத்தளிக்க, 'எங்கே வைத்தீர்கள் அடைவை' என்ற கேள்வியோடு மட்டுவில் ஞானக்குமாரன். வேதா இலங்காதிலகம் 'தனித்துவம் மறந்த நிலை' கூற, செளம்யன் 'யாழ்ப்பாண நூலகக் கனவுகளை' எம்முன்னே பரப்புகிறார். 

நூறாவது இதழின் பின்புற அட்டையில், விரைவில் 'புதிய பூக்கள்' எனும் இளையோர்க்கான புதிதாய் மலரும் இதழ், பூவரசு கலை இலக்கியத் தோட்டத்தில் இருந்து என்ற அறிவித்தல், பூவரசின் சுறுசுறுப்பான அடுத்த பாய்ச்சலுக்கு கட்டியம் கூறுவதோடு, இளையோர்களின் தமிழ் ஆர்வத்துக்கு ஊக்கமளிக்கப் போகிறது என்பதையும் நினைக்கும்போது, பூவரசு இலக்கியப் பேரவைக்கு வாழ்த்தும் நன்றியும் கூறாமலிருக்க முடியாது.

அதுமட்டுமா?

பூவரசின் இலக்கியப் பரப்பில் வாசகராகவோ படைப்பாளிகளாகவோ ஒவ்வொருவரும் பங்காற்றுவதன் மூலமாகவே, பூவரசிடமிருந்து மேன்மேலும் பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே?!

-இராஜன் முருகவேல்
 (சோழியான்)




இணைய இதழா ? அச்சுப்பதிப்பா ? எது சிறந்தது?



இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?

-சந்திரவதனா செல்வகுமாரன். 

ஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது? இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைகள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது?

இனி வரும் காலங்களில் இணைய இதழா, அச்சுப் பதிப்பா எது முன்னிலையில் நிற்கப் போகிறது? எது வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெறப் போகிறது?

இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.

தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.

இந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் "பதிப்பாகத்தான் வரவேண்டும்" என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.

இணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாமலேயே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே! என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி உங்களிடம் எழலாம். அந்த எத்தனையோ பேர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி? இப்படியே அடுக்காகப் பல கேள்விகள் உள்ளன.

ஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலை நிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.

ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. அவன் தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அதன் படைப்பாளிகள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அவைகளை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?

தை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 15ஆண்டுகளாக உலா வந்த பூவரசு இப்போது தனது 16வது ஆண்டில் சிறிய தளர்ச்சியையும், ஒரு வித களைப்பையும் கண்டிருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

1991 இல் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத ஐரோப்பிய மண்ணில் துளிர்த்த சஞ்சிகைதான் பூவரசு. ஐரோப்பிய அவசரத்தில், புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளின் மத்தியில் பூவரசு 16வருடங்களைத் தொட்டிருப்பது ஒரு சாதனையே. இப்படியான சாதனைகளுக்கு வாசகர்களும், படைப்பாளிகளும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று கூட்டி, அவர்களோடு இசைந்து புலம்பெயர் வாழ்வில் முகம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை வளர்த்தெடுப்பது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் பூவரசு சஞ்சிகையின் ஆசிரியர் இந்துமகேஷ் அவர்கள் அந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவர் வளர்த்தது பூவரசை மட்டுமல்ல. புலம்பெயர் மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, பூவரசின் ஊடாக அவர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.

அதே நேரம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை பூவரசு மூலம் ஊக்குவிக்கவும் இவர் தவறியதில்லை.

புலம்பெயர்மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் கொண்ட இந்தப் பூவரசுக்கு இருக்கிறது.

இம்முறை நான் இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது பூவரசின் தளர்ச்சியும், களைப்பும் மட்டுமல்ல. இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனமுந்தான்.

இதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி.புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில... என்று பல விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இவைகளுக்குள் சற்று அதிகமான ஈர்ப்பைத் தந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம். இது ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதை ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான "சட்" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அந்த உரையாடலின் போதுள்ள இளையோரின், ஏன் வயதானோரின் மனநிலைகள,; கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.

பொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே "சட்" உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

பூவரசு தொடர வேண்டுமென்றால், அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். தொடர்ந்து வருவார்களா? ஆதரவைத் தொடர்ந்தும் தருவார்களா?

இணைய இதழ்கள், தொலைக்காட்சிகள் போல அதிவேகமாய்ச் செய்திகளை மூலை முடுக்குகள் எல்லாம் பாய வைக்கின்றன. இன்பமோ, துன்பமோ எதுவாயினும் உடனடியாக அறியவும், உணரவும் ஏதுவாகின்றன. அச்சுப்பதிப்புகளால் அது முடிவதில்லை. அதுவும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் போரும், புலம் பெயர்வும் மிகவும் ஐதாக, உலகம் பூராவும் தூவி விட்ட நிலையில் ஒரு அச்சுப்பதிப்பு பலரையும் சென்றடைவது என்பது அவ்வளவு சாத்தியமான காரியமல்ல. ஆனாலும் என்றைக்கும் ஒரு ஆவணமாக பத்திரமாக எம்மோடு கூட இருக்கப் போவதும், நினைத்த போதெல்லாம் எந்த நிலையில் இருந்தும் நாம் ஆசுவசமாகப் படிப்பதற்கு ஏதுவானதும் ஒரு அச்சுப்பதிப்பே. ஒரு அச்சுப் பதிப்பைப் படிப்பதில் உள்ள அலாதியான சுகம்; இணைய இதழில் ஒருபோதும் வந்து விடாது. இருந்தும், வரும் காலத்தில் எது நிலைக்கப் போகிறது என்று கேட்டால், இணைய இதழ்கள்தான் வாழும் என்பது போன்றதான ஒரு அச்சம் கலந்த பிரமை ஏற்படுகிறது.

சந்திரவதனா
17.8.2006
பூவரசு 100வது இதழில் இப்பதிவு பிரசுரமாக இருப்பதால் சில சிறிய திருத்தங்களுடன் மீள் பதிவு செய்துள்ளேன்.


( நன்றி:  மன ஓசை - வலைப்பூ )

Sonntag, 24. August 2014

இறைவணக்கம்

இறைவணக்கம்.


ஆதிமுதற் பொருளே
அன்புவடிவானவனே
வானுலகம் முதலாய்
மண்ணுலகம் காப்பவனே
(ஆதிமுதற்பொருளே)
வேதங்களின் பொருளாய்
விளங்கும் அருட்கடலே
பாதங்களைப் பணிந்தோம்
பரிவுடன் காத்திடுவாய்.
(ஆதிமுதற்பொருளே)
வாழும் உயிர்படைத்தாய்
மண்காற்று தீ முதலாய்
சூழும் இயற்கையெல்லாம்
தூயவனே நீ நிறைந்தாய்
(ஆதிமுதற்பொருளே)
வாதங்களில் வளர்ந்தாய்
வளர் மதியாய்க்கனிந்தாய்
பேதங்களில் மயங்கும்
பித்தருக்கும் அருள்புரிந்தாய்
(ஆதிமுதற்பொருளே)
காணும் ஒளிவடிவில்
கருணையென நீ நிறைந்தாய்
பூணும் அறத்திலெல்லாம்
புண்ணியனே நீ நிறைந்தாய்
(ஆதிமுதற்பொருளே)
நாமமெல்லாம் உமதே
நன்மை தீமை உன் செயலே
தேமதுரத் தமிழால்
தேடிச் சரண் புகுந்தோம்.
(ஆதிமுதற்பொருளே)



குறிப்பு:

( அருவமாய் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் நின்றாளும் இறைவனை - எம்மதமும் சம்மதமாய்க் கொண்டாடும் உள்ளங்களில் நின்றாடும் தலைவனை - துதிபாடும் முயற்சியாக நான் 1991இல் வரைந்த 
இந்த இறைவணக்கப் பாடல் பூவரசு விழாக்களில் முதற் பாடலாக ஒலிக்கும்.
இப்போது என்புதுவீட்டுக்கு குடிபுகும்போதும் முதற்பாடலாய் ஒலிக்கிறது)

வணக்கம்! வருக!

www.enputhuveedu.blogspot.com


1991 தைத்திங்கள் முதல் 2008 வரையான காலப்பகுதியில் - 
ஜெர்மனியில் பூவரசு -இனிய தமிழ் ஏட்டுடன் 
இணைந்து நடந்த 
என் கலை இலக்கியப் பயணத்தின் 
நினைவுப் பதிவுகளோடு -
என் புதுவீடு!


இந்த வலைப்பூவில்
எனது ஆக்கங்களுடன்
பூவரசு இனிய தமிழ் ஏட்டில் வெளியான 
அனைத்துப் படைப்பாளர்களது 
ஆக்கங்களும்
தொடரும்.



உங்களை 
அன்புடன் வரவேற்கிறேன்!

அன்பன்
இந்துமகேஷ்