தேடல் தொலைத்துத் தனித்துப்போன சிறுதீவாய் ஒதுங்கிக் கிடக்கிறது இதயம். எழுதுகோல் ஏந்தியவர்களும் இரசனையுணர்வு மிகுந்தவர்களுமாய் மொழியோடு உறவாடி அதுவே மூச்சுக் காற்றென முகம்காட்டிய மனிதர்களில் பலரை இன்று காணோம். என்னைப்போலவே உலகத்தின் பல்வேறு மூலைகளிலும் ஒவ்வொருவராய் தனித்துத் தனித்து ஒதுங்கிக் கிடக்கிறார்கள்.
வாழும் காலத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும் புதிய வரவுகளும் பூத்த உறவுகளும் காலப்போக்கில் எல்லாம் வெறும் கனவுகளே என்று உரத்துச்சொல்லி ஓரம்கட்டுகின்றன. எதுவும் நிரந்தரமில்லை என்றாலும் இன்றையப் பொழுதுமட்டும் நிரந்தரமானது என்ற உணர்வோடு கடமைபுரியவேண்டும் என்பதைக் காலம் கற்பித்துத் தந்திருக்கிறது.
எழுத்து எனக்குத் தொழில் அல்ல.
சிறுவயதில் அது இனிமையானதொரு உணர்வாய் இருந்து என்னை இயக்கியது உண்மை. இலங்கை வானொலியும் பத்திரிகைகள் சஞ்சிகைகளும் எழுத்தாளன் என்று என் பெயர் படித்தபோது, என் படைப்புக்களை இரசித்துவிட்டு கன்னியரும் காளையருமாய் எனக்குக் கடிதங்கள் வரைந்தபோது, இளமை உலகத்துக்கு எழுத்து இன்பமூட்டுவது என்ற உண்மை என்னைத் தொடர்ந்து எழுதவைத்தது.
கற்பனைகளில் கதைபண்ணிக்கொண்டிருந்த என்னை அனுபவங்கள் அடித்து நெறிப்படுத்தின. என்னைப்போலவே எழுத்தை நேசித்துக் கொண்டிருந்த வர்களுக்காக "இதயம்" என்ற சஞ்சிகையை எழுபதுகளில் எடுத்துவந்தேன்.
புலம்பெயர் மண்ணில் பூவரசு.
"இனிய தமிழ் ஏடு இரு திங்கள் ஒன்று" என்று முகவரியிட்டு, "உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம்சொந்தம்!" என்று உரக்கச்சொல்லி உற்சாகமாகத்தான் ஆரம்பித்தோம். பூவரசுக்கு இப்போது வயது பதினெட்டு. ஆனால் புலம்பெயர்மண்ணில் என் எழுத்துப்பணிக்கு அகவை இருபத்திரெண்டு. (1986இல் கையெழுத்துப்பிரதிகளாக வெளியான என் குறுநவீனங்கள் மூலம் புலம்பெயர்மண்ணில் என் எழுத்துப்பணி மீண்டும் ஆரம்பித்தது)
பூவரசு இனிய தமிழ் ஏட்டை மனப்பூர்வமாக நேசித்துக்கொண்டிருக்கும் இதயங்கள் புலம்பெயர்மண்ணில் அதிகம் என்பதை நான் அறிவேன். ஆனால் தொடர்ச்சியாக பூவரசை வெளிக்கொண்டுவரமுடியாத சூழலுக்குள் நானும், தொடர்ச்சியாக அதற்கு ஒத்துழைக்க முடியாத சூழலுக்குள் நீங்களும் இருக்கும்போது பூவரசின் அச்சு வடிவிலான வெளியீட்டில் தொடர் வருகையை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொண்டுதானாகவேண்டும்.
இயன்றவரை முயற்சிக்கிறேன்.
படைப்பாளர்களினதும் வாசகர்களினதும் ஆர்வம் தொடர்ந்திருக்குமாயின் இது சாத்தியமாகலாம்.
வழக்கமாக எல்லா ஊடகங்களும் பசித்தழும் குரல்களோடுதான் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. நெருக்கும் பொருளாதாரப் பற்றாக் குறையும், தாம்தாம் சார்ந்த துறைகளில் தத்தம் திறமைகளை வெளிப்படுத்த தயக்கம்காட்டுகிற திறமைசாலிகளும் கலை, இலக்கிய முயற்சிகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார்கள்.
இந்தத் தடைகள் நீக்கப்பட்டால்-ஊடகங்கள் மீண்டும் துளிர்க்கும்.
உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
உங்கள்
இந்துமகேஷ்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen