பூவரசு சஞ்சிகை விழாவில்
இலக்கிய மணம் கமழ்ந்தது
ஜெர்மனியின் பிறேமன் நகரிலிருந்து வெளியாகும் தமிழ் ஏடான பூவரசு தனது இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் சிறுவர்களுக்கான எழுத்து, சித்திரப் போட்டிகளிலும் பரிசுபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கலை இலக்கிய விழாவாக பிறேமன் நகரில் சிறப்புற நடைபெற்றது.
ஜெர்மனியின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவுக்கு வாசகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் வருகை தந்திருந்த இவ்விழாவை திருமதி வரதராஜா திருமதி இந்துமகேஷ் ஆகியோர் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் இறைவணக்கப் பாடல் பாடினார். செல்வி பிரியா மகேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழருவி பத்திரிகையின் ஆசிரியர் திரு. நயினை விஜயன் பூவரசு ஏட்டின் இரண்டாவது ஆண்டு மலரின் முதற்பிரதியை பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திரு.சு.மகேந்திரமூர்த்தி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தாய்மொழிப்பற்று அருகிவிடக்கூடாது என்பதை வலியுறுத்திய அவர் இன்று பல்வேறு நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்கு தமிழே தொடர்புமொழியாக இருக்கவேண்டும் என்றார்.

தொடர்ந்து வாசகர்களின சார்பில் திருமதி சசிகலா தேவராஜா, திருவாளர்கள் பீற்றர்குலம், இராஜகருணா, திருமதி சித்திராதேவி தங்கராஜா ஆகியோர் பூவரசுக்கு வாழ்த்துச் செய்திகளை வழங்கினர். சேல்விகள் வதனி நவரத்தினம், சுரேகா கமலநாதன் ஆகியோர் நமது தாய்மொழி என்னும் தலைப்பில் உரையாற்றினர்.
பூவரசு நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசுகள் விழாவுக்கு வந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் மூலம் வழங்கப்பட்டன.
திருமதி சாந்தராணி பத்மகுமார் தயாரித்து வழங்கிய மழலையர் நடனம், கண்ணன் நடனம், கும்மி நடனம் ஆகியவை எங்கள் இளந்தளிர்களின் திறமையை வெளிப்படுத்துபவையாய் அமைந்தன.
தொடர்ந்து இடம்பெற்ற பட்டிமன்றத்தில்,
வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு தாய்மொழி கலாச்சாரம் அவசியமா? அவசியமில்லையா? என்ற தலைப்பில் விவாதமேடை அமைந்தது.
வீரகேசரி முன்னாள் பத்திரிகையாளர் திரு.வீ.ஆர்.வரதராஜா நடுவராகக் கலந்துகொள்ள திருவாளர்கள் இ.த.இராஜன், செ.யோகநாதன், மகேந்திரராஜா, பீற்றர்குலம், திருமதிகள் ஞானேஸ்வரி கந்தசாமி, பெனடிக்ரா ஞானச்செல்வம் ஆகியோர் விவாதத்தில் பங்கு கொண்டனர். பார்வையாளர்கள் வழங்கிய கருத்துக் கணிப்பின்படி மூன்றில் இரண்டு பங்கினர் தாய்மொழி கலாச்சாரம் அவசியம் என வாக்களித்து நடுவரால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சென்ற ஆண்டுவிழாவின்போது இந்துமகேஷின் கைவண்ணத்தில் உருவான அயல்நாடு போயிருந்த அண்ணை இப்ப திரும்பிவாறார் நாடகபாணியில் இந்த ஆண்டு இந்துமகேஷின் கைவண்ணத்தில் உருவான தாள இசைநாடகம் இலக்கியத்தில் இருபக்கங்கள் புறநானூற்று வீரத் தாயையும் இன்றைய தமிழீழ வீரத்தாயையும் ஒப்பீடு செய்து வரையப்பட்டிருந்தது.
பங்கேற்ற சிறுவர்கள், மங்கையர்;, இளைஞர்கள் பாத்திரங்களுக்கு உயிரூட்ட இசையை செல்வன் பத்மஸ்ரீ சிறப்புற அமைத்திருந்தார்.
தொடர்ந்து க.பாலசுப்பிரமணியம் குழுவினரின் மெல்லிசை இடம்பெற்றது.
பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தின் தயாரிப்பான பாவலன் பெற்ற பரிசு நாடகம் விழாவுக்கு மேலும் மெருகூட்டிற்று.
நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் திரு. அன்ரன் பீலிக்ஸ் அழகுறத் தொகுத்து வழங்கினார்.

(தகவல்: திருமதி சித்திரா மணிவண்ணன்)
படப்பிடிப்பு: ”ஜெகா” எஸ்.தேவராஜா
நன்றி: ஈழநாடு-பாரிஸ் வாரமலர் 05 - 11 மார்ச் 1993
Keine Kommentare:
Kommentar veröffentlichen