Freitag, 7. November 2014

பூவரசு- கவிதைப் பக்கங்கள்-7

எப்போது?




மலைபோல்
பொன்பொருளைக் குவித்து
அதன்மேல்-
மமதையுடன்
வீற்றிருக்கும் மனிதா!
தன்மானத்தை விலைபேசியா -உன்
தகுதியை உயர்த்தினாய்?
தாய்நாட்டையே
ஏலம் விடுகின்ற
ஆயுதத் தரகனா நீ?-இல்லை
ஆரணங்கின் தலைவனா{

அதோ பார்-
உனக்குக் கீழே
அந்த ஏழை
ஏந்துவதோ
பிச்சைப் பாத்திரம்

உழைத்துழைத்து
ஓடாய்த் தேய்ந்தவன் கீழே
உழைப்பையே அட்டையென
உறிஞ்சிக் கொழுத்தவன் மேலே

நீயோ
வசதிகளின் எல்லை
அவனோ-
வறுமையின் எல்லை

தீபாவளி வந்து போகும்
தீமைகள் விலகுமா-இந்த
உயர்வு தாழ்வு
நீங்கிச் செல்லுமா

பங்களாக்களின்
பகட்டான கதவுகளைப்
பார்த்துப் பார்த்து
தட்டுகின்ற தீபாவளியே
ஏழை வீட்டின்
இதயக் கதவுகளை
எப்போது போய்த்
தட்டப் போகின்றாய்?!




கவிவாணன் 
இ.சம்பந்தன்
(இராட்டிங்கன்)



(பிரசுரம்: பூவரசு வைகாசி-ஆனி 1999)

Keine Kommentare: