பாசங்கள்

தேசம் எனது நேசத்தாய்
அவள் தேகமே
நான் தவழ்ந்த பாய்
மண்வாசமே என்
மனதுக்குத் தேன்
வாழும் நாளெலாம்
அவள் அன்பை நினைத்திருப்பேன்
கதிரின் ஒளி எனக்கு
ஊட்டச்சத்து
காற்று தரும் எனது
உயிருக்கு மூச்சு
பறவை இனங்களெல்லாம்
பாடும் தாலாட்டு
அவள் பாசங்கள் எனது
பாட்டுக்குள் அடங்காது
அன்னையின் தமிழே
நான் அருந்துகின்ற பால்
அவள் அங்கத்துச் செல்வமெல்லாம்
எந்தனுக்குச் சீர்
என் அன்பே அவளை
சூழ்ந்த பெருங்கடல்
அவள் மடியைத் தேடிவரும்
என் உணர்வு அலைகள்
இதயமெனும் உலகினிலே
அவளுக்கு நிலம்
இதைவிடவும் இருக்குமா
எனக்கு வேறு சுகம்!
- ஜெகதீஸ்வரி இராஜரட்னம்
(பிரசுரம்: பூவரசு புரட்டாதி - ஐப்பசி 1991)
(சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் வெளியிட்ட
ஜெகதீஸ்வரியின் - புலமும் புலராத பொழுதுகளும்
கவிதை நூலுக்கென நான் அளித்த வாழ்த்துரை )
நினைத்துப் பார்க்கிறேன்!
பூவரசு கைஎழுத்துப் பிரதியாக வெளிவரத் தொடங்கிய நேரம் (1991)
ஒரு
இதழை கவிதைச்சிறப்பிதழாக வெளியிடவேண்டும் என்ற ஆவலோடு அறிவிப்புச்
செய்திருந்தேன். வந்திருந்த கவிதைகள் பலவற்றில் ஒரு கவிதை சிறகடித்துக்
கிடந்தது.
.. ..
தேசம் எனது நேசத்தாய்
அவள் தேகமே
நான் தவழ்ந்த பாய்
மண்வாசமே என்
மனதுக்குத் தேன்
வாழும் நாளெலாம்
அவள் அன்பை நினைத்திருப்பேன்
- என்று தொடரும் அந்தக்கவிதையின் சொந்தக்காரியாய் முகம் காட்டினார் திருமதி ஜெகதீஸ்வரி இராஜரத்தினம்.
அந்தக்கவிதையோடுதான் எனக்கும் பூவரசுக்கும் அறிமுகமானார் இந்தக் கவிதாயினி.
ஊரைவிட்டு
ஓடிப்போனவர்களெல்லாம் உணர்வற்றவர்கள் என்பதாக புலம்பெயர்ந்த
படைப்பாளர்களை ஒருசிலர் ஊரிலிருந்து பரிகசித்துக் கொண்டிருந்தபோது-
ஊரைப்பிரிந்த
சோகமும் ஊரின்மீதான தாகமும் புலம்பெயர்வாழ்வின் அவலமும் மனதைக்
கிழித்துக்கொண்டிருக்க இரத்தக்கண்ணீர் வடித்த உள்ளங்களிலிருந்து
உணர்வுக்கவிதைகள் புரண்டுகொண்டிருந்தன.
புலம்பெயர் இலக்கியத்தை அவைகளே ஆக்கிரமித்துக்கொண்டுமிருந்தன.
அத்தகைய படைப்புக்களின் வரிசையிலேயே ஜெகதீஸ்வரியின் கவிதைகளும் உருப்பெற்றன.
ஆயினும் ஏனைய படைப்பாளர்களிலிருந்து தனக்கென வரித்துக்கொண்ட தனிநடையால் ஜெகதீஸ்வரியின் கவிதைகள் தனித்துவம் பெற்றன.
அந்தக்
காலகட்டத்தில் புலம்பெயர் இலக்கியத்துக்குப் புத்துயிரளித்துக்
கொண்டிருந்த பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஜெகதீஸ்வரியின் கவிதைகளைச் சுமந்து
வந்தபோதும் ஏலையா சஞ்சிகையே அவரது ஏராளமான படைப்புக்களை ஏந்தி வந்தது.
அவரது
பெரும்பாலான கவிதைகளை வாசகர்மத்தியில் பரவலாக்கி அவரது திறமையை
வெளிக்கொணர்ந்ததில் ஏலையாவுக்கும் அதன் ஆசிரியர் திரு. கா.க.முருகதாசன்
அவர்களுக்கும் பெரும்பங்குண்டு.
0
புலமும் புலராத பொழுதுகளும்-
இது இந்தக் கவிதைநூலுக்கான தலைப்பு.
ஆனால் புலராமலேயே போய்விடுமோ நம் தேசம் என்ற கேள்விக்கு இனி இடமில்லை.
இருளுக்குப்பின் ஒளி என்பது இயற்கையின் நியதி.
அதிகாலைச்சூரியனின் வரவுக்கு முன்னால் விடிகாலைத் தாரகை கண்சிமிட்டுகின்றது.
உணர்ச்சிக் கவிஞர்களின் வரிகளும் இந்த நட்சத்திரங்களைப் போலத்தான்.
நாளைய விடிவுக்கு முன்னால் விடிகாலை நட்சத்திரங்களாக.
நமது மண்ணின் சுதந்திர விடியலில் ஜெகதீஸ்வரியின் கவிதைகளும் நம்பிக்கை நட்சத்திரங்களாக.
ü
வாளும் வேலும் துப்பாக்கிகளும் வரலாறு படைத்தனவா இல்லை
அவை வரலாறுகளை முடித்தன.
ஆனால் எழுதுகோல்கள்... அவை வரலாற்றை எழுதின - வரலாறுகள் ஆயின இதுவே வரலாறு.
ஜெகதீஸ்வரி சொல்வதுபோல்-
..விடுதலை எனுமோர்
எல்லை தொட வேண்டும்;
உன் விழிகளை இனியும்
மூடாதே
விடுமுறை எடுத்து
சூரியன் படுத்தால்
உலகினில் ஏது
இயக்கமே
தலைகுனிவு
எங்கள் தமிழுக்கு
எனும்போது
தணலாய் கொதிக்கட்டும்
உன் இரத்தமே
.. .. .. ..
-சொந்த மண்ணைப் பிரிந்து வந்தாலும் இவர்கவிதைகள் அந்த மண்ணில் கலந்தன. மண்ணோடிணைந்தன. எனவே மண்ணுள்ளவரை இவர் வரிகளும் வாழும்.
எழுதுகோல் ஏந்திய இவர் இன்னும் தொடரவேண்டும்.
இவரது
கவிதைகளின் ஒரு பகுதியை நூல்வடிவாக்கியுள்ள சர்வதேச புலம்பெயர் தமிழ்
எழுத்தாளர் ஒன்றியத்தினரினது இதுபோன்ற முயற்சிகளும் தொடரவேண்டும்.
புலம்பெயர்
இலக்கியத்தின் உயிர்த்துடிப்பான படைப்புக்களும் படைப்பாளர்களும்
மறக்கடிக்கப்படாமல் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சர்வதேச
புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் தனது இலக்கில் வெற்றியீட்டவேண்டும் என
இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
அன்பன்
இந்துமகேஷ்
(ஆசிரியர்: பூவரசு)
(பிரசுரம்: பூவரசு புரட்டாதி - ஐப்பசி 1991)
Keine Kommentare:
Kommentar veröffentlichen