Mittwoch, 10. Dezember 2014

பூவரசு - 3வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய பரிசளிப்பு விழா 1994




ஜேர்மனியில் பூவரசு சஞ்சிகை நடத்திய
முத்தமிழ் விழா!


15.01.1994 




















பூவரசு சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய பரிசளிப்பு விழா பூரணத்துவமான முத்தமிழ் விழாவாக நிறைவு பெற்றது.

ஜேர்மனியின் பிறேமன் நகரில் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஏழுமணி நேரங்களாக நடைபெற்றது இங்கு
விசேடமாகக் குறிப்பிடத் தக்கது.

திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி நடேஸ்வரி சிவநாதன் ஆகியோர் மங்களவிளக்கேற்ற, திருமதி வசந்தாதேவி புவனேந்திரனின் இறைவணக்கப் பாடலுடன் விழா ஆரம்பித்தது. 

உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம் என்று ஒலித்த ஒற்றுமைப் பாடலை அடுத்து திருமதி இந்துமகேஷ் வரவேற்புரை வழங்கினார்.



மழலையர்கள வண்ணத்துப் பூச்சிகளாய் கண்ணைக் கவர்ந்தனர்.




சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த சிவனடியான் ஸ்ரீபதி பூவரசு ஆண்டுமலரின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


திருமதி மகேஸ்வரி வரதராஜா, பிறேமன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு இரா.சுவேந்திரராஜா, பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திருமதி சாந்தராணி பத்மகுமார், திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வம், திருமதி வசந்தமலர் விஜயகுமார் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடையிடையே இடம்பெற்றன.


 
















நடன ஆசிரியை ஸ்ரீரஞ்சனி குணரத்தினம் அவர்களின் மாணவிகள் பரதநாட்டிய விருந்தளித்தனர்.







திருமதி கன்னிகா சந்திரபாலன் தயாரித்து வழங்கிய செம்பு நடனம் பூவரசை வாழ்த்துவதாக அமைந்திருந்தது.


அடுத்து இடம்பெற்ற அவர்களும் இவர்களும் துள்ளிசை நாடகம் புதிய பாணியில் மேலைத்தேச கீழைத்தேச தாளக்கலப்பில் அற்புதமாக அமைந்திருந்தது. பங்குகொண்டு நடித்தவர்கள் அனைவரும் தத்தமது பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருந்தனர்.








கவிஞர் அமுதநதி சுதர்சன் தலைமையில் விடிகின்ற பொழுதுவரை விளக்கேந்தி வாருங்கள் என்னும் தலைப்பில் கவியரங்கு இடம்பெற்றது. தாயக விடுதலை உணர்வையே மையமாகக் கொண்டு கவிதைகள் புனையப்பட்டிருந்தபோதிலும் ஒவ்வொரு கவிஞரும் தத்தமது பாணியில் அதை வெளிப்படுத்திய விதம் இரசிக்கத் தக்கதாய் அமைந்திருந்தது.



இக்கவியரங்கில் க.ஸ்ரீதாஸ், க.சிவானந்தன், இ.த.இராஜன், திருமதிகள் சித்திரா மணிவண்ணன், ஜெகதீஸ்வரி இராஜரட்ணம், ஆகியோர் பங்குகொண்டனர்.

பூவரசு நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கான பரிசளிப்புக்களும் இடம்பெற்றன.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. பிறேமன் கலை நிலா இசைக்குழுவினர் வழங்கிய இந்த இசைநிகழ்ச்சியில் முற்றிலும் புதிதாய் இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்கள் இடம்பெற்றன. இரசிகர்களிடையே இவை பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டன.

நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் அன்ரன் பீலிக்ஸ் தனது இனிய குரலால் நிகழ்ச்சிகளுக்கேற்ற வண்ணம் (கவியரங்கினை கவிதை நடையிலும், நாடகத்தை நாடகபாணியிலும்) அமைத்து அறிவித்த விதம் சுவையானதாக அமைந்திருந்தது.


-வீ.ஆர்.வரதராஜா



(நன்றி:  தமிழன் பத்திரிகை இலண்டன் 09-15 மார்ச் 1991)


புகைப்படங்கள்:  “ஜெகா” எஸ் . தேவராஜ

Keine Kommentare: