Mittwoch, 16. März 2016

பூவரசு - எங்கள் இளந்தளிர்கள்!


















2001 தைத்திங்கள். 
 பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 10வது ஆண்டு நிறைவு வாசகர் விழாவுக்கென நிகழ்ச்சித் தயாரிப்பில் முனைந்திருந்த நேரம். எங்கள் இளந்தளிர்களுக்கான நிகழ்ச்சிகளை வகுத்துக்கொணடிருந்தபோது இளந்தளிர்களில் ஒருவரான கஜனி சொன்னாள்: 
இம்முறை நான் பூவரசு மேடையில் பாடப்போகிறேன்.!
நல்லது! வழக்கம்போல் பூவரசு மேடைகளில் பாடப்படும் மெல்லிசைப் பாடல்களில் ஒன்றைப் பாடலாம் என்றேன்.
இல்லை நான் ஏற்கனவே பாடலைத் தெரிந்து வைத்திருக்கிறேன் அதே பாடலைத்தான் பாடப் போகிறேன் என்றாள்.
அனுராதா ஸ்ரீராம் பாடிய பக்திப்பாடல்களில் ஒன்றான மாவிளக்கு ஏற்றிவைத்தேன் மாரியம்மா என்ற பாடல் அது.
பாடினால் அந்தப் பாடலைத்தான் பாடுவேன் இல்லாவிட்டால் பாடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். அவளது விருப்பப்படியே அந்தப் பாடலை விழாமேடையில் பாடினாள்.
அவளது குரலில் அந்தப் பாடல் ஒலித்து 15 ஆண்டுகளைக் கடந்தாயிற்று.
இன்று (16.03.2016)அவளது நினைவைச் சுமந்துவரும் 15வது ஆண்டு.



கள்ளமில்லா மலரொன்று
காலத்தை வென்றதின்று!


புன்னகை இதழ் விரியும் உன் பூமுகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
காலம் பொல்லாதது என்று சொல்லாமல் சொல்கிறது அது எனக்கு.
ஆனால் காலம் என்பதற்கு என்ன கணக்கு?
நேற்று இன்று நாளை என்பதெல்லாம் இந்த உடலோடு வாழும் வரைதானே
என்றும் வாழும் உயிர்களுக்கு இந்தக் கணக்கு எதற்கு?
என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன் இப்போதெல்லாம்!
சின்ன வயதில் நீ புலால் மறுத்து முழுமையான ஒரு சைவப்பெண்ணாகவே உன்னை ஆக்கிக் கொண்டாயே.. அப்போது உன்னை ஒரு பிடிவாதக்காரியாகவே என்னால் எண்ணிக்கொள்ள முடிந்தது.
ஆனால் உன்னைப் பெற்றவளும் பெற்றவனும் உன்னில் உன் வார்த்தைகளில் கட்டுண்டு உனக்காகவே தங்களையும் மாற்றிக்கொண்டு உன்விருப்பம் ஒன்றே தமது விருப்பமாக மாற்றிக்கொண்டார்களே- அதை இப்போது நினைக்கிறேன்.
பேச்சில் செயலில் மென்மையே நிறைந்தவளாய் மற்றவர் முகங்களில் துயர்காண விரும்பாதவளாய் வளர்ந்துகொண்டிருந்த நீ எல்லார் இதயங்களையும் கலங்கடித்து மறைந்துவிட எப்படித் துணிந்தாய்?
இயற்கையின் நியதி இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறாய் நீ
பக்தி நிறைந்த உன் பாசமுகம் படைத்தவனின் பாதார விந்தத்தில் நிலைத்திருக்கும் என்பது நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை
இது நீ எங்களிடம் விதைத்துச் சென்ற நம்பிக்கை.

மாவிளக்கு ஏற்றிவைத்தேன் மாரியம்மா- என்
மனசுக்குள்ளே வெளிச்சமாக வாடியம்மா
- பூவரசு மேடையில் நீ புன்னகையோடு பாடிய பாடல் அது.
பொருள் புரிந்துதான் அதைப் பாடினாயோ!
ஆனால் நாங்கள் புரிந்துகொள்கிறோம் இப்போது.
உன் ஆத்ம சாந்திக்காக அந்தப் பராசக்தியையே  இறைஞ்சுகிறோம்

பூவரசு கலை இலக்கியப் பேரவையோடு
உன் அன்புக்குரிய
இந்துமகேஷ் மாமா.






கஜனி!

அவள் இதழ்விரித்தால் அரும்பும் இளைய புன்னகையில் எத்தனையோ அர்த்தங்கள்!
எல்லாக் குழந்தைகளையும்போல் அவளும் பிறந்தாள், தவழ்ந்தாள், வளர்ந்தாள், நடந்தாள், படித்தாள், ஆளானாள்.
எல்லாம் ஒரு சிறுகதைபோல் சிறியதொரு கவிதையைப்போல் சிறியதொரு திரைப்படம் போல்.!
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு.
ஆனால் இவளது முடிவு எதிர்பாராதது. எல்லா முடிவுகளுமே எதிர்பாராதவைதான் என்றாலும் இவள் முடிவு எண்ணிப்பார்க்கவே முடியாத முடிவு. இப்படியும் முடிவு வருமா என்று இளைய  உள்ளங்களையே திகைக்கவைத்த முடீவ!

கஜனி!
அவள் ஒரு சிறு காவியம்
எப்போதும் சுறுசுறுப்பு
சுறுசுறுப்பினிடையே சின்னச் சின்னக் குறும்பு.
வளர்ந்தாலும் மாறாத குழந்தைமனம்
ஆனாலும் மனத்தினிலே பெரியமனிதத் தனம்.
சின்ன வயதினிலே உயிர்களிடத்தில் அதிக அன்பு.
அதனால் மாமிசத்தில் வெறுப்பு
மெள்ள மெள்ளஅவள் மாறினாள்.
தெய்வபக்தியும் அவளோடு சேர்ந்தே வளர்ந்தது.
பள்ளிக்குப் போகும்போதும் பயபக்தியாய் விபூதி அணிந்துசெல்வது அவள் வழக்கம்
பள்ளித்தோழர்கள் வேடிக்கை செய்யமாட்டார்களா என்றால் சிரிப்பாள்.
அவர்கள் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்பாள்.
அவள் உலகைவிட்டுப் பிரிவதற்கு சிலநாட்கள் முன்பாக தனது நிறைய ஆசைகளைச் சொன்னாள் அன்னையிடம்.
கலைகள் மீது அவள் கொண்டிருந்த ஆர்வத்தைச் சொன்னாள்.
இசை, நடனம் என்பவற்றில் அவள் கொண்டிருந்த அக்கறை வியப்பைத தந்தது.

பூவரசு மேடையிலே நின்று அவள் ஒரு பாடலை- பக்திப்பாடலை- அம்மனை நினைந்துருகிப் பாடியபோது பார்த்தவர்கள் அதிசயித்தார்கள். மௌனமே முதல்மொழிபோல் மற்றவர்க்குக் காட்சிதரும் கஜனியா  இது என்ற கேள்வியால் எழுந்த ஆச்சரியம். பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் அது பதினைந்து நாட்கள் நிலைப்பதற்குள் காலம் அவளைக் கவர்ந்துகொண்டது.
பள்ளிக் குழந்தைகளோடு நீச்சல்பாடம் கற்கச்சென்றவள் நீரில் நனையாமலே உயிரை நீத்துக்கொண்டாள். இயற்கை மரணம் என்று எழுதிவைத்த அறிக்கை சொல்கிறது.
அவள் அன்பு வடிவானவள்.
ஆம் அது அப்படித்தான்!
அவள்மீது பாசம்காட்டிய ஜெர்மானிய பள்ளித்தோழர்களும் வகுப்பாசிரியர்களும் பாடசாலை நிர்வாகிகளும் அவளது இறுதிக் கிரியையின்போது வடித்த கண்ணீர்வெள்ளம் அதை உறுதிப்படுத்துகிறது.

தெய்வம் உண்டென்பதும் நல்லவர்களை அது விரைவில் அழைத்துக்கொள்கிறது என்பதும் நம்மிடையே வழங்கிவரும் நம்பிக்கை. அதை உறுதிப்படுத்தியிருக்கிறாள் கஜனி.
அவள் ஆத்மா சாந்தியடைவதாக!


(கஜனியின் நினைவாக 2001இல் வெளியிடப்பட்ட நினைவுப் பூக்கள் மலரிலிருந்து)

                                                               





Keine Kommentare: