Mittwoch, 5. November 2014

பூவரசு-கவிதைப் பக்கங்கள் -5






விதவை



ஏ! பெண்ணே!
நீ இழந்தது ஒன்றை மட்டுமே
எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக
வீண்பிரமை கொள்ளாதே!
ஈடுசெய்ய முடியாத எதுவுமே
உலகத்தில் இல்லை
உணர்ந்து கொள்!

உன்னைப்போல் வாழ்ந்த உன் முன்னோர்
வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு
தங்களுக்குத் தாங்களே
சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்
அவர்கள் அழுத கண்ணீரில்
அவர்களே ஆழ்ந்து போனார்கள்!

நீயும் அதே தவறைச் செய்யாதே!
உன் தடைகளை படிகளாக்கு
சமுதாயம் உனக்கு விதித்த
கோடுகளை தூக்கி நிமிர்த்து
அதனை பாய்மரமாக்கி
பயணம் செய்!
;
கலைந்த உன் கூந்தலை துடுப்பாக்கு
அழகை வெளிக்காட்டு!
அழிந்துவிட்ட நித்திலத்துக் கீடாக
ஆதவனை எடுத்து வை!
முக்காட்டை விலக்கிவிடு
உன் கதிரொளியில் பல
வெள்ளைப் பூக்கள்
நிறங்களைப பெறட்டும்!





கவிதையும் சித்திரமும்:
அமுதநதி சுதர்சன்






பூவரசு அட்டைப்படத்துக்கான கவிதை.
(பிரசுரம்: பூவரசு புரட்டாதி - ஐப்பசி 1992)






















Keine Kommentare: