இனி அவர்கள்
(நெடுங்கதை)
ஓர் அறிமுகம்.
ஆண்டு 2000 தைத்திங்களில் பூவரசு வாசகர் அரங்கம் இலக்கிய நிகழ்வின்போது படைப்பாளர்களிடமும் வாசகர்களிடமும் கதை எழுதுவதில் ஒரு புதிய முறை அறிமுகமாயிற்று.
ஓர் எழுத்தாளர் ஒரு கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்களே சம்பவங்களைத் தொகுத்து கதையை வளர்த்துச் செல்வதுதான் அது.
2002ம் ஆண்டு வாசகர் அரங்கில் ஒரு கதைக்கான கருவை ஒர் எழுத்தாளர் எடுத்துத் தர அதை இன்னோர் எழுத்தாளர் ஆரம்பித்து தொடர்ந்து சில எழுத்தாளர்கள் எழுதி கதையை நிறைவு செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இதுபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய பல கதைகள் உருவாகியிருக்கின்றன. எனினும் புலம்பெயர் எழுத்தாளர்களிடையே இது புது முயற்சிதான்
முன்னணி எழுத்தாளரான திரு.இராஜன்முருகவேல் அவர்களிடம் கதையின் முதற்பகுதியைத் தொடங்குமாறு கேட்டிருந்தோம்.
தொடர்ந்து 4 எழுத்தாளர்களிடம் கதையின் அடுத்த அத்தியாயங்களை வரிசையாக எழுதும் பணியை ஒப்படைத்தோம்.
ஆனால் கதை பற்றி அவர்களுக்கு எவ்வித தரவுகளும் தராமல் அவர்களது விருப்பப்படியே கதையை வளர்த்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டோம்.
கதையை யார் ஆரம்பித்தார்கள் யார் தொடர்ந்தார்கள் யார் முடித்துவைக்கப் போகிறார்கள் என்பது கதை நிறைவுறும் வரையில் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அவர்கள் தமது விருப்பப்படியே கதையை வளர்த்தார்கள்.
முதலில் தொடராக பூவரசில் இதனை வெளியிடலாம் என்று எண்ணியிருந்தபோதும் ஆண்டுமலரில் இந்தக்கதை முழுமையாக வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என முடிவுசெய்தோம்.
இந்தக் கதையை உருவாக்க ஆர்வத்தோடு ஒத்துழைத்த முன்னணி எழுத்தாளரான திரு. இராஜன் முருகவேல்,
பூவரசு 10வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சாந்தினி வரதராஜன்,
பூவரசு 11வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன்,
பூவரசின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து தனது படைப்புக்களால் பூவரசை அலங்கரிக்கும் பூவரசின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வது எனது கடமையென்று கருதுகிறேன்.
அன்புடன்
இந்துமகேஷ்
(தை 2003)
இனி அவர்கள்!?
(பூவரசு இனிய தமிழ் ஏட்டுக்காக ஜேர்மனியில் ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய நெடுங்கதை)

இராஜன் முருகவேல்
எழுதிய
முதலாம் பகுதி
இருக்கைகளில் எல்லோரும் ஒழுங்காக அமர்ந்திருக்கிறார்களா என இருமருங்கும் அவதானித்தவாறு நகர்ந்துகொண்டிருந்தான் அவன். அருகிலிருந்த மாலாவும் பிள்ளைகளும் சீற் பெல்டை சரியாக கொழுவியுள்ளார்களா எனக் கவனித்தான். அவர்கள் மூவரின் முகங்களும் மகிழ்ச்சிப்பூரிப்பில் மலராகப் பிரகாசமாயிருந்தன.
விமானம் ஓடுபாதையில் மெதுவாக நகர ஆரம்பித்தது.
பிள்ளைகள் இருவருக்கும் அது முதல் விமானப் பயணம். இருவரும் தாய் மாலாவைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குப் பதில் சொல்வதில் அவளுக்குச் சலிப்பேற்பட்டாலும், அதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
தாயகத்துக்கு இன்று போகலாம், நாளை போகலாம் என எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவேளைகளில் ஒவ்வொரு புதுப்புதுப் பிரச்சினைகள் எழ, எண்ணங்கள் ஏக்கங்களாவதிலேயே வருடங்கள் கழிந்தவேளையில், ஈற்றில் ஒருமாதிரியாகத் தாயகத்துக்கு வெளிக்கிட்டாகிவிட்டது.
ஜேர்மனிக்கு வந்தவேளைக்கும் தற்போது தாயகத்துக்கு செல்லும் பொழுதுக்கும் இடையில்தான் எவ்வளவு காலங்கள் வருடங்களாகக் கழிந்து, உருவத்தில் மட்டுமல்லாமல் வாழ்விலும் மாற்றங்களைத் தந்துவிட்டன.
தனியாய் வந்து, மாலாவோடு இணையாகி குடும்பமாகி இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகி, இடையிடையே பெற்றோரின் சகோதரங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, உழைப்பே பிரதானமாகி, பணமே அதன் பலனாகி, அதற்காக மேனியை உருக்கி தற்போது இளமை முடியும் விளிம்பில் தாயகத்தை நோக்கி புறப்பட்டுவிட்டான் ஆதவன்.
'அப்பு... கவனமாக போவிட்டு வா ராசா... உடம்பை கவனிச்சுக் கொள்ளணை!' என்று கட்டியணைத்து உச்சிமோர்ந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பிய தாயின்நிலை அவன் மனக்கண்முன்னால் நிழலாடியது.
அப்போது ஆதவன் இளைஞன். தற்போது கேசத்தில் ஆங்காங்கே நரைவிழுந்து, இரண்டு பிள்ளைகள் அப்பாவென விளிக்கும் ஒரு குடும்பத் தலைவன்.
நேற்று தொலைபேசியில் தாய் விமானநிலையம் வருவதாகக் கூறினாள்.
அவளுக்கும் பொறுமையில்லை.
விமானத்தால் இறங்கிய உடனேயே மகனைக் கண்டுவிடவேண்டும் என்ற ஆசை அவளுக்கும். அவனை... அவனது மக்களை... பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பெற்றவளுக்குள் பொங்குவதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
விமானம் திருவனந்தபுரத்துக்கு மேலாகப் பறப்பதை முன்னாலுள்ள திரை துல்லியமாகக் காட்டியது. இன்னும் ஒரு மணி நேரம். கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்துவிடும். இனந்தெரியாத பரபரப்பு அவனுள். நிமிடங்கள் மணிந்தியாலங்களாக நகர்வதுபோலிருந்தது.
தாய்தான் மனதில் அடிக்கடி வந்து நின்றாள். பார்த்ததும் கட்டியணைத்து அழுவாளா? என்னில் ஏற்பட்டுள்ள உருவமாற்றத்தைக் கண்டு வியப்பாளா? மருமகள் மாலாவை எப்படி வரவேற்பாள்? பிறந்ததிலிருந்தே பார்த்தறியாத பேரப்பிள்ளைகளைக் கண்டு உணர்வுள் உருகிக் குளிப்பாளா? எண்ணிப் பார்த்தான்.
சீற் பெல்ட்டை அணியும்படி அறிவித்தல். விமானம் தரையிறங்கியது..
பாஸ்போட் செக்கிங், லக்கேஜ் எடுப்பு, டியூற்றிபிறீ சொப் கொள்வனவு என முடித்துக் கொண்டு வெளியே வந்தவனை ஓடிவந்து கட்டியணைத்துக் கதறத் தொடங்கினாள் தாய். முகம் சுருங்கி தேகம் நலிந்து நரம்புகள் பீறிட்டு வெளிக்காட்டும் கரங்களைப் பற்றிய ஆதவனுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. வார்த்தைகள் வெளிவராமல் உணர்ச்சிப் பெருக்கில் தடுமாறின. மாலாவின் யக்கற்றைப் பிடித்திழுத்தவாறு மலங்க மலங்க விழித்தனர் பிள்ளைகள் இருவரும்.
"அப்பாச்சி..." மாலா அவர்களுக்குக் கூறினாள். பேரப்பிள்ளைகளைக் கட்டியணைத்து அழப் போகிறாள் தாய் என நினைத்தான் ஆதவன். ஆனால் அவளோ...
"அப்பு... யாதவன் என்ன செய்யிறானணை?"
அவள் அப்படி அந்த இடத்தில் கேட்பாள் என அவன் நினைக்கவில்லை. மாலா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆதவனின் முகம் விகாரமானது. கண்கள் கோபத்தில் சிவந்தன.
"அம்மா... இதைக் கேட்கவோ விமான நிலையத்துக்கு வந்தனீங்கள்? அவனுக்கென்ன... அவனைப்பற்றிக் கதைக்கிறதெண்டால்... நான் வீட்டை வரேல்லை.. எங்கையாவது ஹோட்டலிலை இருந்தூட்டுப் போறன்.."
அவனின் பேச்சைக்கேட்டுத் திகைத்து நின்றாள் அந்த அப்பாவித் தாய்.
0
அது அந்த நகர பொதுப்பூங்கா. அங்கே பொழுதுபோக்க வரும் மக்கள் அமரவென சில வாங்கில்கள்.
அதிலே ஒரு இளைஞன் கையில் பியர் போத்தலுடன்.
"அங்கை பார்க்காமல் வா.."
"ஏனண்ணை.."
"பாத்தியெண்டால் இஞ்சை வந்தீடுவான்... காசு தாவெண்டு பிசின்போல ஒட்டீடுவான்... கழட்டிவிடுறது கஸ்டம்... ஏன் சோலியை..?"
"ஆர் அண்ணை அது?"
"யாதவன்.. தமையன் குடும்பத்தைக் காப்பாத்துவாணெண்டு ஜேர்மனிக்கு கூப்பிட்டுவிட.. சனியன் றோட்டிலையும் பார்க்கிலையும் குடிச்சுக்கொண்டு திரியுது... குடிச்சுப்போட்டு சும்மா இருந்தாலும் பறுவாயில்லை... மற்றவங்களுக்கும் தொந்தரவு.."
கலைந்த கேசம். வாரக்கணக்கில் சேவ் செய்யப்படாத முகம். கண்களில் போதைக்கும் விஞ்சி வெளிக்கிளம்பும் ஏக்கம். பியர் போத்தலை தூக்கி அண்ணாந்து ஒரு மிடறு விழுங்கிக் கொண்டான்.
"ஒரு ஹீயாவது சொல் கண்ணே... உன் காதலன் நான்தான் என்று... சொல்லமாட்டியா... சொல்லமாட்டியா?"
"காத்திருப்பேன் என்றாயே.. கடிதம் போடுவேன் என்றாயே... இப்போது நீ எங்கே... எனக்குள்ளா? அல்லது..??"
அவன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.
என்ன நினைத்தானே தெரியவில்லை. உரத்த குரலெடுத்துப் பாட ஆரம்பித்தான்.
"அப்பிள் பெண்ணே நீதானோ... ஐஸ் கிறீம் சிலையே நீதானோ..."
அந்தப் பாடலுடன் சேர்ந்து அவன் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.
இனி அவர்கள்..

சந்திரவதனா செல்வகுமாரன்
எழுதிய
இரண்டாம் பகுதி
இப்படித்தான் அன்று நதியாவும் யாதவன் ஜேர்மனி செல்வது திண்ணமாகியபோது கண்ணீர் வெள்ளம் அப்பிள் கன்னங்களில் நதியாக ஓட சோகமே உருவாய் யாதவன் முன் நின்றாள்.
மாதவனுக்குமட்டும் பிரிவதில் என்ன சந்தோசமா?
நாட்டு நிலைமை ஓடு ஓடு என்று துரத்த வீட்டு நிலைமையைச் சொல்லி ஜேர்மனியிலிருந்து அண்ணன் அழைக்க வேறு வழியின்றித்தான் புறப்பட்டான்.
நினைவுகளை நதியாவிடம் விட்டுவிட்டு விமானமேறியவன் நேரே ஜேர்மனிக்கு வந்து சேர்ந்திருந்தால் நிகழ்வுகள் வேறுமாதிரித் தொடர்ந்திருக்கும். அவனுடன் சேர்ந்து விதியுமல்லவா விமானம் ஏறிவிட்டது.
பாங்கொக்கில் இரண்டு கிழமைதான் நிற்கவேண்டி வருமென ஏஜென்சி கொழும்பில் வைத்துச் சொல்லியிருந்தான். ஆனால் ஏழு மாத காலங்கள்.. சீ! என்று யாதவன் அலுத்துப் போகுமளவிற்குப் போய்விட்டது.
முள்ளின்மேல் போட்ட சேலையைப்போல் அவன் நிலை ஆகிவிட்டது.
அங்கு யாதவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த விடுதிபோன்ற வீட்டில் பழையவர்கள் போவதும் புதியவர்கள் வந்து சேர்வதுமாய் ஏறக்குறைய 24, 25 பேர்மட்டில் எப்போதும் நின்றார்கள். ஏஜென்சிதான் அங்கே ராஜா. அவன் வைத்ததுதான் சட்டம். அங்கே பெண்கள் வந்தால் முதலில் அந்தப் பெண்களுக்கு சகல வசதிகளுடன் ராஜமரியாதை கிடைக்கும். பின்பு போகப் போக ஏஜென்சியின் இச்சைக்கு அவர்கள் இணங்காத பட்சத்தில் நாயிலும் கேவலமாக நடத்தப்படுவார்கள். இணங்கியவர்கள் அவர்கள் மீதான ஏஜென்சியின் மோகம் தணிந்ததும் போகவேண்டிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
அந்த அநீதிகளைப் பார்த்தும் பாராதவர்கள்போல ஆண்கள் இருக்கவேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். யாதவனுக்கு அந்த சூட்சுமம் தெரியாமற் போனதால் வந்ததே வினை.
ஆறு மாதங்கள் எந்தவித முன்னேற்றமுமின்றி ஓடி விட்டன.
இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை வந்தபோதுதான் எந்த அநீதியையும் பார்த்தும் பார்க்காதவன்போல் நடிக்கத் தொடங்கினான். பெட்டிப் பாம்பாய் ஒடுங்கி இருந்தான். நதியாவின் நினைவில் குளிர்காய்ந்தான்.
ஏழாம் மாதம் அவன்பக்கம் காற்று வீசியது. அவனும் அவனுடன் இன்னும் இருவரும் உக்ரைன் செல்வதென்பது முடிவானது. உக்ரைன் போய்விட்டான். பக்கத்தில்தானே ஜேர்மனி என நினைத்தான்.
ஆனால் உக்ரைன் குளிரில் சாப்பாடுகளும் சரியாக இல்லாமல் பனிக் குவியலுக்குள் ஏறி இறங்கியபோது பாங்கொக் பருப்புக்கறியும் சோறும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டான்.
இந்தா எல்லையைக் கடந்துவிடுவோம் என்ற நிலையிருக்கையில் அடிக்கடி தடைகள் வந்து பயணம் தடைப்பட்டுப்போய் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.
மனம் தளர்ந்தபோதெல்லாம் இதமாகத் தழுவியது நதியாவின் நினைவொன்றுதான். ஜெயில்வாசம் போன்ற கடினமான இரண்டு வருடங்கள் உக்ரைனில் கழிந்த பின்புதான் அவனால் ஜேர்மனியை வந்தடைய முடிந்தது.
இனியென்ன வாழ்க்கையில் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு ஜேர்மனியில் வாழ்க்கையைத் தொடங்கியவன் நதியாவுக்கும் கடிதங்களை எழுதத் தொடங்கினான். ஆனாலும் அவன் நினைத்ததுபோல ஜேர்மனிய வாழ்க்கை ஒன்றும் வசந்தத்தைக் கொட்டிக்கொண்டு அவனுக்காகக் காத்திருக்கவில்லை. மாறிமாறி அகதி முகாம்கள் விசாரணைகள் என்று ஒரு வருடம் ஓடிவிட்டது.
நதியாவின் கடிதங்கள்தான் வரத்தவறிவிட்டன.
நிரந்தரமான ஒரு முகவரி கிடைத்தபின் இனி என் நதியாவின் கடிதம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.
பிற்சேரியாவில் மாப்பிசைந்தான்... மாலையில் சுப்பர் மார்க்கட்டில் கிளீனிங் வேலை செய்தான்...
அண்ணனுக்குக் கூப்பிட்ட காசைக் கொடுத்து அம்மாவுக்கும் அனுப்பி எப்படியாவது மிச்சம் பிடித்து நதியாவையும் கூப்பிட்டுவிட வேண்டுமென்ற அவா அவனுள்.
நினைக்கின்ற அளவு வேகத்தில் பணத்தைச் சேர்க்க முடியாவிட்டாலும் முயன்றான். தினம் தினம் நதியாவின் கடிதத்துக்காகக் காத்திருந்து ஏமாந்தான். முடிவில் விடயத்தை அம்மாவுக்கு எழுதினான்.
அம்மாவின் பதில் கடிதம் அவனை ஆடிப்போக வைத்துவிட்டது.
'இவ்வளவு காலமும் எங்கை போனவர்? ஜேர்மன்காரியளோடை சுத்திப்போட்டு இப்ப அலுத்துப் போக என்னைத் தேடுறாரோ?' என்று நதியா அம்மாவிடம் சண்டைக்குப் போயிருக்கிறாள்.
நதியாவுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியும் அவள் யாதவனின் உண்மை நிலையை உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ தயாராக இருக்கவில்லை. யாதவன் பணத்தைப் பாராது தொலைபேசி அட்டைகளை வாங்கி வாங்கி நதியாவுடன் கதைக்க முற்பட்ட ஒவ்வொரு தடவையும் அவள் சரியாகக் கதைக்காமல் கோபமாகத் திட்ட தோற்றுப் போனவனாய் நின்றான்.
இயலாமையில் மெதுமெதுவாகக் குடிக்கத் தொடங்கினான்.
பலசமயங்களில் குடித்துவிட்டு வீட்டுக்கு அண்ணனிடம் போகப் பயந்து அந்தப் பூங்கா வாங்கிலிலேயே தூங்கிக் கொண்டான்.
குளிரும் குடியும் அவனை நோயாளி ஆக்கியது.
வேலையையும் தொலைத்தான். அண்ணன்கூட அவனைப் புரிந்துகொள்பவனாக இல்லாமல் இவனால் மானம் கப்பல் ஏறுகிறதே என்றுதான் கத்தினான்.
இறுதியாக ஒருநாள், 'வையடா ரெலிபோனை' என்றும் நதியா சொல்லிவிட்டாள். அதோடு யாதவன் முழுக் குடிகாரனாகிவிட்டான்.
பிறகும், பிறகும் ஏதோ ஒரு நப்பாசையில் தொலைபேசியில் நதியாவை அழைப்பதும் அவள் திட்டுவதைக் கேட்டுவிட்டு அழுவதுமாய் தொடர்ந்தான்.
அன்று நதியா அழுதபோது ஆண்மகனாய் நின்று அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் இன்று தானிருந்து அழுதான். அவன் மனதில் படிந்துவிட்ட சோகத்தையோ ஆற்றாமையையோ துடைத்தெறிய யாரும் அவன் அருகில் இல்லை.
இனி அவர்கள்...

சாந்தினி வரதராஜன்
எழுதிய
மூன்றாம் பகுதி.
விமானநிலையத்தில் ஆதவன் தன்னை மறந்து வெளியே துப்பிய வார்த்தைகள் அத்தனை உள்ளங்களையும் மெளனிக்க வைத்தது. ஆனால் அவர்களின் மனதிலோ புதிது புதிதாய் கேள்விகள் எழுந்தபடியே இருந்தது. எழுந்த கேள்விகளை மறுபடியும் விழுங்கியதால் அதை ஜீரணிக்க முடியாமல் கண்ணீராக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.
'எத்தனை வருடங்கள் கரைந்த பின்பு என் மகனைக் காண்பதற்காய் ஆசை ஆசையாகக் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு ஓடோடி வந்தேன். அத்தனை எதிர்பார்ப்பினையும் ஒரே நொடியில் கலைத்துவிட்டானே. இவன் என் ஆதவனா? கடந்துபோன இருபது வருடங்கள் இவனை பலவழிகளில் மாற்றியிருந்தது. உருவத்தால்மட்டுமல்ல உள்ளத்தாலும். எது மாற்றியிருக்கும்? காலமா அல்லது அவனின் புது உறவா? எது மாற்றியிருக்கும்?'
இத்தனை நேரமும் சிந்தனையில் கழிந்த அந்த உள்ளம் அப்பொழுதுதான் தன் மருமகளின் முகத்தை ஏறிட்டு நோக்கியது. ஆனால் மாலாவோ பிள்ளைகளை அணைத்தபடி எதிலுமே ஒட்டாமல் விழிகளை மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்த குழந்தைகளின் உருவத்தில் யாதவனைக் கண்டதுபோல் உணர்ந்த அந்தத் தாயின் உள்ளம் வேதனையில் உருகியது.
'யாதவன் என்ன செய்திருப்பான்? இவன் ஏன் அவனின் பெயரைக் கேட்டாலே கொதித்தெழுகிறான்? அப்படி என்னதான் நடந்திருக்கும்? யாரிட்டைபோய் நான் கேட்கமுடியும்..? பாவம்... என்ரை குஞ்சு இப்ப தனியா அங்க என்ன செய்கிறானோ தெரியவில்லை..!'
தாயின் முகத்தில் ஓடும் சிந்தனைகளைப் பார்த்த ஆதவனின் கண்களில் கண்ணீர் ஜனித்துக்கொண்டே இருந்தது.
'பாவம் அம்மா எத்தனை ஆசைகளைத் தேக்கியபடி என்னைப் பார்க்க வந்திருப்பா. அத்தனை எதிர்பார்ப்புக்களையும் கற்பனைகளையும் ஒருநொடியில் உடைத்தெறிந்துவிட்டேனே. நான் ஏன் இப்படி மாறினேன்? யாதவன் ஏன் இப்படி மாறினான்?' - எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தவனை, 'ஆதவா எழும்பு வீடு வந்திட்டுது!' என்ற தாயின் அழைப்பு திடுக்கிட வைத்தது.
0
கேட்டு வீசுவதில்லை காற்று. சொல்லிக்கொண்டு வருவதும் இல்லை மழை. எல்லாமு அழையாத விருந்தாளிகள்போல் வருவதும் போவதுமாக... யாதவனுக்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளும் அப்படித்தான். யாதவன் தன் நிலை மறக்கும் பொழுதுகளிலெல்லாம் நதியாவின் நினைவுகள் அவனின் இதயக்கதவை தட்டி அனுமதி கேட்காமலே எழுந்து ஓடிவருகின்றன. அன்றும் அப்படித்தான்.
மெல்ல பனித்துளிகள் கொட்டத் தொடங்கியது.
இலைகளை உதிர்த்த மரங்கள் வெறும் எலும்புக் கூடுகளாய் விறைத்து நின்றன. ஆனால் கைகளைமட்டும் மேலே தூக்கி வானத்திடம் ஏதோ யாசிப்பதுபோல் நின்ற காட்சி யாதவனைச் சிரிக்கத் தூண்டியது. பனித்துளிகளுக்கு தம்முகம் காட்ட பயந்த வெள்ளையர்கள் முகத்தை கீழ் நோக்கி புதைத்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். யாதவனோ எதுவும் நடக்காததுபோல் வழமைக்கு மாறாக, 'குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம்' என்ற பழைய பாடலுக்குள் மூழ்கியபடி தவழ்ந்துகொண்டிருந்தான்.
காற்றுக்கூட எட்டிப்பார்க்கப் பயப்படும் அந்த இருண்ட அறை அவனின் வரவுக்காய் விழித்திருந்தது.
இரண்டு மனம் வேண்டும் பாடலை ஒலிபரப்பியபடி தன்வரவை சுற்றுவட்டாரத்திற்கு அறிவித்தான் யாதவன்.
மதுவின் மயக்கமும் மாதுவின் ஏக்கமும் அவனின் இமைகளை இறுக மூடவைத்தன.
இமைகள் மூட இதயம் திறந்துகொண்டது.
'சனியன்... அந்தப் பக்கமே பார்க்காதே..!' அண்ணாவின் நண்பனின் வார்த்தைகள்.
'கறுப்பு பண்டி' என்ற வெள்ளையனின் துப்பலும் அவனின் இமைகளை நனைத்தன.
இந்த வார்த்தைகள் வாயிலிருந்து வெறுமையாக வெளியில் விழுந்தவைகள் அல்ல. அவர்களின் எண்ணத்திலிருந்து எழுந்து வந்தவை.
'அந்த வெள்ளையன் என்னை அறியாதவன். அவன் அப்படித்தான் பேசுவான். ஆனால் சுந்தர் அண்ணா... முன்பென்றால் 'அப்பன் அப்பன்' என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்தவர் இப்போ அதே வாயால்...? இதற்கு என்ன காரணம்... நான்தானே... இல்லை. அவள் நதியா...!'
நதியாவின் நினைவு தரையை நனைத்தது.
'யாதவா.. அழாதே அப்பன்..'
அதே குரல்... சில நாட்களாக அவனின் உணர்வுகளை எழுப்பி அழைக்கும் குரல்... பக்கத்திலிருந்து தன் தலையை வருடுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தவன் யார் யார் என அந்த இருண்ட அறையைத் துழாவினான்.
இருட்டும் அறையின் சுவர்களும் அவனின் நிலையைப் பார்த்து மெளனமாக அழுதன.
மறுபடியும் மயக்கம்... அப்பொழுதும் அதே குரல் 'யாதவா அழாதே அப்பன். நான் இருக்கிறன்..'
'இது.. இது என்ர அம்மாவின் குரல்..!'
'அம்மா..! அம்மா..!' என அழுதபொழுது யாதவன் மறுபடியும் குழந்தையானான். அவனுக்கு அம்மாவின் மடியில் முகம்புதைத்து அழவேண்டும்போல் தோன்றியது.
'நான் ஏன் இவ்வளவு நாட்களாக அம்மாவை நினைக்கவே இல்லை. எப்படி மறந்தேன்..?' எனத் தன்னைத்தானே கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தவனை கதவு தட்டும் சத்தம் தன்நிலைக்கு வரவழைத்தது.
'யாராக இருக்கும்? என்னைத் தேடி இங்கு யார் வரப்போகிறார்கள்?' என நினைத்தவாறு தள்ளாடியபடியே எழுந்து கதவைத் திறந்தவனுக்கு அண்ணனின் முகம் அதிர்வினை அளித்தது.
அண்ணா எப்போ வந்தார்? என எண்ணியவன் அவரின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் தலையைக் குனிந்துகொண்டான். ஆதவனோ எதுவும் பேசாமல் அவன் கைகளில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு மெளனித்தபடி வெளியேறினான். இது என்ன..? யார் கொடுத்துவிட்டிருப்பார்கள்? என்ற சிந்தனையிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்து நிமிர்ந்து பார்த்தவனுக்கு எதையோ தேடுவதுபோல் குனிந்த தலையுடன் சென்றுகொண்டிருந்த அண்ணாவின் முதுகுப்பக்கமே விழிகளில் விழுந்தது.
சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தவனை கைகளிலிருந்த அந்த வெள்ளை உறை தன்நிலைக்குத் திருப்பியது. 'என்னவாக இருக்கும்..?' என எண்ணியவாறு அறையிலிருந்த இருட்டை விலக்கி அதன் ஒளியில் உறையைப் பிரித்தவன் அப்படியே உறைந்து போனான்...
'இது.. இது.. என்ரை அம்மா..! அம்மாவுக்கு என்ன நடந்தது?' அவனது இதயத்தில் இடி இறங்கியதுபோல் வலித்தது. சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்தபடி இருந்தவனை தாயின் சிரித்தமுகம் மறுபடியும் சிந்திக்கத் தூண்டியது.
இளைப்பாறிய ஆசிரியை திருமதி கனகம் அவர்களின் மரண அறிவித்தல்.
கைகள் நடுங்க அந்தப் பத்திரிகையை திரும்பவும் பார்த்தவன், 'என்ரை அம்மாவுக்கு என்ன நடந்தது? ஏன் அம்மா... ஏன் அம்மா என்னைவிட்டுப் போனனீங்கள்?' அவனின் கேள்விகள் அந்த நான்கு சுவர்களிலும் மோதி திரும்பவும் அவன் கன்னத்தில் வந்து மோதின.
அம்மாவின் முத்துமுத்தான கையெழுத்து...
யாதவா மகனே!
யாதவன் தன்னை மறந்து 'ஓம் அம்மா!' என வாய்விட்டு பதில் கொடுத்தான்.
இது அம்மாவின் இறுதிக் கடிதம் என்ற உண்மை அவனை ஓங்கி அறைந்தது. இப்பொழுது அவனுக்குப் புரிந்துவிட்டது. அம்மா சில நாட்களாக அவனை அழைப்பதும் அணைப்பதும் இதனால்தான்.
அப்போ நான் தனியாக இல்லை.. என்ரை அம்மா என்னுடன்தான் இங்கே என் பக்கத்தில்தான் என்ற உண்மை அவனை மேலும் ஊமையாக்கியது.
அம்மாவின் இறப்பு யாதவனுக்கு வலித்தது.
நதியாவின் பிரிவால் ஏற்பட்ட வலியைவிட இது மாறுபட்டு இருந்தது.
பெரியகோடு சின்னக் கோட்டை அழித்துச் சென்றது.
அம்மாவின் கடித வரிகளில் கண்களைப் பதித்தான்.
யாதவா உன்னைப்பற்றிய சகலவிடயங்களும் அறிந்து வேதனைப்பட்டேன்.
என் செல்வமா இப்படி? என்னால் நம்பவே முடியவில்லையே யாதவா. உன்னைப் பிரிந்து நான்படும் வேதனை உனக்குப் புரியாது. ஆனால் நீயோ உன்னை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிய பெண்ணுக்காக உன்னை நீயே அழிக்கின்றாயா? யாதவா, அவள் மனதிலிருந்து உன்னை இலகுவாக தூக்கி எறிந்துவிட்டாளடா. அவள் மட்டுமல்ல. உன் உடன்பிறப்பும்தான். ஆனால் என்னால் முடியாது. தென்னை மரத்திலிருந்து அதன் ஓலையைப் பிரித்தெடுத்தாலும் அல்லது தானாக தவறினாலும் அது இருந்ததற்கான வடு அந்த மரத்திலிருந்து அழிவதே இல்லை. அதுபோல்தான் நீ என் மகன். என்னால் உன்னை வெறுக்க முடியாது குஞ்சு. மனிதர்களின் பாதம்பட்ட இடமெல்லாம் பாதையாகிவிடும் என்பார்கள். அந்த பாதையெல்லாம் முள்ளைவிதைத்து விட்டார்கள். அந்த முள்ளு என் பிள்ளையின் பாதத்தில் குத்திவிடுமோ என அஞ்சித்தானே என் செல்வத்தை பிரிந்தேன். ஆனால் நீயோ உன் உடன்பிறப்பும் உறவுகளும் முகம் சுளித்து விழி சுருக்கி பூச்சியைப் புழுவைப் பார்ப்பதுபோல் பார்க்க வைத்துவிட்டாய்.
என் நெஞ்சு நோகுது யாதவா.
மகனே! எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் எல்லோரும் இந்த மண்ணுக்குத்தான் சொந்தம்.
ஆனால் என் மகன் எப்படி வாழ்ந்தான் என்பதை இந்த மண்ணும் மனிதர்களும் மனதில் பதித்து வைத்திருப்பார்கள்.
அந்த பதிவுகள் இனிமையானதாக இருக்கவேண்டும்!
அவற்றை மீட்டிப் பார்க்கும் பொழுதுகளிலெல்லாம் மனமும் முகமும் மகிழ வேண்டும். யாதவா இங்கு ஒன்றாக இருக்கும் இரண்டு வெள்ளிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உன் நினைவு என்னை கொல்லுமடா கண்ணா.
யாதவா, நதிகள் நகரவேண்டும். ஒரே இடத்தில் இருந்தால் அதன் இயல்பு கெட்டுவிடும். அதுபோல்தான் உன் சிந்தனையை திசைதிருப்பு. நதிபோல் நகர். அதனோடு போட்டி போடு. பல ஆறுகள் ஆவென வாயை திறந்து உன்னை விழுங்கக் காத்திருக்கும். கடல்கள் கைநீட்டி அழைக்கும். எல்லாவற்றுக்குள்ளும் விழு. ஆனால் கலந்துவிடாதே. எழும்பு! மறுபடியும் நகர். உன் வாழ்க்கை நீண்டு விரியும்.
மகனே யாதவா! என்ன செய்யப் போகிறாய்..?
'நான் என்னம்மா செய்ய?' இப்போது யாதவனின் முகத்தில் புதிய சிந்தனைக் கோடுகள் படரத் தொடங்கின.
மகனே! கடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள். மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் மறைந்திருப்பதால் அது சாதாரண மனிதன் கண்களுக்குத் தெரிவதே இல்லை.
மரங்கள் நிமிர்ந்து நிலையாக நிற்பது கிளைகளாலும் அதன் இலைகளாலும்போல் தோற்றமளிக்கும். யாதவா, அந்த கிளைகளும் இலைகளும் இடையில் முளைத்தவை. இடையில் முளைத்த கிளைகளும் இலைகளும் விழும். பின் புதியன துளிர்க்கும். ஆனால் வேர் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். அது தன் மரத்திற்காக கைகளால் மண்ணை இறுகப் பிடித்தபடி வாழ்வைக் கழிக்கும். அந்த வேரின் கைகளுக்கு இப்போ சக்தி இல்லை யாதவா. அதனால் நீ எப்படியாவது நிமிர்ந்து நில். என் மகனே இருட்டைவிட்டு வெளியே வா. வந்து வெளிச்சத்தைப் பார். அப்போது நான் உனக்குத் துணையாக இருப்பேன். வருவியா யாதவா..?
'அம்மா..! அம்மா..!' என்று தன்னை மறந்து கதறினான் யாதவன்.
'என் அம்மாவை நான் எப்படி மறந்திருந்தேன்?'
கையிலிருக்கும்பொழுது பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டியவைகளை அகல கைவிரித்து காற்றிலே பறக்க விட்டுவிட்டு பின் காற்றிலும் மழையிலும் தேடி அலைவதுதானே மனித இயல்பு. அவனும் அப்படித்தான்.
'என்னைவிட்டு பிரிய மனமில்லாது பிரிந்த அந்த அன்பு முகத்தை நான் எப்படி மறந்தேன்? உயிரே உடலே உணர்வே என காதல்மொழி பகிர்ந்து பின் என் காதில் காறி உமிழ்ந்தவளுக்காக என் உயிரை அழித்து என்னை அழித்து... கடவுளே..!' என அழுதான் யாதவன். அவனின் கண்ணீருடன் கலந்து நதியா என்ற உருவம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கிற்று.
ஆனால் அம்மாவின் அன்புமுகம் அவனுள் ஆழமாகப் பதியத் தொடங்கிற்று.
அழுது அழுது களைத்தவனை அந்த இருட்டு அறை பயமுறுத்தியது.
'யாதவா! உன் அம்மாவின் சாவுக்கு நீதான் காரணம்!'
'ஓம்.. நான்தான்... நானேதான்!' என முகத்தை இரு கைகளாலும் மூடி கதறியவன் வெளியே ஓடினான்.
எங்கே போவது என தெரியாமல் ஓடினான். இருட்டும் அவனைத் துரத்தியது.
வெள்ளையர்கள் வெறுப்புடன் நோக்கினர். மனதுக்குள் புறுபுறுத்தனர்.
சுயநினைவற்று ஓடியவனை ஒரு கரம் இறுகப் பற்றியது.
''மகனே...! தொலைந்துபோகப் பார்த்தியே...!"
அந்தக் கரமும், மகனே என்ற வார்த்தையும் அவனை என்னமோ செய்தது.
"அம்மா...!" என தன்னை மறந்து அழைத்தவனை அந்த வெள்ளை மூதாட்டியின் கண்களும் கைகளும் அரவணைத்துக் கொண்டது.
பச்சை விளக்கு கண்களைச் சிமிட்டி வழிகாட்டியது. யாதவனுக்கு இப்போ நடப்பதற்கு நேரமே இல்லை.
அந்த பூங்காவும் கதிரையும் இப்போதும் அதே இடத்தில்தான்...
ஆனால் வெறுமையாக.
இனி அவர்கள்...

புஷ்பராணி ஜோர்ஜ்
எழுதிய
நான்காம் பகுதி
'அம்மா!' என்ற அந்த மூன்றெழுத்துக்குள் நிறைந்துள்ள சக்திதான் என்னே?
அந்த வெள்ளைத்தோல் போர்த்திய முகத்தில் தன் அன்னையைத் தேடும் வாஞ்சைக்குள் யாதவன்.
அந்தத் தாயின் கைகளின் அரவணைப்பில் தன் தாயே அவன் உருவில் வந்து தன் உயிரைக் காப்பாற்றித் தழுவியதான, வாய்மொழிகளால் சொல்லமுடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில், 'அம்மா!' என்று அவன் வாய் அவனையறியாது அழைத்தது.
அது இன்பமா அன்றேல் துன்பமா? எதுவும் புரிய முடியாது அவன் திணறினான். மனிதருக்குள் நிறத்தால் வெள்ளை கறுப்புப் பேதங்கள், மதங்களால் பற்பல மாற்றங்கள், மொழிகளால் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கலாம்.
உலகின் ஒளியாக இறைமகன் மானிட அவதாரம் எடுத்தார். அன்பு என்பதே அந்த ஒளியின் வடிவம். அதுவே உலகின் மகாசக்தி.
அன்பே சிவம். அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது. கூன் குருடு செவிடின்றிப் பிறத்தல் அதினிலும் அரிது. அப்படிப் பிறவியிலும் ஊனம் இல்லாத யாதவன் குழந்தையாகிக் குளறி அழுதபடி அவளை ஆரத் தழுவிக்கொண்டான். சுயநினைவு தப்பிய மயக்கம்போல், தெளிவற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இரண்டும் கெட்டான் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, அவன் தன்னைத் தானே குறுக்கு விசாரணை செய்ய முற்பட்டான்.
நடு இரவு...
அந்த மூதாட்டி அவனின் இந்தத் தெளிவற்ற பரிதாப நிலைகண்டு அவனை நடுத்தெருவில் கைநெகிழ்ந்துவிடாமல், அவன் பிறப்பு குலம் கோத்திரம் பார்க்காது, வேற்று நாட்டவன் அந்நியன் என்று தெரிந்தும்கூட தன் வீட்டிற்கு உடனடியாகவே வாடகைக் கார் மூலம் அழைத்து வந்தாள். அதில்தான் உலகப் பொதுமொழியான மனிதாபிமானம் சீவகாருண்யம் நிறைந்திருந்தது.
தனி மனிதனுக்குள் அவ்வப்போது தோன்றும் சிறு சிறு பிரச்சினைகள் உடனேயே தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்கப்படாமல் விடப்பட்டால் அவை சிறு தும்புகளாக ஓடிப் பின்னிப்பிணைந்து அடிமன ஆழத்தில் புகுந்து உணர்வுகளிற் கலந்து முறுக்கிடப்பட்ட கயிறாகத் திரிக்கப்பட்ட வடமாகி, அந்த வடமே அவனை விலங்கிட்டு அவனைச் சிந்தனைகளாற் சிறைப்படுத்தி விடுதலையடைய முடியாத சிக்கல்களுக்குள் கொண்டு சென்று பூதாகரமாகி அவனின் தூக்குக் கயிறாக மாறிவிடும்.
யாதவன் நிலையும் இவ்வகைதான். அவன் வெளிநாடு வர வெளிக்கிட்டு வாழ்வில் பல துன்பச் சூறாவளிகளைச் சந்திக்க நேர்ந்ததால் பல சோதனைகள் வேதனைகளுக்குள் அகப்பட்டு புறம்தள்ள முடியாது சிறைவாசம் அனுபவிப்பவன். மனவருத்தம் சொல்லில் அடங்கா, வெற்றி தோல்விகளை சமமாக மதிக்கத் தெரியாது தோல்வியை மறக்க மதுபோதைக்கு அடிமையாகி சமூகப் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டு வாழும் சில பலவீன மனிதர்கள் நிறையவே உண்டு.
இந்த வகையான பெலவீன மனிதனாய் யாதவனும்.
தாயை இழந்த பின்புதான் இடையில் வந்து தன் வாழ்வையே சூனியச் சுடுகாடாக்கிய நதியாவை எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டான். தாயின் புன்முறுவலில் அந்த மூதாட்டி அவனை அன்போடு தன் மொழியில் மகனே என்று விளிக்க அவளே தன் தாய் என எண்ணிப் புலம்புகின்றான்.
தொப்புள் கொடி உறவான என் தாயைப் பலகாலம் மறந்து, நதியா என்ற கிளை நதி வெள்ளத்தில் சிலகாலம் மூச்சுத் திணறினேன். அந்த வெள்ளமே மது என்ற வடிவம் தாங்கி என் வாழ்வை மூழ்கடித்துவிட்டது. அதே வெள்ளம்தான் என் அன்னை உயிரையே உறிஞ்சிக் குடித்துவிட்டது. என் அம்மாவை நான் தொலைத்துவிட்டேன். அம்மா.. அம்மா.. என் உயிரே என்னைவிட்டு எங்கே போனாய்? ஆதவன்... என் அண்ணா... தாயாகத் தந்தையாக எத்தனைமுறை என்னை நாடிவந்து, 'யாதவா, உனக்கு என்ன குறை? நதியா உன் தாகம் தீர்க்கும், நதியா இல்லாவிட்டால் உனக்கு ஒரு பிரியாவைத் தேடித் தர நாம் தயாராக உள்ளோம். குடி குடியையே கெடுக்கும். உன் குடும்பம் என்ன... மதிப்பு மரியாதை என்ன... பிறந்து வளர்ந்த வாழ்வென்ன... புலமைப் பரிசில் பெற்று பல்கலைக்கழகம்வரை படித்து எதிலுமே முதல் மாணவனாய் வந்த உன் கல்வியின் பெறுமதிதான் என்ன... உன் பிறவி நான் சொல்லுகின்றேன். உன் தாய் சகோதரர்களின் மானம் மரியாதைகளை எண்ணி உன்னை மாற்று. உன் அண்ணி பிள்ளைகளுடன் வந்து பேசிப் பழகிச் சந்தோஷமாக உன் பொழுதைக் கழி!' என்று புத்தி போதித்து, பாசத்தால் என்னை வருடிச் சென்றான். அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காகி, 'நதியா இன்றி எனக்கு வாழ்வேயில்லை.... வாழ்வே மாயம் பாடி, நீ எனக்குப் புத்தி சொல்லத தேவையில்லை. நீ உன் வேலையைமட்டும்!' என்று அவனை மதியாது எடுத்தெறிந்தபோது, 'நீயும் இனி குடிபோதையில் என்வீட்டு வாசல் மிதிக்கக் கூடாது. உன்னைத் திருத்தவே முடியாது' என்ற மனவேதனையில் வைராக்கியத்தோடு விட்டுச் சென்றுவிட்டான்.
எம் தாயின் மரணச்செய்தியுடன் அவள் கடைசியாக எனக்கு எழுதிய கடிதத்தையும் ஒன்றாகக் காவிவந்த அண்ணாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அண்ணாவிடம் முகம்கொடுத்துப் பேசிப் பாசத்தை இருவரும் பங்கிட்டு வாய்விட்டு அழுது, எம்மை உருவாக்கிய தாயின் பிரிவின் துன்பச் சுமையைப் பரிமாறிக் கொள்ளமுடியாத பாவப்பட்ட நிலையில் நான்...
யாதவனுக்குள்ளே பல கேள்விக் கணைகள் குற்றின.
அண்ணா என்றுகூட அழைக்க முடியாத மனநிலையில் தம்பி நான்...
ஒரு தாயின் கருவறையில் உருவாகி அத்தாயின் இரத்தத்தையே உறிஞ்சிப் பாலாய் சுவைத்து, ஒரே கூரையின் கீழ் பண்பில், ஒழுக்கத்தில், இரத்த பாசத்தால் பின்னிப்பிணைந்த எமக்குள் எப்படியான மாற்றங்கள். இந்த வெளிநாட்டுக் காலநிலையில், கலாச்சாரப் பண்புகளில், மொழிகளில் வேறுபட்ட மாறுபட்ட வாழ்வானாலும் இங்கே என் அண்ணன் வேறு நான் வேறா?
இன்றுதான் அதை எண்ணிப் பார்க்கும் உத்வேகத்தில்...
அப்பாவின் முகம் தெரியாது வளர்ந்த எமக்கும் எம் குடும்பத்திற்கும் ஒளிவிளக்கான மூத்தவன் ஆதவன். விடியலில் தோன்றியவன். எமக்கெல்லாம் தந்தையாகித் தன் படிப்போடு எம்தாய் தன் வீட்டுக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி தன் தொழிலுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் சென்றுவர வீட்டு வேலைகளில் தன் தாய்க்கு ஒத்தாசையாகி எம்மையெல்லாம் தன் தோள்மேல் சிலுவையாகச் சுமந்து சென்றவன். தன் கடமைகளைச் சரிவர நிறைவேற்றிக்கொள்ளப் பக்குவப்பட்டவன். காலக் கேட்டால் அவன் வெளிநாடு வந்து தன் ஆசாபாசங்களைத் துறந்து தன் இளமைக் காலங்களைத் தொலைத்து வெளிநாட்டுக் குளிரில் விறைத்து ஓடி ஓடி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து சகோதரிகளைக் கரைசேர்த்து நரை தலையில் முகம் காட்டிய பிறகே தன் வாழ்க்கையைப்பற்றிக்கூட எண்ணாது தான் வாழ்வு தேடு முன்பே எனக்காகப் பல இலட்சங்களை அள்ளி இறைத்து என்னை ஜேர்மனிக்கு அழைத்துக் கொண்டவன்.
அதன் பிறகே தாலிகட்டி தனக்கென்றொரு வாழ்வைத் தேடிக் கொண்டவன். அப்படியான அண்ணாவை நான் வெட்டிப்பேசியது தகுமா? ஆதவன் போன்ற அண்ணா யாருக்குக் கிடைக்கும்? இரத்த உறவை மறந்து பள்ளிப் பாதையில் இடையில் நடந்த நதியில் தாகம் தீர்க்க எண்ணிய எனக்கு...
நதியா நதியா...
ஒரே குழப்பம். அவன் மூளை விண்ணென்று வலித்தது. அவன் மனத்திரையில் நதியாவின் உருவம் கரும்பூதமாகி கழிமுகத்து சேற்றில் புதைந்துவிட்டது.
என் வாழ்வை அவளால் தொலைத்தேன். என் குடும்பப் பொறுப்புக்களை மறந்தேன். தலைகொடுப்பான் தம்பி என மலையாக நம்பிய அவனுக்கு நான் கைகொடுத்து கைதூக்கி விடவில்லை.
மகனாகத் தாய்க்குப் பெற்றகடன் தீர்க்கவில்லை. சகோதரனாக அவன் உணர்வுகளை நான் ஒருபோதும் புரியவில்லை. என்னை வாழவைக்க அவன் எடுத்த முயற்சிகள் எல்லாமே பூச்சியம்தான். அண்ணன் என்னை அனுசரித்துப் போனாலும் தாரம் என்று தாலி கட்டி வந்த புதியசொந்தம் என் பிழைகளைப் பொறுக்கவிடுவாளா? அண்ணன் மனைவியரில் சிலர் கணவரின் சகோதரர்களையும் தன் பிள்ளைபோலப் பேணுவர். எல்லோருமே அப்படி இருப்பார்களா? கேள்விக்குறிதான். அண்ணி மாலாவை எப்போதோ வெறுத்துத் தள்ளியவன்... இப்போ 'நான்தானே குற்றவாளி' என்று அவன் மனச்சாட்சி அவனை ஆட்டிப்படைத்தது.
பிறரில் அனுதாபப்படும், அவர்களின் நலன்களில் அக்கறைகொள்ளும், பிறவியிலேயே நல்ல உள்ளம் கொண்டவன்தான் யாதவன். அப்படியான வெள்ளைமனத்தில் கள்ளச் சிந்தையில்லை. அவன் தெளிவுபெறக்கூடிய குழப்பமானநிலையில் தன்னைத்தானே குறுக்கு விசாரணை செய்யும் யாதவனின் நிலை இப்போது.
அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அனா என்ற அந்தத் தாய் அவனைத் தன் மொழியில் கொஞ்சுமொழி பேசி கெஞ்சி தலையை வருடி நித்திரை கொள்ளும்படி ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்தாள்.
அவனால் இமைகளை மூடிக்கொள்ள முடியாது அவை அடம்பிடித்தன.
'எனக்கு அமைதி வேண்டுமானால் நான் குடிக்க மது வேண்டும்..!'
அதை அவனுக்குத் தரமறுத்தாள்.
அவன் சிறகுக்குள் அடைக்கலம் புகும் கோழிக்குஞ்சுபோல ஒடுங்கி, அவள் பேச்சைக் கேட்டுத் தலையாட்டும் பொம்மைபோல் ஆனான்.
அவள் முகமோ பால்போல் வெள்ளை. கண்களோ நீல நிறம். அந்தக் கண்களின் ஒளியில் வைரம் வீசியது.
எந்தப் படிப்பறிவற்ற தாயும் தன் சேய்க்காக தன் அன்பையே சொரிந்து உயிரையே கொடுப்பாள். கண்ணான தன் குஞ்சுகளைக் கண்ணிமைக்காது பாதுகாப்பாள். அவள்தான் அன்னை.
என் தாயின் கண்களில் கருவிழிகள். நெற்றியிலோ திருநீறு பூத்திருக்கும். அதன்மேல் சந்தனப்பொட்டு பளிச்சிடும். கருணை வடிவானாள் என் அம்மா. உலகின் சிறந்த பணியான ஆசிரியத் தொழிலின் கல்வி என்னும் தேரை இழுத்துச் சென்றவள். அப்படிப்பட்ட ஆசிரியத் தாய்க்குப் பிறந்த மகனா நான்? வெட்கப்பட்டான். இப்போ நினைக்கவே இழிவாகவுள்ள தன்னைத்தானே காறித்துப்பி செருப்படி கொடுத்தான். அவளின் பெயருக்கே களங்கம் கற்பித்த கடைமகன் நான்.
எல்லாம் நதியா... நதியா...
ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால். ஆழ்மனக் காதல் கலப்படமற்றது. போலியற்றது. நதியா என்மேல் வைத்த காதலோ ஆழமில்லாதது. காதலென்ற கட்டுக்குள் அடங்காதது. ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டு இருவர் மனமும் இணைந்து எச்சந்தர்ப்பத்திலும் எப்புயல் வரினும் நாணல்போல் அசைந்து வளைந்து நிலைத்து நிற்பதே காதல்.
அன்று அவள் கடைசியாக என்னோடு பேசியபோது பொறுமைகொண்டு பேசிய நான் கோபித்து அவளோடு வாதாடியிருந்தால் என்பக்கம் நியாயம் பிறந்திருக்கும். ஆனால் நானோ போதைக்கு அடிமையானேன். நான் அவளை உள்ளத்தால் நேசித்தேன். கள்ளி என்னை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டாள்.
என் தாய் செய்த தொழிலின் புனிதம் புண்ணியம் இப்போது இப்போது என் தாய் வடிவில் என் அருகே. இந்த வெள்ளை மூதாட்டி அனாவின் அன்பில் இப்போது அவன் கட்டுண்டிருந்தான். அம்மாவைப்போல் என்பதால் அவளது அன்பில் இவன் மறைந்த தன் தாயையே கண்டான். இவனது பரிதாப நிலைகண்டு அவள் கொண்ட பரிவில் தான்பெற்ற மகனைப்போல இவனைப் பத்திரமாக வைத்திய சிகிச்சைக்கு அழைத்துச் சென்றாள். அவனுக்குப் புனர்வாழ்வு கொடுக்க முழுமூச்சானாள்.
அவனது சமூகத்தினரே அவனைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொச்சைப்படுத்தி ஏளனம் செய்தனர். அது அவர்கள் தப்பில்லை. அவர்களும் அந்நியநாட்டில் வாழ்பவர்கள். இவனால் தங்களுக்கும் வெளிநாட்டவர் மத்தியில் மதிப்பு மரியாதை குறைந்து போகும் என்று எண்ணுபவர்கள்.
இங்கு வந்ததும் தங்கள் நடையுடை பாவனைகளை மாற்றியவர்கள் பலர். நாய்வேஷம் போட்டால் குரைக்கத்தானே வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் சிலர். ஆனாலும் தங்கள் கலாச்சார வழக்கத்தில் நகைபோடும் பழக்கத்தை மாற்றாமல் போட்டிபோட்டு எடைகூடிய பவுணை அணிந்து காட்சிப்பொருளாய் திரிபவர்களும் இவர்களுள் அடங்கியேயுள்ளனர்.
'நல்லதோ கெட்டதோ என் சமூகத்தை எண்ணிப்பாராமல் மாது என்ற போதையால் மதுவுக்கு அடிமையான கோழைதானே நான்?!' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான் யாதவன்.
0
அனா இந்த நாட்டில் இளைப்பாற்றுநிதி பெறும் ஒரு முன்னாள் ஆசிரியை. இந்த நாட்டில் ஆசிரியத் தொழில் புரிந்த பலர் தாம் கல்வி புகட்டும் மாணவர்களைத் தம் குழந்தைகளாகப் பேணி அவர்கள் முன்னேற்றமே வாழ்வின் இலட்சியமாக வரித்து அந்த ஆவலினால் தங்களைக் குடும்பம் என்ற வட்டத்துக்குள் முடக்கிவிடாது திருமணம் என்ற விலங்கிட்டுக் கொள்ளாதவர்கள். இவ்வகையோரில் இந்த அனாவும் ஒருத்தியானாள். அதனால் அவள் வயோதிப வயதில் பிள்ளை குட்டியின்றித் தனித்து வாழ்பவள்.
தொலையப்போன யாதவனை மரணப் பிடியிலிருந்து மீட்டு, போதை வேட்கையைப் போக்கச் சிகிச்சைக்கு உட்படுத்தி அவனது அடிமன ஆழத்தின் உண்மைகளை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்து அவனைப் பலர் அறிய சுயமனிதனாக்கினாள்.
அவன் சிகிச்சைக்கு உட்பட்டிருந்த வேளையில் ஆதவனுடன் தொடர்புகொண்டு யாதவனை வந்து சந்திக்கவேண்டி அழைத்தாள் அந்தத் தாய்.
ஆதவன் வந்தபோது பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்த தம்பியைக் கண்டான். எலும்புக்கூடு ஒன்று தோல்போர்த்தியது போலிருந்த தம்பியின் கோலம் அவனைத் திடுக்குற வைத்தது.
'இவனா என் தம்பி யாதவன்?'
அவனால் நம்ப முடியவில்லை. ஆண் அழகனான எடுப்பான தோற்றம், அவனது உறுதியான உடல்வாகு, எங்கே தொலைந்தது அவன் கொள்ளையழகு?
'என்னடா யாதவா? நீயா இது? இங்கே எப்படி?'
தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். ஆதவன் அக்கணமே ஆடிப் போய்விட்டான்.
'நான் ஆற்றவேண்டிய வெளிக்கடமைகள் எவ்வளவோ என் சகோதரனுக்குச் செய்தேன். ஆனால் என் தம்பி பாதை தெரியாது மாறும்போது நான் கண்டித்தேனே ஒழிய, அவனுக்கு வேண்டிய அன்பு அனுசரணைகள் என்ற வழியைக் காட்டத் தவறிவிட்டேன். பல இலட்சங்களை அள்ளிக்கொட்டி கூப்பிட்ட என் தம்பிக்கு இடர் வந்தவேளை பாசத்தைப் பரிமாறிக்கொள்ளவில்லை. இடையில் வந்த மனைவி என்ற பந்தத்தின் சொல்கேட்டு உன்னை நடுவழியில் தவிக்கவிருந்து வாழாதிருந்தேனே...'
- மனங்குமுறிய ஆதவன் தலை தலையென அடித்துக் கொண்டான்.
'நான் பாவி நான் பாவி' எனக் கதறினான்.
அவன் கண்களில் கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாயிற்று.
அண்ணனாகத் தம்பியின் கைகளை இறுக்கிப் பிடித்தான். தம்பியின் கைகளை அவனது கண்ணீர் நனைத்தது.
'இல்லை அண்ணா நான்தான் பாவி. பெற்றதாயைத் தொலைத்தேன். உடன்பிறந்தோர் மானம் மரியாதையைக் கப்பல் ஏற்றினேன். ஊரை, நாட்டை, உலகத்தை ஏன் என்னையே சிலகாலம் எண்ணிப்பார்க்க மறந்தேன். சிலகாலம் காட்டு வாழ்க்கையின் மிருகமாக நடமாடினேன். ஒன்றின் முடிவில்தான் இன்னொன்றின் ஆரம்பமே... எம் குடும்பம் என்ற கோட்டையின் இராணியான என் தாயின் இழப்பின் பின்புதான் என் மனச்சாட்சி என்னை சாட்டையால் அடித்து குறுக்குவிசாரணைக்கு உட்படுத்தியது. உன்னைப்போல் ஒரு சகோதரனின் அருமை பெருமையை உணரவைத்தது. உன்னைப்போல் குடும்ப ஒளிதந்த ஆதவன் சகோதரனாகக் கிடைக்க நாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் அம்மா எனக்கு எழுதிய கடிதத்தில் வைரமாய் சிந்திய வார்த்தைகள் என்னைப் பழைய மகனாக வாழச் சிந்திக்கப் புடம்போட்டது.'
பக்கத்தில் நின்ற வெள்ளை மாதான அனாவைச் சுட்டிக்காட்டி,
'இவதான் என்னைக் காப்பாத்தி எனக்கு மறுவாழ்வு தந்தவ..!' என்று ஆதவனுக்கு மெதுவாக அறிமுகப்படுத்தியவன், 'இப்ப நான் புதுப்பிறவி எடுத்திருக்கிறன் அண்ணா... அண்ணா என்னாலை உனக்கு எவ்வளவோ கஷ்டம்... எத்தினை தரம் உன்னை எடுத்தெறிஞ்சு கதைச்சிருப்பன்... என்னை மன்னிப்பாயா அண்ணா?'
சிறுகுழந்தைபோல் தமையனைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினான் யாதவன்.
'நானும் குற்றவாளிதானே தம்பி...! என்னிலும் பிழையிருக்கு... உன்னைக் கண்டிச்சுத் திருத்திறதை விட்டிட்டு உன்னை வெறுத்தது நான் செய்த பிழைதானே! நீதான் என்னை மன்னிக்க வேணும்!' இருவரும் பாசவலைக்குள் சிக்குண்டு உணர்வுக் கொந்தளிப்பில் ஆழமாகி பின்னிப்பிணைந்தனர்.
ஆனந்தக் கண்ணீரால் நனைக்கப்பட்டனர்.
இந்தப் பாசப்பிணைப்பை மெளனமொழிகளால் உணர்ந்த வேற்றுநாட்டுத் தாயின் கண்களும் அவளையும் அறியாது குளமாகியது.
0
யாதவன் இப்போது அன்பு பாசம் நேசம் நிறைந்த தாயுடன் நல்லபடி வாழ்கின்றான். அவன் மனித வாழ்விற்கு பணம் ஆதாரமானது. அந்தப் பணமும் அவனை நிறைவாக்கியுள்ளது. ஏற்கனவே கல்வியறிவு நிறைந்தவன் மேலும் தன் வளர்ப்புத் தாய்மூலம் வளம்படுத்திக்கொண்டான்.
ஈழத்தமிழர் கல்வியறிவில் சளைத்தவர்கள் அல்லவே.
நம் தமிழ் பழைய கல்விமான்கள் வெள்ளையர் ஆட்சியில் சிங்களவர்களுடன் ஒன்றாகி இருந்தனர். பல உரிமைகள் வாதிட்டுப் பெற்றுக்கொடுத்த தமிழர் கல்விமான்கள் பரம்பரையில் உதித்த யாதவன் காலங்கடந்தாலும் தன்னைக் கல்வியில் வளப்படுத்திக்கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கிடமில்லை.
நம் சமூகத்திற்கு அவன் ஆற்றவேண்டிய பல கடமைகளுக்குள் காலடி எடுத்து வைத்துப் பலகாலம் ஆகிவிட்டது.
அவனுக்கு இருக்க நேரம் இல்லாத கடமைகள் பற்பல.
அன்று அன்னையர் தினம்.
அதிகாலை எழுந்து தன் தாயின் படத்தின் முன்பு பூவைத்து மானசீகமாக வணங்கிவிட்டு, மம்மா அனாவுடன் காலையுணவைப் பரிமாறும்வேளை அவளுக்கும் பூச்செண்டு கொடுத்து நன்றிகொண்டு வாழ்த்திவிட்டு, அண்ணா வீட்டிற்குச் சென்று வருவதாகவும் அவளிடம் கூறி விடைபெற்றான்.
அண்ணா வீட்டிற்குப் போனதுதான் பிள்ளைகள் சித்தப்பாவென்று ஓடி வந்து ஒட்டிக்கொண்டனர்.
கையில் வைத்திருந்த பூங்கொத்தை அண்ணிக்குக் கொடுத்து தன் வாழ்த்தைத் தெரிவித்தான் யாதவன். அண்ணி இப்போது அவனிடம் பாசத்தைப் பொழிந்து வந்தாள்.
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே.
கடந்த காலங்கள் அவன் வாழ்வின் செல்லரித்த பக்கங்கள்.
அவைகளைப் புரட்டிப்பார்க்க யாருக்கும் நேரம் இல்லை.
யாதவன் அடிக்கடி செல்லும் பூங்காவும் கதிரையும் அப்படியே வெறுமையாக. ஆனால் யாதவனோ குணத்தால் பணத்தால் பதவியால் நிறைவாகி இறக்கைகட்டி உயர்வில் பறந்து கொண்டிருந்தான்.
அவனை ஒதுக்கியவர்கள் அவனை நாடி வரவேண்டிய நிலையில் இப்போ அவன் ஒரு மொழிபெயர்ப்பாளனாக சமூகத்திற்கு உதவி செய்யவும் நிமிர்ந்து நிற்கின்றான். பழையன கழிதலும் புதியன புகுதலுமாக வாழ்வின் சமூக அந்தஸ்தில் குடும்பம் என்ற கோயிலைக் கட்டி எழுப்பி அவனைக் குடியேற்ற அண்ணி நடவடிக்கை எடுக்க, அவன் வாழ்வின் வழித்துணையாக வாழ்வின் துணையாக யாதவனுக்கு ஒரு யசோதை வரும்வேளை அண்மித்திருந்தது.
மத்தியான உணவு முடித்து அண்ணனின் பிள்ளைகளுடன் யாதவன் தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அண்ணா செற்றியில் பகல் தூக்கம்.
அவர்கள் வீட்டுத் தொலைபேசி மணி ஒலிக்கிறது.
அண்ணி மாலா தொலைபேசியில்.
"நான் மாலா... நீங்கள்?''
"நான்..."
மறுமுனையில் -
"ஆதவனின் தம்பி யாதவனுடன் கதைக்க வேண்டும்."
"உங்கள் பெயர்..? நீங்கள் யார்?"
"நான்... நான் நதியா..."
இனி அவர்கள்!?-
(நெடுங்கதை)
ஓர் அறிமுகம்.
ஆண்டு 2000 தைத்திங்களில் பூவரசு வாசகர் அரங்கம் இலக்கிய நிகழ்வின்போது படைப்பாளர்களிடமும் வாசகர்களிடமும் கதை எழுதுவதில் ஒரு புதிய முறை அறிமுகமாயிற்று.
ஓர் எழுத்தாளர் ஒரு கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்களே சம்பவங்களைத் தொகுத்து கதையை வளர்த்துச் செல்வதுதான் அது.
2002ம் ஆண்டு வாசகர் அரங்கில் ஒரு கதைக்கான கருவை ஒர் எழுத்தாளர் எடுத்துத் தர அதை இன்னோர் எழுத்தாளர் ஆரம்பித்து தொடர்ந்து சில எழுத்தாளர்கள் எழுதி கதையை நிறைவு செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இதுபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய பல கதைகள் உருவாகியிருக்கின்றன. எனினும் புலம்பெயர் எழுத்தாளர்களிடையே இது புது முயற்சிதான்
முன்னணி எழுத்தாளரான திரு.இராஜன்முருகவேல் அவர்களிடம் கதையின் முதற்பகுதியைத் தொடங்குமாறு கேட்டிருந்தோம்.
தொடர்ந்து 4 எழுத்தாளர்களிடம் கதையின் அடுத்த அத்தியாயங்களை வரிசையாக எழுதும் பணியை ஒப்படைத்தோம்.
ஆனால் கதை பற்றி அவர்களுக்கு எவ்வித தரவுகளும் தராமல் அவர்களது விருப்பப்படியே கதையை வளர்த்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டோம்.
கதையை யார் ஆரம்பித்தார்கள் யார் தொடர்ந்தார்கள் யார் முடித்துவைக்கப் போகிறார்கள் என்பது கதை நிறைவுறும் வரையில் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அவர்கள் தமது விருப்பப்படியே கதையை வளர்த்தார்கள்.
முதலில் தொடராக பூவரசில் இதனை வெளியிடலாம் என்று எண்ணியிருந்தபோதும் ஆண்டுமலரில் இந்தக்கதை முழுமையாக வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என முடிவுசெய்தோம்.
இந்தக் கதையை உருவாக்க ஆர்வத்தோடு ஒத்துழைத்த முன்னணி எழுத்தாளரான திரு. இராஜன் முருகவேல்,
பூவரசு 10வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சாந்தினி வரதராஜன்,
பூவரசு 11வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன்,
பூவரசின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து தனது படைப்புக்களால் பூவரசை அலங்கரிக்கும் பூவரசின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வது எனது கடமையென்று கருதுகிறேன்.
அன்புடன்
இந்துமகேஷ்
(தை 2003)
இனி அவர்கள்!?
(பூவரசு இனிய தமிழ் ஏட்டுக்காக ஜேர்மனியில் ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய நெடுங்கதை)

இராஜன் முருகவேல்
எழுதிய
முதலாம் பகுதி
இருக்கைகளில் எல்லோரும் ஒழுங்காக அமர்ந்திருக்கிறார்களா என இருமருங்கும் அவதானித்தவாறு நகர்ந்துகொண்டிருந்தான் அவன். அருகிலிருந்த மாலாவும் பிள்ளைகளும் சீற் பெல்டை சரியாக கொழுவியுள்ளார்களா எனக் கவனித்தான். அவர்கள் மூவரின் முகங்களும் மகிழ்ச்சிப்பூரிப்பில் மலராகப் பிரகாசமாயிருந்தன.
விமானம் ஓடுபாதையில் மெதுவாக நகர ஆரம்பித்தது.
பிள்ளைகள் இருவருக்கும் அது முதல் விமானப் பயணம். இருவரும் தாய் மாலாவைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குப் பதில் சொல்வதில் அவளுக்குச் சலிப்பேற்பட்டாலும், அதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
தாயகத்துக்கு இன்று போகலாம், நாளை போகலாம் என எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவேளைகளில் ஒவ்வொரு புதுப்புதுப் பிரச்சினைகள் எழ, எண்ணங்கள் ஏக்கங்களாவதிலேயே வருடங்கள் கழிந்தவேளையில், ஈற்றில் ஒருமாதிரியாகத் தாயகத்துக்கு வெளிக்கிட்டாகிவிட்டது.
ஜேர்மனிக்கு வந்தவேளைக்கும் தற்போது தாயகத்துக்கு செல்லும் பொழுதுக்கும் இடையில்தான் எவ்வளவு காலங்கள் வருடங்களாகக் கழிந்து, உருவத்தில் மட்டுமல்லாமல் வாழ்விலும் மாற்றங்களைத் தந்துவிட்டன.
தனியாய் வந்து, மாலாவோடு இணையாகி குடும்பமாகி இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகி, இடையிடையே பெற்றோரின் சகோதரங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, உழைப்பே பிரதானமாகி, பணமே அதன் பலனாகி, அதற்காக மேனியை உருக்கி தற்போது இளமை முடியும் விளிம்பில் தாயகத்தை நோக்கி புறப்பட்டுவிட்டான் ஆதவன்.
'அப்பு... கவனமாக போவிட்டு வா ராசா... உடம்பை கவனிச்சுக் கொள்ளணை!' என்று கட்டியணைத்து உச்சிமோர்ந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பிய தாயின்நிலை அவன் மனக்கண்முன்னால் நிழலாடியது.
அப்போது ஆதவன் இளைஞன். தற்போது கேசத்தில் ஆங்காங்கே நரைவிழுந்து, இரண்டு பிள்ளைகள் அப்பாவென விளிக்கும் ஒரு குடும்பத் தலைவன்.
நேற்று தொலைபேசியில் தாய் விமானநிலையம் வருவதாகக் கூறினாள்.
அவளுக்கும் பொறுமையில்லை.
விமானத்தால் இறங்கிய உடனேயே மகனைக் கண்டுவிடவேண்டும் என்ற ஆசை அவளுக்கும். அவனை... அவனது மக்களை... பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பெற்றவளுக்குள் பொங்குவதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
விமானம் திருவனந்தபுரத்துக்கு மேலாகப் பறப்பதை முன்னாலுள்ள திரை துல்லியமாகக் காட்டியது. இன்னும் ஒரு மணி நேரம். கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்துவிடும். இனந்தெரியாத பரபரப்பு அவனுள். நிமிடங்கள் மணிந்தியாலங்களாக நகர்வதுபோலிருந்தது.
தாய்தான் மனதில் அடிக்கடி வந்து நின்றாள். பார்த்ததும் கட்டியணைத்து அழுவாளா? என்னில் ஏற்பட்டுள்ள உருவமாற்றத்தைக் கண்டு வியப்பாளா? மருமகள் மாலாவை எப்படி வரவேற்பாள்? பிறந்ததிலிருந்தே பார்த்தறியாத பேரப்பிள்ளைகளைக் கண்டு உணர்வுள் உருகிக் குளிப்பாளா? எண்ணிப் பார்த்தான்.
சீற் பெல்ட்டை அணியும்படி அறிவித்தல். விமானம் தரையிறங்கியது..
பாஸ்போட் செக்கிங், லக்கேஜ் எடுப்பு, டியூற்றிபிறீ சொப் கொள்வனவு என முடித்துக் கொண்டு வெளியே வந்தவனை ஓடிவந்து கட்டியணைத்துக் கதறத் தொடங்கினாள் தாய். முகம் சுருங்கி தேகம் நலிந்து நரம்புகள் பீறிட்டு வெளிக்காட்டும் கரங்களைப் பற்றிய ஆதவனுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. வார்த்தைகள் வெளிவராமல் உணர்ச்சிப் பெருக்கில் தடுமாறின. மாலாவின் யக்கற்றைப் பிடித்திழுத்தவாறு மலங்க மலங்க விழித்தனர் பிள்ளைகள் இருவரும்.
"அப்பாச்சி..." மாலா அவர்களுக்குக் கூறினாள். பேரப்பிள்ளைகளைக் கட்டியணைத்து அழப் போகிறாள் தாய் என நினைத்தான் ஆதவன். ஆனால் அவளோ...
"அப்பு... யாதவன் என்ன செய்யிறானணை?"
அவள் அப்படி அந்த இடத்தில் கேட்பாள் என அவன் நினைக்கவில்லை. மாலா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆதவனின் முகம் விகாரமானது. கண்கள் கோபத்தில் சிவந்தன.
"அம்மா... இதைக் கேட்கவோ விமான நிலையத்துக்கு வந்தனீங்கள்? அவனுக்கென்ன... அவனைப்பற்றிக் கதைக்கிறதெண்டால்... நான் வீட்டை வரேல்லை.. எங்கையாவது ஹோட்டலிலை இருந்தூட்டுப் போறன்.."
அவனின் பேச்சைக்கேட்டுத் திகைத்து நின்றாள் அந்த அப்பாவித் தாய்.
0
அது அந்த நகர பொதுப்பூங்கா. அங்கே பொழுதுபோக்க வரும் மக்கள் அமரவென சில வாங்கில்கள்.
அதிலே ஒரு இளைஞன் கையில் பியர் போத்தலுடன்.
"அங்கை பார்க்காமல் வா.."
"ஏனண்ணை.."
"பாத்தியெண்டால் இஞ்சை வந்தீடுவான்... காசு தாவெண்டு பிசின்போல ஒட்டீடுவான்... கழட்டிவிடுறது கஸ்டம்... ஏன் சோலியை..?"
"ஆர் அண்ணை அது?"
"யாதவன்.. தமையன் குடும்பத்தைக் காப்பாத்துவாணெண்டு ஜேர்மனிக்கு கூப்பிட்டுவிட.. சனியன் றோட்டிலையும் பார்க்கிலையும் குடிச்சுக்கொண்டு திரியுது... குடிச்சுப்போட்டு சும்மா இருந்தாலும் பறுவாயில்லை... மற்றவங்களுக்கும் தொந்தரவு.."
கலைந்த கேசம். வாரக்கணக்கில் சேவ் செய்யப்படாத முகம். கண்களில் போதைக்கும் விஞ்சி வெளிக்கிளம்பும் ஏக்கம். பியர் போத்தலை தூக்கி அண்ணாந்து ஒரு மிடறு விழுங்கிக் கொண்டான்.
"ஒரு ஹீயாவது சொல் கண்ணே... உன் காதலன் நான்தான் என்று... சொல்லமாட்டியா... சொல்லமாட்டியா?"
"காத்திருப்பேன் என்றாயே.. கடிதம் போடுவேன் என்றாயே... இப்போது நீ எங்கே... எனக்குள்ளா? அல்லது..??"
அவன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.
என்ன நினைத்தானே தெரியவில்லை. உரத்த குரலெடுத்துப் பாட ஆரம்பித்தான்.
"அப்பிள் பெண்ணே நீதானோ... ஐஸ் கிறீம் சிலையே நீதானோ..."
அந்தப் பாடலுடன் சேர்ந்து அவன் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.
இனி அவர்கள்..

சந்திரவதனா செல்வகுமாரன்
எழுதிய
இரண்டாம் பகுதி
இப்படித்தான் அன்று நதியாவும் யாதவன் ஜேர்மனி செல்வது திண்ணமாகியபோது கண்ணீர் வெள்ளம் அப்பிள் கன்னங்களில் நதியாக ஓட சோகமே உருவாய் யாதவன் முன் நின்றாள்.
மாதவனுக்குமட்டும் பிரிவதில் என்ன சந்தோசமா?
நாட்டு நிலைமை ஓடு ஓடு என்று துரத்த வீட்டு நிலைமையைச் சொல்லி ஜேர்மனியிலிருந்து அண்ணன் அழைக்க வேறு வழியின்றித்தான் புறப்பட்டான்.
நினைவுகளை நதியாவிடம் விட்டுவிட்டு விமானமேறியவன் நேரே ஜேர்மனிக்கு வந்து சேர்ந்திருந்தால் நிகழ்வுகள் வேறுமாதிரித் தொடர்ந்திருக்கும். அவனுடன் சேர்ந்து விதியுமல்லவா விமானம் ஏறிவிட்டது.
பாங்கொக்கில் இரண்டு கிழமைதான் நிற்கவேண்டி வருமென ஏஜென்சி கொழும்பில் வைத்துச் சொல்லியிருந்தான். ஆனால் ஏழு மாத காலங்கள்.. சீ! என்று யாதவன் அலுத்துப் போகுமளவிற்குப் போய்விட்டது.
முள்ளின்மேல் போட்ட சேலையைப்போல் அவன் நிலை ஆகிவிட்டது.
அங்கு யாதவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த விடுதிபோன்ற வீட்டில் பழையவர்கள் போவதும் புதியவர்கள் வந்து சேர்வதுமாய் ஏறக்குறைய 24, 25 பேர்மட்டில் எப்போதும் நின்றார்கள். ஏஜென்சிதான் அங்கே ராஜா. அவன் வைத்ததுதான் சட்டம். அங்கே பெண்கள் வந்தால் முதலில் அந்தப் பெண்களுக்கு சகல வசதிகளுடன் ராஜமரியாதை கிடைக்கும். பின்பு போகப் போக ஏஜென்சியின் இச்சைக்கு அவர்கள் இணங்காத பட்சத்தில் நாயிலும் கேவலமாக நடத்தப்படுவார்கள். இணங்கியவர்கள் அவர்கள் மீதான ஏஜென்சியின் மோகம் தணிந்ததும் போகவேண்டிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
அந்த அநீதிகளைப் பார்த்தும் பாராதவர்கள்போல ஆண்கள் இருக்கவேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். யாதவனுக்கு அந்த சூட்சுமம் தெரியாமற் போனதால் வந்ததே வினை.
ஆறு மாதங்கள் எந்தவித முன்னேற்றமுமின்றி ஓடி விட்டன.
இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை வந்தபோதுதான் எந்த அநீதியையும் பார்த்தும் பார்க்காதவன்போல் நடிக்கத் தொடங்கினான். பெட்டிப் பாம்பாய் ஒடுங்கி இருந்தான். நதியாவின் நினைவில் குளிர்காய்ந்தான்.
ஏழாம் மாதம் அவன்பக்கம் காற்று வீசியது. அவனும் அவனுடன் இன்னும் இருவரும் உக்ரைன் செல்வதென்பது முடிவானது. உக்ரைன் போய்விட்டான். பக்கத்தில்தானே ஜேர்மனி என நினைத்தான்.
ஆனால் உக்ரைன் குளிரில் சாப்பாடுகளும் சரியாக இல்லாமல் பனிக் குவியலுக்குள் ஏறி இறங்கியபோது பாங்கொக் பருப்புக்கறியும் சோறும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டான்.
இந்தா எல்லையைக் கடந்துவிடுவோம் என்ற நிலையிருக்கையில் அடிக்கடி தடைகள் வந்து பயணம் தடைப்பட்டுப்போய் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.
மனம் தளர்ந்தபோதெல்லாம் இதமாகத் தழுவியது நதியாவின் நினைவொன்றுதான். ஜெயில்வாசம் போன்ற கடினமான இரண்டு வருடங்கள் உக்ரைனில் கழிந்த பின்புதான் அவனால் ஜேர்மனியை வந்தடைய முடிந்தது.
இனியென்ன வாழ்க்கையில் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு ஜேர்மனியில் வாழ்க்கையைத் தொடங்கியவன் நதியாவுக்கும் கடிதங்களை எழுதத் தொடங்கினான். ஆனாலும் அவன் நினைத்ததுபோல ஜேர்மனிய வாழ்க்கை ஒன்றும் வசந்தத்தைக் கொட்டிக்கொண்டு அவனுக்காகக் காத்திருக்கவில்லை. மாறிமாறி அகதி முகாம்கள் விசாரணைகள் என்று ஒரு வருடம் ஓடிவிட்டது.
நதியாவின் கடிதங்கள்தான் வரத்தவறிவிட்டன.
நிரந்தரமான ஒரு முகவரி கிடைத்தபின் இனி என் நதியாவின் கடிதம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.
பிற்சேரியாவில் மாப்பிசைந்தான்... மாலையில் சுப்பர் மார்க்கட்டில் கிளீனிங் வேலை செய்தான்...
அண்ணனுக்குக் கூப்பிட்ட காசைக் கொடுத்து அம்மாவுக்கும் அனுப்பி எப்படியாவது மிச்சம் பிடித்து நதியாவையும் கூப்பிட்டுவிட வேண்டுமென்ற அவா அவனுள்.
நினைக்கின்ற அளவு வேகத்தில் பணத்தைச் சேர்க்க முடியாவிட்டாலும் முயன்றான். தினம் தினம் நதியாவின் கடிதத்துக்காகக் காத்திருந்து ஏமாந்தான். முடிவில் விடயத்தை அம்மாவுக்கு எழுதினான்.
அம்மாவின் பதில் கடிதம் அவனை ஆடிப்போக வைத்துவிட்டது.
'இவ்வளவு காலமும் எங்கை போனவர்? ஜேர்மன்காரியளோடை சுத்திப்போட்டு இப்ப அலுத்துப் போக என்னைத் தேடுறாரோ?' என்று நதியா அம்மாவிடம் சண்டைக்குப் போயிருக்கிறாள்.
நதியாவுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியும் அவள் யாதவனின் உண்மை நிலையை உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ தயாராக இருக்கவில்லை. யாதவன் பணத்தைப் பாராது தொலைபேசி அட்டைகளை வாங்கி வாங்கி நதியாவுடன் கதைக்க முற்பட்ட ஒவ்வொரு தடவையும் அவள் சரியாகக் கதைக்காமல் கோபமாகத் திட்ட தோற்றுப் போனவனாய் நின்றான்.
இயலாமையில் மெதுமெதுவாகக் குடிக்கத் தொடங்கினான்.
பலசமயங்களில் குடித்துவிட்டு வீட்டுக்கு அண்ணனிடம் போகப் பயந்து அந்தப் பூங்கா வாங்கிலிலேயே தூங்கிக் கொண்டான்.
குளிரும் குடியும் அவனை நோயாளி ஆக்கியது.
வேலையையும் தொலைத்தான். அண்ணன்கூட அவனைப் புரிந்துகொள்பவனாக இல்லாமல் இவனால் மானம் கப்பல் ஏறுகிறதே என்றுதான் கத்தினான்.
இறுதியாக ஒருநாள், 'வையடா ரெலிபோனை' என்றும் நதியா சொல்லிவிட்டாள். அதோடு யாதவன் முழுக் குடிகாரனாகிவிட்டான்.
பிறகும், பிறகும் ஏதோ ஒரு நப்பாசையில் தொலைபேசியில் நதியாவை அழைப்பதும் அவள் திட்டுவதைக் கேட்டுவிட்டு அழுவதுமாய் தொடர்ந்தான்.
அன்று நதியா அழுதபோது ஆண்மகனாய் நின்று அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் இன்று தானிருந்து அழுதான். அவன் மனதில் படிந்துவிட்ட சோகத்தையோ ஆற்றாமையையோ துடைத்தெறிய யாரும் அவன் அருகில் இல்லை.
இனி அவர்கள்...
சாந்தினி வரதராஜன்
எழுதிய
மூன்றாம் பகுதி.
விமானநிலையத்தில் ஆதவன் தன்னை மறந்து வெளியே துப்பிய வார்த்தைகள் அத்தனை உள்ளங்களையும் மெளனிக்க வைத்தது. ஆனால் அவர்களின் மனதிலோ புதிது புதிதாய் கேள்விகள் எழுந்தபடியே இருந்தது. எழுந்த கேள்விகளை மறுபடியும் விழுங்கியதால் அதை ஜீரணிக்க முடியாமல் கண்ணீராக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.
'எத்தனை வருடங்கள் கரைந்த பின்பு என் மகனைக் காண்பதற்காய் ஆசை ஆசையாகக் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு ஓடோடி வந்தேன். அத்தனை எதிர்பார்ப்பினையும் ஒரே நொடியில் கலைத்துவிட்டானே. இவன் என் ஆதவனா? கடந்துபோன இருபது வருடங்கள் இவனை பலவழிகளில் மாற்றியிருந்தது. உருவத்தால்மட்டுமல்ல உள்ளத்தாலும். எது மாற்றியிருக்கும்? காலமா அல்லது அவனின் புது உறவா? எது மாற்றியிருக்கும்?'
இத்தனை நேரமும் சிந்தனையில் கழிந்த அந்த உள்ளம் அப்பொழுதுதான் தன் மருமகளின் முகத்தை ஏறிட்டு நோக்கியது. ஆனால் மாலாவோ பிள்ளைகளை அணைத்தபடி எதிலுமே ஒட்டாமல் விழிகளை மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்த குழந்தைகளின் உருவத்தில் யாதவனைக் கண்டதுபோல் உணர்ந்த அந்தத் தாயின் உள்ளம் வேதனையில் உருகியது.
'யாதவன் என்ன செய்திருப்பான்? இவன் ஏன் அவனின் பெயரைக் கேட்டாலே கொதித்தெழுகிறான்? அப்படி என்னதான் நடந்திருக்கும்? யாரிட்டைபோய் நான் கேட்கமுடியும்..? பாவம்... என்ரை குஞ்சு இப்ப தனியா அங்க என்ன செய்கிறானோ தெரியவில்லை..!'
தாயின் முகத்தில் ஓடும் சிந்தனைகளைப் பார்த்த ஆதவனின் கண்களில் கண்ணீர் ஜனித்துக்கொண்டே இருந்தது.
'பாவம் அம்மா எத்தனை ஆசைகளைத் தேக்கியபடி என்னைப் பார்க்க வந்திருப்பா. அத்தனை எதிர்பார்ப்புக்களையும் கற்பனைகளையும் ஒருநொடியில் உடைத்தெறிந்துவிட்டேனே. நான் ஏன் இப்படி மாறினேன்? யாதவன் ஏன் இப்படி மாறினான்?' - எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தவனை, 'ஆதவா எழும்பு வீடு வந்திட்டுது!' என்ற தாயின் அழைப்பு திடுக்கிட வைத்தது.
0
கேட்டு வீசுவதில்லை காற்று. சொல்லிக்கொண்டு வருவதும் இல்லை மழை. எல்லாமு அழையாத விருந்தாளிகள்போல் வருவதும் போவதுமாக... யாதவனுக்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளும் அப்படித்தான். யாதவன் தன் நிலை மறக்கும் பொழுதுகளிலெல்லாம் நதியாவின் நினைவுகள் அவனின் இதயக்கதவை தட்டி அனுமதி கேட்காமலே எழுந்து ஓடிவருகின்றன. அன்றும் அப்படித்தான்.
மெல்ல பனித்துளிகள் கொட்டத் தொடங்கியது.
இலைகளை உதிர்த்த மரங்கள் வெறும் எலும்புக் கூடுகளாய் விறைத்து நின்றன. ஆனால் கைகளைமட்டும் மேலே தூக்கி வானத்திடம் ஏதோ யாசிப்பதுபோல் நின்ற காட்சி யாதவனைச் சிரிக்கத் தூண்டியது. பனித்துளிகளுக்கு தம்முகம் காட்ட பயந்த வெள்ளையர்கள் முகத்தை கீழ் நோக்கி புதைத்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். யாதவனோ எதுவும் நடக்காததுபோல் வழமைக்கு மாறாக, 'குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம்' என்ற பழைய பாடலுக்குள் மூழ்கியபடி தவழ்ந்துகொண்டிருந்தான்.
காற்றுக்கூட எட்டிப்பார்க்கப் பயப்படும் அந்த இருண்ட அறை அவனின் வரவுக்காய் விழித்திருந்தது.
இரண்டு மனம் வேண்டும் பாடலை ஒலிபரப்பியபடி தன்வரவை சுற்றுவட்டாரத்திற்கு அறிவித்தான் யாதவன்.
மதுவின் மயக்கமும் மாதுவின் ஏக்கமும் அவனின் இமைகளை இறுக மூடவைத்தன.
இமைகள் மூட இதயம் திறந்துகொண்டது.
'சனியன்... அந்தப் பக்கமே பார்க்காதே..!' அண்ணாவின் நண்பனின் வார்த்தைகள்.
'கறுப்பு பண்டி' என்ற வெள்ளையனின் துப்பலும் அவனின் இமைகளை நனைத்தன.
இந்த வார்த்தைகள் வாயிலிருந்து வெறுமையாக வெளியில் விழுந்தவைகள் அல்ல. அவர்களின் எண்ணத்திலிருந்து எழுந்து வந்தவை.
'அந்த வெள்ளையன் என்னை அறியாதவன். அவன் அப்படித்தான் பேசுவான். ஆனால் சுந்தர் அண்ணா... முன்பென்றால் 'அப்பன் அப்பன்' என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்தவர் இப்போ அதே வாயால்...? இதற்கு என்ன காரணம்... நான்தானே... இல்லை. அவள் நதியா...!'
நதியாவின் நினைவு தரையை நனைத்தது.
'யாதவா.. அழாதே அப்பன்..'
அதே குரல்... சில நாட்களாக அவனின் உணர்வுகளை எழுப்பி அழைக்கும் குரல்... பக்கத்திலிருந்து தன் தலையை வருடுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தவன் யார் யார் என அந்த இருண்ட அறையைத் துழாவினான்.
இருட்டும் அறையின் சுவர்களும் அவனின் நிலையைப் பார்த்து மெளனமாக அழுதன.
மறுபடியும் மயக்கம்... அப்பொழுதும் அதே குரல் 'யாதவா அழாதே அப்பன். நான் இருக்கிறன்..'
'இது.. இது என்ர அம்மாவின் குரல்..!'
'அம்மா..! அம்மா..!' என அழுதபொழுது யாதவன் மறுபடியும் குழந்தையானான். அவனுக்கு அம்மாவின் மடியில் முகம்புதைத்து அழவேண்டும்போல் தோன்றியது.
'நான் ஏன் இவ்வளவு நாட்களாக அம்மாவை நினைக்கவே இல்லை. எப்படி மறந்தேன்..?' எனத் தன்னைத்தானே கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தவனை கதவு தட்டும் சத்தம் தன்நிலைக்கு வரவழைத்தது.
'யாராக இருக்கும்? என்னைத் தேடி இங்கு யார் வரப்போகிறார்கள்?' என நினைத்தவாறு தள்ளாடியபடியே எழுந்து கதவைத் திறந்தவனுக்கு அண்ணனின் முகம் அதிர்வினை அளித்தது.
அண்ணா எப்போ வந்தார்? என எண்ணியவன் அவரின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் தலையைக் குனிந்துகொண்டான். ஆதவனோ எதுவும் பேசாமல் அவன் கைகளில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு மெளனித்தபடி வெளியேறினான். இது என்ன..? யார் கொடுத்துவிட்டிருப்பார்கள்? என்ற சிந்தனையிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்து நிமிர்ந்து பார்த்தவனுக்கு எதையோ தேடுவதுபோல் குனிந்த தலையுடன் சென்றுகொண்டிருந்த அண்ணாவின் முதுகுப்பக்கமே விழிகளில் விழுந்தது.
சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தவனை கைகளிலிருந்த அந்த வெள்ளை உறை தன்நிலைக்குத் திருப்பியது. 'என்னவாக இருக்கும்..?' என எண்ணியவாறு அறையிலிருந்த இருட்டை விலக்கி அதன் ஒளியில் உறையைப் பிரித்தவன் அப்படியே உறைந்து போனான்...
'இது.. இது.. என்ரை அம்மா..! அம்மாவுக்கு என்ன நடந்தது?' அவனது இதயத்தில் இடி இறங்கியதுபோல் வலித்தது. சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்தபடி இருந்தவனை தாயின் சிரித்தமுகம் மறுபடியும் சிந்திக்கத் தூண்டியது.
இளைப்பாறிய ஆசிரியை திருமதி கனகம் அவர்களின் மரண அறிவித்தல்.
கைகள் நடுங்க அந்தப் பத்திரிகையை திரும்பவும் பார்த்தவன், 'என்ரை அம்மாவுக்கு என்ன நடந்தது? ஏன் அம்மா... ஏன் அம்மா என்னைவிட்டுப் போனனீங்கள்?' அவனின் கேள்விகள் அந்த நான்கு சுவர்களிலும் மோதி திரும்பவும் அவன் கன்னத்தில் வந்து மோதின.
அம்மாவின் முத்துமுத்தான கையெழுத்து...
யாதவா மகனே!
யாதவன் தன்னை மறந்து 'ஓம் அம்மா!' என வாய்விட்டு பதில் கொடுத்தான்.
இது அம்மாவின் இறுதிக் கடிதம் என்ற உண்மை அவனை ஓங்கி அறைந்தது. இப்பொழுது அவனுக்குப் புரிந்துவிட்டது. அம்மா சில நாட்களாக அவனை அழைப்பதும் அணைப்பதும் இதனால்தான்.
அப்போ நான் தனியாக இல்லை.. என்ரை அம்மா என்னுடன்தான் இங்கே என் பக்கத்தில்தான் என்ற உண்மை அவனை மேலும் ஊமையாக்கியது.
அம்மாவின் இறப்பு யாதவனுக்கு வலித்தது.
நதியாவின் பிரிவால் ஏற்பட்ட வலியைவிட இது மாறுபட்டு இருந்தது.
பெரியகோடு சின்னக் கோட்டை அழித்துச் சென்றது.
அம்மாவின் கடித வரிகளில் கண்களைப் பதித்தான்.
யாதவா உன்னைப்பற்றிய சகலவிடயங்களும் அறிந்து வேதனைப்பட்டேன்.
என் செல்வமா இப்படி? என்னால் நம்பவே முடியவில்லையே யாதவா. உன்னைப் பிரிந்து நான்படும் வேதனை உனக்குப் புரியாது. ஆனால் நீயோ உன்னை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிய பெண்ணுக்காக உன்னை நீயே அழிக்கின்றாயா? யாதவா, அவள் மனதிலிருந்து உன்னை இலகுவாக தூக்கி எறிந்துவிட்டாளடா. அவள் மட்டுமல்ல. உன் உடன்பிறப்பும்தான். ஆனால் என்னால் முடியாது. தென்னை மரத்திலிருந்து அதன் ஓலையைப் பிரித்தெடுத்தாலும் அல்லது தானாக தவறினாலும் அது இருந்ததற்கான வடு அந்த மரத்திலிருந்து அழிவதே இல்லை. அதுபோல்தான் நீ என் மகன். என்னால் உன்னை வெறுக்க முடியாது குஞ்சு. மனிதர்களின் பாதம்பட்ட இடமெல்லாம் பாதையாகிவிடும் என்பார்கள். அந்த பாதையெல்லாம் முள்ளைவிதைத்து விட்டார்கள். அந்த முள்ளு என் பிள்ளையின் பாதத்தில் குத்திவிடுமோ என அஞ்சித்தானே என் செல்வத்தை பிரிந்தேன். ஆனால் நீயோ உன் உடன்பிறப்பும் உறவுகளும் முகம் சுளித்து விழி சுருக்கி பூச்சியைப் புழுவைப் பார்ப்பதுபோல் பார்க்க வைத்துவிட்டாய்.
என் நெஞ்சு நோகுது யாதவா.
மகனே! எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் எல்லோரும் இந்த மண்ணுக்குத்தான் சொந்தம்.
ஆனால் என் மகன் எப்படி வாழ்ந்தான் என்பதை இந்த மண்ணும் மனிதர்களும் மனதில் பதித்து வைத்திருப்பார்கள்.
அந்த பதிவுகள் இனிமையானதாக இருக்கவேண்டும்!
அவற்றை மீட்டிப் பார்க்கும் பொழுதுகளிலெல்லாம் மனமும் முகமும் மகிழ வேண்டும். யாதவா இங்கு ஒன்றாக இருக்கும் இரண்டு வெள்ளிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உன் நினைவு என்னை கொல்லுமடா கண்ணா.
யாதவா, நதிகள் நகரவேண்டும். ஒரே இடத்தில் இருந்தால் அதன் இயல்பு கெட்டுவிடும். அதுபோல்தான் உன் சிந்தனையை திசைதிருப்பு. நதிபோல் நகர். அதனோடு போட்டி போடு. பல ஆறுகள் ஆவென வாயை திறந்து உன்னை விழுங்கக் காத்திருக்கும். கடல்கள் கைநீட்டி அழைக்கும். எல்லாவற்றுக்குள்ளும் விழு. ஆனால் கலந்துவிடாதே. எழும்பு! மறுபடியும் நகர். உன் வாழ்க்கை நீண்டு விரியும்.
மகனே யாதவா! என்ன செய்யப் போகிறாய்..?
'நான் என்னம்மா செய்ய?' இப்போது யாதவனின் முகத்தில் புதிய சிந்தனைக் கோடுகள் படரத் தொடங்கின.
மகனே! கடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள். மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் மறைந்திருப்பதால் அது சாதாரண மனிதன் கண்களுக்குத் தெரிவதே இல்லை.
மரங்கள் நிமிர்ந்து நிலையாக நிற்பது கிளைகளாலும் அதன் இலைகளாலும்போல் தோற்றமளிக்கும். யாதவா, அந்த கிளைகளும் இலைகளும் இடையில் முளைத்தவை. இடையில் முளைத்த கிளைகளும் இலைகளும் விழும். பின் புதியன துளிர்க்கும். ஆனால் வேர் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். அது தன் மரத்திற்காக கைகளால் மண்ணை இறுகப் பிடித்தபடி வாழ்வைக் கழிக்கும். அந்த வேரின் கைகளுக்கு இப்போ சக்தி இல்லை யாதவா. அதனால் நீ எப்படியாவது நிமிர்ந்து நில். என் மகனே இருட்டைவிட்டு வெளியே வா. வந்து வெளிச்சத்தைப் பார். அப்போது நான் உனக்குத் துணையாக இருப்பேன். வருவியா யாதவா..?
'அம்மா..! அம்மா..!' என்று தன்னை மறந்து கதறினான் யாதவன்.
'என் அம்மாவை நான் எப்படி மறந்திருந்தேன்?'
கையிலிருக்கும்பொழுது பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டியவைகளை அகல கைவிரித்து காற்றிலே பறக்க விட்டுவிட்டு பின் காற்றிலும் மழையிலும் தேடி அலைவதுதானே மனித இயல்பு. அவனும் அப்படித்தான்.
'என்னைவிட்டு பிரிய மனமில்லாது பிரிந்த அந்த அன்பு முகத்தை நான் எப்படி மறந்தேன்? உயிரே உடலே உணர்வே என காதல்மொழி பகிர்ந்து பின் என் காதில் காறி உமிழ்ந்தவளுக்காக என் உயிரை அழித்து என்னை அழித்து... கடவுளே..!' என அழுதான் யாதவன். அவனின் கண்ணீருடன் கலந்து நதியா என்ற உருவம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கிற்று.
ஆனால் அம்மாவின் அன்புமுகம் அவனுள் ஆழமாகப் பதியத் தொடங்கிற்று.
அழுது அழுது களைத்தவனை அந்த இருட்டு அறை பயமுறுத்தியது.
'யாதவா! உன் அம்மாவின் சாவுக்கு நீதான் காரணம்!'
'ஓம்.. நான்தான்... நானேதான்!' என முகத்தை இரு கைகளாலும் மூடி கதறியவன் வெளியே ஓடினான்.
எங்கே போவது என தெரியாமல் ஓடினான். இருட்டும் அவனைத் துரத்தியது.
வெள்ளையர்கள் வெறுப்புடன் நோக்கினர். மனதுக்குள் புறுபுறுத்தனர்.
சுயநினைவற்று ஓடியவனை ஒரு கரம் இறுகப் பற்றியது.
''மகனே...! தொலைந்துபோகப் பார்த்தியே...!"
அந்தக் கரமும், மகனே என்ற வார்த்தையும் அவனை என்னமோ செய்தது.
"அம்மா...!" என தன்னை மறந்து அழைத்தவனை அந்த வெள்ளை மூதாட்டியின் கண்களும் கைகளும் அரவணைத்துக் கொண்டது.
பச்சை விளக்கு கண்களைச் சிமிட்டி வழிகாட்டியது. யாதவனுக்கு இப்போ நடப்பதற்கு நேரமே இல்லை.
அந்த பூங்காவும் கதிரையும் இப்போதும் அதே இடத்தில்தான்...
ஆனால் வெறுமையாக.
இனி அவர்கள்...

புஷ்பராணி ஜோர்ஜ்
எழுதிய
நான்காம் பகுதி
'அம்மா!' என்ற அந்த மூன்றெழுத்துக்குள் நிறைந்துள்ள சக்திதான் என்னே?
அந்த வெள்ளைத்தோல் போர்த்திய முகத்தில் தன் அன்னையைத் தேடும் வாஞ்சைக்குள் யாதவன்.
அந்தத் தாயின் கைகளின் அரவணைப்பில் தன் தாயே அவன் உருவில் வந்து தன் உயிரைக் காப்பாற்றித் தழுவியதான, வாய்மொழிகளால் சொல்லமுடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில், 'அம்மா!' என்று அவன் வாய் அவனையறியாது அழைத்தது.
அது இன்பமா அன்றேல் துன்பமா? எதுவும் புரிய முடியாது அவன் திணறினான். மனிதருக்குள் நிறத்தால் வெள்ளை கறுப்புப் பேதங்கள், மதங்களால் பற்பல மாற்றங்கள், மொழிகளால் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கலாம்.
உலகின் ஒளியாக இறைமகன் மானிட அவதாரம் எடுத்தார். அன்பு என்பதே அந்த ஒளியின் வடிவம். அதுவே உலகின் மகாசக்தி.
அன்பே சிவம். அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது. கூன் குருடு செவிடின்றிப் பிறத்தல் அதினிலும் அரிது. அப்படிப் பிறவியிலும் ஊனம் இல்லாத யாதவன் குழந்தையாகிக் குளறி அழுதபடி அவளை ஆரத் தழுவிக்கொண்டான். சுயநினைவு தப்பிய மயக்கம்போல், தெளிவற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இரண்டும் கெட்டான் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, அவன் தன்னைத் தானே குறுக்கு விசாரணை செய்ய முற்பட்டான்.
நடு இரவு...
அந்த மூதாட்டி அவனின் இந்தத் தெளிவற்ற பரிதாப நிலைகண்டு அவனை நடுத்தெருவில் கைநெகிழ்ந்துவிடாமல், அவன் பிறப்பு குலம் கோத்திரம் பார்க்காது, வேற்று நாட்டவன் அந்நியன் என்று தெரிந்தும்கூட தன் வீட்டிற்கு உடனடியாகவே வாடகைக் கார் மூலம் அழைத்து வந்தாள். அதில்தான் உலகப் பொதுமொழியான மனிதாபிமானம் சீவகாருண்யம் நிறைந்திருந்தது.
தனி மனிதனுக்குள் அவ்வப்போது தோன்றும் சிறு சிறு பிரச்சினைகள் உடனேயே தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்கப்படாமல் விடப்பட்டால் அவை சிறு தும்புகளாக ஓடிப் பின்னிப்பிணைந்து அடிமன ஆழத்தில் புகுந்து உணர்வுகளிற் கலந்து முறுக்கிடப்பட்ட கயிறாகத் திரிக்கப்பட்ட வடமாகி, அந்த வடமே அவனை விலங்கிட்டு அவனைச் சிந்தனைகளாற் சிறைப்படுத்தி விடுதலையடைய முடியாத சிக்கல்களுக்குள் கொண்டு சென்று பூதாகரமாகி அவனின் தூக்குக் கயிறாக மாறிவிடும்.
யாதவன் நிலையும் இவ்வகைதான். அவன் வெளிநாடு வர வெளிக்கிட்டு வாழ்வில் பல துன்பச் சூறாவளிகளைச் சந்திக்க நேர்ந்ததால் பல சோதனைகள் வேதனைகளுக்குள் அகப்பட்டு புறம்தள்ள முடியாது சிறைவாசம் அனுபவிப்பவன். மனவருத்தம் சொல்லில் அடங்கா, வெற்றி தோல்விகளை சமமாக மதிக்கத் தெரியாது தோல்வியை மறக்க மதுபோதைக்கு அடிமையாகி சமூகப் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டு வாழும் சில பலவீன மனிதர்கள் நிறையவே உண்டு.
இந்த வகையான பெலவீன மனிதனாய் யாதவனும்.
தாயை இழந்த பின்புதான் இடையில் வந்து தன் வாழ்வையே சூனியச் சுடுகாடாக்கிய நதியாவை எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டான். தாயின் புன்முறுவலில் அந்த மூதாட்டி அவனை அன்போடு தன் மொழியில் மகனே என்று விளிக்க அவளே தன் தாய் என எண்ணிப் புலம்புகின்றான்.
தொப்புள் கொடி உறவான என் தாயைப் பலகாலம் மறந்து, நதியா என்ற கிளை நதி வெள்ளத்தில் சிலகாலம் மூச்சுத் திணறினேன். அந்த வெள்ளமே மது என்ற வடிவம் தாங்கி என் வாழ்வை மூழ்கடித்துவிட்டது. அதே வெள்ளம்தான் என் அன்னை உயிரையே உறிஞ்சிக் குடித்துவிட்டது. என் அம்மாவை நான் தொலைத்துவிட்டேன். அம்மா.. அம்மா.. என் உயிரே என்னைவிட்டு எங்கே போனாய்? ஆதவன்... என் அண்ணா... தாயாகத் தந்தையாக எத்தனைமுறை என்னை நாடிவந்து, 'யாதவா, உனக்கு என்ன குறை? நதியா உன் தாகம் தீர்க்கும், நதியா இல்லாவிட்டால் உனக்கு ஒரு பிரியாவைத் தேடித் தர நாம் தயாராக உள்ளோம். குடி குடியையே கெடுக்கும். உன் குடும்பம் என்ன... மதிப்பு மரியாதை என்ன... பிறந்து வளர்ந்த வாழ்வென்ன... புலமைப் பரிசில் பெற்று பல்கலைக்கழகம்வரை படித்து எதிலுமே முதல் மாணவனாய் வந்த உன் கல்வியின் பெறுமதிதான் என்ன... உன் பிறவி நான் சொல்லுகின்றேன். உன் தாய் சகோதரர்களின் மானம் மரியாதைகளை எண்ணி உன்னை மாற்று. உன் அண்ணி பிள்ளைகளுடன் வந்து பேசிப் பழகிச் சந்தோஷமாக உன் பொழுதைக் கழி!' என்று புத்தி போதித்து, பாசத்தால் என்னை வருடிச் சென்றான். அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காகி, 'நதியா இன்றி எனக்கு வாழ்வேயில்லை.... வாழ்வே மாயம் பாடி, நீ எனக்குப் புத்தி சொல்லத தேவையில்லை. நீ உன் வேலையைமட்டும்!' என்று அவனை மதியாது எடுத்தெறிந்தபோது, 'நீயும் இனி குடிபோதையில் என்வீட்டு வாசல் மிதிக்கக் கூடாது. உன்னைத் திருத்தவே முடியாது' என்ற மனவேதனையில் வைராக்கியத்தோடு விட்டுச் சென்றுவிட்டான்.
எம் தாயின் மரணச்செய்தியுடன் அவள் கடைசியாக எனக்கு எழுதிய கடிதத்தையும் ஒன்றாகக் காவிவந்த அண்ணாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அண்ணாவிடம் முகம்கொடுத்துப் பேசிப் பாசத்தை இருவரும் பங்கிட்டு வாய்விட்டு அழுது, எம்மை உருவாக்கிய தாயின் பிரிவின் துன்பச் சுமையைப் பரிமாறிக் கொள்ளமுடியாத பாவப்பட்ட நிலையில் நான்...
யாதவனுக்குள்ளே பல கேள்விக் கணைகள் குற்றின.
அண்ணா என்றுகூட அழைக்க முடியாத மனநிலையில் தம்பி நான்...
ஒரு தாயின் கருவறையில் உருவாகி அத்தாயின் இரத்தத்தையே உறிஞ்சிப் பாலாய் சுவைத்து, ஒரே கூரையின் கீழ் பண்பில், ஒழுக்கத்தில், இரத்த பாசத்தால் பின்னிப்பிணைந்த எமக்குள் எப்படியான மாற்றங்கள். இந்த வெளிநாட்டுக் காலநிலையில், கலாச்சாரப் பண்புகளில், மொழிகளில் வேறுபட்ட மாறுபட்ட வாழ்வானாலும் இங்கே என் அண்ணன் வேறு நான் வேறா?
இன்றுதான் அதை எண்ணிப் பார்க்கும் உத்வேகத்தில்...
அப்பாவின் முகம் தெரியாது வளர்ந்த எமக்கும் எம் குடும்பத்திற்கும் ஒளிவிளக்கான மூத்தவன் ஆதவன். விடியலில் தோன்றியவன். எமக்கெல்லாம் தந்தையாகித் தன் படிப்போடு எம்தாய் தன் வீட்டுக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி தன் தொழிலுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் சென்றுவர வீட்டு வேலைகளில் தன் தாய்க்கு ஒத்தாசையாகி எம்மையெல்லாம் தன் தோள்மேல் சிலுவையாகச் சுமந்து சென்றவன். தன் கடமைகளைச் சரிவர நிறைவேற்றிக்கொள்ளப் பக்குவப்பட்டவன். காலக் கேட்டால் அவன் வெளிநாடு வந்து தன் ஆசாபாசங்களைத் துறந்து தன் இளமைக் காலங்களைத் தொலைத்து வெளிநாட்டுக் குளிரில் விறைத்து ஓடி ஓடி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து சகோதரிகளைக் கரைசேர்த்து நரை தலையில் முகம் காட்டிய பிறகே தன் வாழ்க்கையைப்பற்றிக்கூட எண்ணாது தான் வாழ்வு தேடு முன்பே எனக்காகப் பல இலட்சங்களை அள்ளி இறைத்து என்னை ஜேர்மனிக்கு அழைத்துக் கொண்டவன்.
அதன் பிறகே தாலிகட்டி தனக்கென்றொரு வாழ்வைத் தேடிக் கொண்டவன். அப்படியான அண்ணாவை நான் வெட்டிப்பேசியது தகுமா? ஆதவன் போன்ற அண்ணா யாருக்குக் கிடைக்கும்? இரத்த உறவை மறந்து பள்ளிப் பாதையில் இடையில் நடந்த நதியில் தாகம் தீர்க்க எண்ணிய எனக்கு...
நதியா நதியா...
ஒரே குழப்பம். அவன் மூளை விண்ணென்று வலித்தது. அவன் மனத்திரையில் நதியாவின் உருவம் கரும்பூதமாகி கழிமுகத்து சேற்றில் புதைந்துவிட்டது.
என் வாழ்வை அவளால் தொலைத்தேன். என் குடும்பப் பொறுப்புக்களை மறந்தேன். தலைகொடுப்பான் தம்பி என மலையாக நம்பிய அவனுக்கு நான் கைகொடுத்து கைதூக்கி விடவில்லை.
மகனாகத் தாய்க்குப் பெற்றகடன் தீர்க்கவில்லை. சகோதரனாக அவன் உணர்வுகளை நான் ஒருபோதும் புரியவில்லை. என்னை வாழவைக்க அவன் எடுத்த முயற்சிகள் எல்லாமே பூச்சியம்தான். அண்ணன் என்னை அனுசரித்துப் போனாலும் தாரம் என்று தாலி கட்டி வந்த புதியசொந்தம் என் பிழைகளைப் பொறுக்கவிடுவாளா? அண்ணன் மனைவியரில் சிலர் கணவரின் சகோதரர்களையும் தன் பிள்ளைபோலப் பேணுவர். எல்லோருமே அப்படி இருப்பார்களா? கேள்விக்குறிதான். அண்ணி மாலாவை எப்போதோ வெறுத்துத் தள்ளியவன்... இப்போ 'நான்தானே குற்றவாளி' என்று அவன் மனச்சாட்சி அவனை ஆட்டிப்படைத்தது.
பிறரில் அனுதாபப்படும், அவர்களின் நலன்களில் அக்கறைகொள்ளும், பிறவியிலேயே நல்ல உள்ளம் கொண்டவன்தான் யாதவன். அப்படியான வெள்ளைமனத்தில் கள்ளச் சிந்தையில்லை. அவன் தெளிவுபெறக்கூடிய குழப்பமானநிலையில் தன்னைத்தானே குறுக்கு விசாரணை செய்யும் யாதவனின் நிலை இப்போது.
அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அனா என்ற அந்தத் தாய் அவனைத் தன் மொழியில் கொஞ்சுமொழி பேசி கெஞ்சி தலையை வருடி நித்திரை கொள்ளும்படி ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்தாள்.
அவனால் இமைகளை மூடிக்கொள்ள முடியாது அவை அடம்பிடித்தன.
'எனக்கு அமைதி வேண்டுமானால் நான் குடிக்க மது வேண்டும்..!'
அதை அவனுக்குத் தரமறுத்தாள்.
அவன் சிறகுக்குள் அடைக்கலம் புகும் கோழிக்குஞ்சுபோல ஒடுங்கி, அவள் பேச்சைக் கேட்டுத் தலையாட்டும் பொம்மைபோல் ஆனான்.
அவள் முகமோ பால்போல் வெள்ளை. கண்களோ நீல நிறம். அந்தக் கண்களின் ஒளியில் வைரம் வீசியது.
எந்தப் படிப்பறிவற்ற தாயும் தன் சேய்க்காக தன் அன்பையே சொரிந்து உயிரையே கொடுப்பாள். கண்ணான தன் குஞ்சுகளைக் கண்ணிமைக்காது பாதுகாப்பாள். அவள்தான் அன்னை.
என் தாயின் கண்களில் கருவிழிகள். நெற்றியிலோ திருநீறு பூத்திருக்கும். அதன்மேல் சந்தனப்பொட்டு பளிச்சிடும். கருணை வடிவானாள் என் அம்மா. உலகின் சிறந்த பணியான ஆசிரியத் தொழிலின் கல்வி என்னும் தேரை இழுத்துச் சென்றவள். அப்படிப்பட்ட ஆசிரியத் தாய்க்குப் பிறந்த மகனா நான்? வெட்கப்பட்டான். இப்போ நினைக்கவே இழிவாகவுள்ள தன்னைத்தானே காறித்துப்பி செருப்படி கொடுத்தான். அவளின் பெயருக்கே களங்கம் கற்பித்த கடைமகன் நான்.
எல்லாம் நதியா... நதியா...
ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால். ஆழ்மனக் காதல் கலப்படமற்றது. போலியற்றது. நதியா என்மேல் வைத்த காதலோ ஆழமில்லாதது. காதலென்ற கட்டுக்குள் அடங்காதது. ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டு இருவர் மனமும் இணைந்து எச்சந்தர்ப்பத்திலும் எப்புயல் வரினும் நாணல்போல் அசைந்து வளைந்து நிலைத்து நிற்பதே காதல்.
அன்று அவள் கடைசியாக என்னோடு பேசியபோது பொறுமைகொண்டு பேசிய நான் கோபித்து அவளோடு வாதாடியிருந்தால் என்பக்கம் நியாயம் பிறந்திருக்கும். ஆனால் நானோ போதைக்கு அடிமையானேன். நான் அவளை உள்ளத்தால் நேசித்தேன். கள்ளி என்னை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டாள்.
என் தாய் செய்த தொழிலின் புனிதம் புண்ணியம் இப்போது இப்போது என் தாய் வடிவில் என் அருகே. இந்த வெள்ளை மூதாட்டி அனாவின் அன்பில் இப்போது அவன் கட்டுண்டிருந்தான். அம்மாவைப்போல் என்பதால் அவளது அன்பில் இவன் மறைந்த தன் தாயையே கண்டான். இவனது பரிதாப நிலைகண்டு அவள் கொண்ட பரிவில் தான்பெற்ற மகனைப்போல இவனைப் பத்திரமாக வைத்திய சிகிச்சைக்கு அழைத்துச் சென்றாள். அவனுக்குப் புனர்வாழ்வு கொடுக்க முழுமூச்சானாள்.
அவனது சமூகத்தினரே அவனைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொச்சைப்படுத்தி ஏளனம் செய்தனர். அது அவர்கள் தப்பில்லை. அவர்களும் அந்நியநாட்டில் வாழ்பவர்கள். இவனால் தங்களுக்கும் வெளிநாட்டவர் மத்தியில் மதிப்பு மரியாதை குறைந்து போகும் என்று எண்ணுபவர்கள்.
இங்கு வந்ததும் தங்கள் நடையுடை பாவனைகளை மாற்றியவர்கள் பலர். நாய்வேஷம் போட்டால் குரைக்கத்தானே வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் சிலர். ஆனாலும் தங்கள் கலாச்சார வழக்கத்தில் நகைபோடும் பழக்கத்தை மாற்றாமல் போட்டிபோட்டு எடைகூடிய பவுணை அணிந்து காட்சிப்பொருளாய் திரிபவர்களும் இவர்களுள் அடங்கியேயுள்ளனர்.
'நல்லதோ கெட்டதோ என் சமூகத்தை எண்ணிப்பாராமல் மாது என்ற போதையால் மதுவுக்கு அடிமையான கோழைதானே நான்?!' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான் யாதவன்.
0
அனா இந்த நாட்டில் இளைப்பாற்றுநிதி பெறும் ஒரு முன்னாள் ஆசிரியை. இந்த நாட்டில் ஆசிரியத் தொழில் புரிந்த பலர் தாம் கல்வி புகட்டும் மாணவர்களைத் தம் குழந்தைகளாகப் பேணி அவர்கள் முன்னேற்றமே வாழ்வின் இலட்சியமாக வரித்து அந்த ஆவலினால் தங்களைக் குடும்பம் என்ற வட்டத்துக்குள் முடக்கிவிடாது திருமணம் என்ற விலங்கிட்டுக் கொள்ளாதவர்கள். இவ்வகையோரில் இந்த அனாவும் ஒருத்தியானாள். அதனால் அவள் வயோதிப வயதில் பிள்ளை குட்டியின்றித் தனித்து வாழ்பவள்.
தொலையப்போன யாதவனை மரணப் பிடியிலிருந்து மீட்டு, போதை வேட்கையைப் போக்கச் சிகிச்சைக்கு உட்படுத்தி அவனது அடிமன ஆழத்தின் உண்மைகளை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்து அவனைப் பலர் அறிய சுயமனிதனாக்கினாள்.
அவன் சிகிச்சைக்கு உட்பட்டிருந்த வேளையில் ஆதவனுடன் தொடர்புகொண்டு யாதவனை வந்து சந்திக்கவேண்டி அழைத்தாள் அந்தத் தாய்.
ஆதவன் வந்தபோது பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்த தம்பியைக் கண்டான். எலும்புக்கூடு ஒன்று தோல்போர்த்தியது போலிருந்த தம்பியின் கோலம் அவனைத் திடுக்குற வைத்தது.
'இவனா என் தம்பி யாதவன்?'
அவனால் நம்ப முடியவில்லை. ஆண் அழகனான எடுப்பான தோற்றம், அவனது உறுதியான உடல்வாகு, எங்கே தொலைந்தது அவன் கொள்ளையழகு?
'என்னடா யாதவா? நீயா இது? இங்கே எப்படி?'
தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். ஆதவன் அக்கணமே ஆடிப் போய்விட்டான்.
'நான் ஆற்றவேண்டிய வெளிக்கடமைகள் எவ்வளவோ என் சகோதரனுக்குச் செய்தேன். ஆனால் என் தம்பி பாதை தெரியாது மாறும்போது நான் கண்டித்தேனே ஒழிய, அவனுக்கு வேண்டிய அன்பு அனுசரணைகள் என்ற வழியைக் காட்டத் தவறிவிட்டேன். பல இலட்சங்களை அள்ளிக்கொட்டி கூப்பிட்ட என் தம்பிக்கு இடர் வந்தவேளை பாசத்தைப் பரிமாறிக்கொள்ளவில்லை. இடையில் வந்த மனைவி என்ற பந்தத்தின் சொல்கேட்டு உன்னை நடுவழியில் தவிக்கவிருந்து வாழாதிருந்தேனே...'
- மனங்குமுறிய ஆதவன் தலை தலையென அடித்துக் கொண்டான்.
'நான் பாவி நான் பாவி' எனக் கதறினான்.
அவன் கண்களில் கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாயிற்று.
அண்ணனாகத் தம்பியின் கைகளை இறுக்கிப் பிடித்தான். தம்பியின் கைகளை அவனது கண்ணீர் நனைத்தது.
'இல்லை அண்ணா நான்தான் பாவி. பெற்றதாயைத் தொலைத்தேன். உடன்பிறந்தோர் மானம் மரியாதையைக் கப்பல் ஏற்றினேன். ஊரை, நாட்டை, உலகத்தை ஏன் என்னையே சிலகாலம் எண்ணிப்பார்க்க மறந்தேன். சிலகாலம் காட்டு வாழ்க்கையின் மிருகமாக நடமாடினேன். ஒன்றின் முடிவில்தான் இன்னொன்றின் ஆரம்பமே... எம் குடும்பம் என்ற கோட்டையின் இராணியான என் தாயின் இழப்பின் பின்புதான் என் மனச்சாட்சி என்னை சாட்டையால் அடித்து குறுக்குவிசாரணைக்கு உட்படுத்தியது. உன்னைப்போல் ஒரு சகோதரனின் அருமை பெருமையை உணரவைத்தது. உன்னைப்போல் குடும்ப ஒளிதந்த ஆதவன் சகோதரனாகக் கிடைக்க நாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் அம்மா எனக்கு எழுதிய கடிதத்தில் வைரமாய் சிந்திய வார்த்தைகள் என்னைப் பழைய மகனாக வாழச் சிந்திக்கப் புடம்போட்டது.'
பக்கத்தில் நின்ற வெள்ளை மாதான அனாவைச் சுட்டிக்காட்டி,
'இவதான் என்னைக் காப்பாத்தி எனக்கு மறுவாழ்வு தந்தவ..!' என்று ஆதவனுக்கு மெதுவாக அறிமுகப்படுத்தியவன், 'இப்ப நான் புதுப்பிறவி எடுத்திருக்கிறன் அண்ணா... அண்ணா என்னாலை உனக்கு எவ்வளவோ கஷ்டம்... எத்தினை தரம் உன்னை எடுத்தெறிஞ்சு கதைச்சிருப்பன்... என்னை மன்னிப்பாயா அண்ணா?'
சிறுகுழந்தைபோல் தமையனைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினான் யாதவன்.
'நானும் குற்றவாளிதானே தம்பி...! என்னிலும் பிழையிருக்கு... உன்னைக் கண்டிச்சுத் திருத்திறதை விட்டிட்டு உன்னை வெறுத்தது நான் செய்த பிழைதானே! நீதான் என்னை மன்னிக்க வேணும்!' இருவரும் பாசவலைக்குள் சிக்குண்டு உணர்வுக் கொந்தளிப்பில் ஆழமாகி பின்னிப்பிணைந்தனர்.
ஆனந்தக் கண்ணீரால் நனைக்கப்பட்டனர்.
இந்தப் பாசப்பிணைப்பை மெளனமொழிகளால் உணர்ந்த வேற்றுநாட்டுத் தாயின் கண்களும் அவளையும் அறியாது குளமாகியது.
0
யாதவன் இப்போது அன்பு பாசம் நேசம் நிறைந்த தாயுடன் நல்லபடி வாழ்கின்றான். அவன் மனித வாழ்விற்கு பணம் ஆதாரமானது. அந்தப் பணமும் அவனை நிறைவாக்கியுள்ளது. ஏற்கனவே கல்வியறிவு நிறைந்தவன் மேலும் தன் வளர்ப்புத் தாய்மூலம் வளம்படுத்திக்கொண்டான்.
ஈழத்தமிழர் கல்வியறிவில் சளைத்தவர்கள் அல்லவே.
நம் தமிழ் பழைய கல்விமான்கள் வெள்ளையர் ஆட்சியில் சிங்களவர்களுடன் ஒன்றாகி இருந்தனர். பல உரிமைகள் வாதிட்டுப் பெற்றுக்கொடுத்த தமிழர் கல்விமான்கள் பரம்பரையில் உதித்த யாதவன் காலங்கடந்தாலும் தன்னைக் கல்வியில் வளப்படுத்திக்கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கிடமில்லை.
நம் சமூகத்திற்கு அவன் ஆற்றவேண்டிய பல கடமைகளுக்குள் காலடி எடுத்து வைத்துப் பலகாலம் ஆகிவிட்டது.
அவனுக்கு இருக்க நேரம் இல்லாத கடமைகள் பற்பல.
அன்று அன்னையர் தினம்.
அதிகாலை எழுந்து தன் தாயின் படத்தின் முன்பு பூவைத்து மானசீகமாக வணங்கிவிட்டு, மம்மா அனாவுடன் காலையுணவைப் பரிமாறும்வேளை அவளுக்கும் பூச்செண்டு கொடுத்து நன்றிகொண்டு வாழ்த்திவிட்டு, அண்ணா வீட்டிற்குச் சென்று வருவதாகவும் அவளிடம் கூறி விடைபெற்றான்.
அண்ணா வீட்டிற்குப் போனதுதான் பிள்ளைகள் சித்தப்பாவென்று ஓடி வந்து ஒட்டிக்கொண்டனர்.
கையில் வைத்திருந்த பூங்கொத்தை அண்ணிக்குக் கொடுத்து தன் வாழ்த்தைத் தெரிவித்தான் யாதவன். அண்ணி இப்போது அவனிடம் பாசத்தைப் பொழிந்து வந்தாள்.
யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே.
கடந்த காலங்கள் அவன் வாழ்வின் செல்லரித்த பக்கங்கள்.
அவைகளைப் புரட்டிப்பார்க்க யாருக்கும் நேரம் இல்லை.
யாதவன் அடிக்கடி செல்லும் பூங்காவும் கதிரையும் அப்படியே வெறுமையாக. ஆனால் யாதவனோ குணத்தால் பணத்தால் பதவியால் நிறைவாகி இறக்கைகட்டி உயர்வில் பறந்து கொண்டிருந்தான்.
அவனை ஒதுக்கியவர்கள் அவனை நாடி வரவேண்டிய நிலையில் இப்போ அவன் ஒரு மொழிபெயர்ப்பாளனாக சமூகத்திற்கு உதவி செய்யவும் நிமிர்ந்து நிற்கின்றான். பழையன கழிதலும் புதியன புகுதலுமாக வாழ்வின் சமூக அந்தஸ்தில் குடும்பம் என்ற கோயிலைக் கட்டி எழுப்பி அவனைக் குடியேற்ற அண்ணி நடவடிக்கை எடுக்க, அவன் வாழ்வின் வழித்துணையாக வாழ்வின் துணையாக யாதவனுக்கு ஒரு யசோதை வரும்வேளை அண்மித்திருந்தது.
மத்தியான உணவு முடித்து அண்ணனின் பிள்ளைகளுடன் யாதவன் தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அண்ணா செற்றியில் பகல் தூக்கம்.
அவர்கள் வீட்டுத் தொலைபேசி மணி ஒலிக்கிறது.
அண்ணி மாலா தொலைபேசியில்.
"நான் மாலா... நீங்கள்?''
"நான்..."
மறுமுனையில் -
"ஆதவனின் தம்பி யாதவனுடன் கதைக்க வேண்டும்."
"உங்கள் பெயர்..? நீங்கள் யார்?"
"நான்... நான் நதியா..."
இனி அவர்கள்!?-

இந்துமகேஷ்
எழுதிய
இறுதிப் பகுதி.
'நதியா... எந்த நதியா..? எங்கையிருந்து கதைக்கிறீங்கள்?'
நதியா என்ற பெயர் அண்ணியின் வாயிலிருந்து வெளிப்பட்டதும் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த யாதவன் மெள்ளத்திரும்பி அண்ணியைப் பார்த்தான்.
'ஆரோ நதியாவாம்... யாதவனோடை கதைக்க வேணுமாம்..!' என்றாள் மாலா.
சொல்லிக்கொண்டே யாதவனை அவள் பார்த்த பார்வையில் 'தொடர்பைத் துண்டித்துவிடவா?' என்ற கேள்வி தொனித்தது.
எந்தவிதமான பதட்டமோ பரபரப்போ இன்றி தொலைபேசியினருகே வந்தான் யாதவன். அவனைத் தனியாகத் தொலைபேசியினருகே விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மாலா.
'ஹலோ... யாதவன்...!'
'யாதவன்... நான் நதியா கதைக்கிறன்... இங்கை பிராங்பேர்ட் காம்பிலையிருந்து...'
அவளது குரல் தழுதழுத்து அடைத்துக்கொள்வதை யாதவன் உணர்ந்தான். அழுகிறாள் என்று புரிந்தது.
'யாதவன் உங்களோடை நான் கொங்சம் அவசரமாய்க் கதைக்கவேணும்... பிளீஸ்... ஒருக்கால் இங்கை வரமுடியுமா?'
'விலாசத்தைச் சொல்லுங்கோ..!' என்றான் யாதவன்.
"சரி... நாளைக்கு வந்து சந்திக்கிறன்!" என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான் அவன்.
"ஆர்... தம்பி?" என்று வினவியபடி வந்தாள் மாலா.
"நதியா எண்டாள்... ஒருவேளை உம்மடை பழைய லவ்வரோ?"
"ஆரா இருந்தா என்ன அண்ணி... ஒரு மொல்மேச்சரா என்னைச் சந்திக்க வேணுமாம்... வாறன் எண்டு சொன்னன்...!"
"அப்ப இது அவளில்லை...!" என்று சிரித்தாள் மாலா.
'அவளாக இருக்குமோ?' என்று அவள் மனம் சந்தேகித்தாலும், 'அவளாக இருந்தால் இந்நேரம் யாதவன் முகத்தில் பல்வேறுவிதமான உணர்வுகளும் பரவியிருக்குமே... ஆனால் இவனோ எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறானே... இது அவளாக இருக்காது..!'
ஆனால் மாலாவுக்குத் தெரியாது...
யாதவனின் பழைய காதலி நதியா தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் அகதியாக ஜெர்மனிக்கு வந்து, பிராங்பேர்ட் விமானநிலையத்தில் அகதிமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு நாளை மறுதினமே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படப் போகிறாள் என்பது.
தனது காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான் யாதவன்.
அழுது சிவந்த நதியாவின் முகமே அவன் கண்ணெதிரில் இப்போது வியாபித்து நின்றது.
எது நடக்குமென்று அவன் வாழ்வில் நினைத்திருந்தானோ அது நடக்கவில்லை. எது நடக்காது என்று அவன் நினைத்திருந்தானோ அது நடக்கிறது.
என்னதான் மனதை இறுக்கமாக வைத்திருக்க முயன்றபோதும் நதியாவின் கண்ணீரில் அவனது கோபம், வைராக்கியம் எல்லாம் கரைந்து போயிற்று. அவள் மீதான பரிதாப உணர்வே மேலோங்கி நின்றது.
இந்நேரம் அவளை விமானத்தில் ஏற்றி தாயகத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.
எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் அவளை ஜேர்மனியில் தங்கவைப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டாமலே போயிற்று...
"சொந்தநாட்டிலை நான் பட்டுவந்த துயரங்கள், அவமானங்கள், ஆபத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துச் சொன்னன். வெட்கத்தைவிட்டு என்ரை பெண்மைக்கு ஏற்பட்ட களங்கத்தையும் சொன்னன். ஆனால் எதுகுமே இவங்களின்ர காதிலை விழேல்லை. திருப்பி அனுப்பிறதுதான் எண்டு பிடிவாதமாய் இருக்கிறாங்கள்... என்னோட இன்னும் இருபது பேர்..!" என்று கலங்கினாள் நதியா.
"அகதியாக வாறவையை எந்த நேரம் அங்கீகரிப்பாங்கள், எந்தநேரம் திருப்பி அனுப்புவாங்கள் எண்டு சொல்லமுடியாது. அவங்கட சட்டத்துக்கும் கட்டளைக்கும் கட்டுப்படுகிறதைவிட நாங்களும் ஏதும் செய்ய முடிகிறதில்லை...!" என்றான் யாதவன்.
ஆனாலும் அவனும் தனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் தீவிரமாக முயற்சித்துப் பார்த்தான். பலன்தான் பூஜ்யம்.
"எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்...!" என்றாள் நதியா உடைந்த குரலில்.
"ஒரு நல்ல மனசை எந்தளவுக்குப் புண்ணாக்கினேனோ, ஒரு நல்லவரின்ரை வாழ்க்கை எப்படியெல்லாம் கேவலப்பட்டுப்போக நான் காரணமாக இருந்தேனோ அதுக்கெல்லாம் இது ஒரு சரியான தண்டனை, தேவையான தண்டனைதான்... ஆனா யாதவ்... உங்களை நான் காதலிச்சது உண்மை. உங்களோடையே வாழவேணும் எண்டு ஆசைப்பட்டதும் உண்மை... ஆனா நீங்கள் வெளிநாட்டுக்கெண்டு வந்து கனகாலம் உங்களைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. உங்களைப்பற்றிப் பிழையான கதையள்தான் ஊருக்குள்ளை அடிபடத் தொடங்கிச்சுது... வசதியும் வாய்ப்பும் வந்த உடனை நீங்களும் மாறிட்டீங்கள் எண்டு கதைச்சினம்... முதலிலை நான் இதுகளை நம்பேல்லை... ஆனா என்ரை அண்ணை வினோதன் உங்களைப்பற்றித் தான் அறிஞ்சதுகள் எண்டு நிறையக் கதையளைச் சொன்னார். இனியும் நீ அவனை நினைச்சுக் கொண்டிருந்தியெண்டால் நான் பொல்லாதவனா மாறவேண்டி வரும் எண்டு கோபப்பட்டார். இனி நீ யாதவனை மறந்திடவேணும், இல்லாட்டில் என்னை நீ உயிரோடை பாக்கமாட்டாய் எண்டு என்ரை அம்மாவும் புலம்பத் தொடங்கிட்டா... எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை... அண்ணாவின்ர சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போறதைத் தவிர எனக்கு அப்ப வேறை வழி தெரியேல்லை... நீங்கள் கடைசியாய் எனக்கு டெலிபோன் எடுத்துக் கதைச்சபோதுகூட என்ரை அம்மா அண்ணா எல்லாரும் எனக்குப் பக்கத்திலைதான் நிண்டினம்... இண்டைக்கு நீ பேசிற பேச்சோடை இனி அவன் இங்கை டெலிபோன் எடுக்கக்கூடாது எண்டு மிரட்டிச்சினம். அதாலைதான் நான் வையடா டெலிபோனை எண்டு...!"
நதியா விம்மினாள்..
சில கணங்களுக்குப் பிறகு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தொடர்ந்தாள்...
"அண்ணையின்ரை, அம்மாவின்ரை விருப்பப்படியே எனக்கு ஒரு கல்யாணம் நடந்தது... அவரும் நல்லவராய்த்தான் இருந்தார்... இந்தப் பிள்ளை பிறந்து ஒரு வருசத்திலை அவரும் ஒரு விபத்திலை போயிற்றார்... கைக்குழந்தையோட நான் கலங்கிப்போனன்... தற்கொலை செய்யலாமா எண்டுகூடச் சில நேரம் நினைச்சன்... ஆனா நான் பெத்த இந்தப் பிள்ளைக்காக வாழவேணும் எண்டு முடிவெடுத்தன்... இடையிலை ஒருநாள் இராணுவம் எங்கடை வீட்டுக்குள்ளை புகுந்துது... என்ர அண்ணனையும் அம்மாவையும் சுட்டுப் போட்டு... என்னையும்....???"
அதற்குமேல் எதுவும் பேசமுடியாது அவள் மெளனித்தாள்.. தொண்டையைத் துயரம் அடைத்துக்கொண்டது... தன்னருகில் நின்ற மகளை இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு அவளது உச்சிமீது தன் உதடுகளைப் புதைத்தாள். அவளது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் குழந்தையின் கரங்களில் வீழ்ந்தது.
குழந்தை தன் பிஞ்சுக்கரங்களால் அதை மாறிமாறித் துடைத்துக்கொண்டே தாயைப் பார்த்தாள்.
"ஏனம்மா அழுகிறீங்கள்?" என்றாள். "இந்த மாமா உங்களைப் பேசிப் போட்டாரா?" என்றாள் யாதவனைப் பார்த்தபடி.
யாதவன் மெதுவாகக் குழந்தையைத் தன்பக்கம் இழுத்தான்.
"உன்ரை அம்மாவை ஒருத்தரும் பேசமாட்டினம்... அம்மாதான் எல்லாரையும் பேசுவா...!" என்று குழந்தையிடம் அவன் மெதுவாகச் சொல்லிக்கொண்டே நதியாவைப் பார்த்தான்.
அந்த வேதனைக்கிடையிலும் நதியாவின் உதடுகளில் ஒரு முறுவல் படர்ந்தது.
"இனித் திரும்பி ஊருக்குப்போய் என்ன செய்கிறது எண்டுதான் தெரியேல்லை!" என்றாள் நதியா.
"காலம் எப்பவும் ஒரே மாதிரியிருக்காது.. இரவுக்குப் பிறகு பகல்மாதிரி எப்பவும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.. எவ்வளவு காலத்துக்குத்தான் சண்டையும் சச்சரவும்.. கெதியிலை காலம் மாறும்.. திசைதெரியாமல் அலைகிற உறவுகள் ஒண்டாய்ச் சேருகிற காலம் நிச்சயமாய்த் திரும்பிவரும்.. சண்டை நடக்கிற பூமி சமாதானம் உள்ள பூமியாய் மாறுகிறபோது எல்லார் வாழ்க்கையும் அமைதி நிலைக்குத் திரும்பும்.. நீ கவலைப்படாமல் திரும்பிப் போ.. உன்ர எதிர்காலத்துக்கான வழி வகைகளை நான் செய்கிறன்.. உன்ர மகளை வளர்த்துப் படிக்க வைச்சு அவளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை தேடிக்குடுக்கிற பொறுப்பு என்னுடையது.. தைரியமாய்த் திரும்பிப் போ..!"
நதியாவுக்குத் தைரியம் சொல்லிவிட்டு குழந்தையையும் தன் இருகைகளாலும் வாரியணைத்து அதனது பிஞ்சுக் கன்னங்களில் யாதவன் முத்தமிட்டபோது அவனது கண்களும் கண்ணீரால் நிறைந்தது.
"மாமாவும் அழுகிறேர்..!" என்றாள் மழலை.
0
வீதியில் காரை நிறுத்திவிட்டு யாதவன் வீட்டினுள் நுழைந்தபோது தொலைபேசி சிணுங்கிக்கொண்டிருந்தது.
எடுத்தான்.
"ஹலோ.. யாதவன்..!"
"ஹலோ.. யாதவன்.. நான் அண்ணி கதைக்கிறன்..!"
"சொல்லுங்க அண்ணி..!"
"உமக்குப் பார்த்த பொம்பிளையின்ர தாய்தகப்பனும் பொம்பிளையும் கொழும்பிலை வந்து நிற்கினம்... உம்மோடை கொஞ்சம் கதைக்க வேணுமாம்..!"
"அண்ணி.. ப்ளீஸ்.. குறைநினைக்காதேங்கோ... இப்ப எனக்குக் கலியாணத்திலை விருப்பமில்லை எண்டு சொல்லிவிடுங்கோ..!"
"என்ன... யாதவன்..?"
"அண்ணி எனக்குக் கலியாணமே வேணாம்... இப்ப மட்டுமில்லை.. எப்பவுமே..!"
தொலைபேசியை வைத்தான்.
தாய்மண்ணில் பெற்றோரை இழந்து பரிதவித்துநிற்கும் பல குழந்தைகள் அவனது மனக்கண்ணெதிரில் நின்றார்கள்.. 'இனி என்வாழ்வும் உழைப்பும் ஆதரவிழந்த உங்களுக்காகவே..!' என்று தன்னுள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான். அவனது மேசைமீது, தொலைபேசியினருகே இருந்த புகைப்படத்திலிருந்து அம்மா யாதவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.
-முற்றும்.
(ஓவியங்கள் - ஓவியர் மூனா)
(பிரசுரம்: பூவரசு - 12வது ஆண்டுநிறைவு மலர் - தை 2003)
எழுதிய
இறுதிப் பகுதி.
'நதியா... எந்த நதியா..? எங்கையிருந்து கதைக்கிறீங்கள்?'
நதியா என்ற பெயர் அண்ணியின் வாயிலிருந்து வெளிப்பட்டதும் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த யாதவன் மெள்ளத்திரும்பி அண்ணியைப் பார்த்தான்.
'ஆரோ நதியாவாம்... யாதவனோடை கதைக்க வேணுமாம்..!' என்றாள் மாலா.
சொல்லிக்கொண்டே யாதவனை அவள் பார்த்த பார்வையில் 'தொடர்பைத் துண்டித்துவிடவா?' என்ற கேள்வி தொனித்தது.
எந்தவிதமான பதட்டமோ பரபரப்போ இன்றி தொலைபேசியினருகே வந்தான் யாதவன். அவனைத் தனியாகத் தொலைபேசியினருகே விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மாலா.
'ஹலோ... யாதவன்...!'
'யாதவன்... நான் நதியா கதைக்கிறன்... இங்கை பிராங்பேர்ட் காம்பிலையிருந்து...'
அவளது குரல் தழுதழுத்து அடைத்துக்கொள்வதை யாதவன் உணர்ந்தான். அழுகிறாள் என்று புரிந்தது.
'யாதவன் உங்களோடை நான் கொங்சம் அவசரமாய்க் கதைக்கவேணும்... பிளீஸ்... ஒருக்கால் இங்கை வரமுடியுமா?'
'விலாசத்தைச் சொல்லுங்கோ..!' என்றான் யாதவன்.
"சரி... நாளைக்கு வந்து சந்திக்கிறன்!" என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான் அவன்.
"ஆர்... தம்பி?" என்று வினவியபடி வந்தாள் மாலா.
"நதியா எண்டாள்... ஒருவேளை உம்மடை பழைய லவ்வரோ?"
"ஆரா இருந்தா என்ன அண்ணி... ஒரு மொல்மேச்சரா என்னைச் சந்திக்க வேணுமாம்... வாறன் எண்டு சொன்னன்...!"
"அப்ப இது அவளில்லை...!" என்று சிரித்தாள் மாலா.
'அவளாக இருக்குமோ?' என்று அவள் மனம் சந்தேகித்தாலும், 'அவளாக இருந்தால் இந்நேரம் யாதவன் முகத்தில் பல்வேறுவிதமான உணர்வுகளும் பரவியிருக்குமே... ஆனால் இவனோ எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறானே... இது அவளாக இருக்காது..!'
ஆனால் மாலாவுக்குத் தெரியாது...
யாதவனின் பழைய காதலி நதியா தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் அகதியாக ஜெர்மனிக்கு வந்து, பிராங்பேர்ட் விமானநிலையத்தில் அகதிமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு நாளை மறுதினமே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படப் போகிறாள் என்பது.
தனது காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான் யாதவன்.
அழுது சிவந்த நதியாவின் முகமே அவன் கண்ணெதிரில் இப்போது வியாபித்து நின்றது.
எது நடக்குமென்று அவன் வாழ்வில் நினைத்திருந்தானோ அது நடக்கவில்லை. எது நடக்காது என்று அவன் நினைத்திருந்தானோ அது நடக்கிறது.
என்னதான் மனதை இறுக்கமாக வைத்திருக்க முயன்றபோதும் நதியாவின் கண்ணீரில் அவனது கோபம், வைராக்கியம் எல்லாம் கரைந்து போயிற்று. அவள் மீதான பரிதாப உணர்வே மேலோங்கி நின்றது.
இந்நேரம் அவளை விமானத்தில் ஏற்றி தாயகத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.
எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் அவளை ஜேர்மனியில் தங்கவைப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டாமலே போயிற்று...
"சொந்தநாட்டிலை நான் பட்டுவந்த துயரங்கள், அவமானங்கள், ஆபத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துச் சொன்னன். வெட்கத்தைவிட்டு என்ரை பெண்மைக்கு ஏற்பட்ட களங்கத்தையும் சொன்னன். ஆனால் எதுகுமே இவங்களின்ர காதிலை விழேல்லை. திருப்பி அனுப்பிறதுதான் எண்டு பிடிவாதமாய் இருக்கிறாங்கள்... என்னோட இன்னும் இருபது பேர்..!" என்று கலங்கினாள் நதியா.
"அகதியாக வாறவையை எந்த நேரம் அங்கீகரிப்பாங்கள், எந்தநேரம் திருப்பி அனுப்புவாங்கள் எண்டு சொல்லமுடியாது. அவங்கட சட்டத்துக்கும் கட்டளைக்கும் கட்டுப்படுகிறதைவிட நாங்களும் ஏதும் செய்ய முடிகிறதில்லை...!" என்றான் யாதவன்.
ஆனாலும் அவனும் தனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் தீவிரமாக முயற்சித்துப் பார்த்தான். பலன்தான் பூஜ்யம்.
"எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்...!" என்றாள் நதியா உடைந்த குரலில்.
"ஒரு நல்ல மனசை எந்தளவுக்குப் புண்ணாக்கினேனோ, ஒரு நல்லவரின்ரை வாழ்க்கை எப்படியெல்லாம் கேவலப்பட்டுப்போக நான் காரணமாக இருந்தேனோ அதுக்கெல்லாம் இது ஒரு சரியான தண்டனை, தேவையான தண்டனைதான்... ஆனா யாதவ்... உங்களை நான் காதலிச்சது உண்மை. உங்களோடையே வாழவேணும் எண்டு ஆசைப்பட்டதும் உண்மை... ஆனா நீங்கள் வெளிநாட்டுக்கெண்டு வந்து கனகாலம் உங்களைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. உங்களைப்பற்றிப் பிழையான கதையள்தான் ஊருக்குள்ளை அடிபடத் தொடங்கிச்சுது... வசதியும் வாய்ப்பும் வந்த உடனை நீங்களும் மாறிட்டீங்கள் எண்டு கதைச்சினம்... முதலிலை நான் இதுகளை நம்பேல்லை... ஆனா என்ரை அண்ணை வினோதன் உங்களைப்பற்றித் தான் அறிஞ்சதுகள் எண்டு நிறையக் கதையளைச் சொன்னார். இனியும் நீ அவனை நினைச்சுக் கொண்டிருந்தியெண்டால் நான் பொல்லாதவனா மாறவேண்டி வரும் எண்டு கோபப்பட்டார். இனி நீ யாதவனை மறந்திடவேணும், இல்லாட்டில் என்னை நீ உயிரோடை பாக்கமாட்டாய் எண்டு என்ரை அம்மாவும் புலம்பத் தொடங்கிட்டா... எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை... அண்ணாவின்ர சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போறதைத் தவிர எனக்கு அப்ப வேறை வழி தெரியேல்லை... நீங்கள் கடைசியாய் எனக்கு டெலிபோன் எடுத்துக் கதைச்சபோதுகூட என்ரை அம்மா அண்ணா எல்லாரும் எனக்குப் பக்கத்திலைதான் நிண்டினம்... இண்டைக்கு நீ பேசிற பேச்சோடை இனி அவன் இங்கை டெலிபோன் எடுக்கக்கூடாது எண்டு மிரட்டிச்சினம். அதாலைதான் நான் வையடா டெலிபோனை எண்டு...!"
நதியா விம்மினாள்..
சில கணங்களுக்குப் பிறகு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தொடர்ந்தாள்...
"அண்ணையின்ரை, அம்மாவின்ரை விருப்பப்படியே எனக்கு ஒரு கல்யாணம் நடந்தது... அவரும் நல்லவராய்த்தான் இருந்தார்... இந்தப் பிள்ளை பிறந்து ஒரு வருசத்திலை அவரும் ஒரு விபத்திலை போயிற்றார்... கைக்குழந்தையோட நான் கலங்கிப்போனன்... தற்கொலை செய்யலாமா எண்டுகூடச் சில நேரம் நினைச்சன்... ஆனா நான் பெத்த இந்தப் பிள்ளைக்காக வாழவேணும் எண்டு முடிவெடுத்தன்... இடையிலை ஒருநாள் இராணுவம் எங்கடை வீட்டுக்குள்ளை புகுந்துது... என்ர அண்ணனையும் அம்மாவையும் சுட்டுப் போட்டு... என்னையும்....???"
அதற்குமேல் எதுவும் பேசமுடியாது அவள் மெளனித்தாள்.. தொண்டையைத் துயரம் அடைத்துக்கொண்டது... தன்னருகில் நின்ற மகளை இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு அவளது உச்சிமீது தன் உதடுகளைப் புதைத்தாள். அவளது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் குழந்தையின் கரங்களில் வீழ்ந்தது.
குழந்தை தன் பிஞ்சுக்கரங்களால் அதை மாறிமாறித் துடைத்துக்கொண்டே தாயைப் பார்த்தாள்.
"ஏனம்மா அழுகிறீங்கள்?" என்றாள். "இந்த மாமா உங்களைப் பேசிப் போட்டாரா?" என்றாள் யாதவனைப் பார்த்தபடி.
யாதவன் மெதுவாகக் குழந்தையைத் தன்பக்கம் இழுத்தான்.
"உன்ரை அம்மாவை ஒருத்தரும் பேசமாட்டினம்... அம்மாதான் எல்லாரையும் பேசுவா...!" என்று குழந்தையிடம் அவன் மெதுவாகச் சொல்லிக்கொண்டே நதியாவைப் பார்த்தான்.
அந்த வேதனைக்கிடையிலும் நதியாவின் உதடுகளில் ஒரு முறுவல் படர்ந்தது.
"இனித் திரும்பி ஊருக்குப்போய் என்ன செய்கிறது எண்டுதான் தெரியேல்லை!" என்றாள் நதியா.
"காலம் எப்பவும் ஒரே மாதிரியிருக்காது.. இரவுக்குப் பிறகு பகல்மாதிரி எப்பவும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.. எவ்வளவு காலத்துக்குத்தான் சண்டையும் சச்சரவும்.. கெதியிலை காலம் மாறும்.. திசைதெரியாமல் அலைகிற உறவுகள் ஒண்டாய்ச் சேருகிற காலம் நிச்சயமாய்த் திரும்பிவரும்.. சண்டை நடக்கிற பூமி சமாதானம் உள்ள பூமியாய் மாறுகிறபோது எல்லார் வாழ்க்கையும் அமைதி நிலைக்குத் திரும்பும்.. நீ கவலைப்படாமல் திரும்பிப் போ.. உன்ர எதிர்காலத்துக்கான வழி வகைகளை நான் செய்கிறன்.. உன்ர மகளை வளர்த்துப் படிக்க வைச்சு அவளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை தேடிக்குடுக்கிற பொறுப்பு என்னுடையது.. தைரியமாய்த் திரும்பிப் போ..!"
நதியாவுக்குத் தைரியம் சொல்லிவிட்டு குழந்தையையும் தன் இருகைகளாலும் வாரியணைத்து அதனது பிஞ்சுக் கன்னங்களில் யாதவன் முத்தமிட்டபோது அவனது கண்களும் கண்ணீரால் நிறைந்தது.
"மாமாவும் அழுகிறேர்..!" என்றாள் மழலை.
0
வீதியில் காரை நிறுத்திவிட்டு யாதவன் வீட்டினுள் நுழைந்தபோது தொலைபேசி சிணுங்கிக்கொண்டிருந்தது.
எடுத்தான்.
"ஹலோ.. யாதவன்..!"
"ஹலோ.. யாதவன்.. நான் அண்ணி கதைக்கிறன்..!"
"சொல்லுங்க அண்ணி..!"
"உமக்குப் பார்த்த பொம்பிளையின்ர தாய்தகப்பனும் பொம்பிளையும் கொழும்பிலை வந்து நிற்கினம்... உம்மோடை கொஞ்சம் கதைக்க வேணுமாம்..!"
"அண்ணி.. ப்ளீஸ்.. குறைநினைக்காதேங்கோ... இப்ப எனக்குக் கலியாணத்திலை விருப்பமில்லை எண்டு சொல்லிவிடுங்கோ..!"
"என்ன... யாதவன்..?"
"அண்ணி எனக்குக் கலியாணமே வேணாம்... இப்ப மட்டுமில்லை.. எப்பவுமே..!"
தொலைபேசியை வைத்தான்.
தாய்மண்ணில் பெற்றோரை இழந்து பரிதவித்துநிற்கும் பல குழந்தைகள் அவனது மனக்கண்ணெதிரில் நின்றார்கள்.. 'இனி என்வாழ்வும் உழைப்பும் ஆதரவிழந்த உங்களுக்காகவே..!' என்று தன்னுள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான். அவனது மேசைமீது, தொலைபேசியினருகே இருந்த புகைப்படத்திலிருந்து அம்மா யாதவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.
-முற்றும்.
(ஓவியங்கள் - ஓவியர் மூனா)
(பிரசுரம்: பூவரசு - 12வது ஆண்டுநிறைவு மலர் - தை 2003)
Keine Kommentare:
Kommentar veröffentlichen