Samstag, 8. Juli 2017

ஓர் இரசிகனின் வாழ்த்து!

 


வெற்றிமணி ஆசிரியரான கலாநிதி மு.க.சு. சிவகுமாரன் என்னும்-
என் அன்புக்குரிய கண்ணா சில வருடங்களுக்கு முன்பு தனது
மணிவிழாவைக் கொண்டாடினார். அதற்கென ஒரு மலரையும் நண்பர்கள் தாயகத்தில் தயாரித்தார்கள்.
வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியிருந்தேன்.
தாமதமாகிவிட்டதால் மலர் தயாரிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். மலரில் வராவிட்டால் என்ன என் இதயத்தின் வாழ்த்து அவரைச் சென்றடைந்தால்போதும் என்று நினைத்துக்கொண்டேன்.
இன்று அவரை வாழ்த்த விழைந்தபோது அன்று எழுதிய கட்டுரை
நினைவுக்கு வந்தது.
தேடி எடுத்து இங்கு பதிவிடுகிறேன். வாழ்த்துவோம்!



ஓர் இரசிகனின் வாழ்த்து!


அழகியல் கலைஞர் கண்ணாவுக்கு
அகவை அறுபது!

- இந்துமகேஷ்



„எப்போதும் மகிழ்வோடிருப்பவர்கள் யார்?“
„வாழ்க்கையை இரசிக்கத் தெரிந்தவர்கள்!“

„எப்போதும் இளமையாக இருப்பவர்கள் யார்?“
„தன்னை இரசிக்கத் தெரிந்தவர்கள்!“

„எப்போதும் அழகாக இருப்பவர்கள் யார்?“
„உலகத்தை இரசிக்கத் தெரிந்தவர்கள்!“

-இரசனை உணர்வு என்பது மனிதனோடு கூடவே பிறந்தது.
அந்த உணர்வு மிகைப்பட்டதால்தான் இந்த உலகை அழகுபடுத்தியிருக்கிறார்கள் வாழ்க்கையைச் சுவையுடையதாக்கியிருக்கிறார்கள்.

„ ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்
  ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய
  உருப்பளிங்குபோல்வாள் என் உள்ளத்தினுள்ளே
  இருப்பள் இஙகு வாராதிடர்! என்று நாமகளையும் உருவகப்படுத்தித் தன்னுள் வைத்துக்கொண்டான் மனிதன்.

ஆயகலைகள் அனைத்தும் இரசனை உணர்வின் வெளிப்பாடுகளே!
அவரவர் மனோநிலைக்கேற்ப- வாழும் சூழலுக்கேற்ப இரசனை உணர்வுகளில் வேறுபாடு தெரியலாம். ஆனால் இரசனை உணர்வு இல்லாதவுh என்று எவரும் இல்லை என்பதே யதார்த்தமானது.

000

„கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்!“ என்று ஒரு மொழியின் பெருமை வியந்துரைக்கப்படும்போது கேலியாக விழித்துப்பார்க்கிறார்கள சிலர்.

உலகின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கும் கல்வெட்டுக்களைத்; தோண்டியெடுத்து காட்சிக்கு வைக்கும்போது- Üஇங்கே தமிழ் வாழ்ந்ததாம்! என்று இந்தக் கல்வெட்டுச் சொல்கிறது!“ என்று நிரூபிக்கப்படும்போது மூத்த மொழியின் சொந்தக்காரர்கள் நாம் என்று பெருமைகொள்ள முடிகிறதே!
„இது என் நாடு அது உன் நாடு!“ என்று மனிதன் தனக்குள் பிரிவுபடும்போதுதான் அது மண்ணாகிப் போனது. „இது எனது தாய்மண் அது உனது தாய்மண்!“ என்று உலகம் பிளவுபட்டுப்போனது.

இப்போது முன்மொழிந்த வார்த்தைகளுக்குத் திரும்புவோம்.
„கல் (கல்வெட்டு)தோன்றி மண் (பிரிவுபட்ட நிலம்) தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்!“.

இத்தனை சிறப்ப வாய்ந்த நமது மொழிக்கு பதல்வர்களாகப் பிறந்த நாம் நன்றிக்கடனாக அதற்கு ஏதாவது செய்தாகவேண்டாமா?
இந்த எண்ணத்தின் வெளிப்பாடுகளே கலைகளாகப் பரிணமித்தன. பரிணமிக்கின்றன. பரிணமிக்கும்.

000

„ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
 ஆதியனைய கலைகளில்
ஈடுபட்டென்றும திளைப்பவர் பிறர்
ஈன நிலை கண்டு துள்ளுவார்-  அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில
நாளினில் எய்தப் பெறுகுவார்.
என்பான் பாரதி.

கலைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும ஈடுபாடு காட்டுபவர்கள் தத்தம் தனித்திறமைகளைக்கொண்டு தாம்சார்ந்த துறைகளில் சாதனை படைக்கிறார்கள்.
அவர்களிலும் ஒருசிலர்மட்டுமே பலவகையான கலைத்துறைகளிலும் ஆர்வம் கொண்டு பல்கலை வித்தகர்களாகப் பவனி வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்.

000
மூன்றாண்டுகளுக்கு முன்பு (2009) ஒருநாளின் அதிகாலைப் பொழுதில் நிலைக்கண்ணாடியின் முன் நான் நின்றபோது என் எதிரே ஒரு முதியவர் நின்றார்.
„பார்த்த ஞாபகம் இல்லையோ?“ என்றார்.
„எங்கேயோ பார்த்தமுகம்!“ என்றேன்.
„நீதானே நான்!“ என்றார்
„விளங்கவில்லை!“ என்றேன்
„உன்னை உன் அன்னை இந்த மண்ணில் இறக்கிவைத்து இன்றோடு ஆண்டுகள் அறுபது ஆயிற்று. அன்றுமுதல் உன்னோடுதான் நானும் இருக்கிறேன்!“ என்றார்.
„எனக்குத் தெரியாமல் எனக்குள்ளாகவா? அதைத் தெரிந்துகொள்வதற்குள் காலம் இத்தனை வேகமாகப் போய் மறைந்துவிட்டதா?“ என்றேன்.
„காலம் மட்டுமல்ல நீயும்தான் ! உனக்குள்ளேயே நீ மறைந்துபோனாய்!” என்றார்
„எங்கே மறைந்தேன்?“ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தேன்.
„என்ன தாத்தா என்ன தேடுறீங்கள்?“
-கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள் என்பேத்தி.
„என்னைக் காணோம்!“ என்றேன்.
அவள் சிரித்தாள்.
“என்ன தாத்தா! நீங்கள்தானே நீங்கள்?” என்றாள்.
“நான் நான்தான் ஆனால் நான் அவனில்லை!” என்றேன் நிலைக் கண்ணாடியில் தெரிந்த முதியவரைக்காட்டி.
“ஐயோ தாத்தா அதுதானே நீங்கள்!” என்றாள் பேத்தி
“இல்லை நான் அவனில்லை!” என்றேன்.
அவள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“எனக்கு ஒண்டும் விளங்கேல்லை!” என்று சலிப்புடன் சொல்லிப் போனாள் அவள்.

தொலைபேசி கிணுகிணுத்தது.
எதிர்முனையில் என் பிரியத்துக்குரிய கண்ணா!
“தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்!” என்றார்.
“நீங்களெல்லாம் இளைஞர்களாகவே இருங்க. நான்மட்டும் கிழவனாகிறேன்!” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். “எனக்கொரு காலம் வராமலா போகும்?”
அந்தக் காலம் வந்துவிட்டது. அதற்குள்ளாகவே !
“கண்ணாத் தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!”
“மனத்தாலும் உடலாலும் என்றும் இளைஞனாய் நூறாண்டு கடந்து வாழ
இறையருள் வேண்டுகிறேன்!“

(அது சரி அகவை அறுபது என்பது முதுமை என்று எவர் சொன்னது - கண்ணா இத்தனை இளையவராக இருக்கும்போது!“)

000

சில ஆண்டுகளுககு முன்பு வெற்றிமணியின் வெளியீடாக வந்த மாதவியின் மணிக்கதைகள் தொகுப்பிற்காக நான் எழுதியிருந்த முன்னுரை இது:

மலர்கின்ற மலர்களுக்கெல்லாம் அறிமுகம் தேவையில்லை.
அவை தத்தம் இயல்புகளோடு இணங்கிப் போகிறவர்களிடம் நிலைகொண்டு விடுகின்றன. மல்லிகை என்றதும் அதன்மணம் நம் மனங்களை ஆளுகை செய்வதில்லையா அதுபோல்தான்.
இந்த மணிக்கதைகளின் மாதவிக்கும் அறிமுகம் தேவையில்லை. பலவருடங்களாக பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் வெற்றிமணியின் ஒரு பக்கத்தில்  நின்று சிறுமணியாய் ஒலிக்கும் மாதவியின் மணிக்கதைகள் பெரிய பெரிய கதைகள் சொல்லாத பெரிய பெரிய விடயங்களை சின்னச் சின்:ன வார்த்தைகளில் ஒலிக்கவிடுவதை வாசகரால் உணரமுடியும்.

„யார் இந்த மாதவி?“ என்ற கேள்வி முதன்முறையாக என்னுள் எழுந்தபோதே அவரை என்னால் அடையாளம் காணமுடிந்தது. பல்கலைவாணரான ஒரு முழுமை பெற்ற கலைஞனாக அவர் இருக்கவேண்டும் என்ற என் தீர்மானம் பொய்க்கவில்லை.
ஓர் ஓவியர் சிறந்த எழுத்தாளராகவும் இருப்பதில் அதிசயப்பட ஏதுமில்லை என்றானபோது ஓர் ஓவியக் கலைவேள் மாதவி என்ற புனைபெயருக்குள் மறைந்துநின்று கதை படைப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

சிவகுமாரன் என்றால் அவருக்கு ஆறுமுகங்கள் இருந்தாகவேண்டும் இல்லையா?
பட்டதாரி, ஓவியர், எழுத்தாளர், பத்திரிகாசிரியர், பாடலாசிரியர், சிற்பி .. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
கலை இலக்கியத்துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் அவர் சிறந்து நிற்கிறார் ஒரு முழுமை பெற்ற கலைஞனாக அவர் வாழ்கிறார்
அவரது கலைப் படைப்புக்கள் காலகாலத்துக்கும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதால் இதுபோன்ற தொகுப்புக்களும் அவசியமானவை.
பெயரில் சிவகுமாரன், ஓவியத்தில் கண்ணா, மணிக்கதைகளில் ஏன் மாதவி? ஒருவேளை மாதவம் செய்துதான் கதைகளைப் பிரசவிக்கிறோம் என்பதானாலோ?
சொல்லவேண்டியதைச் சொல்லவேண்டிய நேரங்களில் சொல்லித்தான் ஆகவேண்டும். மாதவியின் மணிக்கதைகள் அதைச் செய்கின்றன.

000

அப்போது நான் சொல்லாதது:

கலாநிதி மு.க.சு.சிவகுமாரனின் பன்முகங்களில் எனக்கு மிகப்பிடித்த முகம்-
ஓவியர் கண்ணா!

இருபதாண்டுகளுக்கு முன்பு எனது நெடுங்கதை ஒன்றுக்கு கண்ணா வரைந்திருந்த சித்திரம் எனக்கு கண்ணாவை அறிமுகப்படுத்தி வைத்தது. அன்றிலிருந்தே அவரது ஓவியங்களுக்கு நான் இரசிகனாக மாறியிருந்தேன்.

இயற்கையை இயற்கையாக வரைதல் என்பது புகைப்படத்தினூடு ஒரு காட்சியை படம்பிடித்தல் போன்றது. ஆனால் காட்சிகளினோடு மன உணர்வுகளையும் கலந்து சித்திரங்களில் தருவதென்பது ஓர் சிறந்த ஓவியனாலேயே சாத்தியமானது.
மேலோட்டாகப் பார்க்கும்போது வெறும் கோடுகள்போலத் தோற்றமளிக்கும் ஓவியங்கள் சற்று ஆழமாகப் பார்க்கும்போது வாழ்க்கைக் கோலங்களைப் படம்பிடித்துக் காட்டும் பாங்கினை கண்ணாவின் ஓவியங்களில் நாம் காணமுடியும்.
உலகெங்கும் ஓவியக்கலைஞர்கள் பலர் இருந்தாலும் தத்தமது தனித்துவத்தின் மூலம் சிறப்புப் பெறுபவர்கள் ஒருசிலரே.
அவர்களுள் ஒருவராக கண்ணா இருப்பது பெருமைக்குரியது. புலம்பெயர்ந்து வாழும் இந்தப் பொழுதுகளிலும் அவரது ஓவியங்களில் தாயகத்து நினைவுகளைத் தரிசிக்க முடிகிறது.
அவரது ஓவியங்களை இரசிக்கும் கணங்களில் எனக்குள் ஒரு கவிதையோ கதையோ தலைகாட்டும். அதுவே அவர்மனதிலும் இருந்தது என்று அவரோடு பேசுகிற சந்தர்ப்பங்களில் அறிந்து வியப்பேன்.
இயற்கையின் இரசிகன் அவர்.
எதிலும் அழகைக் காணும் அல்லது அழகைத் தேடும் அவரது உளப்பாங்கு அவரை ஓர் அழகியல் கலைஞன் என்று என்னை அழைக்க வைக்கிறது.
அவரது பல கலைப்படைப்புக்கள் ஜெர்மனியில் காட்சிப்படுத்தப்பட்டு அவரது திறமை பன்னாட்டவர்களும் பார்த்துணரும் சந்தர்ப்பத்தை வழங்கியிருககின்றன என்பதையும்  மகிழ்வோடு இங்கு நான் குறிப்பிட்டாகவேண்டும்.




இந்த இளைய கலைஞர் இன்று (2012) அகவை அறுபதை நிறைத்து மணிவிழாக் காண்கிறார்.
கண்ணாவிடமிருந்து இன்னும் நிறையக் கலைப்படைப்புக்களை எதிர்பார்த்து காலம்  காத்திருக்கிறது.
துள்ளும் இளமையோடு தொடர்க!


வாழ்த்துக்களுடன்
இந்துமகேஷ்
ஜெர்மனி















Keine Kommentare: