Mittwoch, 15. April 2020

நீங்காத நினைவுகள்.....

நீங்காத நினைவுகள்:



ஜெர்மனியில் முதன்முதலாக தொடர்கதை எழுதிய 
பெண் எழுத்தாளர்- திருமதி புஷ்பராணி ஜோர்ஜ்




"மனைவி நல்லவளாகவும், புத்திசாலியாகவும் இருந்தால், மனைவியை முன்னேற்ற வேண்டியது கணவனின் கடமை. என்னுடைய மனைவி நல்ல கெட்டிக்காரி " - சொன்னவர் யார்? 

2011 ஆம் ஆண்டு ஹம் நகரிலே பிரான்ஸ் தமிழரங்கு தமிழ் கலாசார ஒன்றிய விழாவிலே முத்தான மூன்று கலைஞர்களாக கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவரான அமரர் திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களின் கணவன் ஜோர்ஜ் அவர்களே இவ்வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் ஆவார். 

இலங்கையில் பருத்தித்துறையில் இருந்து 1988 இல் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் ஹம் நகரில் வாழ்ந்து வந்தது ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் இருந்து எழுதி வந்த எழுத்துக்கள் இடையில் நின்று போனது. 

காலம் எழுத்தாளர்களை மறந்து விடுகின்றது. மறக்கப்படுகின்றார்கள். தொடர்ந்த செயற்பாடுகளே எழுத்தாளர்களை அடுத்தவர்கள் கண்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கும். இதற்கு அத்தாட்சியானது திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களின் இழப்பு. 

நான் அறிந்த வரையில் ஜேர்மனியில் முதன் முதலாக தமிழில் ஒரு தொடர் கதையை எழுதிய ஒரு பெண் எழுத்தாளர் என்னும் பெருமை திருமதி புஸ்பராணி ஜோர்ஜ் அவர்களையே சாரும். ஒரு எழுத்தாளராக கலைஞராக அவர் வலம் வந்த காலப்பகுதியில் ஜேர்மனி மாத இதழ்களான திரு காசி. நாகலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட வண்ணத்துப்பூச்சி, இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பூவரசு போன்ற இதழ்களில் இவருடைய படைப்புக்கள் வெளிவந்தன. 

இம் மாத இதழ்களில் வெளியான கதைகளை உள்ளடக்கியே கதம்ப வாசகங்கள் என்னும் ஒரு நூல் இவரால் 2004 இல் திருகோணமலையில் வெளியீடு செய்யப்பட்டு ஜேர்மனி ஹம் நகரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின் நிதங்களின் தரிசனம் என்னும் அமரர் திருமதி லூர்த்தம்மா யோசேப் அவர்களின் ஞாபகார்த்த மலர் ஒன்றை 2010 இல் வெளியீடு செய்திருந்தார். இது கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்களுடன் மேற்படி தம்பதியரினது வாழ்க்கை வரலாறு, பரம்பரைப் பெருமைகளைப் பதிவதுடன் இந்நூல் மாரீசன்கூடல் பற்றிய பிரதேச வரலாற்றினையும் ஓரளபதிவு செய்கின்றது. இவ்விரண்டாம் பாகத்தில் முழுமையாக ஒரு குடும்பத்தின் ஏழு தலைமுறைக்கான சந்ததி வரலாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

திருமதி. புஸ்பராணி ஜோர்ஜ் என்பவர் 3 குழந்தைகளுக்குத் தாயான பின்பே பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தில் சாதாரண தொழிலாளியாக இணைந்து யாழ் கொக்குவில் கல்லூரியில் கணக்கியல் படித்து Higher National Diploma படித்து கணக்காளராகப் பதவி வகித்தார். இவரது அயராத ஊக்கமும் உழைப்பும் கணவனின் ஒத்துழைப்புமே இவரது உயர்வுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஜேர்மனியிலுள்ள ஹம் தமிழாலய உதவி நிர்வாகியும், ஆசிரியருமாகக் கடமையாற்றியதுடன் 1993 கலாசார சிதைவு என்ற நாடகத்திலும், ஐசாக் இன்பராசா அவர்களின் நாடகக் குழுவிலும் நடிக்கத் தொடங்கி ஏறக்குறைய 30 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கதம்பவாசகங்கள் என்னும் நூலில் 10 சிறுகதைகளும் நெடுங்கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. எழுதாத கோலங்கள், பிரியாத உறவுகள், ஓயாத பயணங்கள், முடியாத தொடர்கள், சுதிசேரா சுரங்கள், ஒலிக்காத ஓசைகள், அழியாத சுவடுகள், சுவையா இலக்குகள், புரியாத சில நொடிகள், நிழலின் நிசங்கள் ஆகிய தலைப்புகளில் இவை அமைந்துள்ளன. 

இவருடைய கதைகளை சீர்தூக்கிப் பார்க்கும் போது இவருடைய கதைகளில் தன்னுடைய அனுபவங்களைக் கதைகளில் பதியமிட்டிருக்கின்றார். பிறந்த மண்ணுக்கும் தான் வாழ்ந்த மண்ணுக்குமிடையே பாலம் போட்டு நடந்திருக்கின்றார். கதைகளைப் படிக்கும்போது ஆர்வம் மேலீட்டால் புத்தகத்தை மூடி வைக்க முடியாத வண்ணம் எழுத்துநடை எம்மை இழுத்துக் கொண்டு செல்கின்றது. 

“பெண்களான நீங்கள்தான் பெண்களை வாழவிடாமல் பழிச்சொற்களைச் சுமக்கக் காரணமாகிறீர்கள். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அவர்களின் வசைமொழிகளால் தான் ஒழுக்கமாய் உயர்ந்த எண்ணங்களோடு வாழும் பெண்களும் தமக்கேற்பட்ட பழி மாறப்போவதில்லை என மனம் சோர்ந்து போய் நாளாவட்டத்தில் தான் பிழை செய்யாமலே பழி பாவத்திற்கு உள்ளாகி விட்டேன். நான் எப்படி நடந்தாலும் இந்த உலகத்திற்கு என்னவென்று ஒரு மன உடைவின் உந்தலால் தன்னை மாற்றி நடத்தை கெட்டவளாக ஆகிவிடுகிறாள்” என பெண்களே பெண்களுக்கு விரோதிகள் என்பதைத் தன் எழுத்தில் அடையாளங் காட்டுகின்றார். இவ்வாறு பல இடங்களில் நீதிபதியாய் நியாயம் சொல்லுகின்ற தன்மையைக் காணக் கூடியதாகவுள்ளது.  

தொடுவானம் ஆசிரியர் அ.பி.ஜெயசேகரம் அவர்கள் மனிதவாழ்வில் புதைந்திருக்கும் பல்கூறுகளில் வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடை காண முயல்பவர் எழுத்தாளரே என்றும் இந்நிலையில் ஈழத்தமிழரின் சமகால வாழ்வு அவர்களின் புலப்பெயர்வு, பொருளாதார தடை, உறவுகளின் பிரிவு, போன்ற புறச்சூழல்களை முன்னிறுத்தி பல்வேறு வினாக்களைத் தனக்குள்ளே எழுப்பி அவற்றிற்கான விடைதேடும் பாங்கில் தன்னுடைய கதைகளை புஸ்பராணி நகர்த்திச் செல்கின்றார் என்கிறார்.

பூவரசு ஆசிரியர்  இந்துமகேஷ் அவர்கள் ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகையில் அன்னிய மண்ணின் வாழ்க்கைச் சூழல், குடும்பப் பொறுப்பு, தாயக மண்ணில் உறவுகளின் பிரிவுத்துயர், என்று விரைந்தோடும் காலகட்டத்தில் நேத்திற்காய் மல்லுக்கட்டி கலை, இலக்கியம் என்று கால்பதிக்க முயலும் பெண்களின் வரிசையில் புஷ்பராணி ஜோர்ஜ் கவன ஈர்ப்புப் பெறுகிறார் என்கிறார்.

நூலகவியலாளர் செல்வராஜா அவர்கள் ஐ.பி.சி வானொலியில் இவர் பற்றிக் கூறும்போது தனது உணர்வுகளை சம்பவக் கோர்ப்பாக்கிக் கொட்டத் துடிக்கும் வேகம் தெரிகிறது. இவருடைய ஆக்க இலக்கியம் மேலும் மேலும் தொடரவேண்டும் அதற்கு தனது எழுத்துக்களைப் மேலும் மேலும் பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும். இன்று ஈழத்து எழுத்துத் துறையில் நன்கு பேசப்படும் பிற எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து அவர்களின் எழுத்துக்களின் பாணிகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சம்பவங்களை எழுத்தில் வடிப்பதில் பல நுணுக்கங்கள் உள்ளன. அவற்றைக் கண்டறிய வேண்டும். உரையாடல்களில் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் பாணி வரவேற்கத்தக்கது. நீண்ட உரையாடல்கள் வாசகரைக் கவர்வது குறைவு. இத்தகைய அடிப்படை நுட்பங்களை மனதில் பதித்து மேலும் மேலும் வளர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இன்று எழுத்தாளர் புஸ்பராணி நம்மத்தியில் இல்லையானாலும் இவ் அறிவுறுத்தல்கள் வளருகின்ற எழுத்தாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று கருதுகின்றேன். 

இவர் நீண்டு வாழ்ந்திருந்தால் நிலையான பல படைப்புக்களை இவ்வுலகிற்குத் தந்திருக்கலாம். காலம் கரைத்துவிட்ட படைப்பாளியாக இவர் கருதப்படாது வாழ்ந்திருக்கலாம். இவரால் உலகுக்கு அளிக்கப்பட்ட கதம்பவாசகம் ஒன்றேயானாலும் அது பல நிதர்சனங்களின் தரிசனமாகவுள்ளது.

                                                     - கௌசி சிவபாலன்



உதவி: கதம்பவாசகங்கள்
      நூலகவியலாளர் செல்வராஜா 
      திரு. ஜோர்ஜ் 

(இக்கட்டுரை வெற்றிமணி பங்குனி இதழில் வெளியானது)

Dienstag, 12. November 2019

குறள் கவிதைகள். - கவிஞர் நா.தேவதாசன்.

ஒரு அறிமுகம்.
குறள்  கவிதைகள்.
- கவிஞர் நா.தேவதாசன்.


(சில ஆண்டுகளுக்கு முன்பு பூவரசு இதழ்களில்  வெளியான குறள் கவிதைகளின் சொந்தக்காரரான கவிஞர் நா.தேவதாசன் 1330 குறள்களுக்குமான பொருளைக் கவிதைகளாக்கி முழுமைப்படுத்தியிருக்கிறார். அவரது முகநூல் பக்கத்தில் அவை வெளியாகியிருக்கின்றன. 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெளியிடவிருந்த வேறொரு கவிதை நூலுக்கென நான் எழுதியிருந்த  முன்னுரை இது.)



பாடும் குயிலுக்கு பக்கத்திலே அமர்ந்து 
போடு ஒரு தாளத்தை என்பார் - அருகிருந்து 
போடுகின்ற தாளத்தால் பொசுக்கென்று குயில் பறந்து 
போகாமல் மெல்ல புனைகின்றேன் ஒருதாளம்-
முன்னுரையாய்.....
        --------------------------------- --------- இந்துமகேஷ். 


கவிதைகள் எங்கே தொடங்கி எங்கே முற்றுப் பெறுகின்றன?
விடைசொல்ல முடியாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு கேள்வி இது?
கவிதை எது என்பதும் கவிதையின் இலக்கணம் எது என்பதும் கடந்துவிட்ட ஒரு காலம் இது.
எதையோ எழுதி இதுதூன் கவிதை என்பார் முன்-
ஆம் இதுதான் கவிதை என்பாரும், இதுவும் கவிதையா என்பாரும் விமர்சகர்களாகப் பவனிவரும்போது கவிதைகளை இனம் கண்டுகொள்வதில் ஓருவித மயக்கம் வருகிறது.
ஆனாலும் கவிதைகள் என்று நம்முன்னால் காட்சிக்கு வருபவை எல்லாம் கவிதைகள் என்ற ஓரு பெயருக்குள்ளேயே அடங்கிப் போய்விடுகின்றன.

மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் மாற்றான் தோட்டத்திலிருந்து நம்மால் கவரப்பட்ட ஹைக்கூ கவிதைகள் என்று கவிதை உலகத்தை அலங்கரிக்கும் கவிதைகள் தினமும் பூத்தவண்ணமிருக்கின்றன.
படிப்பவன் அங்கீகரித்தால் அது கவிதை. இல்லாவிட்டால் இல்லை.

எழுதுபவன் அல்லது எழுதுபவள் தாம் எழுதுவதற்கு ஒரு காரணத்தைச் சொல்லக்கூடும்.  
ஆனால் பெரும்பாலும் ஏன் எழுதுகிறோம் என்று தெரியாமலே பலரும் எழுதிக்கொண்டிருப்பது எழுத்துலகில் இன்று நிரந்தரமாகிவிட்ட ஒரு விதி.
எழுதவேண்டும் போலிருந்தது எழுதினேன் என்பாரிடத்து எந்த நோக்கமும் இல்லாதிருப்பினும் அவரவர் கவிதைகள் அவர்களைக் காட்டிக்கொடுக்கும்.

எவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சமுதாயம் அவர்களுக்குத் தந்த பாதிப்புக்களை வார்த்தைகளில் தொடுக்கவே அவர்கள் எழுத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

இதில் அவரவர் மொழித் தேர்ச்சிக்கேற்ப வார்த்தைகள் கவிதைகளை அலங்கரிக்கின்றன.
வார்த்தைகளில் வறுமைப்பட்டவரிடத்திலிருந்து வளமான கவிதைகளை நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. என்றாலும் கவிதைகளுக்குப் பயன்படுத்தும் சின்னச் சின்ன வார்த்தைகளிலே கூட வளமான கவிதைகளைத் தருவாரும் இருக்கிறார்கள் என்பதும் ஒப்புக்கொள்ளப்படவேண்டியதே.

மௌனம் என்பதுகூட மிகச் சிறந்த மொழி என்பார் சிலர்.
ஆம் அது உண்மைதான். ஆந்த மௌனத்தைப் புரிந்துகொள்ளும் அழகான வார்த்தைகளைத் தெரிந்துவைத்திருப்பவனுக்கு அந்த மௌனம் ஒரு சிறந்தமொழி.

பட்டங்கள் ஏதுமில்லை 
பதவிகளும் தானுமில்லை 
சிட்டாகப் பறந்து சிறுதூரம் சென்ற எந்தன்
சிந்தனையில் ஊறியதை- சிறு
கவிதைகளாய் வடித்துவிட்டேன் 
சிந்தித்தால் என் கவியோ -சிறு 
மொட்டாகத்தானிருக்கும் 
என்று சொல்லும் கவிஞர் நா. தேவதாசன் தனது இந்தச் சிறு கவிதை நூலுக்கு முன்னுரை தரும்படி என்னை அன்புடன் அழைத்திருந்தார்.

புலம்பெயர் மண்ணில் நமது படைப்பாளர்களின் ஆக்கங்கள் அதிகளவில் பெருகவேண்டும் என்பதிலும் அவர்களது ஆற்றல்கள் வெளிக்கொணரப்படவேண்டும் என்பதிலும் அதிக விருப்புடையவன் என்ற காரணத்தால் இதற்கு மகிழ்வோடு ஒப்புதல் சொன்னேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவரது எழுத்தார்வத்தையும் தமிழ்  இலக்கியங்களில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் நன்கறிந்தவன் என்ற முறையில் இதற்கு நான் ஒப்புதல் அளித்தபோதும் ஓரு இரசிகனாக காய்தல் உவத்தலின்றி என் கருத்துக்களை முன்மொழியும் கடப்பாடு எனக்கிருப்பதையும் சுட்டிக்காட்டினேன். 

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தையும் ஒருசேரப் படித்துவிட்டு இதுபற்றி உங்களோடு எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தக் பக்கத்தைப் பயன்படுத்துகிறேன்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் - என்று தாய்மையின் மகிழ்வுக்கு உதாரணம் காட்டும் குறள் ஒன்றுளது.
நாம் பெரும்பாலும் அந்தத் தாயின் மகிழ்வை உணர்கிறோமே அன்றி அந்த மகனைச் சான்றோன்  என்று சொல்வதற்குள்ள உரிமை பெற்றிருந்த சமுதாயம்பற்றி நினைப்பதில்லை.
சமுதாயம் அந்த மகனை ஏற்றுக்கொண்டு அவனுக்குச் சான்றோன் என்ற பட்டமளிப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. நல்லவனை நல்லவனாக ஏற்றுக்கொள்வதற்கு அவனைச் சார்ந்துள்ள சமுதாயமும் நல்லதாக இருக்கவேண்டும் என்ற ஒரு நியதியும் உள்ளதல்லவா?

ஆக, மகவைப் பெறுதல்மட்டும் தாயின் கடன் என்று கொண்டாலும்கூட அந்த மகவு பிறகு அந்தச் சமுதாயத்துக்கே உரித்துடையவனாகிறான். 
படைப்பாளி படைப்புக்கு உரித்துடையவன் என்றாலும் படைப்புக்கள் சமுதாயத்துக்கு உரித்துடையவை.
ஆக படைப்புக்கள்பற்றிய மதிப்பீடு சமுதாயத்திலிருந்து வந்தாகவேண்டும்.
அந்த மதிப்பீடே படைப்பாளியை அங்கீகரிக்கும் அல்லது புறந்தள்ளும்.

தேவதாசன் சொல்வதுபோல் - சிந்தித்தால் அவர்கவியோ சிறு மொட்டாகத் தானிருக்கும்.
ஆனால் இந்த மொட்டுக்கள் காலத்தால் மலரும் தன்மைகொண்டவை.
மலரும் மலர்கள் வெறும் காகித மலர்களாக அல்லாமல் நறுமணம் கமழும் நன்மலர்களாக மலரும் என்பதில் நம்பிக்கை கொள்ளத்தக்கவகையில் இவை அமைந்திருக்கின்றன.

தனது கூட்டைவிட்டு சிறுதூரம் பறந்துசெல்லும் சிட்டுக்கும் தனது கூடுதான் நிரந்தர நினைப்பாக இருக்கும்.
நிழலாடும் நிலப்பெருமை சொல்லும் தேவதாசனுக்கும் தான்பிறந்த சிறு தீவு நெஞ்சில் நிழலாடுவதில் வியப்பதற்கெதுவுமில்லை.

நிழலாடும் நிலப்பெருமை சொல்லும் அவரது கவிதை எனக்கு மிகப்பிடித்தமானது.
அந்த நிலத்தில் பிறந்து தவழ்ந்தவன் என்பதனாலோ என்னமோ, தேவதாசனோடு இணைந்து அந்தமண்ணில் புரண்ட நினைவுகள் என்னுள்ளும் நிழலாடக்காண்கிறேன்.

சின்னச் சின்னக் கிராமங்கள் ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் என்று பெயர்சூட்டிக்கொண்டிருக்க, நீரலையால் பிரிந்து சின்னச் சின்னத் தீவுகளாய் சிதறியும் யாழ்ப்பாணத்தோடு ஒட்டிக்கிடக்கும் சின்னச் சின்னச் கிராமங்களில் ஒன்றைச் சொன்னால் அது அத்தனை கிராமங்களுக்கும் பொருத்தமானதாகத்தானே இருக்கமுடியும்.
நிழலாடும் நிலப்பெருமை கவிதையும் அப்படி எல்லாக் கிராமத்துக்கும், சின்னச்சின்ன ஊர்களுக்கும் பெருமைசேர்க்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது அவர் புனைந்த சில கவிதைகளைமட்டுமே தொகுத்து அவர் இந்தச் சிறுநூலை தனது தந்தையின் நினைவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

இதிலுள்ள கவிதைகள் சமுதாயத்தின் பல பகுதிகளை ஆங்காங்கே படம்போட்டுக்காட்ட முயன்றாலும் பக்திக் கவிதைகளே அதிகம் இடம்பிடித்திருக்கின்றன.

மனித சக்கியை மீறிக் காரியங்கள் நடைபெறத் தொடங்கிவிட்டால் அதன் எல்லை கடவுள் என்கின்ற முற்றுப்புள்ளியில் முடிவடைந்தாக வேண்டியிருக்கிறது. வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் அவசியப்படுகின்றன.
அவைதாம் வாழ்விலும் ஒரு நம்பிக்கையைத் தரமுடியும்.

நா.தேவதாசன் இன்னும் தொட வேண்டிய, தொடரவேண்டிய நிகழ்வுகள் பல இருக்கின்றன.
அவரது தெள்ளிய தமிழில் அவர் இன்னும் பன்னூறு கவிதைகளைப் பிரசவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பூவரசு இனிய தமிழ் ஏட்டில் அவர் தொடராக எழுதிவரும் குறள்கவிதைகள்-
(திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒவ்வோர் கவிதையாக சாறுபிழிந்து அவர் தரும் கவிதைகள்) வாசகர்களிடம் வரவேற்புப் பெற்று வருகின்றன என்பதையும் இங்குசொல்லி அவரது எழுத்து முயற்சிகள் மேலும் வளம்பெற வாழ்த்துவதோடு, இந்தக் கவிதைகளோடு உறவாடப்போகும் நீங்கள் உங்கள் கருத்துகளையும் அவருக்கு அறியத்தருவது அவரது வளர்ச்சிக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகுக்கும் பயனுடையது என்பதைச்சொல்லி முடிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
தொடர்வோம்:
அன்புடன்
இந்துமகேஷ்
(ஆசிரியர் , பூவரசு)






நா.தேவதாசனின் முகநூல் பக்கம்:
facebook.com/ thevathasan.nagalingam







Mittwoch, 4. September 2019

நீங்காத நினைவுகள் - பூவரசு வாசகர் அரங்கம் 2004



பூவரசு கலை இலக்கியப்பேரவையின் 
வாசகர் அரங்கம் 2004.




மலர்களின் தோட்டமாய் அரங்கினை நிறைத்த இளந்தளிர்களின் 
இன்பத்தமிழ் மணம் கமழ, பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 13வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் பிறேமன் நகரில் 21.02.2004 சனிக்கிழமை நடைபெற்றது.

திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி யமுனாவதி நடராஜா ஆகியோர் மங்கள விளக்கேற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அமைதி வணக்கமும், திரு.சு.நடராஜா அவர்களால் இறைவணக்கப்பாடலும், எங்கள் இளந்தளிர்களால் |உலகமே நம் இல்லம், எனும் பூவரசின் தமிழ்வணக்கப் பாடலும் இடம்பெற்றன.
வரவேற்புரையை பூவரசு கலை இலக்கியப்பேரவையின் இணைச் செயலாளர் திருமதி ஆனந்தஈஸ்வரி திவ்வியமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.
திருமதி வில்ரூட் கடெல்கா ஜெர்மன் மொழியில் பூவரசுக்கான தனது வாழ்த்துக்களை வழங்கினார்.
தொடர்ந்து இளந்தளிர்கள் வழங்கிய |இது எங்கள் நேரம்| எனும் தலைப்பிலான மழலையர் நிகழ்வுகள் ஆரம்பமாயின. பங்குகொண்ட அத்தனை மழலைச்செல்வங்களும் தத்தம் மொழித் திறனை வெளிக்கொணர்ந்து தமிழின் அழகை வெளிப்படுத்தினர். பாட்டுக்கள் பாடியும், கதைகள் சொல்லியும் அவுர்கள் தமது மொழித்திறனை வெளிப்படுத்திய பாங்கு அருமையாக இருந்தது.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக இளையோர் பங்குகொண்ட புதியதோர் உலகம் கவியரங்கு இடம்பெற்றது.
சமகாலத்தில் நம்மிடையே வரும் பாரதியார் தற்காலப் பெண்களின் முன்னேற்றம் குறித்து மகிழ்வுகொள்வதாக இந்துமகேஷ் எழுதிய கவிதைகளை இளந்தளிர்கள் அற்புதமாக வெளிக்கொணர்ந்தனர். இந்த இளையோர் கவியரங்கின் நெறியாள்கையை திருமதி சாந்தராணி பத்மகுமார் அவர்களும் ஒப்பனையை செல்வி ஜெயராணி செல்லத்துரை அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.

 "புலம்பெயர் மண்ணில் தமிழ் தேய்கிறது என்று புலம்புகிறவர்கள் வந்து பார்த்திருக்கவேண்டும் இந்தப் பூவரசுமேடையை!" என்று பார்வையாளர்கள் பலர் புகழ்ந்துரைப்பதைக் கேட்கக்கூடியதாக இருந்தது.

அடுத்து பூவரசு கலை இலக்கியப்பேரவையின் செயலாளர் திரு. க.பாலசுப்பிரமணியம் அவர்கள் பூவரசு இதுவரையும் இனியும் என்னும் தலைப்பில் பூவரசின் செயற்திட்டங்கள் குறித்ததான கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இசைக்கோலம் நிகழ்ச்சியில் சுயமாக இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்களால் பூவரசு மேடை பொலிவு பெற்றது. இசைக்கலைஞர்கள் திருவாளர்கள் சு.நடராஜா, க.பாலசுப்பிரமணியம் ஆகியோரோடு இளங்கலைஞர்கள் பலரும் பங்குகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.


அடுத்து பூவரசு 13வது ஆண்டு நிறைவுமலர் வாசகர்முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற்பிரதியை கவிஞர் திரு. கொற்றையூர் வாசன் அவர்களிடம் திருமதி இந்துமகேஷ் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பூவரசில் எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகளில் பங்குபற்றிய இளையோர்க்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேடை நிகழ்வுகளில் பங்குகொண்ட ஏனைய மழலைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.




அடுத்த நிகழ்வாக வெற்றிமணியின் பதின்மூன்றாவது வெளியீடான, இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி எனும் ஆன்மீகத் தேடல் சார்ந்த நூல் ஒன்று இவ் வாசகர் அரங்கில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

வெற்றிமணி ஆசிரியர், கலாநிதி மு.க.சு. சிவகுமாரன் அவர்கள் இந்நூலின் முதற்பிரதியை பிறேமன் குமரன்ஸ் வர்த்தக நிலைய உரிமையாளரும், வாசகருமான திரு.கனகநாதன்(குமரன்) அவர்களிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

இந்நூலுக்கென கனடாவிலிருந்து மதுரகவி, கலாநிதி வி.கந்தவனம் அவர்கள் வழங்கியிருந்த வாழ்த்துரையை கவிஞர் கொற்றையூர் வாசன் வாசித்தளித்தார். அடுத்து எழுத்தாளர் திரு.இராஜன் முருகவேல் இந்நூலினை மதிப்பீடு செய்து உரையாற்றினார்.

ஐரோப்பிய நூல்களுக்கு இணையாக அழகிய தாள்களில் அழகுற வடிவமைக்கப்பட்ட இந்நூலின்மூலம் தரமானதொரு படைப்பு தமிழுக்குக் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். தரமான படைப்பு கவர்ச்சியாகத் தரப்படுவதனால் அது எளிதாக வாசகர்களைச்சென்றடையும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தனது கட்டுரைகளைத் தொகுத்து அழகிய நூல்வடிவில் கொணர்ந்திருப்பதற்காக வெற்றிமணிக்கும், அதன் ஆசிரியரும் தனது இனிய நண்பருமான கலாநிதி சிவகுமாரனுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட திரு.இந்துமகேஷ் வாசகர்களின் ஆதரவிலேயே படைப்பாளர்களினதும் படைப்புக்களினதும் வளர்ச்சி தங்கியிருக்கிறது என்பதையும் சொல்லிவைத்து அவர்களது ஆதரவு பெருகும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இளமைபொலிந்த வெற்றிமணியில் தனது ஆன்மீக சிந்தனைகளை  வேறொரு கோணத்தில் வெளிக்கொணர வைத்தமைக்காக நண்பர் திரு. சிவகுமாரன் அவர்களுக்கு எனது இரட்டிப்பு நன்றிகளைச் செலுத்துகிறேன் என்றார் அவர்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டிஅவர்களுக்கும், கலாநிதி அ.சண்முகதாஸ் அவர்களுக்கும், மதுரகவி கலாநிதி வி.கந்தவனம் அவர்களுக்கும், சிந்தனைச்செல்வர் எழிலன் அவர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

வாசகர் அரங்கத்தின் இறுதி நிகழ்வாக சும்மா சும்மா சும்மா என்னும் தலைப்பிலான துணுக்குத் தோரணம் இளைஞர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

உலகவாழ்வில் வெறுப்புணர்வும், காழ்ப்புணர்வும் மனிதர்களைச் சீரழிப்பதிலிருந்து அவர்களைமீட்டு சிரித்த முகத்தோடும் மகிழ்ச்சியோடும் நிறைவான மனத்தோடும் வாழவைப்பது ஒவ்வொரு மனிதனுடைய தலையாய கடமையுமாகும் என்பதை சொல்லாமல் சொல்லிவைத்த இந்தத் துணுக்குத் தோரணம் இரசிகர்களின் பெருவரவேற்பைப் பெற்றிருந்தது. 
இந்துமகேஷ் அவர்களின் கற்பனைக்கு ம.அனாசுயன், இரா.சிவசுதன், தெ.விபூஷன், ம.அருணோதயன், ஞா.நிக்சன், ஜெ.பிரசன்னா, த.அரவிந்த், இரா.சரோன், தி.தீபகன் ஆகிய இளைஞர் குழாம் அற்புதமாக வடிவம் கொடுத்திருந்தனர்.
இதுவரைகாலமும் மேடைகள் கண்டிராத ஒரு வித்தியாசமான நிகழ்வாக இது அமைந்திருந்ததைக் குறிப்பிட்டாகவேண்டும்.

இந்துமகேஷ் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.
நிகழ்ச்சிகளை செல்வன் ம. பிரசன்னா தொகுத்து வழங்கினார்.

இலக்கிய நிகழ்வாக ஆரம்பித்த இந்த விழா இளந்தளிர்களின் தமிழ்விழாவாகப் பரிணமித்து, பூவரசின் கலை இலக்கியப் பயணத்தில் தமிழன்னைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மற்றுமொரு தமிழ்மாலையாக அமைந்திருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

-பார்வையாளன். 



(பிரசுரம்: பூவரசு பங்குனி - சித்திரை 2004 )

















Montag, 31. Juli 2017

பூவரசு கலை இலக்கியப் பேரவையின் நூலகக் கண்காட்சி- 1998

பூவரசு கலை இலக்கியப் பேரவையின்
நூலகக் கண்காட்சி- 1998



பிறேமன் புகையிரத நிலையத்தின் முன்னாலிருந்த பஸ் தரிப்பிடம்.
பிறேமன் ரெனேவரிலிருந்து வரும் பஸ்ஸூக்காகக் காத்திருந்தான் ராகுல்.
சிறிதுநேரத்தில் பஸ் வர, சனங்களோடு முண்டியடித்துக் கொண்டு ஏறியவனை பஸ்ஸினுள் இருந்து  ஒரு தமிழ்க்குரல் அழைக்க.... திரும்பிப் பார்த்தான். அங்கே ரவியும் ரகுவும் அமர்ந்திருந்தனர்.

ராகுல்: ஹலோ...
(அவர்களுக்கு அருகே போய் அமர்ந்துகொண்டான் ராகுல்.)
ராகுல்: எங்க ரண்டுபேரும் போயிட்டு வர்றீங்க.... வெயில் எறிக்க வெளியே 
     வெளிக்கிட்டாச்சா...
ரவி: அடோ... நாங்க என்ன 'சமர்"ரிலை சமறுறமென்றா சொல்றாய்... 
    எவ்வளவு நல்லதொரு காட்சியை பார்த்துவிட்டு வர்றோம்... உனக்கு 
    இது எல்லாம் தெரியாது... கிணற்றுத் தவளைபோல வேலை....
    வீடு... வேறென்ன தெரியும்...
ராகுல்: கோபிக்காதே... என்ன காட்சி என்றுதான் சொல்லேன்...
ரகு: மார்ச் 14, 15, 16 திகதிகளில் பிறேமன் ரெனேவர் கலாச்சார நிலைய
    மண்டபத்தில் பூவரசு கலை, இலக்கியப் பேரவை நடாத்திய நூலகக்
    கண்காட்சியைப்பற்றிக் கேள்விப் படவில்லையே?
ரவி: வேறேதாவது காட்சியென்றால் கேள்விப்பட்டிருப்பான்...
ராகுல்: அடடா... அடடா.... மறந்துவிட்டேன்.... இன்றுதான் இறுதி
     நாளாக்கும்.... அங்கிருந்துதான் வர்றீங்களா...
ரகு: நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டாய்.... இப்படியொரு
    நிகழ்வை பூவரசு ஆசிரியரின் மேற்பார்வையில், இலக்கியப்
    பேரவையினர் மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த விதம்
    பாராட்டத்தக்கது...
ராகுல்: நேற்றுப் போனனீங்களா?
ரவி: நேற்று மட்டுமல்ல... முந்தநாளும் போனோம்... திருமதி வில்ரூட்
    கடெல்கா, திருமதி சிவபுஸ்பா இராஜன் ஆகியோர் மங்கள
    விளக்கேற்ற, பேரவைக்கீதத்துடன் நூலகக் கண்காட்சி ஆரம்ப
    மானது.
ரகு: முதலில் திரு இந்துமகேஷ் அவர்கள், பூவரசு சஞ்சிகையின் ஆரம்ப
    நிலைபற்றியும் அது சந்தித்த பொருளாதார நெருக்கடிகள்பற்றியும்,
    இன்று அது இளந்தளிர்கள்... கலை இலக்கியப் பேரவை, பூவரசம்பூ
    வீடியோ மலர் என விருட்சமாகி விழுதுகள் விடுவதையும், அதற்கு
    ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பூவரசுக்குப் பக்கபலமாக
    இருப்பவர்களையும்.... இருந்தவர்களையும்... இன்று பூவரசுடன்
    தம்மை இணைத்துக் கொள்பவர்களைப்பற்றியும் வரவேற்றுப்
    பேசினார்...
ரவி: உண்மைதான்... அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஐரோப்பா,
    கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைத்
    தமிழர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட ஏறக்குறைய நூறு
    வரையிலான சஞ்சிகைகளைப் பார்க்கையில்... அவற்றுள் இன்று
    எத்தனை வருகின்றன... பெரும்பாலானவை ஏன் நின்று போயின...
    என்று எண்ணிப் பார்க்கையில்தான் பூவரசு சஞ்சிகையின்
    வருகையும், அதற்காக திரு இந்துமகேஷ் அவர்களின் விடா
    முயற்சியும், தனது உயரிய நோக்கிற்கான இழப்புக்களைப் பொருட்
    படுத்தாத தன்மையும் தெள்ளத்தெளிவாகிறது...

 
ராகுல்: நூற்றுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளை சேகரித்திருக்கிறாரே...
     அவற்றின் அறிமுகத்தை பூவரசு வாசகருடன் பகிர்ந்திருக்கிறாரே...
     அது நிச்சயம் பாராட்டத்தக்கது...
ரகு: உண்மைதான். புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றைப் பதிவுசெய்து
    எதிர்கால சந்ததிக்கு தெரியப்படுத்தும் பாரிய பணியை இச்
    சஞ்சிகைகள்தான் செய்யமுடியும். அந்த வகையில் சஞ்சிகைகளின்
    சேகரிப்பும் பாதுகாப்பும் அவசியமானதென்பதை சொல்லாமல் செய்து
    காட்டியிருக்கிறார் பூவரசு ஆசிரியர்.
ரவி: அதுமட்டுமல்ல... மலேசியா, இந்தியா போன்ற நாடுகளின் சிற்றேடுகள்
    சிலவும் அங்கு காட்சிக்கிருந்தன.
ராகுல்: பூவரசில் கையெழுத்துப் பிரதிகள்பற்றிய புத்தகம் ஒன்று விரைவில்
     அறிவிப்பொன்று வெளியாகிக்கொண்டிருந்தது... அது அங்கு
     வெளியிடப்பட்டதா?
ரவி: இல்லை. ஆனால் ஆசிரியர் அதற்கு விளக்கமளித்தார்... அதாவது
    அவர் பலமுறை அதுபற்றி அறிவித்தல் செய்தும் பல சஞ்சிகை
    ஆசிரியர்கள் அதுபற்றி அக்கறைப்படாதது முக்கிய காரணம்...
ரகு: பல சஞ்சிகை ஆசிரியர்கள் அதே முகவரியில் இருக்கிறார்களோ...
    அல்லது அதே நாட்டில் உள்ளார்களா என்பதே கேள்விக்குறி...
ராகுல்: இப்போது கைவசம் உள்ள சஞ்சிகைகளிலிருந்து தரமான
    ஆக்கங்களை தொகுத்து சஞ்சிகைகள்பற்றிய அறிமுக நூலை
    வெளியிடலாமே...
ரகு: அதிலும் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், சம்பந்தப்பட்ட
    சஞ்சிகையாளர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுவதென்பது
    சரியில்லை... இதையெல்லாம் ஒரு தனிமனிதராக நின்று
    நிறைவேற்றுவதென்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் விளங்கும்...
ராகுல்: தொடர்ந்து என்ன நடந்தது...
ரவி: தொடர்ந்து பூவரசின் ஐம்பதாவது இதழின் முதற்பிரதியை திருமதி வசந்தாதேவி
    புவனேந்திரன் திருமதி. கமலாம்பிகை மகேந்திரமூர்த்தியிடம் கையளித்தார்.
    அத்துடன் திரு. இராஜன் முருகவேலின் யவ்வனமில்லாத
    யதார்த்தங்கள் என்ற சிறுகதைத்தொகுதி வெளியீடும் நிகழ்ந்தது.
    அதன் முதற்பிரதியை திருமதி. பெனடிக்ரா ஞானச்செல்வம், புகைப்படக் கலைஞர் திரு.
    எஸ். தேவராஜா அவர்களிடம் வழங்கினார். 
ராகுல்: இதைப்பற்றி இராஜன் முருகவேல் ஏதாவது கூறினாரா?
ரவி: அவர் சொன்னதில் முக்கியமான விடயம் என்னவென்றால, திரு
    இந்துமகேஷ் அவர்கள் எவ்வளவோ ஆக்கங்களை எழுதினாலும்,
    தனது சிறுகதைகளைப் புத்தக உருவில் வெளியிட்ட 
    பெருந்தன்மையையும், புது எழுத்தாளர்களுக்கு அளித்துவரும்
    ஊக்கத்தைப்பற்றியும் குறிப்பிட்டார்.
ராகுல்: ரண்டாவது நாள் என்ன நடந்தது?
ரகு: ரண்டாம் நாள் பூவரசு கலை இலக்கியப் பேரவையின் ஊக்குவிப்பில்,
    பிறீமன் முத்துக்கள் மூன்றின் முத்துமாலை வீடியோ மலர்
    வெளியீடு ஆக்கிரமித்துக் கொண்டது.
ரவி: ஐரோப்பாவிலேயே மூன்று சிறுவர்களின் உருவாக்கத்தில் முதல்
    தடவையாக வெளிவந்திருக்கும் இந்த வீடியோ மலரின்
    முதற்பிரதியை திரு இந்துமகேஷ் அவர்கள் உலகத் தமிழர் இயக்க
    செயலாளர் திரு இரா சோமஸ்கந்தரிடம் கையளித்தார்.
ராகுல்: முத்துக்கள் மூன்று என்று பெயர் சூட்டியதே பூவரசு
    ஆசிரியர்தானே?!
ரவி: ஆமாம்... அவரால் பெயர் சூட்டப்பட்டவர்களின் வெளியீட்டுக்கு
    இடமளித்தது ஆசிரியரின் இளந்தளிர்களான எதிர்காலத் தமிழர்களின்
    மீதுள்ள அக்கறைக்கு அச்சாரமாக திகழ்ந்தது.
ரகு: மூன்றாவது நாள் திரு ஞானச்செல்வம் உட்பட பூவரசு கலை
    இலக்கியப் பேரவையினர் பலர் பங்குகொண்ட 'புலம்பெயர்ந்த
    தமிழரிடையே மனிதநேயம் வற்றிவிட்டதா?" என்னும் தலைப்பிலான
    கருத்தரங்கு பலரது கருத்துப் பரிமாற்றங்களுடன் கனதியாக
    இடம்பெற்றது.
ராகுல்: இந்தக் கருத்தரங்கின் முடிவு எப்படியிருந்தது?
ரகு: எப்படியிருக்க வேண்டும்? இது ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்கான
    முன்னெடுப்பு மாத்திரமே. இது பூவரசிலும் தொடர்ந்து வருவதன்
    மூலம் வாசகர்களையும் மனிதநேயம்பக்கம் சிந்திக்கத் தூண்ட
    வேண்டுமென்பது எனது கருத்து.
ரவி: இறுதியாக பூவரசு ஆசிரியரின் நன்றியுரையுடன், பூவரசு கலை
    இலக்கியப் பேரவையினரின் மூன்று நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
    இப்படியானதொரு நிகழ்வு இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள்,
    வாசகர்கள் மத்தியில் ஒரு இறுக்கமான நெருக்கத்தையும்-
    புரிந்துணர்வையும் ஏற்படுத்துமென்றால் மிகையாகாது.
ராகுல்: அதுமட்டுமல்ல.... இவ்வளவு சஞ்சிகைகளைச் சேகரித்து
    காட்சிக்கு வைத்த செயலானது, புதிய சஞ்சிகைகளின் வரவிற்கும்,
    தம்மை மற்றவர்கள் அவதானிக்கிறார்கள் என்ற நினைவால்-
    அவை காத்திரமாவதற்கும் ஏதுவாகும்....
ரகு: உண்மைதான்.... இப்படியான செயல்களால் பூவரசு தனது பணிகளில்
   தொடர்ந்தும் உத்வேகத்துடன் முன்னேற- வாசகர்கள்...
   எழுத்தாளர்கள் என்று சகல புகலிடத் தமிழர்கள் யாவரும் பூவரசு
   கலை இலக்கியப் பேரவையில் இணைந்து, பூவரசு ஆசிரியரின்
   கைகளை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்.
ராகுல்: தற்போது நான் உங்களின் கைகளைப்பற்றிக் குலுக்க
   விரும்புகிறேன்.... நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது...

- அவதானி
(பூவரசு வைகாசி - ஆனி1998 இதழில் வெளியான கட்டுரை. அவதானி என்ற பெயரில் இராஜன் முருகவேல் எழுதியது)

Samstag, 8. Juli 2017

ஓர் இரசிகனின் வாழ்த்து!

 


வெற்றிமணி ஆசிரியரான கலாநிதி மு.க.சு. சிவகுமாரன் என்னும்-
என் அன்புக்குரிய கண்ணா சில வருடங்களுக்கு முன்பு தனது
மணிவிழாவைக் கொண்டாடினார். அதற்கென ஒரு மலரையும் நண்பர்கள் தாயகத்தில் தயாரித்தார்கள்.
வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியிருந்தேன்.
தாமதமாகிவிட்டதால் மலர் தயாரிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். மலரில் வராவிட்டால் என்ன என் இதயத்தின் வாழ்த்து அவரைச் சென்றடைந்தால்போதும் என்று நினைத்துக்கொண்டேன்.
இன்று அவரை வாழ்த்த விழைந்தபோது அன்று எழுதிய கட்டுரை
நினைவுக்கு வந்தது.
தேடி எடுத்து இங்கு பதிவிடுகிறேன். வாழ்த்துவோம்!



ஓர் இரசிகனின் வாழ்த்து!


அழகியல் கலைஞர் கண்ணாவுக்கு
அகவை அறுபது!

- இந்துமகேஷ்



„எப்போதும் மகிழ்வோடிருப்பவர்கள் யார்?“
„வாழ்க்கையை இரசிக்கத் தெரிந்தவர்கள்!“

„எப்போதும் இளமையாக இருப்பவர்கள் யார்?“
„தன்னை இரசிக்கத் தெரிந்தவர்கள்!“

„எப்போதும் அழகாக இருப்பவர்கள் யார்?“
„உலகத்தை இரசிக்கத் தெரிந்தவர்கள்!“

-இரசனை உணர்வு என்பது மனிதனோடு கூடவே பிறந்தது.
அந்த உணர்வு மிகைப்பட்டதால்தான் இந்த உலகை அழகுபடுத்தியிருக்கிறார்கள் வாழ்க்கையைச் சுவையுடையதாக்கியிருக்கிறார்கள்.

„ ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்
  ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய
  உருப்பளிங்குபோல்வாள் என் உள்ளத்தினுள்ளே
  இருப்பள் இஙகு வாராதிடர்! என்று நாமகளையும் உருவகப்படுத்தித் தன்னுள் வைத்துக்கொண்டான் மனிதன்.

ஆயகலைகள் அனைத்தும் இரசனை உணர்வின் வெளிப்பாடுகளே!
அவரவர் மனோநிலைக்கேற்ப- வாழும் சூழலுக்கேற்ப இரசனை உணர்வுகளில் வேறுபாடு தெரியலாம். ஆனால் இரசனை உணர்வு இல்லாதவுh என்று எவரும் இல்லை என்பதே யதார்த்தமானது.

000

„கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்!“ என்று ஒரு மொழியின் பெருமை வியந்துரைக்கப்படும்போது கேலியாக விழித்துப்பார்க்கிறார்கள சிலர்.

உலகின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கும் கல்வெட்டுக்களைத்; தோண்டியெடுத்து காட்சிக்கு வைக்கும்போது- Üஇங்கே தமிழ் வாழ்ந்ததாம்! என்று இந்தக் கல்வெட்டுச் சொல்கிறது!“ என்று நிரூபிக்கப்படும்போது மூத்த மொழியின் சொந்தக்காரர்கள் நாம் என்று பெருமைகொள்ள முடிகிறதே!
„இது என் நாடு அது உன் நாடு!“ என்று மனிதன் தனக்குள் பிரிவுபடும்போதுதான் அது மண்ணாகிப் போனது. „இது எனது தாய்மண் அது உனது தாய்மண்!“ என்று உலகம் பிளவுபட்டுப்போனது.

இப்போது முன்மொழிந்த வார்த்தைகளுக்குத் திரும்புவோம்.
„கல் (கல்வெட்டு)தோன்றி மண் (பிரிவுபட்ட நிலம்) தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்!“.

இத்தனை சிறப்ப வாய்ந்த நமது மொழிக்கு பதல்வர்களாகப் பிறந்த நாம் நன்றிக்கடனாக அதற்கு ஏதாவது செய்தாகவேண்டாமா?
இந்த எண்ணத்தின் வெளிப்பாடுகளே கலைகளாகப் பரிணமித்தன. பரிணமிக்கின்றன. பரிணமிக்கும்.

000

„ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
 ஆதியனைய கலைகளில்
ஈடுபட்டென்றும திளைப்பவர் பிறர்
ஈன நிலை கண்டு துள்ளுவார்-  அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில
நாளினில் எய்தப் பெறுகுவார்.
என்பான் பாரதி.

கலைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும ஈடுபாடு காட்டுபவர்கள் தத்தம் தனித்திறமைகளைக்கொண்டு தாம்சார்ந்த துறைகளில் சாதனை படைக்கிறார்கள்.
அவர்களிலும் ஒருசிலர்மட்டுமே பலவகையான கலைத்துறைகளிலும் ஆர்வம் கொண்டு பல்கலை வித்தகர்களாகப் பவனி வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்.

000
மூன்றாண்டுகளுக்கு முன்பு (2009) ஒருநாளின் அதிகாலைப் பொழுதில் நிலைக்கண்ணாடியின் முன் நான் நின்றபோது என் எதிரே ஒரு முதியவர் நின்றார்.
„பார்த்த ஞாபகம் இல்லையோ?“ என்றார்.
„எங்கேயோ பார்த்தமுகம்!“ என்றேன்.
„நீதானே நான்!“ என்றார்
„விளங்கவில்லை!“ என்றேன்
„உன்னை உன் அன்னை இந்த மண்ணில் இறக்கிவைத்து இன்றோடு ஆண்டுகள் அறுபது ஆயிற்று. அன்றுமுதல் உன்னோடுதான் நானும் இருக்கிறேன்!“ என்றார்.
„எனக்குத் தெரியாமல் எனக்குள்ளாகவா? அதைத் தெரிந்துகொள்வதற்குள் காலம் இத்தனை வேகமாகப் போய் மறைந்துவிட்டதா?“ என்றேன்.
„காலம் மட்டுமல்ல நீயும்தான் ! உனக்குள்ளேயே நீ மறைந்துபோனாய்!” என்றார்
„எங்கே மறைந்தேன்?“ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தேன்.
„என்ன தாத்தா என்ன தேடுறீங்கள்?“
-கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள் என்பேத்தி.
„என்னைக் காணோம்!“ என்றேன்.
அவள் சிரித்தாள்.
“என்ன தாத்தா! நீங்கள்தானே நீங்கள்?” என்றாள்.
“நான் நான்தான் ஆனால் நான் அவனில்லை!” என்றேன் நிலைக் கண்ணாடியில் தெரிந்த முதியவரைக்காட்டி.
“ஐயோ தாத்தா அதுதானே நீங்கள்!” என்றாள் பேத்தி
“இல்லை நான் அவனில்லை!” என்றேன்.
அவள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“எனக்கு ஒண்டும் விளங்கேல்லை!” என்று சலிப்புடன் சொல்லிப் போனாள் அவள்.

தொலைபேசி கிணுகிணுத்தது.
எதிர்முனையில் என் பிரியத்துக்குரிய கண்ணா!
“தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்!” என்றார்.
“நீங்களெல்லாம் இளைஞர்களாகவே இருங்க. நான்மட்டும் கிழவனாகிறேன்!” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். “எனக்கொரு காலம் வராமலா போகும்?”
அந்தக் காலம் வந்துவிட்டது. அதற்குள்ளாகவே !
“கண்ணாத் தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!”
“மனத்தாலும் உடலாலும் என்றும் இளைஞனாய் நூறாண்டு கடந்து வாழ
இறையருள் வேண்டுகிறேன்!“

(அது சரி அகவை அறுபது என்பது முதுமை என்று எவர் சொன்னது - கண்ணா இத்தனை இளையவராக இருக்கும்போது!“)

000

சில ஆண்டுகளுககு முன்பு வெற்றிமணியின் வெளியீடாக வந்த மாதவியின் மணிக்கதைகள் தொகுப்பிற்காக நான் எழுதியிருந்த முன்னுரை இது:

மலர்கின்ற மலர்களுக்கெல்லாம் அறிமுகம் தேவையில்லை.
அவை தத்தம் இயல்புகளோடு இணங்கிப் போகிறவர்களிடம் நிலைகொண்டு விடுகின்றன. மல்லிகை என்றதும் அதன்மணம் நம் மனங்களை ஆளுகை செய்வதில்லையா அதுபோல்தான்.
இந்த மணிக்கதைகளின் மாதவிக்கும் அறிமுகம் தேவையில்லை. பலவருடங்களாக பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் வெற்றிமணியின் ஒரு பக்கத்தில்  நின்று சிறுமணியாய் ஒலிக்கும் மாதவியின் மணிக்கதைகள் பெரிய பெரிய கதைகள் சொல்லாத பெரிய பெரிய விடயங்களை சின்னச் சின்:ன வார்த்தைகளில் ஒலிக்கவிடுவதை வாசகரால் உணரமுடியும்.

„யார் இந்த மாதவி?“ என்ற கேள்வி முதன்முறையாக என்னுள் எழுந்தபோதே அவரை என்னால் அடையாளம் காணமுடிந்தது. பல்கலைவாணரான ஒரு முழுமை பெற்ற கலைஞனாக அவர் இருக்கவேண்டும் என்ற என் தீர்மானம் பொய்க்கவில்லை.
ஓர் ஓவியர் சிறந்த எழுத்தாளராகவும் இருப்பதில் அதிசயப்பட ஏதுமில்லை என்றானபோது ஓர் ஓவியக் கலைவேள் மாதவி என்ற புனைபெயருக்குள் மறைந்துநின்று கதை படைப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

சிவகுமாரன் என்றால் அவருக்கு ஆறுமுகங்கள் இருந்தாகவேண்டும் இல்லையா?
பட்டதாரி, ஓவியர், எழுத்தாளர், பத்திரிகாசிரியர், பாடலாசிரியர், சிற்பி .. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
கலை இலக்கியத்துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் அவர் சிறந்து நிற்கிறார் ஒரு முழுமை பெற்ற கலைஞனாக அவர் வாழ்கிறார்
அவரது கலைப் படைப்புக்கள் காலகாலத்துக்கும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதால் இதுபோன்ற தொகுப்புக்களும் அவசியமானவை.
பெயரில் சிவகுமாரன், ஓவியத்தில் கண்ணா, மணிக்கதைகளில் ஏன் மாதவி? ஒருவேளை மாதவம் செய்துதான் கதைகளைப் பிரசவிக்கிறோம் என்பதானாலோ?
சொல்லவேண்டியதைச் சொல்லவேண்டிய நேரங்களில் சொல்லித்தான் ஆகவேண்டும். மாதவியின் மணிக்கதைகள் அதைச் செய்கின்றன.

000

அப்போது நான் சொல்லாதது:

கலாநிதி மு.க.சு.சிவகுமாரனின் பன்முகங்களில் எனக்கு மிகப்பிடித்த முகம்-
ஓவியர் கண்ணா!

இருபதாண்டுகளுக்கு முன்பு எனது நெடுங்கதை ஒன்றுக்கு கண்ணா வரைந்திருந்த சித்திரம் எனக்கு கண்ணாவை அறிமுகப்படுத்தி வைத்தது. அன்றிலிருந்தே அவரது ஓவியங்களுக்கு நான் இரசிகனாக மாறியிருந்தேன்.

இயற்கையை இயற்கையாக வரைதல் என்பது புகைப்படத்தினூடு ஒரு காட்சியை படம்பிடித்தல் போன்றது. ஆனால் காட்சிகளினோடு மன உணர்வுகளையும் கலந்து சித்திரங்களில் தருவதென்பது ஓர் சிறந்த ஓவியனாலேயே சாத்தியமானது.
மேலோட்டாகப் பார்க்கும்போது வெறும் கோடுகள்போலத் தோற்றமளிக்கும் ஓவியங்கள் சற்று ஆழமாகப் பார்க்கும்போது வாழ்க்கைக் கோலங்களைப் படம்பிடித்துக் காட்டும் பாங்கினை கண்ணாவின் ஓவியங்களில் நாம் காணமுடியும்.
உலகெங்கும் ஓவியக்கலைஞர்கள் பலர் இருந்தாலும் தத்தமது தனித்துவத்தின் மூலம் சிறப்புப் பெறுபவர்கள் ஒருசிலரே.
அவர்களுள் ஒருவராக கண்ணா இருப்பது பெருமைக்குரியது. புலம்பெயர்ந்து வாழும் இந்தப் பொழுதுகளிலும் அவரது ஓவியங்களில் தாயகத்து நினைவுகளைத் தரிசிக்க முடிகிறது.
அவரது ஓவியங்களை இரசிக்கும் கணங்களில் எனக்குள் ஒரு கவிதையோ கதையோ தலைகாட்டும். அதுவே அவர்மனதிலும் இருந்தது என்று அவரோடு பேசுகிற சந்தர்ப்பங்களில் அறிந்து வியப்பேன்.
இயற்கையின் இரசிகன் அவர்.
எதிலும் அழகைக் காணும் அல்லது அழகைத் தேடும் அவரது உளப்பாங்கு அவரை ஓர் அழகியல் கலைஞன் என்று என்னை அழைக்க வைக்கிறது.
அவரது பல கலைப்படைப்புக்கள் ஜெர்மனியில் காட்சிப்படுத்தப்பட்டு அவரது திறமை பன்னாட்டவர்களும் பார்த்துணரும் சந்தர்ப்பத்தை வழங்கியிருககின்றன என்பதையும்  மகிழ்வோடு இங்கு நான் குறிப்பிட்டாகவேண்டும்.




இந்த இளைய கலைஞர் இன்று (2012) அகவை அறுபதை நிறைத்து மணிவிழாக் காண்கிறார்.
கண்ணாவிடமிருந்து இன்னும் நிறையக் கலைப்படைப்புக்களை எதிர்பார்த்து காலம்  காத்திருக்கிறது.
துள்ளும் இளமையோடு தொடர்க!


வாழ்த்துக்களுடன்
இந்துமகேஷ்
ஜெர்மனி















Dienstag, 4. Juli 2017

இனிஅவர்கள் - நெடுங்கதை

இனி அவர்கள்

(நெடுங்கதை)



ஓர் அறிமுகம்.



ஆண்டு 2000 தைத்திங்களில் பூவரசு வாசகர் அரங்கம் இலக்கிய நிகழ்வின்போது படைப்பாளர்களிடமும் வாசகர்களிடமும் கதை எழுதுவதில் ஒரு புதிய முறை அறிமுகமாயிற்று.

ஓர் எழுத்தாளர் ஒரு கதையை ஆரம்பித்து வைக்க வாசகர்களே சம்பவங்களைத் தொகுத்து கதையை வளர்த்துச் செல்வதுதான் அது.


2002ம் ஆண்டு வாசகர் அரங்கில் ஒரு கதைக்கான கருவை ஒர் எழுத்தாளர் எடுத்துத் தர அதை இன்னோர் எழுத்தாளர் ஆரம்பித்து தொடர்ந்து சில எழுத்தாளர்கள் எழுதி கதையை நிறைவு செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் இதுபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய பல கதைகள் உருவாகியிருக்கின்றன. எனினும் புலம்பெயர் எழுத்தாளர்களிடையே இது புது முயற்சிதான்


முன்னணி எழுத்தாளரான திரு.இராஜன்முருகவேல் அவர்களிடம் கதையின் முதற்பகுதியைத் தொடங்குமாறு கேட்டிருந்தோம்.

தொடர்ந்து 4 எழுத்தாளர்களிடம் கதையின் அடுத்த அத்தியாயங்களை வரிசையாக எழுதும் பணியை ஒப்படைத்தோம்.

ஆனால் கதை பற்றி அவர்களுக்கு எவ்வித தரவுகளும் தராமல் அவர்களது விருப்பப்படியே கதையை வளர்த்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டோம்.

கதையை யார் ஆரம்பித்தார்கள் யார் தொடர்ந்தார்கள் யார் முடித்துவைக்கப் போகிறார்கள் என்பது கதை நிறைவுறும் வரையில் கதையை எழுதிய எழுத்தாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் தமது விருப்பப்படியே கதையை வளர்த்தார்கள்.

முதலில் தொடராக பூவரசில் இதனை வெளியிடலாம் என்று எண்ணியிருந்தபோதும் ஆண்டுமலரில் இந்தக்கதை முழுமையாக வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என முடிவுசெய்தோம்.


இந்தக் கதையை உருவாக்க ஆர்வத்தோடு ஒத்துழைத்த முன்னணி எழுத்தாளரான திரு. இராஜன் முருகவேல்,

பூவரசு 10வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சாந்தினி வரதராஜன்,

பூவரசு 11வது ஆண்டு நிறைவுப் போட்டிகளில் சிறுகதைக்கான முதற்பரிசுபெற்ற எழுத்தாளர் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன்,

பூவரசின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து தனது படைப்புக்களால் பூவரசை அலங்கரிக்கும் பூவரசின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி புஷ்பராணி ஜோர்ஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வது எனது கடமையென்று கருதுகிறேன்.



அன்புடன்

இந்துமகேஷ்
(தை 2003)
























இனி அவர்கள்!?

(பூவரசு இனிய தமிழ் ஏட்டுக்காக ஜேர்மனியில் ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய நெடுங்கதை)



இராஜன் முருகவேல்
எழுதிய
முதலாம் பகுதி




இருக்கைகளில் எல்லோரும் ஒழுங்காக அமர்ந்திருக்கிறார்களா என இருமருங்கும் அவதானித்தவாறு நகர்ந்துகொண்டிருந்தான் அவன். அருகிலிருந்த மாலாவும் பிள்ளைகளும் சீற் பெல்டை சரியாக கொழுவியுள்ளார்களா எனக் கவனித்தான். அவர்கள் மூவரின் முகங்களும் மகிழ்ச்சிப்பூரிப்பில் மலராகப் பிரகாசமாயிருந்தன.

விமானம் ஓடுபாதையில் மெதுவாக நகர ஆரம்பித்தது.

பிள்ளைகள் இருவருக்கும் அது முதல் விமானப் பயணம். இருவரும் தாய் மாலாவைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்குப் பதில் சொல்வதில் அவளுக்குச் சலிப்பேற்பட்டாலும், அதுவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

தாயகத்துக்கு இன்று போகலாம், நாளை போகலாம் என எண்ணி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவேளைகளில் ஒவ்வொரு புதுப்புதுப் பிரச்சினைகள் எழ, எண்ணங்கள் ஏக்கங்களாவதிலேயே வருடங்கள் கழிந்தவேளையில், ஈற்றில் ஒருமாதிரியாகத் தாயகத்துக்கு வெளிக்கிட்டாகிவிட்டது.

ஜேர்மனிக்கு வந்தவேளைக்கும் தற்போது தாயகத்துக்கு செல்லும் பொழுதுக்கும் இடையில்தான் எவ்வளவு காலங்கள் வருடங்களாகக் கழிந்து, உருவத்தில் மட்டுமல்லாமல் வாழ்விலும் மாற்றங்களைத் தந்துவிட்டன.

தனியாய் வந்து, மாலாவோடு இணையாகி குடும்பமாகி இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகி, இடையிடையே பெற்றோரின் சகோதரங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, உழைப்பே பிரதானமாகி, பணமே அதன் பலனாகி, அதற்காக மேனியை உருக்கி தற்போது இளமை முடியும் விளிம்பில் தாயகத்தை நோக்கி புறப்பட்டுவிட்டான் ஆதவன்.

'அப்பு... கவனமாக போவிட்டு வா ராசா... உடம்பை கவனிச்சுக் கொள்ளணை!' என்று கட்டியணைத்து உச்சிமோர்ந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பிய தாயின்நிலை அவன் மனக்கண்முன்னால் நிழலாடியது.

அப்போது ஆதவன் இளைஞன். தற்போது கேசத்தில் ஆங்காங்கே நரைவிழுந்து, இரண்டு பிள்ளைகள் அப்பாவென விளிக்கும் ஒரு குடும்பத் தலைவன்.

நேற்று தொலைபேசியில் தாய் விமானநிலையம் வருவதாகக் கூறினாள்.
அவளுக்கும் பொறுமையில்லை.

விமானத்தால் இறங்கிய உடனேயே மகனைக் கண்டுவிடவேண்டும் என்ற ஆசை அவளுக்கும். அவனை... அவனது மக்களை... பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பெற்றவளுக்குள் பொங்குவதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

விமானம் திருவனந்தபுரத்துக்கு மேலாகப் பறப்பதை முன்னாலுள்ள திரை துல்லியமாகக் காட்டியது. இன்னும் ஒரு மணி நேரம். கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்துவிடும். இனந்தெரியாத பரபரப்பு அவனுள். நிமிடங்கள் மணிந்தியாலங்களாக நகர்வதுபோலிருந்தது.

தாய்தான் மனதில் அடிக்கடி வந்து நின்றாள். பார்த்ததும் கட்டியணைத்து அழுவாளா? என்னில் ஏற்பட்டுள்ள உருவமாற்றத்தைக் கண்டு வியப்பாளா? மருமகள் மாலாவை எப்படி வரவேற்பாள்? பிறந்ததிலிருந்தே பார்த்தறியாத பேரப்பிள்ளைகளைக் கண்டு உணர்வுள் உருகிக் குளிப்பாளா? எண்ணிப் பார்த்தான்.

சீற் பெல்ட்டை அணியும்படி அறிவித்தல். விமானம் தரையிறங்கியது..

பாஸ்போட் செக்கிங், லக்கேஜ் எடுப்பு, டியூற்றிபிறீ சொப் கொள்வனவு என முடித்துக் கொண்டு வெளியே வந்தவனை ஓடிவந்து கட்டியணைத்துக் கதறத் தொடங்கினாள் தாய். முகம் சுருங்கி தேகம் நலிந்து நரம்புகள் பீறிட்டு வெளிக்காட்டும் கரங்களைப் பற்றிய ஆதவனுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. வார்த்தைகள் வெளிவராமல் உணர்ச்சிப் பெருக்கில் தடுமாறின. மாலாவின் யக்கற்றைப் பிடித்திழுத்தவாறு மலங்க மலங்க விழித்தனர் பிள்ளைகள் இருவரும்.

"அப்பாச்சி..." மாலா அவர்களுக்குக் கூறினாள். பேரப்பிள்ளைகளைக் கட்டியணைத்து அழப் போகிறாள் தாய் என நினைத்தான் ஆதவன். ஆனால் அவளோ...

"அப்பு... யாதவன் என்ன செய்யிறானணை?"

அவள் அப்படி அந்த இடத்தில் கேட்பாள் என அவன் நினைக்கவில்லை. மாலா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆதவனின் முகம் விகாரமானது. கண்கள் கோபத்தில் சிவந்தன.

"அம்மா... இதைக் கேட்கவோ விமான நிலையத்துக்கு வந்தனீங்கள்? அவனுக்கென்ன... அவனைப்பற்றிக் கதைக்கிறதெண்டால்... நான் வீட்டை வரேல்லை.. எங்கையாவது ஹோட்டலிலை இருந்தூட்டுப் போறன்.."

அவனின் பேச்சைக்கேட்டுத் திகைத்து நின்றாள் அந்த அப்பாவித் தாய்.

0

அது அந்த நகர பொதுப்பூங்கா. அங்கே பொழுதுபோக்க வரும் மக்கள் அமரவென சில வாங்கில்கள்.

அதிலே ஒரு இளைஞன் கையில் பியர் போத்தலுடன்.

"அங்கை பார்க்காமல் வா.."

"ஏனண்ணை.."

"பாத்தியெண்டால் இஞ்சை வந்தீடுவான்... காசு தாவெண்டு பிசின்போல ஒட்டீடுவான்... கழட்டிவிடுறது கஸ்டம்... ஏன் சோலியை..?"

"ஆர் அண்ணை அது?"

"யாதவன்.. தமையன் குடும்பத்தைக் காப்பாத்துவாணெண்டு ஜேர்மனிக்கு கூப்பிட்டுவிட.. சனியன் றோட்டிலையும் பார்க்கிலையும் குடிச்சுக்கொண்டு திரியுது... குடிச்சுப்போட்டு சும்மா இருந்தாலும் பறுவாயில்லை... மற்றவங்களுக்கும் தொந்தரவு.."

கலைந்த கேசம். வாரக்கணக்கில் சேவ் செய்யப்படாத முகம். கண்களில் போதைக்கும் விஞ்சி வெளிக்கிளம்பும் ஏக்கம். பியர் போத்தலை தூக்கி அண்ணாந்து ஒரு மிடறு விழுங்கிக் கொண்டான்.

"ஒரு ஹீயாவது சொல் கண்ணே... உன் காதலன் நான்தான் என்று... சொல்லமாட்டியா... சொல்லமாட்டியா?"

"காத்திருப்பேன் என்றாயே.. கடிதம் போடுவேன் என்றாயே... இப்போது நீ எங்கே... எனக்குள்ளா? அல்லது..??"

அவன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

என்ன நினைத்தானே தெரியவில்லை. உரத்த குரலெடுத்துப் பாட ஆரம்பித்தான்.

"அப்பிள் பெண்ணே நீதானோ... ஐஸ் கிறீம் சிலையே நீதானோ..."

அந்தப் பாடலுடன் சேர்ந்து அவன் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.







இனி அவர்கள்..












சந்திரவதனா செல்வகுமாரன்
எழுதிய
இரண்டாம் பகுதி


இப்படித்தான் அன்று நதியாவும் யாதவன் ஜேர்மனி செல்வது திண்ணமாகியபோது கண்ணீர் வெள்ளம் அப்பிள் கன்னங்களில் நதியாக ஓட சோகமே உருவாய் யாதவன் முன் நின்றாள்.

மாதவனுக்குமட்டும் பிரிவதில் என்ன சந்தோசமா?

நாட்டு நிலைமை ஓடு ஓடு என்று துரத்த வீட்டு நிலைமையைச் சொல்லி ஜேர்மனியிலிருந்து அண்ணன் அழைக்க வேறு வழியின்றித்தான் புறப்பட்டான்.

நினைவுகளை நதியாவிடம் விட்டுவிட்டு விமானமேறியவன் நேரே ஜேர்மனிக்கு வந்து சேர்ந்திருந்தால் நிகழ்வுகள் வேறுமாதிரித் தொடர்ந்திருக்கும். அவனுடன் சேர்ந்து விதியுமல்லவா விமானம் ஏறிவிட்டது.

பாங்கொக்கில் இரண்டு கிழமைதான் நிற்கவேண்டி வருமென ஏஜென்சி கொழும்பில் வைத்துச் சொல்லியிருந்தான். ஆனால் ஏழு மாத காலங்கள்.. சீ! என்று யாதவன் அலுத்துப் போகுமளவிற்குப் போய்விட்டது.

முள்ளின்மேல் போட்ட சேலையைப்போல் அவன் நிலை ஆகிவிட்டது.

அங்கு யாதவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த விடுதிபோன்ற வீட்டில் பழையவர்கள் போவதும் புதியவர்கள் வந்து சேர்வதுமாய் ஏறக்குறைய 24, 25 பேர்மட்டில் எப்போதும் நின்றார்கள். ஏஜென்சிதான் அங்கே ராஜா. அவன் வைத்ததுதான் சட்டம். அங்கே பெண்கள் வந்தால் முதலில் அந்தப் பெண்களுக்கு சகல வசதிகளுடன் ராஜமரியாதை கிடைக்கும். பின்பு போகப் போக ஏஜென்சியின் இச்சைக்கு அவர்கள் இணங்காத பட்சத்தில் நாயிலும் கேவலமாக நடத்தப்படுவார்கள். இணங்கியவர்கள் அவர்கள் மீதான ஏஜென்சியின் மோகம் தணிந்ததும் போகவேண்டிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

அந்த அநீதிகளைப் பார்த்தும் பாராதவர்கள்போல ஆண்கள் இருக்கவேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். யாதவனுக்கு அந்த சூட்சுமம் தெரியாமற் போனதால் வந்ததே வினை.

ஆறு மாதங்கள் எந்தவித முன்னேற்றமுமின்றி ஓடி விட்டன.

இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை வந்தபோதுதான் எந்த அநீதியையும் பார்த்தும் பார்க்காதவன்போல் நடிக்கத் தொடங்கினான். பெட்டிப் பாம்பாய் ஒடுங்கி இருந்தான். நதியாவின் நினைவில் குளிர்காய்ந்தான்.

ஏழாம் மாதம் அவன்பக்கம் காற்று வீசியது. அவனும் அவனுடன் இன்னும் இருவரும் உக்ரைன் செல்வதென்பது முடிவானது. உக்ரைன் போய்விட்டான். பக்கத்தில்தானே ஜேர்மனி என நினைத்தான்.

ஆனால் உக்ரைன் குளிரில் சாப்பாடுகளும் சரியாக இல்லாமல் பனிக் குவியலுக்குள் ஏறி இறங்கியபோது பாங்கொக் பருப்புக்கறியும் சோறும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டான்.

இந்தா எல்லையைக் கடந்துவிடுவோம் என்ற நிலையிருக்கையில் அடிக்கடி தடைகள் வந்து பயணம் தடைப்பட்டுப்போய் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

மனம் தளர்ந்தபோதெல்லாம் இதமாகத் தழுவியது நதியாவின் நினைவொன்றுதான். ஜெயில்வாசம் போன்ற கடினமான இரண்டு வருடங்கள் உக்ரைனில் கழிந்த பின்புதான் அவனால் ஜேர்மனியை வந்தடைய முடிந்தது.

இனியென்ன வாழ்க்கையில் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு ஜேர்மனியில் வாழ்க்கையைத் தொடங்கியவன் நதியாவுக்கும் கடிதங்களை எழுதத் தொடங்கினான். ஆனாலும் அவன் நினைத்ததுபோல ஜேர்மனிய வாழ்க்கை ஒன்றும் வசந்தத்தைக் கொட்டிக்கொண்டு அவனுக்காகக் காத்திருக்கவில்லை. மாறிமாறி அகதி முகாம்கள் விசாரணைகள் என்று ஒரு வருடம் ஓடிவிட்டது.

நதியாவின் கடிதங்கள்தான் வரத்தவறிவிட்டன.

நிரந்தரமான ஒரு முகவரி கிடைத்தபின் இனி என் நதியாவின் கடிதம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான்.

பிற்சேரியாவில் மாப்பிசைந்தான்... மாலையில் சுப்பர் மார்க்கட்டில் கிளீனிங் வேலை செய்தான்...

அண்ணனுக்குக் கூப்பிட்ட காசைக் கொடுத்து அம்மாவுக்கும் அனுப்பி எப்படியாவது மிச்சம் பிடித்து நதியாவையும் கூப்பிட்டுவிட வேண்டுமென்ற அவா அவனுள்.

நினைக்கின்ற அளவு வேகத்தில் பணத்தைச் சேர்க்க முடியாவிட்டாலும் முயன்றான். தினம் தினம் நதியாவின் கடிதத்துக்காகக் காத்திருந்து ஏமாந்தான். முடிவில் விடயத்தை அம்மாவுக்கு எழுதினான்.

அம்மாவின் பதில் கடிதம் அவனை ஆடிப்போக வைத்துவிட்டது.

'இவ்வளவு காலமும் எங்கை போனவர்? ஜேர்மன்காரியளோடை சுத்திப்போட்டு இப்ப அலுத்துப் போக என்னைத் தேடுறாரோ?' என்று நதியா அம்மாவிடம் சண்டைக்குப் போயிருக்கிறாள்.

நதியாவுக்கு எத்தனை கடிதங்கள் எழுதியும் அவள் யாதவனின் உண்மை நிலையை உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ தயாராக இருக்கவில்லை. யாதவன் பணத்தைப் பாராது தொலைபேசி அட்டைகளை வாங்கி வாங்கி நதியாவுடன் கதைக்க முற்பட்ட ஒவ்வொரு தடவையும் அவள் சரியாகக் கதைக்காமல் கோபமாகத் திட்ட தோற்றுப் போனவனாய் நின்றான்.

இயலாமையில் மெதுமெதுவாகக் குடிக்கத் தொடங்கினான்.

பலசமயங்களில் குடித்துவிட்டு வீட்டுக்கு அண்ணனிடம் போகப் பயந்து அந்தப் பூங்கா வாங்கிலிலேயே தூங்கிக் கொண்டான்.

குளிரும் குடியும் அவனை நோயாளி ஆக்கியது.

வேலையையும் தொலைத்தான். அண்ணன்கூட அவனைப் புரிந்துகொள்பவனாக இல்லாமல் இவனால் மானம் கப்பல் ஏறுகிறதே என்றுதான் கத்தினான்.

இறுதியாக ஒருநாள், 'வையடா ரெலிபோனை' என்றும் நதியா சொல்லிவிட்டாள். அதோடு யாதவன் முழுக் குடிகாரனாகிவிட்டான்.

பிறகும், பிறகும் ஏதோ ஒரு நப்பாசையில் தொலைபேசியில் நதியாவை அழைப்பதும் அவள் திட்டுவதைக் கேட்டுவிட்டு அழுவதுமாய் தொடர்ந்தான்.

அன்று நதியா அழுதபோது ஆண்மகனாய் நின்று அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் இன்று தானிருந்து அழுதான். அவன் மனதில் படிந்துவிட்ட சோகத்தையோ ஆற்றாமையையோ துடைத்தெறிய யாரும் அவன் அருகில் இல்லை.







இனி அவர்கள்...

சாந்தினி வரதராஜன்
எழுதிய
மூன்றாம் பகுதி.




விமானநிலையத்தில் ஆதவன் தன்னை மறந்து வெளியே துப்பிய வார்த்தைகள் அத்தனை உள்ளங்களையும் மெளனிக்க வைத்தது. ஆனால் அவர்களின் மனதிலோ புதிது புதிதாய் கேள்விகள் எழுந்தபடியே இருந்தது. எழுந்த கேள்விகளை மறுபடியும் விழுங்கியதால் அதை ஜீரணிக்க முடியாமல் கண்ணீராக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

'எத்தனை வருடங்கள் கரைந்த பின்பு என் மகனைக் காண்பதற்காய் ஆசை ஆசையாகக் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு ஓடோடி வந்தேன். அத்தனை எதிர்பார்ப்பினையும் ஒரே நொடியில் கலைத்துவிட்டானே. இவன் என் ஆதவனா? கடந்துபோன இருபது வருடங்கள் இவனை பலவழிகளில் மாற்றியிருந்தது. உருவத்தால்மட்டுமல்ல உள்ளத்தாலும். எது மாற்றியிருக்கும்? காலமா அல்லது அவனின் புது உறவா? எது மாற்றியிருக்கும்?'

இத்தனை நேரமும் சிந்தனையில் கழிந்த அந்த உள்ளம் அப்பொழுதுதான் தன் மருமகளின் முகத்தை ஏறிட்டு நோக்கியது. ஆனால் மாலாவோ பிள்ளைகளை அணைத்தபடி எதிலுமே ஒட்டாமல் விழிகளை மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்த குழந்தைகளின் உருவத்தில் யாதவனைக் கண்டதுபோல் உணர்ந்த அந்தத் தாயின் உள்ளம் வேதனையில் உருகியது.

'யாதவன் என்ன செய்திருப்பான்? இவன் ஏன் அவனின் பெயரைக் கேட்டாலே கொதித்தெழுகிறான்? அப்படி என்னதான் நடந்திருக்கும்? யாரிட்டைபோய் நான் கேட்கமுடியும்..? பாவம்... என்ரை குஞ்சு இப்ப தனியா அங்க என்ன செய்கிறானோ தெரியவில்லை..!'

தாயின் முகத்தில் ஓடும் சிந்தனைகளைப் பார்த்த ஆதவனின் கண்களில் கண்ணீர் ஜனித்துக்கொண்டே இருந்தது.

'பாவம் அம்மா எத்தனை ஆசைகளைத் தேக்கியபடி என்னைப் பார்க்க வந்திருப்பா. அத்தனை எதிர்பார்ப்புக்களையும் கற்பனைகளையும் ஒருநொடியில் உடைத்தெறிந்துவிட்டேனே. நான் ஏன் இப்படி மாறினேன்? யாதவன் ஏன் இப்படி மாறினான்?' - எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்தவனை, 'ஆதவா எழும்பு வீடு வந்திட்டுது!' என்ற தாயின் அழைப்பு திடுக்கிட வைத்தது.

0

கேட்டு வீசுவதில்லை காற்று. சொல்லிக்கொண்டு வருவதும் இல்லை மழை. எல்லாமு அழையாத விருந்தாளிகள்போல் வருவதும் போவதுமாக... யாதவனுக்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளும் அப்படித்தான். யாதவன் தன் நிலை மறக்கும் பொழுதுகளிலெல்லாம் நதியாவின் நினைவுகள் அவனின் இதயக்கதவை தட்டி அனுமதி கேட்காமலே எழுந்து ஓடிவருகின்றன. அன்றும் அப்படித்தான்.

மெல்ல பனித்துளிகள் கொட்டத் தொடங்கியது.

இலைகளை உதிர்த்த மரங்கள் வெறும் எலும்புக் கூடுகளாய் விறைத்து நின்றன. ஆனால் கைகளைமட்டும் மேலே தூக்கி வானத்திடம் ஏதோ யாசிப்பதுபோல் நின்ற காட்சி யாதவனைச் சிரிக்கத் தூண்டியது. பனித்துளிகளுக்கு தம்முகம் காட்ட பயந்த வெள்ளையர்கள் முகத்தை கீழ் நோக்கி புதைத்தபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். யாதவனோ எதுவும் நடக்காததுபோல் வழமைக்கு மாறாக, 'குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்துவிடலாம்' என்ற பழைய பாடலுக்குள் மூழ்கியபடி தவழ்ந்துகொண்டிருந்தான்.

காற்றுக்கூட எட்டிப்பார்க்கப் பயப்படும் அந்த இருண்ட அறை அவனின் வரவுக்காய் விழித்திருந்தது.

இரண்டு மனம் வேண்டும் பாடலை ஒலிபரப்பியபடி தன்வரவை சுற்றுவட்டாரத்திற்கு அறிவித்தான் யாதவன்.

மதுவின் மயக்கமும் மாதுவின் ஏக்கமும் அவனின் இமைகளை இறுக மூடவைத்தன.

இமைகள் மூட இதயம் திறந்துகொண்டது.

'சனியன்... அந்தப் பக்கமே பார்க்காதே..!' அண்ணாவின் நண்பனின் வார்த்தைகள்.

'கறுப்பு பண்டி' என்ற வெள்ளையனின் துப்பலும் அவனின் இமைகளை நனைத்தன.

இந்த வார்த்தைகள் வாயிலிருந்து வெறுமையாக வெளியில் விழுந்தவைகள் அல்ல. அவர்களின் எண்ணத்திலிருந்து எழுந்து வந்தவை.

'அந்த வெள்ளையன் என்னை அறியாதவன். அவன் அப்படித்தான் பேசுவான். ஆனால் சுந்தர் அண்ணா... முன்பென்றால் 'அப்பன் அப்பன்' என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்தவர் இப்போ அதே வாயால்...? இதற்கு என்ன காரணம்... நான்தானே... இல்லை. அவள் நதியா...!'

நதியாவின் நினைவு தரையை நனைத்தது.

'யாதவா.. அழாதே அப்பன்..'

அதே குரல்... சில நாட்களாக அவனின் உணர்வுகளை எழுப்பி அழைக்கும் குரல்... பக்கத்திலிருந்து தன் தலையை வருடுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தவன் யார் யார் என அந்த இருண்ட அறையைத் துழாவினான்.

இருட்டும் அறையின் சுவர்களும் அவனின் நிலையைப் பார்த்து மெளனமாக அழுதன.

மறுபடியும் மயக்கம்... அப்பொழுதும் அதே குரல் 'யாதவா அழாதே அப்பன். நான் இருக்கிறன்..'

'இது.. இது என்ர அம்மாவின் குரல்..!'

'அம்மா..! அம்மா..!' என அழுதபொழுது யாதவன் மறுபடியும் குழந்தையானான். அவனுக்கு அம்மாவின் மடியில் முகம்புதைத்து அழவேண்டும்போல் தோன்றியது.

'நான் ஏன் இவ்வளவு நாட்களாக அம்மாவை நினைக்கவே இல்லை. எப்படி மறந்தேன்..?' எனத் தன்னைத்தானே கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தவனை கதவு தட்டும் சத்தம் தன்நிலைக்கு வரவழைத்தது.

'யாராக இருக்கும்? என்னைத் தேடி இங்கு யார் வரப்போகிறார்கள்?' என நினைத்தவாறு தள்ளாடியபடியே எழுந்து கதவைத் திறந்தவனுக்கு அண்ணனின் முகம் அதிர்வினை அளித்தது.

அண்ணா எப்போ வந்தார்? என எண்ணியவன் அவரின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் தலையைக் குனிந்துகொண்டான். ஆதவனோ எதுவும் பேசாமல் அவன் கைகளில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு மெளனித்தபடி வெளியேறினான். இது என்ன..? யார் கொடுத்துவிட்டிருப்பார்கள்? என்ற சிந்தனையிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்து நிமிர்ந்து பார்த்தவனுக்கு எதையோ தேடுவதுபோல் குனிந்த தலையுடன் சென்றுகொண்டிருந்த அண்ணாவின் முதுகுப்பக்கமே விழிகளில் விழுந்தது.

சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தவனை கைகளிலிருந்த அந்த வெள்ளை உறை தன்நிலைக்குத் திருப்பியது. 'என்னவாக இருக்கும்..?' என எண்ணியவாறு அறையிலிருந்த இருட்டை விலக்கி அதன் ஒளியில் உறையைப் பிரித்தவன் அப்படியே உறைந்து போனான்...

'இது.. இது.. என்ரை அம்மா..! அம்மாவுக்கு என்ன நடந்தது?' அவனது இதயத்தில் இடி இறங்கியதுபோல் வலித்தது. சற்றுநேரம் எதுவும் புரியாமல் விழித்தபடி இருந்தவனை தாயின் சிரித்தமுகம் மறுபடியும் சிந்திக்கத் தூண்டியது.

இளைப்பாறிய ஆசிரியை திருமதி கனகம் அவர்களின் மரண அறிவித்தல்.
கைகள் நடுங்க அந்தப் பத்திரிகையை திரும்பவும் பார்த்தவன், 'என்ரை அம்மாவுக்கு என்ன நடந்தது? ஏன் அம்மா... ஏன் அம்மா என்னைவிட்டுப் போனனீங்கள்?' அவனின் கேள்விகள் அந்த நான்கு சுவர்களிலும் மோதி திரும்பவும் அவன் கன்னத்தில் வந்து மோதின.

அம்மாவின் முத்துமுத்தான கையெழுத்து...

யாதவா மகனே!
யாதவன் தன்னை மறந்து 'ஓம் அம்மா!' என வாய்விட்டு பதில் கொடுத்தான்.
இது அம்மாவின் இறுதிக் கடிதம் என்ற உண்மை அவனை ஓங்கி அறைந்தது. இப்பொழுது அவனுக்குப் புரிந்துவிட்டது. அம்மா சில நாட்களாக அவனை அழைப்பதும் அணைப்பதும் இதனால்தான்.

அப்போ நான் தனியாக இல்லை.. என்ரை அம்மா என்னுடன்தான் இங்கே என் பக்கத்தில்தான் என்ற உண்மை அவனை மேலும் ஊமையாக்கியது.

அம்மாவின் இறப்பு யாதவனுக்கு வலித்தது.

நதியாவின் பிரிவால் ஏற்பட்ட வலியைவிட இது மாறுபட்டு இருந்தது.

பெரியகோடு சின்னக் கோட்டை அழித்துச் சென்றது.

அம்மாவின் கடித வரிகளில் கண்களைப் பதித்தான்.

யாதவா உன்னைப்பற்றிய சகலவிடயங்களும் அறிந்து வேதனைப்பட்டேன்.
என் செல்வமா இப்படி? என்னால் நம்பவே முடியவில்லையே யாதவா. உன்னைப் பிரிந்து நான்படும் வேதனை உனக்குப் புரியாது. ஆனால் நீயோ உன்னை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிய பெண்ணுக்காக உன்னை நீயே அழிக்கின்றாயா? யாதவா, அவள் மனதிலிருந்து உன்னை இலகுவாக தூக்கி எறிந்துவிட்டாளடா. அவள் மட்டுமல்ல. உன் உடன்பிறப்பும்தான். ஆனால் என்னால் முடியாது. தென்னை மரத்திலிருந்து அதன் ஓலையைப் பிரித்தெடுத்தாலும் அல்லது தானாக தவறினாலும் அது இருந்ததற்கான வடு அந்த மரத்திலிருந்து அழிவதே இல்லை. அதுபோல்தான் நீ என் மகன். என்னால் உன்னை வெறுக்க முடியாது குஞ்சு. மனிதர்களின் பாதம்பட்ட இடமெல்லாம் பாதையாகிவிடும் என்பார்கள். அந்த பாதையெல்லாம் முள்ளைவிதைத்து விட்டார்கள். அந்த முள்ளு என் பிள்ளையின் பாதத்தில் குத்திவிடுமோ என அஞ்சித்தானே என் செல்வத்தை பிரிந்தேன். ஆனால் நீயோ உன் உடன்பிறப்பும் உறவுகளும் முகம் சுளித்து விழி சுருக்கி பூச்சியைப் புழுவைப் பார்ப்பதுபோல் பார்க்க வைத்துவிட்டாய்.
என் நெஞ்சு நோகுது யாதவா.
மகனே! எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் எல்லோரும் இந்த மண்ணுக்குத்தான் சொந்தம்.
ஆனால் என் மகன் எப்படி வாழ்ந்தான் என்பதை இந்த மண்ணும் மனிதர்களும் மனதில் பதித்து வைத்திருப்பார்கள்.
அந்த பதிவுகள் இனிமையானதாக இருக்கவேண்டும்!
அவற்றை மீட்டிப் பார்க்கும் பொழுதுகளிலெல்லாம் மனமும் முகமும் மகிழ வேண்டும். யாதவா இங்கு ஒன்றாக இருக்கும் இரண்டு வெள்ளிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உன் நினைவு என்னை கொல்லுமடா கண்ணா.
யாதவா, நதிகள் நகரவேண்டும். ஒரே இடத்தில் இருந்தால் அதன் இயல்பு கெட்டுவிடும். அதுபோல்தான் உன் சிந்தனையை திசைதிருப்பு. நதிபோல் நகர். அதனோடு போட்டி போடு. பல ஆறுகள் ஆவென வாயை திறந்து உன்னை விழுங்கக் காத்திருக்கும். கடல்கள் கைநீட்டி அழைக்கும். எல்லாவற்றுக்குள்ளும் விழு. ஆனால் கலந்துவிடாதே. எழும்பு! மறுபடியும் நகர். உன் வாழ்க்கை நீண்டு விரியும்.
மகனே யாதவா! என்ன செய்யப் போகிறாய்..?

'நான் என்னம்மா செய்ய?' இப்போது யாதவனின் முகத்தில் புதிய சிந்தனைக் கோடுகள் படரத் தொடங்கின.

மகனே! கடைசியாக ஒன்று சொல்கிறேன் கேள். மரங்களின் வேர்கள் மண்ணுக்குள் மறைந்திருப்பதால் அது சாதாரண மனிதன் கண்களுக்குத் தெரிவதே இல்லை.

மரங்கள் நிமிர்ந்து நிலையாக நிற்பது கிளைகளாலும் அதன் இலைகளாலும்போல் தோற்றமளிக்கும். யாதவா, அந்த கிளைகளும் இலைகளும் இடையில் முளைத்தவை. இடையில் முளைத்த கிளைகளும் இலைகளும் விழும். பின் புதியன துளிர்க்கும். ஆனால் வேர் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். அது தன் மரத்திற்காக கைகளால் மண்ணை இறுகப் பிடித்தபடி வாழ்வைக் கழிக்கும். அந்த வேரின் கைகளுக்கு இப்போ சக்தி இல்லை யாதவா. அதனால் நீ எப்படியாவது நிமிர்ந்து நில். என் மகனே இருட்டைவிட்டு வெளியே வா. வந்து வெளிச்சத்தைப் பார். அப்போது நான் உனக்குத் துணையாக இருப்பேன். வருவியா யாதவா..?

'அம்மா..! அம்மா..!' என்று தன்னை மறந்து கதறினான் யாதவன்.

'என் அம்மாவை நான் எப்படி மறந்திருந்தேன்?'

கையிலிருக்கும்பொழுது பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டியவைகளை அகல கைவிரித்து காற்றிலே பறக்க விட்டுவிட்டு பின் காற்றிலும் மழையிலும் தேடி அலைவதுதானே மனித இயல்பு. அவனும் அப்படித்தான்.

'என்னைவிட்டு பிரிய மனமில்லாது பிரிந்த அந்த அன்பு முகத்தை நான் எப்படி மறந்தேன்? உயிரே உடலே உணர்வே என காதல்மொழி பகிர்ந்து பின் என் காதில் காறி உமிழ்ந்தவளுக்காக என் உயிரை அழித்து என்னை அழித்து... கடவுளே..!' என அழுதான் யாதவன். அவனின் கண்ணீருடன் கலந்து நதியா என்ற உருவம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கிற்று.

ஆனால் அம்மாவின் அன்புமுகம் அவனுள் ஆழமாகப் பதியத் தொடங்கிற்று.

அழுது அழுது களைத்தவனை அந்த இருட்டு அறை பயமுறுத்தியது.

'யாதவா! உன் அம்மாவின் சாவுக்கு நீதான் காரணம்!'

'ஓம்.. நான்தான்... நானேதான்!' என முகத்தை இரு கைகளாலும் மூடி கதறியவன் வெளியே ஓடினான்.

எங்கே போவது என தெரியாமல் ஓடினான். இருட்டும் அவனைத் துரத்தியது.

வெள்ளையர்கள் வெறுப்புடன் நோக்கினர். மனதுக்குள் புறுபுறுத்தனர்.

சுயநினைவற்று ஓடியவனை ஒரு கரம் இறுகப் பற்றியது.

''மகனே...! தொலைந்துபோகப் பார்த்தியே...!"

அந்தக் கரமும், மகனே என்ற வார்த்தையும் அவனை என்னமோ செய்தது.

"அம்மா...!" என தன்னை மறந்து அழைத்தவனை அந்த வெள்ளை மூதாட்டியின் கண்களும் கைகளும் அரவணைத்துக் கொண்டது.

பச்சை விளக்கு கண்களைச் சிமிட்டி வழிகாட்டியது. யாதவனுக்கு இப்போ நடப்பதற்கு நேரமே இல்லை.

அந்த பூங்காவும் கதிரையும் இப்போதும் அதே இடத்தில்தான்...
ஆனால் வெறுமையாக.






இனி அவர்கள்...

புஷ்பராணி ஜோர்ஜ்
எழுதிய
நான்காம் பகுதி


'அம்மா!' என்ற அந்த மூன்றெழுத்துக்குள் நிறைந்துள்ள சக்திதான் என்னே?

அந்த வெள்ளைத்தோல் போர்த்திய முகத்தில் தன் அன்னையைத் தேடும் வாஞ்சைக்குள் யாதவன்.

அந்தத் தாயின் கைகளின் அரவணைப்பில் தன் தாயே அவன் உருவில் வந்து தன் உயிரைக் காப்பாற்றித் தழுவியதான, வாய்மொழிகளால் சொல்லமுடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில், 'அம்மா!' என்று அவன் வாய் அவனையறியாது அழைத்தது.

அது இன்பமா அன்றேல் துன்பமா? எதுவும் புரிய முடியாது அவன் திணறினான். மனிதருக்குள் நிறத்தால் வெள்ளை கறுப்புப் பேதங்கள், மதங்களால் பற்பல மாற்றங்கள், மொழிகளால் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கலாம்.

உலகின் ஒளியாக இறைமகன் மானிட அவதாரம் எடுத்தார். அன்பு என்பதே அந்த ஒளியின் வடிவம். அதுவே உலகின் மகாசக்தி.

அன்பே சிவம். அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது. கூன் குருடு செவிடின்றிப் பிறத்தல் அதினிலும் அரிது. அப்படிப் பிறவியிலும் ஊனம் இல்லாத யாதவன் குழந்தையாகிக் குளறி அழுதபடி அவளை ஆரத் தழுவிக்கொண்டான். சுயநினைவு தப்பிய மயக்கம்போல், தெளிவற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இரண்டும் கெட்டான் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, அவன் தன்னைத் தானே குறுக்கு விசாரணை செய்ய முற்பட்டான்.

நடு இரவு...
அந்த மூதாட்டி அவனின் இந்தத் தெளிவற்ற பரிதாப நிலைகண்டு அவனை நடுத்தெருவில் கைநெகிழ்ந்துவிடாமல், அவன் பிறப்பு குலம் கோத்திரம் பார்க்காது, வேற்று நாட்டவன் அந்நியன் என்று தெரிந்தும்கூட தன் வீட்டிற்கு உடனடியாகவே வாடகைக் கார் மூலம் அழைத்து வந்தாள். அதில்தான் உலகப் பொதுமொழியான மனிதாபிமானம் சீவகாருண்யம் நிறைந்திருந்தது.

தனி மனிதனுக்குள் அவ்வப்போது தோன்றும் சிறு சிறு பிரச்சினைகள் உடனேயே தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்கப்படாமல் விடப்பட்டால் அவை சிறு தும்புகளாக ஓடிப் பின்னிப்பிணைந்து அடிமன ஆழத்தில் புகுந்து உணர்வுகளிற் கலந்து முறுக்கிடப்பட்ட கயிறாகத் திரிக்கப்பட்ட வடமாகி, அந்த வடமே அவனை விலங்கிட்டு அவனைச் சிந்தனைகளாற் சிறைப்படுத்தி விடுதலையடைய முடியாத சிக்கல்களுக்குள் கொண்டு சென்று பூதாகரமாகி அவனின் தூக்குக் கயிறாக மாறிவிடும்.

யாதவன் நிலையும் இவ்வகைதான். அவன் வெளிநாடு வர வெளிக்கிட்டு வாழ்வில் பல துன்பச் சூறாவளிகளைச் சந்திக்க நேர்ந்ததால் பல சோதனைகள் வேதனைகளுக்குள் அகப்பட்டு புறம்தள்ள முடியாது சிறைவாசம் அனுபவிப்பவன். மனவருத்தம் சொல்லில் அடங்கா, வெற்றி தோல்விகளை சமமாக மதிக்கத் தெரியாது தோல்வியை மறக்க மதுபோதைக்கு அடிமையாகி சமூகப் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டு வாழும் சில பலவீன மனிதர்கள் நிறையவே உண்டு.

இந்த வகையான பெலவீன மனிதனாய் யாதவனும்.
தாயை இழந்த பின்புதான் இடையில் வந்து தன் வாழ்வையே சூனியச் சுடுகாடாக்கிய நதியாவை எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டான். தாயின் புன்முறுவலில் அந்த மூதாட்டி அவனை அன்போடு தன் மொழியில் மகனே என்று விளிக்க அவளே தன் தாய் என எண்ணிப் புலம்புகின்றான்.

தொப்புள் கொடி உறவான என் தாயைப் பலகாலம் மறந்து, நதியா என்ற கிளை நதி வெள்ளத்தில் சிலகாலம் மூச்சுத் திணறினேன். அந்த வெள்ளமே மது என்ற வடிவம் தாங்கி என் வாழ்வை மூழ்கடித்துவிட்டது. அதே வெள்ளம்தான் என் அன்னை உயிரையே உறிஞ்சிக் குடித்துவிட்டது. என் அம்மாவை நான் தொலைத்துவிட்டேன். அம்மா.. அம்மா.. என் உயிரே என்னைவிட்டு எங்கே போனாய்? ஆதவன்... என் அண்ணா... தாயாகத் தந்தையாக எத்தனைமுறை என்னை நாடிவந்து, 'யாதவா, உனக்கு என்ன குறை? நதியா உன் தாகம் தீர்க்கும், நதியா இல்லாவிட்டால் உனக்கு ஒரு பிரியாவைத் தேடித் தர நாம் தயாராக உள்ளோம். குடி குடியையே கெடுக்கும். உன் குடும்பம் என்ன... மதிப்பு மரியாதை என்ன... பிறந்து வளர்ந்த வாழ்வென்ன... புலமைப் பரிசில் பெற்று பல்கலைக்கழகம்வரை படித்து எதிலுமே முதல் மாணவனாய் வந்த உன் கல்வியின் பெறுமதிதான் என்ன... உன் பிறவி நான் சொல்லுகின்றேன். உன் தாய் சகோதரர்களின் மானம் மரியாதைகளை எண்ணி உன்னை மாற்று. உன் அண்ணி பிள்ளைகளுடன் வந்து பேசிப் பழகிச் சந்தோஷமாக உன் பொழுதைக் கழி!' என்று புத்தி போதித்து, பாசத்தால் என்னை வருடிச் சென்றான். அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காகி, 'நதியா இன்றி எனக்கு வாழ்வேயில்லை.... வாழ்வே மாயம் பாடி, நீ எனக்குப் புத்தி சொல்லத தேவையில்லை. நீ உன் வேலையைமட்டும்!' என்று அவனை மதியாது எடுத்தெறிந்தபோது, 'நீயும் இனி குடிபோதையில் என்வீட்டு வாசல் மிதிக்கக் கூடாது. உன்னைத் திருத்தவே முடியாது' என்ற மனவேதனையில் வைராக்கியத்தோடு விட்டுச் சென்றுவிட்டான்.

எம் தாயின் மரணச்செய்தியுடன் அவள் கடைசியாக எனக்கு எழுதிய கடிதத்தையும் ஒன்றாகக் காவிவந்த அண்ணாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அண்ணாவிடம் முகம்கொடுத்துப் பேசிப் பாசத்தை இருவரும் பங்கிட்டு வாய்விட்டு அழுது, எம்மை உருவாக்கிய தாயின் பிரிவின் துன்பச் சுமையைப் பரிமாறிக் கொள்ளமுடியாத பாவப்பட்ட நிலையில் நான்...

யாதவனுக்குள்ளே பல கேள்விக் கணைகள் குற்றின.

அண்ணா என்றுகூட அழைக்க முடியாத மனநிலையில் தம்பி நான்...

ஒரு தாயின் கருவறையில் உருவாகி அத்தாயின் இரத்தத்தையே உறிஞ்சிப் பாலாய் சுவைத்து, ஒரே கூரையின் கீழ் பண்பில், ஒழுக்கத்தில், இரத்த பாசத்தால் பின்னிப்பிணைந்த எமக்குள் எப்படியான மாற்றங்கள். இந்த வெளிநாட்டுக் காலநிலையில், கலாச்சாரப் பண்புகளில், மொழிகளில் வேறுபட்ட மாறுபட்ட வாழ்வானாலும் இங்கே என் அண்ணன் வேறு நான் வேறா?

இன்றுதான் அதை எண்ணிப் பார்க்கும் உத்வேகத்தில்...

அப்பாவின் முகம் தெரியாது வளர்ந்த எமக்கும் எம் குடும்பத்திற்கும் ஒளிவிளக்கான மூத்தவன் ஆதவன். விடியலில் தோன்றியவன். எமக்கெல்லாம் தந்தையாகித் தன் படிப்போடு எம்தாய் தன் வீட்டுக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி தன் தொழிலுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் சென்றுவர வீட்டு வேலைகளில் தன் தாய்க்கு ஒத்தாசையாகி எம்மையெல்லாம் தன் தோள்மேல் சிலுவையாகச் சுமந்து சென்றவன். தன் கடமைகளைச் சரிவர நிறைவேற்றிக்கொள்ளப் பக்குவப்பட்டவன். காலக் கேட்டால் அவன் வெளிநாடு வந்து தன் ஆசாபாசங்களைத் துறந்து தன் இளமைக் காலங்களைத் தொலைத்து வெளிநாட்டுக் குளிரில் விறைத்து ஓடி ஓடி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து சகோதரிகளைக் கரைசேர்த்து நரை தலையில் முகம் காட்டிய பிறகே தன் வாழ்க்கையைப்பற்றிக்கூட எண்ணாது தான் வாழ்வு தேடு முன்பே எனக்காகப் பல இலட்சங்களை அள்ளி இறைத்து என்னை ஜேர்மனிக்கு அழைத்துக் கொண்டவன்.

அதன் பிறகே தாலிகட்டி தனக்கென்றொரு வாழ்வைத் தேடிக் கொண்டவன். அப்படியான அண்ணாவை நான் வெட்டிப்பேசியது தகுமா? ஆதவன் போன்ற அண்ணா யாருக்குக் கிடைக்கும்? இரத்த உறவை மறந்து பள்ளிப் பாதையில் இடையில் நடந்த நதியில் தாகம் தீர்க்க எண்ணிய எனக்கு...

நதியா நதியா...
ஒரே குழப்பம். அவன் மூளை விண்ணென்று வலித்தது. அவன் மனத்திரையில் நதியாவின் உருவம் கரும்பூதமாகி கழிமுகத்து சேற்றில் புதைந்துவிட்டது.

என் வாழ்வை அவளால் தொலைத்தேன். என் குடும்பப் பொறுப்புக்களை மறந்தேன். தலைகொடுப்பான் தம்பி என மலையாக நம்பிய அவனுக்கு நான் கைகொடுத்து கைதூக்கி விடவில்லை.

மகனாகத் தாய்க்குப் பெற்றகடன் தீர்க்கவில்லை. சகோதரனாக அவன் உணர்வுகளை நான் ஒருபோதும் புரியவில்லை. என்னை வாழவைக்க அவன் எடுத்த முயற்சிகள் எல்லாமே பூச்சியம்தான். அண்ணன் என்னை அனுசரித்துப் போனாலும் தாரம் என்று தாலி கட்டி வந்த புதியசொந்தம் என் பிழைகளைப் பொறுக்கவிடுவாளா? அண்ணன் மனைவியரில் சிலர் கணவரின் சகோதரர்களையும் தன் பிள்ளைபோலப் பேணுவர். எல்லோருமே அப்படி இருப்பார்களா? கேள்விக்குறிதான். அண்ணி மாலாவை எப்போதோ வெறுத்துத் தள்ளியவன்... இப்போ 'நான்தானே குற்றவாளி' என்று அவன் மனச்சாட்சி அவனை ஆட்டிப்படைத்தது.

பிறரில் அனுதாபப்படும், அவர்களின் நலன்களில் அக்கறைகொள்ளும், பிறவியிலேயே நல்ல உள்ளம் கொண்டவன்தான் யாதவன். அப்படியான வெள்ளைமனத்தில் கள்ளச் சிந்தையில்லை. அவன் தெளிவுபெறக்கூடிய குழப்பமானநிலையில் தன்னைத்தானே குறுக்கு விசாரணை செய்யும் யாதவனின் நிலை இப்போது.

அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அனா என்ற அந்தத் தாய் அவனைத் தன் மொழியில் கொஞ்சுமொழி பேசி கெஞ்சி தலையை வருடி நித்திரை கொள்ளும்படி ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்தாள்.

அவனால் இமைகளை மூடிக்கொள்ள முடியாது அவை அடம்பிடித்தன.

'எனக்கு அமைதி வேண்டுமானால் நான் குடிக்க மது வேண்டும்..!'

அதை அவனுக்குத் தரமறுத்தாள்.

அவன் சிறகுக்குள் அடைக்கலம் புகும் கோழிக்குஞ்சுபோல ஒடுங்கி, அவள் பேச்சைக் கேட்டுத் தலையாட்டும் பொம்மைபோல் ஆனான்.

அவள் முகமோ பால்போல் வெள்ளை. கண்களோ நீல நிறம். அந்தக் கண்களின் ஒளியில் வைரம் வீசியது.

எந்தப் படிப்பறிவற்ற தாயும் தன் சேய்க்காக தன் அன்பையே சொரிந்து உயிரையே கொடுப்பாள். கண்ணான தன் குஞ்சுகளைக் கண்ணிமைக்காது பாதுகாப்பாள். அவள்தான் அன்னை.

என் தாயின் கண்களில் கருவிழிகள். நெற்றியிலோ திருநீறு பூத்திருக்கும். அதன்மேல் சந்தனப்பொட்டு பளிச்சிடும். கருணை வடிவானாள் என் அம்மா. உலகின் சிறந்த பணியான ஆசிரியத் தொழிலின் கல்வி என்னும் தேரை இழுத்துச் சென்றவள். அப்படிப்பட்ட ஆசிரியத் தாய்க்குப் பிறந்த மகனா நான்? வெட்கப்பட்டான். இப்போ நினைக்கவே இழிவாகவுள்ள தன்னைத்தானே காறித்துப்பி செருப்படி கொடுத்தான். அவளின் பெயருக்கே களங்கம் கற்பித்த கடைமகன் நான்.

எல்லாம் நதியா... நதியா...

ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால். ஆழ்மனக் காதல் கலப்படமற்றது. போலியற்றது. நதியா என்மேல் வைத்த காதலோ ஆழமில்லாதது. காதலென்ற கட்டுக்குள் அடங்காதது. ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டு இருவர் மனமும் இணைந்து எச்சந்தர்ப்பத்திலும் எப்புயல் வரினும் நாணல்போல் அசைந்து வளைந்து நிலைத்து நிற்பதே காதல்.

அன்று அவள் கடைசியாக என்னோடு பேசியபோது பொறுமைகொண்டு பேசிய நான் கோபித்து அவளோடு வாதாடியிருந்தால் என்பக்கம் நியாயம் பிறந்திருக்கும். ஆனால் நானோ போதைக்கு அடிமையானேன். நான் அவளை உள்ளத்தால் நேசித்தேன். கள்ளி என்னை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டாள்.

என் தாய் செய்த தொழிலின் புனிதம் புண்ணியம் இப்போது இப்போது என் தாய் வடிவில் என் அருகே. இந்த வெள்ளை மூதாட்டி அனாவின் அன்பில் இப்போது அவன் கட்டுண்டிருந்தான். அம்மாவைப்போல் என்பதால் அவளது அன்பில் இவன் மறைந்த தன் தாயையே கண்டான். இவனது பரிதாப நிலைகண்டு அவள் கொண்ட பரிவில் தான்பெற்ற மகனைப்போல இவனைப் பத்திரமாக வைத்திய சிகிச்சைக்கு அழைத்துச் சென்றாள். அவனுக்குப் புனர்வாழ்வு கொடுக்க முழுமூச்சானாள்.

அவனது சமூகத்தினரே அவனைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொச்சைப்படுத்தி ஏளனம் செய்தனர். அது அவர்கள் தப்பில்லை. அவர்களும் அந்நியநாட்டில் வாழ்பவர்கள். இவனால் தங்களுக்கும் வெளிநாட்டவர் மத்தியில் மதிப்பு மரியாதை குறைந்து போகும் என்று எண்ணுபவர்கள்.

இங்கு வந்ததும் தங்கள் நடையுடை பாவனைகளை மாற்றியவர்கள் பலர். நாய்வேஷம் போட்டால் குரைக்கத்தானே வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் சிலர். ஆனாலும் தங்கள் கலாச்சார வழக்கத்தில் நகைபோடும் பழக்கத்தை மாற்றாமல் போட்டிபோட்டு எடைகூடிய பவுணை அணிந்து காட்சிப்பொருளாய் திரிபவர்களும் இவர்களுள் அடங்கியேயுள்ளனர்.

'நல்லதோ கெட்டதோ என் சமூகத்தை எண்ணிப்பாராமல் மாது என்ற போதையால் மதுவுக்கு அடிமையான கோழைதானே நான்?!' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான் யாதவன்.
0

அனா இந்த நாட்டில் இளைப்பாற்றுநிதி பெறும் ஒரு முன்னாள் ஆசிரியை. இந்த நாட்டில் ஆசிரியத் தொழில் புரிந்த பலர் தாம் கல்வி புகட்டும் மாணவர்களைத் தம் குழந்தைகளாகப் பேணி அவர்கள் முன்னேற்றமே வாழ்வின் இலட்சியமாக வரித்து அந்த ஆவலினால் தங்களைக் குடும்பம் என்ற வட்டத்துக்குள் முடக்கிவிடாது திருமணம் என்ற விலங்கிட்டுக் கொள்ளாதவர்கள். இவ்வகையோரில் இந்த அனாவும் ஒருத்தியானாள். அதனால் அவள் வயோதிப வயதில் பிள்ளை குட்டியின்றித் தனித்து வாழ்பவள்.

தொலையப்போன யாதவனை மரணப் பிடியிலிருந்து மீட்டு, போதை வேட்கையைப் போக்கச் சிகிச்சைக்கு உட்படுத்தி அவனது அடிமன ஆழத்தின் உண்மைகளை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்து அவனைப் பலர் அறிய சுயமனிதனாக்கினாள்.

அவன் சிகிச்சைக்கு உட்பட்டிருந்த வேளையில் ஆதவனுடன் தொடர்புகொண்டு யாதவனை வந்து சந்திக்கவேண்டி அழைத்தாள் அந்தத் தாய்.

ஆதவன் வந்தபோது பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்த தம்பியைக் கண்டான். எலும்புக்கூடு ஒன்று தோல்போர்த்தியது போலிருந்த தம்பியின் கோலம் அவனைத் திடுக்குற வைத்தது.

'இவனா என் தம்பி யாதவன்?'

அவனால் நம்ப முடியவில்லை. ஆண் அழகனான எடுப்பான தோற்றம், அவனது உறுதியான உடல்வாகு, எங்கே தொலைந்தது அவன் கொள்ளையழகு?

'என்னடா யாதவா? நீயா இது? இங்கே எப்படி?'

தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். ஆதவன் அக்கணமே ஆடிப் போய்விட்டான்.

'நான் ஆற்றவேண்டிய வெளிக்கடமைகள் எவ்வளவோ என் சகோதரனுக்குச் செய்தேன். ஆனால் என் தம்பி பாதை தெரியாது மாறும்போது நான் கண்டித்தேனே ஒழிய, அவனுக்கு வேண்டிய அன்பு அனுசரணைகள் என்ற வழியைக் காட்டத் தவறிவிட்டேன். பல இலட்சங்களை அள்ளிக்கொட்டி கூப்பிட்ட என் தம்பிக்கு இடர் வந்தவேளை பாசத்தைப் பரிமாறிக்கொள்ளவில்லை. இடையில் வந்த மனைவி என்ற பந்தத்தின் சொல்கேட்டு உன்னை நடுவழியில் தவிக்கவிருந்து வாழாதிருந்தேனே...'
- மனங்குமுறிய ஆதவன் தலை தலையென அடித்துக் கொண்டான்.

'நான் பாவி நான் பாவி' எனக் கதறினான்.

அவன் கண்களில் கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாயிற்று.

அண்ணனாகத் தம்பியின் கைகளை இறுக்கிப் பிடித்தான். தம்பியின் கைகளை அவனது கண்ணீர் நனைத்தது.

'இல்லை அண்ணா நான்தான் பாவி. பெற்றதாயைத் தொலைத்தேன். உடன்பிறந்தோர் மானம் மரியாதையைக் கப்பல் ஏற்றினேன். ஊரை, நாட்டை, உலகத்தை ஏன் என்னையே சிலகாலம் எண்ணிப்பார்க்க மறந்தேன். சிலகாலம் காட்டு வாழ்க்கையின் மிருகமாக நடமாடினேன். ஒன்றின் முடிவில்தான் இன்னொன்றின் ஆரம்பமே... எம் குடும்பம் என்ற கோட்டையின் இராணியான என் தாயின் இழப்பின் பின்புதான் என் மனச்சாட்சி என்னை சாட்டையால் அடித்து குறுக்குவிசாரணைக்கு உட்படுத்தியது. உன்னைப்போல் ஒரு சகோதரனின் அருமை பெருமையை உணரவைத்தது. உன்னைப்போல் குடும்ப ஒளிதந்த ஆதவன் சகோதரனாகக் கிடைக்க நாம்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் அம்மா எனக்கு எழுதிய கடிதத்தில் வைரமாய் சிந்திய வார்த்தைகள் என்னைப் பழைய மகனாக வாழச் சிந்திக்கப் புடம்போட்டது.'

பக்கத்தில் நின்ற வெள்ளை மாதான அனாவைச் சுட்டிக்காட்டி,
'இவதான் என்னைக் காப்பாத்தி எனக்கு மறுவாழ்வு தந்தவ..!' என்று ஆதவனுக்கு மெதுவாக அறிமுகப்படுத்தியவன், 'இப்ப நான் புதுப்பிறவி எடுத்திருக்கிறன் அண்ணா... அண்ணா என்னாலை உனக்கு எவ்வளவோ கஷ்டம்... எத்தினை தரம் உன்னை எடுத்தெறிஞ்சு கதைச்சிருப்பன்... என்னை மன்னிப்பாயா அண்ணா?'

சிறுகுழந்தைபோல் தமையனைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினான் யாதவன்.

'நானும் குற்றவாளிதானே தம்பி...! என்னிலும் பிழையிருக்கு... உன்னைக் கண்டிச்சுத் திருத்திறதை விட்டிட்டு உன்னை வெறுத்தது நான் செய்த பிழைதானே! நீதான் என்னை மன்னிக்க வேணும்!' இருவரும் பாசவலைக்குள் சிக்குண்டு உணர்வுக் கொந்தளிப்பில் ஆழமாகி பின்னிப்பிணைந்தனர்.

ஆனந்தக் கண்ணீரால் நனைக்கப்பட்டனர்.

இந்தப் பாசப்பிணைப்பை மெளனமொழிகளால் உணர்ந்த வேற்றுநாட்டுத் தாயின் கண்களும் அவளையும் அறியாது குளமாகியது.

0


யாதவன் இப்போது அன்பு பாசம் நேசம் நிறைந்த தாயுடன் நல்லபடி வாழ்கின்றான். அவன் மனித வாழ்விற்கு பணம் ஆதாரமானது. அந்தப் பணமும் அவனை நிறைவாக்கியுள்ளது. ஏற்கனவே கல்வியறிவு நிறைந்தவன் மேலும் தன் வளர்ப்புத் தாய்மூலம் வளம்படுத்திக்கொண்டான்.

ஈழத்தமிழர் கல்வியறிவில் சளைத்தவர்கள் அல்லவே.

நம் தமிழ் பழைய கல்விமான்கள் வெள்ளையர் ஆட்சியில் சிங்களவர்களுடன் ஒன்றாகி இருந்தனர். பல உரிமைகள் வாதிட்டுப் பெற்றுக்கொடுத்த தமிழர் கல்விமான்கள் பரம்பரையில் உதித்த யாதவன் காலங்கடந்தாலும் தன்னைக் கல்வியில் வளப்படுத்திக்கொண்டதில் ஆச்சரியப்படுவதற்கிடமில்லை.

நம் சமூகத்திற்கு அவன் ஆற்றவேண்டிய பல கடமைகளுக்குள் காலடி எடுத்து வைத்துப் பலகாலம் ஆகிவிட்டது.

அவனுக்கு இருக்க நேரம் இல்லாத கடமைகள் பற்பல.

அன்று அன்னையர் தினம்.

அதிகாலை எழுந்து தன் தாயின் படத்தின் முன்பு பூவைத்து மானசீகமாக வணங்கிவிட்டு, மம்மா அனாவுடன் காலையுணவைப் பரிமாறும்வேளை அவளுக்கும் பூச்செண்டு கொடுத்து நன்றிகொண்டு வாழ்த்திவிட்டு, அண்ணா வீட்டிற்குச் சென்று வருவதாகவும் அவளிடம் கூறி விடைபெற்றான்.

அண்ணா வீட்டிற்குப் போனதுதான் பிள்ளைகள் சித்தப்பாவென்று ஓடி வந்து ஒட்டிக்கொண்டனர்.

கையில் வைத்திருந்த பூங்கொத்தை அண்ணிக்குக் கொடுத்து தன் வாழ்த்தைத் தெரிவித்தான் யாதவன். அண்ணி இப்போது அவனிடம் பாசத்தைப் பொழிந்து வந்தாள்.

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே.

கடந்த காலங்கள் அவன் வாழ்வின் செல்லரித்த பக்கங்கள்.

அவைகளைப் புரட்டிப்பார்க்க யாருக்கும் நேரம் இல்லை.

யாதவன் அடிக்கடி செல்லும் பூங்காவும் கதிரையும் அப்படியே வெறுமையாக. ஆனால் யாதவனோ குணத்தால் பணத்தால் பதவியால் நிறைவாகி இறக்கைகட்டி உயர்வில் பறந்து கொண்டிருந்தான்.

அவனை ஒதுக்கியவர்கள் அவனை நாடி வரவேண்டிய நிலையில் இப்போ அவன் ஒரு மொழிபெயர்ப்பாளனாக சமூகத்திற்கு உதவி செய்யவும் நிமிர்ந்து நிற்கின்றான். பழையன கழிதலும் புதியன புகுதலுமாக வாழ்வின் சமூக அந்தஸ்தில் குடும்பம் என்ற கோயிலைக் கட்டி எழுப்பி அவனைக் குடியேற்ற அண்ணி நடவடிக்கை எடுக்க, அவன் வாழ்வின் வழித்துணையாக வாழ்வின் துணையாக யாதவனுக்கு ஒரு யசோதை வரும்வேளை அண்மித்திருந்தது.

மத்தியான உணவு முடித்து அண்ணனின் பிள்ளைகளுடன் யாதவன் தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.

அண்ணா செற்றியில் பகல் தூக்கம்.

அவர்கள் வீட்டுத் தொலைபேசி மணி ஒலிக்கிறது.

அண்ணி மாலா தொலைபேசியில்.

"நான் மாலா... நீங்கள்?''

"நான்..."
மறுமுனையில் -
"ஆதவனின் தம்பி யாதவனுடன் கதைக்க வேண்டும்."

"உங்கள் பெயர்..? நீங்கள் யார்?"

"நான்... நான் நதியா..."








இனி அவர்கள்!?-
இந்துமகேஷ்
எழுதிய
இறுதிப் பகுதி.





'நதியா... எந்த நதியா..? எங்கையிருந்து கதைக்கிறீங்கள்?'

நதியா என்ற பெயர் அண்ணியின் வாயிலிருந்து வெளிப்பட்டதும் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த யாதவன் மெள்ளத்திரும்பி அண்ணியைப் பார்த்தான்.

'ஆரோ நதியாவாம்... யாதவனோடை கதைக்க வேணுமாம்..!' என்றாள் மாலா.

சொல்லிக்கொண்டே யாதவனை அவள் பார்த்த பார்வையில் 'தொடர்பைத் துண்டித்துவிடவா?' என்ற கேள்வி தொனித்தது.

எந்தவிதமான பதட்டமோ பரபரப்போ இன்றி தொலைபேசியினருகே வந்தான் யாதவன். அவனைத் தனியாகத் தொலைபேசியினருகே விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மாலா.

'ஹலோ... யாதவன்...!'

'யாதவன்... நான் நதியா கதைக்கிறன்... இங்கை பிராங்பேர்ட் காம்பிலையிருந்து...'

அவளது குரல் தழுதழுத்து அடைத்துக்கொள்வதை யாதவன் உணர்ந்தான். அழுகிறாள் என்று புரிந்தது.

'யாதவன் உங்களோடை நான் கொங்சம் அவசரமாய்க் கதைக்கவேணும்... பிளீஸ்... ஒருக்கால் இங்கை வரமுடியுமா?'
'விலாசத்தைச் சொல்லுங்கோ..!' என்றான் யாதவன்.

"சரி... நாளைக்கு வந்து சந்திக்கிறன்!" என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான் அவன்.

"ஆர்... தம்பி?" என்று வினவியபடி வந்தாள் மாலா.

"நதியா எண்டாள்... ஒருவேளை உம்மடை பழைய லவ்வரோ?"

"ஆரா இருந்தா என்ன அண்ணி... ஒரு மொல்மேச்சரா என்னைச் சந்திக்க வேணுமாம்... வாறன் எண்டு சொன்னன்...!"

"அப்ப இது அவளில்லை...!" என்று சிரித்தாள் மாலா.

'அவளாக இருக்குமோ?' என்று அவள் மனம் சந்தேகித்தாலும், 'அவளாக இருந்தால் இந்நேரம் யாதவன் முகத்தில் பல்வேறுவிதமான உணர்வுகளும் பரவியிருக்குமே... ஆனால் இவனோ எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறானே... இது அவளாக இருக்காது..!'

ஆனால் மாலாவுக்குத் தெரியாது...

யாதவனின் பழைய காதலி நதியா தனது இரண்டு வயதுக் குழந்தையுடன் அகதியாக ஜெர்மனிக்கு வந்து, பிராங்பேர்ட் விமானநிலையத்தில் அகதிமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு நாளை மறுதினமே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படப் போகிறாள் என்பது.

தனது காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான் யாதவன்.

அழுது சிவந்த நதியாவின் முகமே அவன் கண்ணெதிரில் இப்போது வியாபித்து நின்றது.

எது நடக்குமென்று அவன் வாழ்வில் நினைத்திருந்தானோ அது நடக்கவில்லை. எது நடக்காது என்று அவன் நினைத்திருந்தானோ அது நடக்கிறது.

என்னதான் மனதை இறுக்கமாக வைத்திருக்க முயன்றபோதும் நதியாவின் கண்ணீரில் அவனது கோபம், வைராக்கியம் எல்லாம் கரைந்து போயிற்று. அவள் மீதான பரிதாப உணர்வே மேலோங்கி நின்றது.

இந்நேரம் அவளை விமானத்தில் ஏற்றி தாயகத்துக்கு அனுப்பியிருப்பார்கள்.

எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் அவளை ஜேர்மனியில் தங்கவைப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டாமலே போயிற்று...

"சொந்தநாட்டிலை நான் பட்டுவந்த துயரங்கள், அவமானங்கள், ஆபத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துச் சொன்னன். வெட்கத்தைவிட்டு என்ரை பெண்மைக்கு ஏற்பட்ட களங்கத்தையும் சொன்னன். ஆனால் எதுகுமே இவங்களின்ர காதிலை விழேல்லை. திருப்பி அனுப்பிறதுதான் எண்டு பிடிவாதமாய் இருக்கிறாங்கள்... என்னோட இன்னும் இருபது பேர்..!" என்று கலங்கினாள் நதியா.

"அகதியாக வாறவையை எந்த நேரம் அங்கீகரிப்பாங்கள், எந்தநேரம் திருப்பி அனுப்புவாங்கள் எண்டு சொல்லமுடியாது. அவங்கட சட்டத்துக்கும் கட்டளைக்கும் கட்டுப்படுகிறதைவிட நாங்களும் ஏதும் செய்ய முடிகிறதில்லை...!" என்றான் யாதவன்.

ஆனாலும் அவனும் தனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் தீவிரமாக முயற்சித்துப் பார்த்தான். பலன்தான் பூஜ்யம்.

"எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்...!" என்றாள் நதியா உடைந்த குரலில்.

"ஒரு நல்ல மனசை எந்தளவுக்குப் புண்ணாக்கினேனோ, ஒரு நல்லவரின்ரை வாழ்க்கை எப்படியெல்லாம் கேவலப்பட்டுப்போக நான் காரணமாக இருந்தேனோ அதுக்கெல்லாம் இது ஒரு சரியான தண்டனை, தேவையான தண்டனைதான்... ஆனா யாதவ்... உங்களை நான் காதலிச்சது உண்மை. உங்களோடையே வாழவேணும் எண்டு ஆசைப்பட்டதும் உண்மை... ஆனா நீங்கள் வெளிநாட்டுக்கெண்டு வந்து கனகாலம் உங்களைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. உங்களைப்பற்றிப் பிழையான கதையள்தான் ஊருக்குள்ளை அடிபடத் தொடங்கிச்சுது... வசதியும் வாய்ப்பும் வந்த உடனை நீங்களும் மாறிட்டீங்கள் எண்டு கதைச்சினம்... முதலிலை நான் இதுகளை நம்பேல்லை... ஆனா என்ரை அண்ணை வினோதன் உங்களைப்பற்றித் தான் அறிஞ்சதுகள் எண்டு நிறையக் கதையளைச் சொன்னார். இனியும் நீ அவனை நினைச்சுக் கொண்டிருந்தியெண்டால் நான் பொல்லாதவனா மாறவேண்டி வரும் எண்டு கோபப்பட்டார். இனி நீ யாதவனை மறந்திடவேணும், இல்லாட்டில் என்னை நீ உயிரோடை பாக்கமாட்டாய் எண்டு என்ரை அம்மாவும் புலம்பத் தொடங்கிட்டா... எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை... அண்ணாவின்ர சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போறதைத் தவிர எனக்கு அப்ப வேறை வழி தெரியேல்லை... நீங்கள் கடைசியாய் எனக்கு டெலிபோன் எடுத்துக் கதைச்சபோதுகூட என்ரை அம்மா அண்ணா எல்லாரும் எனக்குப் பக்கத்திலைதான் நிண்டினம்... இண்டைக்கு நீ பேசிற பேச்சோடை இனி அவன் இங்கை டெலிபோன் எடுக்கக்கூடாது எண்டு மிரட்டிச்சினம். அதாலைதான் நான் வையடா டெலிபோனை எண்டு...!"

நதியா விம்மினாள்..

சில கணங்களுக்குப் பிறகு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தொடர்ந்தாள்...

"அண்ணையின்ரை, அம்மாவின்ரை விருப்பப்படியே எனக்கு ஒரு கல்யாணம் நடந்தது... அவரும் நல்லவராய்த்தான் இருந்தார்... இந்தப் பிள்ளை பிறந்து ஒரு வருசத்திலை அவரும் ஒரு விபத்திலை போயிற்றார்... கைக்குழந்தையோட நான் கலங்கிப்போனன்... தற்கொலை செய்யலாமா எண்டுகூடச் சில நேரம் நினைச்சன்... ஆனா நான் பெத்த இந்தப் பிள்ளைக்காக வாழவேணும் எண்டு முடிவெடுத்தன்... இடையிலை ஒருநாள் இராணுவம் எங்கடை வீட்டுக்குள்ளை புகுந்துது... என்ர அண்ணனையும் அம்மாவையும் சுட்டுப் போட்டு... என்னையும்....???"

அதற்குமேல் எதுவும் பேசமுடியாது அவள் மெளனித்தாள்.. தொண்டையைத் துயரம் அடைத்துக்கொண்டது... தன்னருகில் நின்ற மகளை இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு அவளது உச்சிமீது தன் உதடுகளைப் புதைத்தாள். அவளது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் குழந்தையின் கரங்களில் வீழ்ந்தது.

குழந்தை தன் பிஞ்சுக்கரங்களால் அதை மாறிமாறித் துடைத்துக்கொண்டே தாயைப் பார்த்தாள்.

"ஏனம்மா அழுகிறீங்கள்?" என்றாள். "இந்த மாமா உங்களைப் பேசிப் போட்டாரா?" என்றாள் யாதவனைப் பார்த்தபடி.

யாதவன் மெதுவாகக் குழந்தையைத் தன்பக்கம் இழுத்தான்.

"உன்ரை அம்மாவை ஒருத்தரும் பேசமாட்டினம்... அம்மாதான் எல்லாரையும் பேசுவா...!" என்று குழந்தையிடம் அவன் மெதுவாகச் சொல்லிக்கொண்டே நதியாவைப் பார்த்தான்.

அந்த வேதனைக்கிடையிலும் நதியாவின் உதடுகளில் ஒரு முறுவல் படர்ந்தது.

"இனித் திரும்பி ஊருக்குப்போய் என்ன செய்கிறது எண்டுதான் தெரியேல்லை!" என்றாள் நதியா.

"காலம் எப்பவும் ஒரே மாதிரியிருக்காது.. இரவுக்குப் பிறகு பகல்மாதிரி எப்பவும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.. எவ்வளவு காலத்துக்குத்தான் சண்டையும் சச்சரவும்.. கெதியிலை காலம் மாறும்.. திசைதெரியாமல் அலைகிற உறவுகள் ஒண்டாய்ச் சேருகிற காலம் நிச்சயமாய்த் திரும்பிவரும்.. சண்டை நடக்கிற பூமி சமாதானம் உள்ள பூமியாய் மாறுகிறபோது எல்லார் வாழ்க்கையும் அமைதி நிலைக்குத் திரும்பும்.. நீ கவலைப்படாமல் திரும்பிப் போ.. உன்ர எதிர்காலத்துக்கான வழி வகைகளை நான் செய்கிறன்.. உன்ர மகளை வளர்த்துப் படிக்க வைச்சு அவளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை தேடிக்குடுக்கிற பொறுப்பு என்னுடையது.. தைரியமாய்த் திரும்பிப் போ..!"

நதியாவுக்குத் தைரியம் சொல்லிவிட்டு குழந்தையையும் தன் இருகைகளாலும் வாரியணைத்து அதனது பிஞ்சுக் கன்னங்களில் யாதவன் முத்தமிட்டபோது அவனது கண்களும் கண்ணீரால் நிறைந்தது.

"மாமாவும் அழுகிறேர்..!" என்றாள் மழலை.

0

வீதியில் காரை நிறுத்திவிட்டு யாதவன் வீட்டினுள் நுழைந்தபோது தொலைபேசி சிணுங்கிக்கொண்டிருந்தது.

எடுத்தான்.

"ஹலோ.. யாதவன்..!"

"ஹலோ.. யாதவன்.. நான் அண்ணி கதைக்கிறன்..!"

"சொல்லுங்க அண்ணி..!"

"உமக்குப் பார்த்த பொம்பிளையின்ர தாய்தகப்பனும் பொம்பிளையும் கொழும்பிலை வந்து நிற்கினம்... உம்மோடை கொஞ்சம் கதைக்க வேணுமாம்..!"

"அண்ணி.. ப்ளீஸ்.. குறைநினைக்காதேங்கோ... இப்ப எனக்குக் கலியாணத்திலை விருப்பமில்லை எண்டு சொல்லிவிடுங்கோ..!"

"என்ன... யாதவன்..?"

"அண்ணி எனக்குக் கலியாணமே வேணாம்... இப்ப மட்டுமில்லை.. எப்பவுமே..!"

தொலைபேசியை வைத்தான்.

தாய்மண்ணில் பெற்றோரை இழந்து பரிதவித்துநிற்கும் பல குழந்தைகள் அவனது மனக்கண்ணெதிரில் நின்றார்கள்.. 'இனி என்வாழ்வும் உழைப்பும் ஆதரவிழந்த உங்களுக்காகவே..!' என்று தன்னுள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான். அவனது மேசைமீது, தொலைபேசியினருகே இருந்த புகைப்படத்திலிருந்து அம்மா யாதவனைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

-முற்றும்.

(ஓவியங்கள் - ஓவியர் மூனா)
(பிரசுரம்: பூவரசு - 12வது ஆண்டுநிறைவு மலர் - தை 2003)