-எழிலன்
(செர்மனி)
என்னால் அழ இயலவில்லை தம்பி!
- சிந்தனைச் செல்வர் எழிலன்
நீர் மறைந்ததாய் முகநூலில் செய்தி பார்த்தேன்!
நீர்தானா நடக்குமா என அதிர்ந்தேன்!
நீர் என்னைத் தொடர்புறா நாட்கள் நீள..
நீரென்மேல் ஏன்கோபம்? வியந்திருந்தேன்!
நிரந்தரமாய் நீர் பிரிவீர் எனத் தெரிந்தா
தொடரமைதி காத்தென்னை விட்டிருந்தீர்?
நிரந்தரமாய் அதைநினைந்தே நோவதற்கோ
இறுதிவரை இறைவனுமே தடுத்ததென்ன?
ஆழ்கடலுள் முத்துண்டு என்று சொன்னார்
ஆழ்மனதுள் அதைத் தேட முயன்றதில்லை
ஆழ்மனதுள் உம்மிடத்தில் முத்துஉண்டு
உம்மெழுத்தில் உம்கருத்தில் நானுணர்ந்தேன்
தாழ்மனங்கள் புடம்போட்டுஉம் படைப்பில்
நீரளித்த முத்துக்கள் எத்தனையோ
பாழ்மனமும் வீழ்மனமும் நிமிர்ந்துநிற்க
நீர்கொடுத்த முத்துக்கள் அத்தனையும்!
தமிழமுதம் எனும் இணையம் நீர் அமைத்தீர்!
தமிழர்க்கே நல்லதுபல நீர்தொடுத்தீர்!
தமிழர்கள் திசையெங்கும் தமிழ்படர
என்போன்றே பலரழைத்து வழியமைத்தீர்!
தமிழினிக்கத் தொலைபேசி மணிக்கணக்கில்
தம்பிநீர்போல்எவருமென்றும் கதைத்ததில்லை
தமிழுலகில் எனதுபெயர் பரவலாகப்
பலரறிய உமது தமிழ் அமுதம்போலெதுவுமில்லை!
பூவரசும் உம்பணியால் மகிழ்ந்ததுண்டு
முத்தமிழ் யாழ் இணையங்களும் நிமிர்ந்ததுண்டு
நூல்பணியும் பத்திரிகை இணையமென
நும்பேனை வடிவமைக்கா இடமுமில்லை
ஊரடங்கும் நள்ளிரவில் மணியடிக்கும்
மணித்தமிழால் எனையழைத்து நீர்கதைப்பீர்
ஊர்க்கதைகள் சுற்றிவரும் அனுபவங்கள்
கலந்துபேசிக் கருத்துரைத்து மகிழ்ந்திருப்போம்!
வரும் போகும் நிற்கும் நகரும் என்பதெல்லாம்
காலத்தால் ஆகும் மாற்றம் நாம்அறிவோம்
தரும் நட்பில் நல்ல நட்பைத் தகர்த்தெடுத்துப்
பறித்திடல் யாரின் சாபம் நாமறியோம்
வருங்காலக் கனவுகள் கலையாத காலையில்
காலனின் காலடி இராஜனை நெருங்கியமை
தருகின்ற கவலையைக் கவிதையாய் வடிப்பதே
இதயத்தைப் பிழிகின்ற துயர்தனைத் தருகுதே!
வாழ்ந்திட்ட வரையிலே நல்லதை மட்டும்
வகைசெய்து இலக்கியம் படைத்திட்ட தம்பி
வாழ்பவர் வாழவே வரப்போகும் மக்கள்
யாவரும் உம்எழுத் தின்வழி கண்டே
வாழ்வார்கள் நல்வாழ்வு நம்பிநீர் செல்வீர்!
வலிதரும் துயரோடே உறுதியாய்ச் சொல்வேன்
வாழ்வாங்கு வையத்துள் வாழ்கநீர் தம்பி!
என்னாலே அழஇனி இயலாதுதம்பி!
முகம் தெரியாத உறவுகளுக்காக மனம் கலங்குவதும்
வாழ்வில் சாத்தியமாகிறது.
***************
உலகப்பந்தின் முன் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தோடுதான் இராஜன் முருகவேல் யாழ் இணையத்தில் சோழியானாக எனக்கு அறிமுகமானார். அது 2001 என்று நினைக்கிறேன். இணையத்துக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த ஆரம்பப் பொழுது. எப்போதும் கருத்தாடல், கருத்து மோதல் என்று நேரம் காலம் பாராது அதே தியானமாய் இருந்து எழுதித் தள்ளினோம். அப்போது யாழ்கருத்துக்களத்தில் எழுதியவைகள் எல்லாவற்றையும் தொகுத்தாலே சில நூல்களை உருவாக்கி விடலாம். இராஜன் முருகவேல் உருவாக்கினார்.
எனது படைப்புகளில் 25 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து „பதியப்படாத பதிவுகள்“ என்ற பெயரில் ஒரு மின்னூலை உருவாக்கினார். அதை 30.10.2004 இல் தனது தமிழமுதம் என்னும் இணையத்தளத்திலும் வெளியிட்டு வைத்தார். இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. தொலைபேசியதுமில்லை. மின்னஞ்சல் தொடர்புகள் கூட இருந்ததாக ஞாபகம் இல்லை. எல்லாம் பொதுவெளியில் பேசிக்கொண்டவைதான்.
இணையம் என்னும் பெருவெளி இன்றெமக்கு பல நட்புகளைத் தந்திருக்கிறது. „அது நட்பே அல்ல, அது உறவே அல்ல“ என்று வாதிடுபவர்களும் உள்ளார்கள்.
எப்படித்தான் யார் வாதிட்டாலும் சோழியான் என்று எம்மால் நன்கு அறியப்பட்ட இணையம் தந்த நண்பன் இராஜன் முருகவேலின் இறப்புச் செய்தி என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. கேட்டதும் ஆற்றாமையினால் புரண்டெழுந்து அழுது புலம்பாவிட்டாலும் மனம் வலிக்கத்தான் செய்தது.
சோழியானுடனான நட்பு கிட்டத்தட்ட 15 வருடங்கள் நீண்டது. ஆரம்பத்தில் நாங்கள் யாழ் கருத்துக்களத்தில் நிறையவே பேசினோம். கருத்திட்டோம். எதிர்வாதம் புரிந்தோம். ஆனாலும் நண்பர்களாகவே இருந்தோம். ஜெர்மனியில் வெளிவந்து கொண்டிருந்த பூவரசு இதழில் இன்னும் இருவருடன் இணைந்து நால்வராக „இனி அவர்கள்“ என்றதொரு நெடுங்கதையும் எழுதினோம். தொடர்ந்த காலங்களில் பிறந்தநாட்கள், பெருநாட்களிலாவது வாழ்த்தைத் தெரிவித்து எமது நட்பை உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தோம்.
இராஜன் முருகவேல் எப்போதும் எழுதிக் கொண்டே இருந்தார். அவரது எழுத்தில் எப்போதும் ஒரு பண்பு இருக்கும். தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இராது. நகைச்சுவை கண்டிப்பாகக் கலந்திருக்கும். இணைய அரட்டைகளை முன்வைத்து எழுதிய அவரது ஐஸ்கிறீம் சிலையே நீதானே... குறிப்பிடத்தக்கது. இன்னும் பல எழுதினார். அவர் தொகுத்து தனது இணையத்தில் வெளியிட்ட ஈழத்துப் பாடல்கள் எண்ணிலடங்காதவை. இன்னும்... இன்னும்… அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
வருந்துகிறேன் சோழியான்! உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!
சந்திரவதனா
16.11.2016