Mittwoch, 28. Dezember 2016

என்னால் அழ இயலவில்லை தம்பி!

என் இனிய இலக்கிய நண்பரும் இதயம் நிறை உடன்பிறவா தம்பியுமான அமரர் இராஜன் முருகவேல் (சோழியான்) அவர்களுக்கு எனது இதய அஞ்சலிகள். 

                                                                                                                       -எழிலன்
                                                                                                                       (செர்மனி)








என்னால் அழ இயலவில்லை தம்பி!

 - சிந்தனைச் செல்வர் எழிலன்

நீர் மறைந்ததாய் முகநூலில் செய்தி பார்த்தேன்!
நீர்தானா நடக்குமா என அதிர்ந்தேன்!
நீர் என்னைத் தொடர்புறா நாட்கள் நீள..
நீரென்மேல் ஏன்கோபம்? வியந்திருந்தேன்!
நிரந்தரமாய் நீர் பிரிவீர் எனத் தெரிந்தா
தொடரமைதி காத்தென்னை விட்டிருந்தீர்?
நிரந்தரமாய் அதைநினைந்தே நோவதற்கோ
இறுதிவரை இறைவனுமே தடுத்ததென்ன?

ஆழ்கடலுள் முத்துண்டு என்று சொன்னார்
ஆழ்மனதுள் அதைத் தேட முயன்றதில்லை
ஆழ்மனதுள் உம்மிடத்தில் முத்துஉண்டு
உம்மெழுத்தில் உம்கருத்தில் நானுணர்ந்தேன்
தாழ்மனங்கள் புடம்போட்டுஉம் படைப்பில்
நீரளித்த முத்துக்கள் எத்தனையோ
பாழ்மனமும் வீழ்மனமும் நிமிர்ந்துநிற்க
நீர்கொடுத்த முத்துக்கள் அத்தனையும்!

தமிழமுதம் எனும் இணையம் நீர் அமைத்தீர்!
தமிழர்க்கே நல்லதுபல நீர்தொடுத்தீர்!
தமிழர்கள் திசையெங்கும் தமிழ்படர
என்போன்றே பலரழைத்து வழியமைத்தீர்!
தமிழினிக்கத் தொலைபேசி மணிக்கணக்கில்
தம்பிநீர்போல்எவருமென்றும் கதைத்ததில்லை
தமிழுலகில் எனதுபெயர் பரவலாகப்
பலரறிய உமது தமிழ் அமுதம்போலெதுவுமில்லை!

பூவரசும் உம்பணியால் மகிழ்ந்ததுண்டு
முத்தமிழ் யாழ் இணையங்களும் நிமிர்ந்ததுண்டு
நூல்பணியும் பத்திரிகை இணையமென
நும்பேனை வடிவமைக்கா இடமுமில்லை
ஊரடங்கும் நள்ளிரவில் மணியடிக்கும்
மணித்தமிழால் எனையழைத்து நீர்கதைப்பீர்
ஊர்க்கதைகள் சுற்றிவரும் அனுபவங்கள்
கலந்துபேசிக் கருத்துரைத்து மகிழ்ந்திருப்போம்!

வரும் போகும் நிற்கும் நகரும் என்பதெல்லாம்
காலத்தால் ஆகும் மாற்றம் நாம்அறிவோம்
தரும் நட்பில் நல்ல நட்பைத் தகர்த்தெடுத்துப்
பறித்திடல் யாரின் சாபம் நாமறியோம்
வருங்காலக் கனவுகள் கலையாத காலையில்
காலனின் காலடி இராஜனை நெருங்கியமை
தருகின்ற கவலையைக் கவிதையாய் வடிப்பதே
இதயத்தைப் பிழிகின்ற துயர்தனைத் தருகுதே!

வாழ்ந்திட்ட வரையிலே நல்லதை மட்டும்
வகைசெய்து இலக்கியம் படைத்திட்ட தம்பி
வாழ்பவர் வாழவே வரப்போகும் மக்கள்
யாவரும் உம்எழுத் தின்வழி கண்டே
வாழ்வார்கள் நல்வாழ்வு நம்பிநீர் செல்வீர்!
வலிதரும் துயரோடே உறுதியாய்ச் சொல்வேன்
வாழ்வாங்கு வையத்துள் வாழ்கநீர் தம்பி!
என்னாலே அழஇனி இயலாதுதம்பி!






முகம் தெரியாத உறவுகளுக்காக மனம் கலங்குவதும் 
வாழ்வில் சாத்தியமாகிறது. 
***************
உலகப்பந்தின் முன் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தோடுதான் இராஜன் முருகவேல் யாழ் இணையத்தில் சோழியானாக எனக்கு அறிமுகமானார். அது 2001 என்று நினைக்கிறேன். இணையத்துக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த ஆரம்பப் பொழுது. எப்போதும் கருத்தாடல், கருத்து மோதல் என்று நேரம் காலம் பாராது அதே தியானமாய் இருந்து எழுதித் தள்ளினோம். அப்போது யாழ்கருத்துக்களத்தில் எழுதியவைகள் எல்லாவற்றையும் தொகுத்தாலே சில நூல்களை உருவாக்கி விடலாம். இராஜன் முருகவேல் உருவாக்கினார். 

எனது படைப்புகளில் 25 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து „பதியப்படாத பதிவுகள்“ என்ற பெயரில் ஒரு மின்னூலை உருவாக்கினார். அதை 30.10.2004 இல் தனது தமிழமுதம் என்னும் இணையத்தளத்திலும் வெளியிட்டு வைத்தார். இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. தொலைபேசியதுமில்லை. மின்னஞ்சல் தொடர்புகள் கூட இருந்ததாக ஞாபகம் இல்லை. எல்லாம் பொதுவெளியில் பேசிக்கொண்டவைதான்.

இணையம் என்னும் பெருவெளி இன்றெமக்கு பல நட்புகளைத் தந்திருக்கிறது. „அது நட்பே அல்ல, அது உறவே அல்ல“ என்று வாதிடுபவர்களும் உள்ளார்கள்.
எப்படித்தான் யார் வாதிட்டாலும் சோழியான் என்று எம்மால் நன்கு அறியப்பட்ட இணையம் தந்த நண்பன் இராஜன் முருகவேலின் இறப்புச் செய்தி என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. கேட்டதும் ஆற்றாமையினால் புரண்டெழுந்து அழுது புலம்பாவிட்டாலும் மனம் வலிக்கத்தான் செய்தது.

சோழியானுடனான நட்பு கிட்டத்தட்ட 15 வருடங்கள் நீண்டது. ஆரம்பத்தில் நாங்கள் யாழ் கருத்துக்களத்தில் நிறையவே பேசினோம். கருத்திட்டோம். எதிர்வாதம் புரிந்தோம். ஆனாலும் நண்பர்களாகவே இருந்தோம். ஜெர்மனியில் வெளிவந்து கொண்டிருந்த பூவரசு இதழில் இன்னும் இருவருடன் இணைந்து நால்வராக „இனி அவர்கள்“ என்றதொரு நெடுங்கதையும் எழுதினோம். தொடர்ந்த காலங்களில் பிறந்தநாட்கள், பெருநாட்களிலாவது வாழ்த்தைத் தெரிவித்து எமது நட்பை உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தோம்.

இராஜன் முருகவேல் எப்போதும் எழுதிக் கொண்டே இருந்தார். அவரது எழுத்தில் எப்போதும் ஒரு பண்பு இருக்கும். தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இராது. நகைச்சுவை கண்டிப்பாகக் கலந்திருக்கும். இணைய அரட்டைகளை முன்வைத்து எழுதிய அவரது ஐஸ்கிறீம் சிலையே நீதானே... குறிப்பிடத்தக்கது. இன்னும் பல எழுதினார். அவர் தொகுத்து தனது இணையத்தில் வெளியிட்ட ஈழத்துப் பாடல்கள் எண்ணிலடங்காதவை. இன்னும்... இன்னும்… அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

வருந்துகிறேன் சோழியான்! உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

சந்திரவதனா
16.11.2016



















Mittwoch, 21. Dezember 2016

என்ன சொல்லி வாழ்த்த...?!

(கதை, கவிதை,  கட்டுரை, நாடகம், விமர்சனம்  என படைப்பிலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தியவர் திரு இராஜன் முருகவேல் அவர்கள். பூவரசுமீது அவர்கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக அவர் நிறையவே எழுதினார். பூவரசு 10வது ஆண்டு நிறைவு மலருக்கென - 2001 தை இதழில்-  அவர் எழுதிய வாழ்த்துச்செய்தி இது)





என்ன சொல்லி வாழ்த்த...?!


கொஞ்சநாளாக ஒரே தலைச் சொறியல்.
தலையைச் சொறிஞ்சு சொறிஞ்சு ஏற்கனவே கொட்டுண்டுற மயிரோடை இன்னும் கொஞ்சம் சேர்ந்து கொட்டுண்டுற மாதிரி ஒரு பிரமை.
அட.. முடி போனாலும் பரவாயில்லை உதுக்கொரு முடிவு வரவேணும் பாருங்கோ..!

“இஞ்சேருங்கோ.. இஞ்சேருங்கோ!…"
தெனாலி வந்தாலும் வந்தது இதுக்கொண்டும் குறைச்சலில்லை.
இது அன்பான அழைப்பில்லை லேட்டஸ்ட் ஃபாஷனாம் பாருங்கோ..!
“என்னப்பா..? தலையிலை சொடுகு கிடுகு பிடிச்சிட்டுதே..?”

பத்திக்கொண்டு வந்தது.
இசகு பிசகாய்க் கதைச்சால் பேந்து காரியம் அவ்வளவுதான்.
இண்டைக்கு எப்பிடியாகிலும் எழுதிப்போடவேணும். இந்தவட்டைக்குப் புத்தகம் முடிஞ்சுதோ தெரியேல்லை

ஒவ்வொரு முறையும் இப்பிடித்தான்.
பூவரசு ஆண்டுமலருக்கு ஒரு வாழ்த்து எழுதவேணும் எண்டு யோசிக்கேக்க ஏதாவது வந்து குழப்பிப்போடும். இந்தமுறை பத்தாவது ஆண்டு நிறைவுமலர். எழுதவேணும் எப்பிடியும் ரண்டு வரியாலும் எழுதவேணும்  எண்டு வெளிக்கிட்டால் இன்னும் எழுதினபாடாய்க காணேல்லை.
ஏதாலும் ஒண்டு வந்து குறுக்கிடுது...
ரண்டு வரி எழுதவேணும் எண்டு குந்தினபேந்துதான் இந்தத் தலைச்சொறியல் வேலை.
ரண்டு வரியோடை முடிஞ்சுபோற சங்கதியா இது?

ஒருமுறை எனது மதிப்புக்குரிய கவிஞர் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் சொன்னது அப்பதானா நினைவுக்கு வரவேணும்?
"ராஜன் நீர் பல சஞ்சிகைகளில் சிறுகதைகள் எழுதினாலும் பூவரசில் எழுதிற கதையள்தான் நல்லாய் இருக்கிறது.!"

ஏன் அப்படி..?
-எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.

தரமான சஞ்சிகைக்கு எழுதுகிறோமே என்ற பயமா, அல்லது கவிஞர் எழிலன், திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் போன்றவர்களின் ஆக்கங்களுக்கு சோடைபோகக் கூடாதென்ற ஆசையா, அல்லது எனது அபிமான எழுத்தாளரின் கேலிக்கு (அவர் வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும்) ஆளாகக் கூடாதே என்ற விருப்பமா என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இத்தனைக்கும் மேலாக ஒன்றுண்டு என நினைக்கிறேன். அதாவது ஆசிரியர் எனது முகத்துக்காக எனது ஆக்கத்தைப் பிரசுரித்தாலும் அதனால் பூவரசின் தரம் குறைந்துவிடக்கூடாதென்ற அவா என்று கூறலாம்.

வாழ்த்து விசயத்திலும் இந்தப் பிரச்சினைதானுங்க  இடையிலை பூந்து என்ரை தலையைச் சொறிய வைச்சு....
இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ சொடுகே? எண்டும் கேக்கவைச்சு.. மூட் அவுட்!

மற்றநாள் எழுதியே தீரவேணும் எண்டு குந்தினால் அந்தநேரம் பார்த்துத்தானா ரெலிபோன்.

„ஹலோ!“
„என்ன செய்யிறாய்?“
இதுக்கு என்ன பதில் சொல்லுறது?
„இருக்கிறன்!“
„ஒரு இடத்துக்குப் போகவேணும் வாறியே..?“
„இப்ப நேரமில்லை.!“
„வீட்டிலை என்ன செய்யிறாய்? எந்தநேரம் பார்த்தாலும் படுக்கையாக்கும்!“
„இல்லை ...எழுதவேணும்!“
„காயிதமோ?“
„இல்லை ..வேறை!“
“உனக்கு இந்தப் பைத்தியம் உதை எப்பத்தான் விட்டுப்போட்டு உருப்படுற வழியைப் பார்க்கப் போறியோ தெரியேல்லை.. இப்ப வாறியோ இல்லையோ.. ஒருத்தன் வாறனெண்டு சொன்னவன் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேணும்! பேச்சுத் துணைக்குத்தான் கேக்குறன்.!”

ம்.. எழுதி உருப்படாதது..பேசினால் உருப்படுமாம்.
“இல்லை மச்சான் கனபேர் பாவிக்காமை ஆனா ஆவன்னா எழுத்துக்கள் எல்லாம் குவிஞ்சுபோய்க் கிடக்கு. என்னைப்போலக் கொஞ்சப்பேராலும் அதுகள் எல்லாம் அழுகிறதுக்கு முந்திப் பாவிச்சுப் போடவேணும் எண்டு எழுதுறமாதிரி நானும் எழுதவேணும். அதாலை நான் இப்ப வரேல்லை!
- சொல்ல நினைத்ததும் சொல்லாமல் போனதும் இதுதான்
பேந்தென்ன அண்டைக்கும் - மூட் அவுட்.

இண்டைக்கு எப்படியாகிலும் எழுதிப்போடவேணும்.
எப்பிடித் தொடங்கிறது?
தனியொரு மனிதனாக பத்தாண்டுகள் ஒரு தரமான சஞ்சிகையை மட்டுமல்லாமல் தரமான ஆக்கதாரர்களையும் வாசகர்களையும் தக்கவைத்துள்ள செயலைக் குறிப்பிடலாமா? ஒரு தசாப்தத்தை நிறைவுசெய்யும் வேளையில் அதன் மூச்சாகப் பின்னணியில் தசாவதானியாக இயங்கிப் பல்வேறு விசயங்களையும் இலக்கிய நயத்துடன் தரும் ஆசிரியரின் உணர்வு பூர்வமான சேவையில் தோய்ந்த பணியைக் குறிப்பிடலாமா?
எழுத்தாளர்களை மட்டுமன்றி கலைஞர்களுக்கும் களம்தந்து கரம்பற்றி முன்னிறுத்தி நிறைகுடமாக தழும்பாமல் நிலைத்து நிற்கும் மகேஷண்ணையின் தாய்மையுணர்வைப்பற்றி (மன்னிக்கவும் வேறு எப்படிச் சொல்லலாம்) குறிப்பிடலாமா?

„மடையா ...மடையா..!”
என்னைத்தான் ஒருவன் அதட்டி அழைத்தான். 
சோழியான்தான்!
“உதையெல்லாம் எழுதுறதுக்கு முந்தி உன்னைப்பற்றி எழுதடா.. உனக்கு பூவரசு தந்த கௌரவத்தை எழுதடா.. உன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமனத்துடன் தோளில்தட்டிப் புல்லரிக்க வைத்த அந்தப் பிரபலமான எழுத்தாளரைப்பற்றி எழுதடா..உனது கதைகளைப் புத்தகமாக்க என எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது தனது சொந்த அலுவல்களைப் புறந்தள்ளி தனது கைகளால் புத்தமாக்கி வெளியிட்டு உனக்கொரு மகுடம் தந்த அந்தப் பேருள்ளத்தைப் பற்றி எழுதடா.. அந்த உள்ளம் உன்னைப் பொறுத்தளவில் வேறெங்கு சந்திக்கும்?

சோழியான் சொல்லச்சொல்ல எங்கோ ஒரு நெருடல்..
என்னைப்போல எத்தினைபேரைக் கண்டிருப்பார் மகேஷண்ணை!
மறுபடியும் மூட் அவுட்

ம் பொறுத்தது போதும் இதுதான் கடைசி முயற்சி. சோட் அன்ட் சுவீற்றாய் நறுக்கென்று எழுதவேணும்

அந்தநேரம் பார்த்து என்ரை வாரிசு...
„அப்பா பூவரசு எங்கை இளந்தளிர் பாக்கவேணும்!“.
அடடா இளஞ்சந்ததிக்கு பூவரசு செய்த சேவையையும் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஆண்டு விழாக்களிலே மேடையேறி திறமையால் உள்ளம்  கவர்ந்த இளம் கலைஞர்களின் திறமையைக் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஒரு தலைமுறையின் காலத்தைப் பத்தாண்டுகள் என்பார்கள்.
அவ்வாறாயின் பூவரசு ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டது.

இதை எல்லாவற்றையும எழுதி வாழ்த்திறதெண்டால்..
டென்ஷன் டென்ஷன்.. மறுபடியும் மூட் அவுட்டாவதற்குள் ..
„வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என் இதயத்தில் குடிகொண்ட பூவரசே
நீ இன்றுபோல் என்றும் பல்லாண்டு காலம்  வாழ்க வாழ்க!
அவசரமாக நான் எழுதியதைக்கண்டு சிரித்த சோழியானைப் பார்த்தேன்.
„என்ன சொல்லி வாழ்த்த எப்படி வாழ்த்த என்று முழிக்கிறியே அதுதான் புவரசின் சிறப்பு. அதுதான பூவரசின் பெருமை! வெறும் எழுத்துக்களால் அடக்கிவிட முடியாமல் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் வியாபித்து நிற்கும் சஞ்சிகைதான் பூவரசு.“
அவன் சொல்வது உண்மைதான்.
ம்.. மறுபடியும் மூட் அவுட்

இந்த மலருக்கு வாழ்த்தெழுத முடியாவிட்டால் பரவாயில்லை இருபதாவது ஆண்டு நிறைவு மலர் வரும் அப்ப அந்தமாதிரி ஒரு வாழ்த்து எழுதித்தான் தீருவன்.
மறுபடியும் பார்.. அந்த மாதிரி எண்டேக்கைதான் என்ரை நாடகம் ஞாபகம் வருகுது ஜேர்மனியிலை நான் எழுதின முதல் நாடகம் 
அதுக்கும் களம் தந்தது பூவரசுதானே !
இதுக்கு மேலையும் தலையைச் சொறிய ஏலாதுங்க..

-இராஜன் முருகவேல் (சோழியான்)

(பூவரசு 10வது ஆண்டு நிறைவு மலர் - தை 2001- இல் பிரசுரமானது)


 
 அமரர் இராஜன் முருகவேல்
(தோற்றம்: 15.04.1960  மறைவு:15.11.2016)

Samstag, 17. Dezember 2016

எனதன்பு இராஜன்! ஏனிந்த நீள் உறக்கம்?

எனதன்பு இராஜன்!
ஏனிந்த நீள் உறக்கம்?


 


காலன் வகுத்த கணக்கு நம் வாழ்வெனினும்
வேளை இதுவல்ல - விடைபெற்றுப் போவதற்கு!

இந்துமகேஷ் எழுத்துக்கு வாசகன் நான் எனச் சொல்லி
எனைக்காண வந்த அந்த நாளதனை நினைக்கின்றேன்.
அந்தநாள் முதலாக அன்பினால் எனைக்கட்டி
அகமகிழ்ந்த அன்புருவை இன்றிழந்து தவிக்கின்றேன்!

எந்தன் எழுத்துக்கு வாசகனாய் வந்த உந்தன்
ஆக்கத் திறனறிந்து அதிசயித்து நான் மகிழ்ந்தேன்.
கதை, கவிதை, கட்டுரைகள் என விரிந்த எழுத்தாற்றல்
கவியரங்கு, பட்டிமன்றம் எனத் தொடர்ந்த பேச்சாற்றல்
பூவரசு இதழ்களிலும்  மேடையிலும் பொலிந்திருக்க
இராஜன் எனும் படைப்பாளி எழுத்துலகில் வலம்வந்தான்!

இணையத் தளத்தினிலே தமிழ் எழத்துலகம் விரிகையிலே
தமிழமுதம் ஊட்டித் தமிழ்த்தாய்க்கு வளம் சேர்த்தான்
எழுத்தாளர் கலைஞர் என எவரிடத்தும் பேதமின்றி
எல்லோரும் நேசிக்கும்  சோழியான் என வளர்ந்தான்.

பத்தாண்டு மூத்தவன் நான் என்பதனால் அண்ணை என
பாசத்தோடெனை அழைத்துப் பழகிய என் நண்பனவன்
நேசக்குரல் என்னை இனி நெருங்கிவர மாட்டாதோ?
வாசிப்பதற்கென்றும் நேசிப்பதற்கென்றும்
வழியான விழிகளிலே வாஞ்சை இனித் தோன்றாதோ?

உயிரோடு உயிராக உன்னோடு கலந்த உந்தன்
காதல் மனையாளை, கண்மணிபோல் பிள்ளைகளை,
உன்னன்பில் கட்டுண்ட உறவுகளை, நண்பர்தமை
ஆதரவாய் இணைக்கின்ற கரங்கள் இனி நீளாதோ?
நிலையற்ற வாழ்விதென்று நிதர்சனம் உரைத்தாலும்
நீ இல்லை என்றெண்ண நெஞ்சம் மறுக்குதையா!

எழுதியவன் எழுதியதை இனி மாற்றி எழுதுதற்கு
எவர்க்கிங்கு உரிமையுண்டு! எல்லாமே விதிவழியாம்!
உறவின்பின் பிரிவுவரும் உண்மையெனில் அதுபோல
பிரிவின்பின் உறவு வரும்! மறுபடியும் சந்திப்போம்!
மரணமது முடிவல்ல - மனங்களை நாம் தேற்றுகிறோம்!
மறுபடியும் உனைக்காணும் நாள்வரையில் நினைந்திருப்போம்!

மானிடர்கள் இந்தமண்ணுக்கு வருவதற்கும்
மீண்டும் ஒருபொழுது விண்ணுலகம் செல்வதற்கும்
பாதை வகுத்த பரமனவன் திருவடியில்
ஆன்மா இளைப்பாற அன்பனே நீ அமைதி பெறு!
ஆண்டவனை வேண்டி அழுது தொழுகின்றோம்.

ஓம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
 
உன் அன்பில் கலந்த
இந்துமகேஷ்





அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களுக்கு!




மாயமிது வாழ்வெனினும் மரணமது முடிவல்ல!
என் அன்பில் கலந்த நண்பர்
ஊடகச் செம்மல்
அமரர் வீ.ஆர்.வரதராஜா அவர்களுக்கு!

- இந்துமகேஷ் 



அதற்குள் என்ன அவசரம் வந்தது  வீ ஆர். வீ?

கள்ளமில்லா உங்கள் அன்பில் கலந்திருந்த எங்கள் இதயங்களை
வேதனைத் தீயில் வேகவைக்க எப்படித் துணிந்தீர்கள்?

காரணங்கள் ஏதுமின்றி காரியங்கள் எதுவுமில்லை இவ்வுலகில்!
எல்லாவற்றுக்கும் ஏதோவொரு காரணம்
எங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் கூடத்தான்!

வந்து பிறந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து வாழ்பவர்கள்தான்
மாமனிதர்களாக வரலாற்றில் தங்கள் பெயர்பதித்துப் போகிறார்கள்!
அந்த வரிசையில் நீங்களும் இன்று!

என்நாடு, என்மக்கள், என்மொழி என்று
இதயசுத்தியோடு எப்போதும் இயங்கியவர் நீங்கள்!

புலம்பெயர்ந்த பின்னால்
அகதிகளாய் ஆனோமே என்று அழுது புலம்பாமல்
வெளிநாட்டு மோகத்தில் வீழ்ந்து மனம் புரளாமல்
தாயக விடுதலை நோக்கி தளராது பாடுபட்ட
நம்மவர்களில் முன்னவர் நீங்கள்!



எழுதுகோல் ஏந்திய என்போன்றவர்களுக்கு இணையற்ற தோழனாய்-
எதிர்காலச் சந்ததிகளும் தமிழர்களாய் வாழ்ந்திட அரும்பணியாற்றுகின்ற
தமிழாலயத்தின் வடமாநில பொறுப்பாளராய்-
கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்ட பண்பாளராய்-
மாற்றுக் கருத்தாளர்களையும் மாறாத புன்னகையோடு
வசப்படுத்திக் கொள்ளும் மாண்புமிகு மனிதராய்-
ஊணுறக்கம் கருதாது இரவுபகல் பாராது
தாயகத்தின் கனவோடு சலியாது உழைத்திட்ட
உங்கள் விழிகளில் நீளுறக்கம் இன்று நிலையாகிப் போனதேன்?

உடல்நலக் குறைவால் நீங்கள் உயிர் பிரிந்தீர்கள் என்னும் காரணத்தை
நம்புதற்கு கடினம் எனக்கு!

உற்ற நண்பராய் உங்களை நான் உணர்ந்திருந்தேன்!
ஈராண்டின் முன்னே நீங்கள் உங்களை இழந்த உண்மை
நேரிலே கண்டிருந்தேன் - நெஞ்சம் பரிதவித்தேன்!

கண்ணின் மணிபோலும் கலந்திருந்த உங்கள் உயிர்க்
காதல் மனையாளைக் காலன் பறித்த தினம்-
உயிரிழந்த உடலாக உங்களையே நான் அன்று கண்டேன்.



“என்னைத் தனியே விட்டு எங்கும் அவள் சென்றதில்லை
அவளைப் பிரிந்து நானும் அரைக்கணமும்  இருந்ததில்லை
இன்றவளை வி;ட்டுவிட்டு எத்தனைநாள் நானிருப்பேன்
இன்னும் சிலநாளில் என் கதையும் முடிந்துவிடும்!”

-சொன்னதுபோல் கதைமுடித்து  சொல்லாமல் சென்ற உங்கள்
எண்ணத்தின் வலிமைதனை இந்நேரம் உணர்கின்றேன்!

வீட்டை நினைப்பவர்கள் நாட்டை நினைப்பதில்லை
நாட்டை நினைப்பவர்கள வீட்டை நினைப்பதில்லை
- இப்படிச் சொல்பவர்கள் தம்கடமை மறப்பதுண்டு
இரண்டையும் நினைப்பவர்கள் உங்களைப் போல் எவருண்டு?

மனை, மக்கள், மருமக்கள், பேத்திகள் என்றிவரோடு
உறவான நண்பர்கள், சுற்றத்தார்  சூழ்ந்திருக்க
நிறைவான இல்வாழ்வு இறைவன் அளித்த வரம்!

வாழ்கின்றவரை எங்கள் வாழ்வெல்லாம் பிறர்க்கென்:று
சலியாது ஆற்றிநின்ற சமூகப் பணி உங்கள் தவம்!

தாயகத்து உறவுகட்காய் சலியாது உழைத்த உங்கள்
நேயத்தை எங்கள் நெஞ்சங்கள் நினைவில் வைக்கும்!
மாயமிது வாழ்வெனினும் மரணமிது முடிவல்ல
வாழ்ந்திருப்பீர் எம்முடனே - வரலாறாய் என்றென்றும்!

உங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனிடம் மன்றாடும்
உங்கள் அன்பில் கலந்த
இந்துமகேஷ்

பூவரசு கலை இலக்கியப்பேரவை -ஜெர்மனி

வீ.ஆர். வரதராஜா நினைவுகள்! - லெ.முருகபூபதி

திரும்பிப்பார்க்கின்றேன்: 

செய்திகளுக்கான அச்சு ஊடகத்தினூடாக ஒரு செய்தியாளரின் கதை! 
வீ.ஆர். வரதராஜா நினைவுகள்!


வீரகேசரியால்  எனக்குக்கிடைத்த  நண்பர்கள்  அதிகம். ஊடகத்துறையானது   நண்பர்களையும்  எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும்.   ஆனால், பொருளாதார  ரீதியில்தான் சம்பாத்தியம்  குறைவானது. வீரகேசரிக்கு   நூறு  வயது   விரைவில்  நெருங்கவிருக்கிறது.  மகாகவி   பாரதியின்  உற்ற  நண்பர்  வ.ராமசாமி (வ.ரா)  அவர்களும் முன்னொரு  காலத்தில்  இதில்  ஆசிரியராக  பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும்  பிறிதொரு  காலத்தில்  அச்சந்தர்ப்பம்  வந்தது. ஆனால்,  அவர்  சினிமாவுக்கு  வசனம்  எழுதச் சென்னைக்குச்  சென்றமையால்  இலங்கைக்கு  வரவில்லை. கே.பி. ஹரன், அன்டன்  பாலசிங்கம்,  செ.கதிர்காமநாதன்,  கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன்,  நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம்,  சுபாஷ் சந்திரபோஸ்  உட்பட    பலர்  பணியாற்றிய  பத்திரிகை  வீரகேசரி. 

வீரகேசரி குடும்பத்தில் இருந்த  சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.  மின்னஞ்சல் -  இணையத்தள  வசதிகள்  இல்லாத  அக்காலத்தில்  அங்கு பணியாற்றியவர்களின்  வாழ்க்கையை  இன்று நினைத்துப் பார்க்கும்பொழுது    சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும்   சவால்களும்  நெருக்கடிகளும்தான்  நினைவுகளில் வந்து   அலைமோதுகின்றன. அத்தகைய  ஒரு கால  கட்டத்தில்தான்  வரதராஜா  வீரகேசரியில் இணைந்திருந்தார். அவர்   அங்கு  அலுவலக  நிருபராக  பணியாற்றினார்.  எனக்கு வீரகேசரியுடனான  தொடர்பு  1972  இலிருந்து  தொடங்கியது. அப்பொழுது  நீர்கொழும்பு  பிரதேச  நிருபராகவே அங்கு   இணைந்தேன். அதன்பின்னர்  1977  இல்  வீரகேசரியில்  ஒப்புநோக்காளர்   (ProofReading) பிரிவில்  ஏற்பட்ட  வெற்றிடத்தையடுத்து  அதற்கு விண்ணப்பித்து   நேர்முகத்தேர்வில்  தெரிவுசெய்யப்பட்டேன். அவ்வேளையில்  என்னுடன்  தெரிவானவர்தான்  தனபாலசிங்கம். இவர்தான்   பின்னாளில்  வீரகேசரி  ஆசிரிய  பீடத்திலும் அதற்குப்பின்னர்,  தினக்குரலிலும்  இணைந்து, தினக்குரலின்  பிரதம ஆசிரியரானவர்.   அதன்  பிறகு  வீரகேரியின்  வெளியீடான  சமகாலம்  இதழில் ஆசிரியரானார்.  ஆனால்,  சமகாலம்  தற்பொழுது வெளியாவதில்லை   என்று  அறியமுடிகிறது.

வரதராஜாவுடன்  1977  இன்பின்னர்  நெருக்கமாகப்பழகும்  கால கட்டம்  தொடங்கியது. அவர்   எழுதும்  செய்திகளை, நீதிமன்றச் செய்திகளை ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஆசிரிய  பீடத்தில்  நான்  இணைந்த பிற்பாடு   அவர்  தரும்  செய்திகளை செம்மைப்படுத்தியுமிருக்கின்றேன். இந்த   செம்மைப்படுத்தல்  என்பது  ஒருவகையில் TeamWork தான். நிருபர்  எழுதுவார்.  அதனை  துணை  ஆசிரியர்  செம்மைப்படுத்தி (Editing) தலைப்புத்தருவார்.  அதன்பின்னர்  செய்தி  ஆசிரியர் மேற்பார்வை  பார்த்து  அவசியம்  நேர்ந்தால்,  திருத்தங்கள்  செய்வார்.   அதன்பின்னர்  அச்சுக்குச்செல்லும்.  குறிப்பிட்ட  செய்திகளை   அச்சுக்கோர்த்தபின்னர்  ஒப்புநோக்காளர்களிடம்  சென்று முதல் Proof இரண்டாம் Proof பார்க்கப்படும்.   அதன்பின்னர்  பக்க வடிவமைப்பாளர்  செய்தி  ஆசிரியரின்  ஆலோசனைகளுக்கு  அமைய பக்கங்களை   தயாரிப்பார்.  முழுப்பக்கமும்  தயாரானதும் முழுமையான   Page Proof எடுக்கப்படும்.   அதனையும் ஒப்புநோக்காளர்கள்   பார்த்து  திருத்துவார்கள்.  அதன்  பின்னர்  செய்தி ஆசிரியரோ  அல்லது  ஆசிரியபீடத்தைச்சேர்ந்த  ஒருவரோ மேலோட்டமான  பார்வை  பார்த்த  பின்னர்,  மீண்டும் அச்சுக்கூடத்திற்கு   எடுத்துச்செல்லப்படும். அதிலிருக்கும்  பிழைகளையும்  அச்சுக்கோப்பாளர்  அல்லது  பக்க வடிவமைப்பாளர்  திருத்தியபின்னர்  மற்றும்  ஒரு  ஊழியர்  மஞ்சள் நிறத்தில்  அமைந்த  ஒரு  அட்டையில்  அந்த  முழுப்பக்கத்தையும் அழுத்தி  ஒரு  புதிய  வடிவம்  எடுத்துக்கொடுப்பார்.   அதன்பின்னர் அச்சுக்கூடத்தில்   ஒரு  இயந்திரத்துள்  செலுத்தப்பட்டு  அந்த அட்டையில்   பழுக்கக்காய்ச்சிய  ஈயம்  படரவிடப்பட்டு  வளைவான ஒரு  ஈயப்பிளேட்  தயாராகும்.   அனைத்துப் பக்கங்களும்  இவ்வாறு தயாரானதும்   முறைப்படி  அவை  பெரிய  ரோட்டரி  இயந்திரத்தில் பொறுத்தப்பட்டு  பத்திரிகை  அச்சாகும்.   விநியோகப்பிரிவு  ஊழியர்கள்   அதன்பின்னர்  விநியோக  வேலைகளை  ஆரம்பிப்பார்கள்.

இதிலிருந்து   வாசகர்கள்  ஒரு  பத்திரிகையின்  பிறப்பை புரிந்துகொள்வார்கள். இவ்வாறு   வரதராஜா  போன்ற  நிருபர்கள்  எழுதும்  செய்திகள் பலரதும் கைபட்டுத்தான்  வாசகரிடம்  சென்றது.  இது  அந்தக்காலம். ஆனால் இன்று யாவும்  கணினி டிஜிட்டல்  முறைக்கு   வந்துவிட்டன. அத்துடன்  செய்திக்காக  கடுமையாக  உழைக்கவேண்டியதில்லை.  Download Journalism  காலத்தில்  நாம்  இன்று  வாழ்கின்றோம். அதாவது ஏதும் இணையத்தளங்களிலிருந்து பொறுக்கி எடுத்து எழுதும் இதழியல் கலாசாரம் வந்துவிட்டது.

வரதராஜா   அன்றைய  பின்னணியில்  பலரதும்  நண்பராக விளங்கியமைக்கு  அன்றைய  அச்சு  ஊடகத்தொழிலும்  காரணம். அவருக்குபத்திரிகையாளர்கள்,  நிருபர்கள், ஆசிரியர்கள்,  அச்சக ஊழியர்கள் அலுவலகத்தினுள்ளே பெருகியிருந்தனர். அத்துடன்  வெளியே  நீதிமன்ற  ஊழியர்கள், சட்டத்தரணிகள், நீதியரசர்கள்,   அரசியல்  தலைவர்கள், பொதுமக்கள்,  குற்றவாளிகள், சந்தேக   நபர்கள்  என்ற  ரீதியில்  பலருடனும்  பழகும்  சந்தர்ப்பங்கள் அவருக்கு  கிடைத்தன. அதேசமயம்  அவருடைய  முகத்தைப்பார்க்காத  ஆயிரக்கணக்கான வாசகர்கள்,  அவர்  எழுதும்  செய்திகளினால்  வீ. ஆர். வரதராஜா   என்ற   பெயரையும்  நன்கு  தெரிந்துவைத்திருந்தார்கள்.
இவ்வாறு  வரதராஜா  மட்டுமல்ல  பல  பத்திரிகையாளர்களும்  மக்கள்   மத்தியில்  பிரபல்யத்துடன்  வாழ்ந்தார்கள்.

நீதிமன்றச்செய்திகள்   எழுதுவதுதான்   வரதராஜாவின்  முக்கிய பணியாக   இருந்தமையால்,  அவர்  நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும்  இயங்கினார்.  நீதிமன்றச் செய்திகளில் தவறுகள்   நேர்ந்துவிடக்கூடாது. நீதிமன்றங்களில்   நடக்கும்  வாதங்கள்  தமிழ்,  சிங்களம்,  ஆங்கிலம் ஆகிய   மும்மொழிகளிலும்  நடக்கலாம்.  அதனால் செவிக்கூர்மையுடன்  கண்ணும்  கருத்துமாக  இருந்து எழுதவேண்டும். வரதராஜா   பணியாற்றிய  காலகட்டம்  இலங்கை  அரசியல் வரலாற்றில்  நெருக்கடியானது.  1977,  1981,  1983  ஆகிய  காலங்களை   நாம்  மட்டுமல்ல,  முழு  உலகும்  மறக்காது.   1958 வன்செயலுக்குப்பின்னர்     தென்னிலங்கையிலும்  மலையகத்திலும் வாழ்ந்த   அப்பாவித்தமிழ்மக்கள்  உடைமைகளை  இழந்து, அகதிகளாகி  கப்பல்  ஏறியகாலம்.  மக்கள்  தங்கள்  தாயகம்  விட்டு புலம்பெயர்ந்த   காலம்.   இலங்கைக்கு  பொருளாதார  ரீதியில்   60 சதவீதம்   அந்நிய  செலாவணியை  தேடிக்கொடுத்த  மலையக  தோட்டத்தொழிலாளர்கள்  நாடற்றவர்களாக்கப்பட்டதுடன்  இந்தியாவுக்கு   திருப்பி  அனுப்பப்பட்ட  காலம். மலையகத்திலிருந்து  தமிழர்கள்  அகதிகளாக  விரட்டப்பட்டு வன்னிக்காடுகளில்  குடியேறிய  காலம்.  இவை  அனைத்துக்கும் உச்சமாக   தமிழ்  தீவிரவாத  இளைஞர்கள்  ஆயுதம்  ஏந்தியகாலம். அதனால்  சிறைப்பிடிக்கப்பட்ட  இளைஞர்கள்  கொழும்பு  நான்காவது மாடியிலும் -  பூசா,  பனாகொடை  முதலான  பல  இராணுவ முகம்களிலும்  தடுத்துவைக்கப்பட்ட  காலம். இத்தகைய   துன்பியல்  காலத்தில்  மக்களுக்கு  உண்மையான செய்திகளைத்  தரும்  பொறுப்புவாய்ந்த  பத்திரிகையாளராக பணியாற்றியவர்  வரதராஜா.  சுருக்கமாகச் சொன்னால்  கூர்மையான கத்தியின்   மேல்  நடக்கும்  காலத்தில்,  கத்திக்கும்  காலுக்கும்  சேதம்  இன்றி  நடந்து  திரிந்தவர்தான்  வரதராஜா. அச்சுறுத்தல்,   கொலைப்பயமுறுத்தல்,  கடத்தப்படுதல்  என்பன பத்திரிகையாளர்கள்  நாளாந்தம்  சந்திக்கும்  அரசியலாகும்.  இவ்வளவு பிரச்சினைகளுக்கு  மத்தியிலிருந்துதான்  மக்களுக்கு  செய்திகள் கிடைக்கின்றன. அதனால்  ஒரு  பத்திரிகையாளனின்  ரிஷிமூலம்  என்பது  பஞ்சணை மெத்தையல்ல.  அவன்  நடந்து  திரியும்  பாதைகளில் அரசியல்வாதிகளின்  கண்ணிவெடிகள்  இருக்கும்.  அவற்றை எச்சரிக்கையுடன்  கடந்து  செய்தி சேகரிக்கவேண்டும்.

வரதராஜா , வீரகேசரியில்  பணியாற்றிய  காலத்தில்  அரசு  பல அடக்குமுறைச்சட்டங்களை  அமுல்படுத்தியிருக்கிறது. அவசரகாலச்சட்டம்,   பயங்கரவாத  தடைச்சட்டம்,  புலித்தடைச்சட்டம் ஆகியனவற்றுடன்  நீதியரசர்  சன்சோணி  தலைமையில் ஆணைக்குழு,   உட்பட  பல  ஆணைக்குழுக்களை  வைத்திருந்தது. சந்தேகத்தின்பேரில்  கைதாகி  தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள்  பற்றிய  செய்திகள்  வீரகேசரியில்  வருவதனால்,  அவர்களின் பெற்றவர்கள்   உறவினர்கள்  வீரகேசரியை  தொடர்புகொண்டு வரதராஜா   போன்ற  பத்திரிகையாளர்களை  சந்தித்து  உதவி கேட்பார்கள்.    வரதராஜாவும்  தம்மாலியன்ற  உதவிகளை   மனிதநேய அடிப்படையில்  செய்துகொடுப்பார்.  சட்டத்தரணிகளை  சந்திப்பதற்கும் சட்ட   ஆலோசனைகளைப்பெற்றுக்கொடுப்பதற்கும்  அவர்  பலருக்கும் உதவியிருப்பதை  பார்த்திருக்கின்றேன்.
அந்த வகையில்  வரதராஜா  ஒரு  மனிதநேய சமூகச்செயற்பாட்டாளராகவும்   இயங்கியவர்.

நாம்  ப ல வருடகாலம்  நண்பர்களாகப் பழகியிருந்தபோதும்  எமது பூர்வீகம்  பற்றி  பரஸ்பரம்  பேசிக்கொண்டதில்லை. வரதராஜா   யாழ்ப்பாணத்தில்  வசாவிளான்   பகுதியில்  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்  வாழ்ந்த  ஆசுகவி  கல்லடி  வேலுப்பிள்ளையின் வழித்தோன்றல்  என்ற  தகவல்  அவருடைய  மரணத்தின் பின்னரே எனக்கு   தெரியவந்தது. ஆசுகவி  கல்லடி  வேலன்  பற்றி  பல  சுவாரஸ்யமான  கதைகள் பதிவாகியிருக்கின்றன.   இவர்  பற்றி  இரசிகமணி   கனகசெந்திநாதன்  தமது  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சி  என்ற நூலிலும்   எழுதியுள்ளார்.  வரதராஜா  வீரகேசரியில்  பணியாற்றிய காலகட்டத்தில்  இணைந்தவர்தான்  ஸ்ரீநடராஜா  என்பவர்.
இவரும்   கல்லடி  வேலனின்  பேரன்தான்.  ஆனால்,  இவர் மாத்திரமே தன்னை  கல்லடி  வேலனின்  பேரன்  என்று மார்தட்டிக்கொண்டிருந்தார்.    அத்துடன்  இவர்,  நாடக, திரைப்படக்கலைஞர்    விஜயேந்திரனின்  தம்பி.   விஜயேந்திரன் எழுத்தாளர்.    இலங்கை   இந்தியத்தயாரிப்பான  சிவாஜிகணேசன் நடித்த   பைலட் பிரேம்நாத்  படத்திலும்  நடித்தவர். ஸ்ரீநடராஜா   மற்றுமொரு  இலங்கை -  இந்தியக்கூட்டுத்தயாரிப்பான ஜெய்சங்கர்   நடித்த  இரத்தத்தின் இரத்தமே  படத்தில்  நடித்திருப்பவர். ஆயினும்,  எந்தவொரு  சந்தர்ப்பத்திலும்  வரதராஜா  கல்லடிவேலன் பரம்பரையில்  தான்  வந்திருப்பதாக பெருமைபேசிக்கொண்டிருக்கவில்லை  என்பதும்  அவருடைய தனித்துவம். வரதராஜா   செய்திகளுடன்  மித்திரனில்  தொடர்கதைகளும் எழுதியவர்.   அவை  இலக்கியத்தரமானதல்ல.  ஆனால்,  அவருடைய வாழ்க்கைத்தேவைகளுக்கு ஊதியம்  தந்தவை.   அத்துடன் அவ்வப்போது   வீரகேசரியில்  பத்தி  எழுத்துக்களும்  எழுதினார்.

1983  இன்பின்னர்  இவரும்  மற்றும்  ஒரு  பத்திரிகையாளரான வீரகேசரியின்  உதவி  ஆசிரியர்  சேதுபதியும்  தத்தம் குடும்பத்தினருடன்  ஜெர்மனிக்கு  புலம்பெயர்ந்தனர். இவர்களுக்காக   வீரகேசரி  குடும்பம்,   கொழும்பு  கொள்ளுப்பிட்டி ரண்முத்து   ஹோட்டலில்  நடத்திய  பிரியாவிடை  விருந்தில்தான் இறுதியாக  சந்தித்தேன். அதன்பின்னர்   சந்திக்கவே  இல்லை  என்பது  மனதை  அழுத்தும்  சோகம். செய்திகளை  எழுதிய  வரதராஜா  இன்று  செய்தியாகிப்போனார்.

letchumananm@gmail.com

Samstag, 9. April 2016

பூவரசு கட்டுரைப் பக்கங்கள் -4

பூவரசு - இனிய தமிழ் ஏட்டின் பக்கங்களில்
திருமதி மகேஸ்வரி வரதராஜா [1949- 2014]  என்னும் படைப்பாளி


ஜெர்மன் வாழ் தமிழ் மாணவர்களிடையே மூத்த தமிழ் ஆசிரியையாக அறியப்பட்டவர் திருமதி மகேஸ்வரி வரதராஜா.

பரிவும் பாசமும் நிறைந்த அந்தத் தாயுள்ளத்தில் இயல்பாகவே இனப்பற்று மொழிப்பற்று நாட்டுப்பற்று என்பன மிகுந்திருந்தன.

ஒரு இல்லத் தலைவிக்குரிய அத்தனை பொறுப்புக்களையும் சுமந்து கொண்டு,  என் இனம் என் சனம் என்று சமூகப்பணிகளையும் சளைக்காது ஆற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான்!

ஊடகச் செம்மல் வீ.ஆர்.வரதராஜா அவர்களின் துணைவியாக, கணவரின் சமூகப் பணிகளிலும் அவருக்கு உறுதுணையாக அவர் இருந்தார். அதனால்தானோ என்னவோ எழுத்தாற்றலும் அவரிடத்தே இயல்பாகத் தோன்றியிருந்தது.



பூவரசு இனிய தமிழ் ஏட்டின் ஆரம்ப காலங்களில் இளையோர்க்கான ஆக்கங்களை வெளியிட்டபோது புஷ்பா அக்கா என்னும் புனைபெயருக்குள்  நின்று அவர் இளையோர்க்கான ஆக்கங்கள் பலவற்றை எழுதினார்.

நாளடைவில் கதை, கவிதை, கட்டுரை என்ற வகைகளுக்குள் அமைந்த அவரது பல ஆக்கங்கள் பூவரசில் இடம்பிடித்துக் கொண்டன.
பூவரசுக்கும் அதன் படைப்பாளர்கள் வாசகர்களுக்கும் படைப்பாளியான மகேஸ்வரி வரதராஜா மிகவும் பரிச்சயமானவர்.

பூவரசு விழாமேடைகளில்  அறிஞர்களோடு அறிஞராய் கருத்தரங்குகளிலும், கவிஞர்களோடு கவிஞராய் கவியரங்குகளிலும், பேச்சாளர்களில் ஒருவராய் பட்டிமன்றங்களிலும் அவர் தன் கலை இலக்கிய ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார். தனது இறுதி மூச்சுவரை மொழிக்காக இனத்துக்காக நாட்டுக்காக என்று அவர் ஆற்றிய பணிகள் என்றும் அவரது நினைவை எம்மிடம் நிலைநிறுத்தி வைத்திருக்கும்.

அன்பன்
இந்துமகேஷ்
(ஆசிரியர்: பூவரசு);

(நினைவுமலர் 2014)







தமிழ் இலக்கியத்தில் பெண்கள்
திருமதி மகேஸ்வரி வரதராஜா
உலகம் தோன்றி, மலைகள் தோன்றி, அவை பாறையாகி, அவை கரைந்து மணலாக மாறிய காலத்தில் தமிழ் மக்கள் தோன்றினர் என்றும், அவர்கள் பைய நாவை அசைத்தபோதே தோன்றிய மொழி தமிழ்மொழி என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

உலகில் இன்று பேசப்படும் மொழிகள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவை. அவற்றுள் எழுத்து உள்ள மொழிகள் எழுநூற்றுக்கும் உட்பட்டவை. அவற்றுள் சிறந்த இலக்கண இலக்கியங்கள் உள்ள மொழிகள் இருநாற்றுக்கும் சற்று அதிகமானவை. இத்தனை மொழிகளுக்கும் இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு.
சிறப்புகள்: ஒன்றிரண்டு அல்ல பதினாறு! அவை

1. தொன்மைச்சிறப்பு      9. ஒலிச்சிறப்பு
2. சுழிச்சிறப்பு                   10. கலைச்சிறப்பு
3. எழுத்துச்சிறப்பு           11 கவிதைச்சிறப்பு
4. சொற்சிறப்பு                  12 மருத்துவச் சிறப்ப
5. பெயர்ச்சிறப்பு               13. இசைச்சிறப்பு
6. இனிமைச்சிறப்பு         14. நாடகச்சிறப்பு
7. எளிமைச்சிறப்பு           15 இலக்கியச் சிறப்பு
8. தனிமைச்சிறப்பு          16. இலக்கணச் சிறப்பு என்பன.

உலகம் எப்படித் தோன்றியது? மலைகள் எங்கிருந்து தோன்றின? மண், நீர் நெருப்பு, முதலியவை எப்படித் தோன்றின? என்று மிகப் பழங்காலத்தில் நிகழ்ச்சிகளை அறிந்துகூறும் ஆற்றல்படைத்த வல்லுனர்களாலும் தமிழ் தோன்றிய காலத்தை அறிந்து கூறமுடியாது என்பது தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாருடைய கருத்து.

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் அறிந்திடும்
தொல்புவி வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய் - என்பது அவரது வாக்கு.

உலகத்தில் மிகத் தொன்மையான நாடு தமிழ்நாடு. உலகத்தில் தொன்மையான மொழி தமிழ் மொழி, உலகத்தின் தொன்மையான இசை தமிழிசை உலகத்தின் தொன்மையான மருத்துவம் தமிழ் மருத்துவம் என்பன தமிழறிஞர்கள் கருத்து. இன்று உலகில் அமெரிக்காவோடும் ரஷ்யாவோடும் சமமான வல்லரசாகத் திகழ்ந்து நிற்கின்ற ஜப்பானிய மக்கள் மட்டுமல்லர் ஜப்பானிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும் எங்களின் தாய்மொழி தமிழ்மொழியிலிருந்து தோன்றியதெனக் கூறி மகிழ்கின்றனர். இது நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

தமிழகத்தின் தமிழ்ச் சான்றோர்களால் எழுதப்பட்டிருந்த தொன்மையான பழஞ்சுவடிகள் பல அழிந்துபோயின. அவை இன்றில்லை.

தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதியை பெண்களே ஆக்கிரமித்துள்ளனர். தேன்மொழியாள் என்றும் கயல்விழியாள் என்றும் சித்திரப் பாவை என்றும் இப்படி எத்தனை விதமான வர்ணனைகள். இவற்றை வாசிக்கும்போது தங்கள் உடலமைப்பு இவ்வளவு அழகு மிகுந்ததா என்ற சந்தேகம் பெண்களுக்கே ஏற்படுவதுண்டு. இயற்கை அழகை இறைவன் பெண்களிடம் அள்ளிக் கொடுத்துள்ளான். சித்திரக் கலையானால் முதலில் பெண்ணை வரையவேண்டும். சிலை வடிப்பவர்கள் முதலில் பெண்ணைச் சிலைவடிக்கவேண்டும். கவி படைக்கும் கவிவாணர்கள் முதலில் பெண்ணைப்பற்றித்தான் கவி படைக்கவேண்டும். இவை மரபுவழி வந்தவை.

ஊர்ப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு
உண்பதற்குப் பிடிவாதம் பிடித்தபோது -நான்
ஓங்கிய கோல்கண்டு ஓடிய என் மகனா
மார்பில்தாங்கிய கணையுடனே
தாயகத்தை மீட்கும் போரில்
தன்னுயிரைத் தருவதற்கு துணிந்துநின்றான்?

வீரத்தாயைப் புகழ்ந்துபாடும் புறநானூற்றுப் பாடலின் தெளிவான வரிகள் இவை. சங்கப்புலவர் பொன்முடியார் பாடிய பாடல் இது.
தாயகத்தை மீட்பதற்கு சிறுவர்களும் போர்க்களம் புகுந்து மாண்டுள்ளனர் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள இலக்கிய இதிகாசங்கள் விளக்குகின்றன. இருப்பினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வகையான போர்க்கால இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன.


உதாரணத்திற்கு தமிழ்ப்பெண் இன்று பனைமரம் ஏறுகிறாள். ஆண்களால் மாத்திரமே பாவிக்கப்படும் யுத்தக் கருவிகளை தமிழ் வீரப்பெண் அனாயாசமாகக் கையாள்கிறாள்.

உடலில் அதி பயங்கரமான வெடிமருந்துகளைக் கட்டிக்கொண்டு தம்மையும் அழித்து எதிரிகளின் பாதுகாப்பு அரண்களையும் பெண்கள் தகர்த்து எறிகின்றார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழீழ விடுதலைப்போரில் ஆண்களுக்கு சரிநிகர் சமமாக தமிழ்ப்பெண்களும் போர்க்களத்தில் சாதனை நிகழ்த்திவருகிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற பூநகரித்தாக்குதலில் முதலில் அழிக்கப்பட்ட நாகதேவன் துறை அதிரடித் தாக்குதலில் தமிழ்ப்பெண்புலிகள் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் எதிர்கால இலக்கியங்களாக பரிணமிக்கத்தான் போகின்றன.
ஆயிரமாயிரம் வருடங்களின்பின் வீரத் தமிழ்ப்பெண்களின் சாதனைகளாக இடம் பெறப்போகின்றன. தமிழீழப் பாடசாலைகளில்; மாணவர்கள் இவற்றை சரித்திரங்களாகவும் போர்க்கால இலக்கியங்களாகவும் கல்விகற்கப் போகின்றார்கள்.
புறநானூற்று கால சங்கத்தமிழ்ப்; புலவர்கள் இயற்றிய கவிதைகளை விட தத்ரூபமாக புரட்சிகரமாக இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளருக்கு இந்த யுகத்தில் அரிய சந்தர்ப்பம ஏற்பட்டுள்ளது.
(1994 இல் பூவரசு 3வது ஆண்டுநிறைவுக் கலை, இலக்கிய விழாவில் திருமதி மகேஸ்வரி வரதராஜா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் இவை.)


Mittwoch, 23. März 2016

பூவரசு- 4வது ஆண்டுநிறைவுக் கலை இலக்கிய மாலை 1995



பூவரசு- 4வது ஆண்டுநிறைவுக் 
கலை இலக்கிய மாலை 1995







முமுநிலவு ஒளிபரப்ப
முற்றத்தில் நாம்கூட
பழுத்த தலைமுடியோடும்
நம் பசி தீர்க்க
சோறு குழைப்பாள் நம் அன்னை!
நின்ற நிலையிலேயே
வளைத்தெடுப்போம் ஒருகோப்பையை!
எந்தக் கோப்பையிலும்
கிடைக்காத ஒரு சுகந்தம்
பூவரசு இலை..
இல்லை...இல்லை... பூவரசு இலைக்
கோப்பையிலே கிடைத்திடுமே!

இங்கு முழுநிலவுண்டு
சோறுண்டு பருப்புண்டு
தொட்டுக்கொள்ள ஊறுகாயுமுண்டு
ஆனால்
அன்று முற்றத்தில் கிடைத்த
சுகமில்;லை
ஏங்கினோம்!
வேலையுண்டு பணமுண்டு எனப்
பின்வாங்கினோம்!
பின்பு வங:கிக்கு ஏகினோம்!
நாலு ஆண்டுகளுக்கு முன்னே
கம்பேர்க் ஆட்டோபானில்
பிறேமன் அவுஸ்வார்டில்
ஓரு பூவரசின் மணம் வீசியது!

நாலுபேரைக் கேட்டபோது
இந்த மணம் பரப்பும் 
இந்து மகேஷின் வீடும் வேலியும்
இங்குதான் எனத் தெரியவந்தது

இன்று பூவரசு மணம்
பிறேமனோடு நிற்கவில்லை
பிறநாடுகளிலும் மணக்கிறது
ஏன் எம் தாய்நாட்டிலும்
நாட்டிட நல்ல இனப் பூவரசு
இதுதான் என
ஐந்தாவது ஆண்டு நிறையுமுன்னே
ஐரோப்பாவும் முடிவெடுக்கும்
எம் தாய்நாட்டிலும்
தரமான ஒரு பூவரசாக
மணம்பரப்ப வேண்டுமென்று!

- பூவரசு 4வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.மு.க.சு. சிவகுமாரன் (வெற்றிமணி ஆசிரியர்) அவர்கள் சிறப்புரையில் வழங்கிய வாழ்த்துக் கவிதை-




உலகத்தை இல்லமாக்கி  
உள்ளத்தை சொந்தமாக்கிய ஆசிரியர் இந்துமகேஷ்.

-வீ.ஆர்.வரதராஜா


பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 4வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய மாலை 15.01.1995 ஞாயிற்றுக்கிழமை பிறேமன் நகரில் சிறப்புற நடைபெற்றது.

ஜேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான கலை இலக்கிய ஆhவலர்களும் பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வாசகர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் நிறைவான பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஓவியருமான திரு.க.சிவகுமாரன் (கண்ணா) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.




திருமதி வில்ரூட் கடெல்கா, பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி ஆகியோர் மங்களவிளக்கேற்ற திருமதி இந்துமகேஷ் வரவேற்புரை  நிகழ்த்தினார்.

திருமதி வசந்தாதேவி புவனேந்திரனின் இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து உலகமே நம் இல்லம், புள்ளிப் புள்ளி மானே, சின்னப் பூவே ஆகிய பாடல்களுக்கு சிறவர் சிறுமியர் அபிநய நடனங்களை அள்ளி வழங்கினர்.

பூவரசு 4வது ஆண்டு மலரின் முதற்பிரதியை பூவரசு வாசகர் வட்ட உறுப்பினர் திரு. இராஜகுமார் அவர்களிடம் திரு.ஞானப்பிரகாசம் அவர்கள் கையளித்தார்.


பூவரசு வாசகர்வட்ட உறுப்பினர்களான திருமதி ஜெகதீஸ்வரி சிவகுமார், திரு.மு.சிவராஜா, திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி வதனி விஜயகுமார், திரு வடிவேலு வாசன் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினாhகள்.

பூவரசு 4வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்புக்களை நடுவர்களில் ஒருவராகக் கடமையாற்றிய திரு. வீ.ஆர் வரதராஜா தொகுத்து வழங்கினார்.
சிறுகதைக்கான முதற்பரிசை திரு. மா.தியாகேஸ்வரன் அவர்களும், கட்டுரைக்கான முதற்பரிசை திரு.அ.வேணுகோபாலன் அவர்களும், கவிதைக்கான முதற்பரிசை திரு. பொ.கருணாகரமூர்த்தி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

எங்கள் இளந்தளிர்களுக்கான போட்டிகளில் வெற்றியீட்டியவர்களோடு போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் பூவரசு ஊக்கப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தது.

ஆண்டுகள்தோறும் புதிதாய் ஒரு கலை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தம பூவரசு இந்த ஆண்டு சிறுவர் சிறுமியரைப் பெரியோராய்ச் சித்தரித்து தாயே உனக்காக என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியிருந்த கவியரங்கு  அனைவரையும் வியப்புக் கலந்த மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.

கவியரங்கத் தலைவராக செல்வன் ஜகன் குலதாசன் பங்கேற்க ஆசிரியராக செல்வன் சஜீதன் சந்திரபாலனும், மருத்துவராக செல்வன் ரமணராஜா செல்வரத்தினமும் விவசாயியாக செல்வன் ஆனந்த் குலதாசனும், வயோதிபத் தாயாக செல்வி காயத்திரி யோகநாதனும், போராளிப் பெண்ணாக செல்வி ஜனனி தேவராஜாவும், காய்கறிவிற்கும் பெண்ணாக செல்வி பிரதீபா மகேஸ்வரனும் உருமாற்றம் பெற்று கவிதைகள் பாடி சபையினரின் ஏகோபித்த பாராட்டுதல்களைப பெற்றுக்கொண்டனர். கவியரங்கில் பங்குகொண்டவர்களை கொற்றையூர் வாசன் வாழ்த்திக் கவி படித்தார்.

பூவரசு விழாவுக்கு மெருகேற்ற பேர்லினிலிருந்து வருகை தந்திருந்த  ஹானப்பிரியா நாட்டியப்பள்ளி மாணவிகளான செல்விகள் தீபனா சற்குணநவராஜா, கிறிஸ்ரல் மரியதாஸ், ஆகியோரின் தனிநடனங்களும், நடன ஆசிரியை திருமதி மேனகா சுரேஸ்குமார் தயாரித்து வழங்கிய கார்த்திகேயா நாட்டிய நாடகமும், மரியன்னை புகழ்பாடும் கோடிவரம் கொடுத்தாய் பாடலுக்கான அபிநய நடனமும் பெருவரவேற்பைப் பெற்றன.

இடைவேளையைத் தொடர்ந்து இசைக்கோலம் மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது.  பூவரசு விழாக்களில் இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்கள் தொடர்ந்து இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் புதிய பாடல்கள் புதிய மெட்டுக்களில் இசை பரப்பின.

பூவரசு வாசகர் வட்டத்தைச் சோந்த திருவாளர்கள் நடராஜா, பாலசுப்பிரமணியம், ஞானச்செல்வம,; பத்மநாதன், சற்குருநாதன், திருமதிகள் வசந்தாதேவி புவனேந்திரன், பெனடிக்ரா ஞானச்செல்வம், பாமினி உதயகுமார், சசிகலா தேவராஜா ஆகியோருடன் செல்வன் பிரசன்னா, செல்வி பிரதீபா ஆகியோர்  கானம் வழங்கிய இம்மெல்லிசை நிகழ்ச்சியின்போது கிற்றார் வாத்தியத்தின் மூலம் தமிழிசைத் துறைக்குப் புகழ் சேர்த்துவரும் கலைஞர்கள் ஜோன்ஸன் சகோதரர்கள் பூவரசு வாசகர் வட்டத்தினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள்

பூவரசு வாசகர் வட்டத்தின் சால்ஸ்கிற்றார் உறுப்பினரும் கீபோர்ட் வாத்தியக் கலைஞருமான எஸ்.தேவராஜா இசைநிகழ்ச்சியைப் பொறுப்பேற்றிருந்தார்.

நிகழ்ச்சியின் இறுதி அம்சமாக பூவரசு தயாரித்து வழங்கிய கோடையில் வந்த மழை குறும்படம் இடம்பெற்றது

பெற்றோரை இழந்து அகதியாக வெளிநாடுவந்து துன்பமுறும் ஒரு பிஞ்சு நெஞ்சத்தின் உணர்வுகள் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. பங்குகொண்ட கலைஞர்கள் இயல்பான தங்கள் திறமையால் பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருந்தார்கள்.

பூவரசு ஒவ்வோர் ஆண்டுவிழாவின்போதும் புதிய பல கலைஞர்களை அறிமுகப்படுத்துவது போலவே இந்த ஆண்டும் இரண்டு புதிய அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது.

திரு இரா. உதயகுமார், திருமதி சாந்தராணி பத்மகுமார் இருவரும் புதிய அறிவிப்பாளர்களாக அறிமுகமாகி விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

பூவரசு சிறப்புற விழாக்களை நடாத்துவதற்கு வாசகர்களின் ஒத்துழைப்பும் உற்சாகமுமே காரணம் என்று தன் நன்றியுரையில் குறிப்பிட்டார் பூவரசு ஆசிரியர் திரு. இந்துமகேஷ்.
எழுத்துப்பணியோடு ஆண்டு தோறும் கலை விழாக்கள் மூலம் கலைப் பணியையும் தொடரும் பூவரசு இனிய தமிழ் ஏடு இம்மாதம் முதல், மாத இதழாக மலரும் என்பது வாசகர்களுக்கு மகிழ்வூட்டும் செய்திதானே!


(நன்றி: தமிழருவி - ஜெர்மனி பெப்ரவரி 1995)

Sonntag, 20. März 2016

பூவரசு - சிறுகதைப் பக்கங்கள் -3












தொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு
“உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு......... மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்....... இந்த மாதம் நீ; வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்............ ”என்றான்.

“ஓ........ஜா.....!”

மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான.; இரவுமுழுதும் மனைவி லதாவுடன் பிரான்ஸ{க்குப் போவதா, இல்லை சுவிஸ{க்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.
கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும,; அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழி;ய அவர்களது கார் அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷ_ரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது.

எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷ_ரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள்.

“அப்போ அவர்கள் பேபி....? ”

“எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.”
இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்துவிடுவாளா என்ன.......
தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள்.

அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்...... பகலில் யாருமிருக்கமாட்டோம்
என்பதை முதலி;லேயே சொல்லித்தொலைத்திருந்தால்....... இரவு வந்துசேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸ{க்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்N;பாதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள்.
ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷ_ரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்.........அத்தான்.........” என்று அன்பொழுக அழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப்போனதும் இN;த மைத்துனன்தான்.

பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்ததில் முதலிரண்டுநாளும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் உட்கார்ந்திருக்;க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது.
கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை.
குளிர்வேறு. காரைச்சூடுபண்ண அடிக்கடி ஸ்ரார்ட் பண்ணவேண்டியிருந்தது.
உடம்பைக்கொண்டுபோய் கட்டிலில் எப்போதான் எறிவோம் என்றிருந்தது.
அவர்கள் எப்போதுதான் வருவார்கள்.......... இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தைவேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது.
ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய் கேட்;டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது.
“ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே..... ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் காரும் வந்து லான்ட் பண்ணியது. ”

இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு “சொறி”யாவது சொல்லவேணுமே...... ஊஹ_ம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள்.
அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர்.
வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறையவே எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன.

லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான்.

மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள்:
“ நானும் ஓரிடத்தை போகவேணும்...... வரக்கொஞ்சம் செல்லும் செல்லும். ”
ஓரிடத்துக்கு என்றால்...... “அதைப்பற்றி மேலே கேளாதே” என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா?
அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்:
“மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே...... ”
“ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், ஒருவருக்கும் அடங்கான்......... ”
அதற்கு முன்N;னபின்N;ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக்கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு அவளுடன் சேர்ந்தமாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள்(எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல்அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருப்பதற்கான தடயங்கள் ஒன்றும் புலப்படவில்லை.
பிறிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸ{டன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி (அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு ). அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ, கடப்பாரையோ தென்படுகிறதா என்று தேடினார்கள்.
திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்.........
அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ஆபைசழள ஆயசமவ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள்.
மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்தியஅசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்தது போல் ஏழு மணிக்கு எழும்பி பாத்றூம் போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார்.
“எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார்.

மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ{க்குப் போவதாகச் சொன்னாள்.

மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்........ புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்....... அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்........தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்......... அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியி;ல...... ”

அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்....... ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்..... மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது.
ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ”

போய் எடுத்தால் மறுமுனையில்.........
“குறுய்ஸ் கொட்..... நான் சூசாரா.... மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்..........துகுணா........ நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே....?”
(வியட்னாமோ தாய்லாந்துக்காரி....... வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.)
“மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல..... அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்.....! ”

சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி; முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை.

வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்:
“சூ....சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் ”
திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்:
“எ...எ..எ.என்னவாம்..........? ”
எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை...... எதுக்கும் “நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்...வைச்சிட்டாள்”; என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது.
உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸ{க்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை..”என்றாள்.
நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை..... இஞ்சை........ கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்....... நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே............. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்........ முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்........ அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்........ லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணிக்கிண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம் அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்............. ”


ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்..........

“அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்.........இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே..........வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா....... சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்.......... ”

(ராகுலன் மனதுள் -யாருக்கு.....?-)
கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்:

“உங்கடை ஷ--_ரிச்சில என்னதான் விஷேசம்........ அதைச்சொல்லுங்கோ......... ”

“ விஷேசமெண்டு......?- ”

“இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை....? ”

“ நானூறு கிலோ மீட்டர் தள்ளி..........ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்......... இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ........எங்கட சனமும் சிலது போறது......... வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்.......... நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல.........இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்.........? ”

லதா ஆற்றாமல் கேட்டாள்:
“அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ”

“இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்.......
பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்.......... பிறகு கோவிந்தாதான்...........கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் பார்த்திருக்கலாம்........ ”

(ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்.......- ”
என்றிருப்பான்.)

இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று.


சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை.
அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி; மாடிக்கு ஏறிப்போனான்.
அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை “என்ன..... குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு....?”
என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது.
இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள்.

குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான்.

“ ஏய்........ லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்....... மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே.......- ”


“ பிள்ளைக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை...... அதுதான் அழுகிறாள்.... ”


“ சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ”


அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும்.

“ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்...... தணியுதோ பார்ப்பம்....”

“ என்ன குடுத்தியோ....... இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி
வாசிக்கத்தொடங்கிடுவான்........ பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ்செய்யேலா...........”

பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்:

“..... நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்............ இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு...... நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது......... ”

லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டு தம் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள்.

காரில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சேவிடவே முடிந்தது. நிம்மதி உண்டானது.

கார் சுவிற்சலாந்து-ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும்
மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும,; பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும்; மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது.
சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:- “கண் மண் தெரியாதமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே........?”

“ எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப்போறாரெண்ட பயத்திலதான்........”

“ என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ....... என்னப்பா சொல்லுறியள்.......? ”

“ அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகளல்லே....... அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கொள்ளப்போறாரேயெண்டு கிலியில பறக்கிறான்.......”

சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள்.

“ என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை..... இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் , ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரும், ஒரு அலுவலிருக்கு......... என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ”

“ அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை....... மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்கி;றதின்ற படிமம் அது..! ”

அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்....... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”
என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சிலவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள்.
குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரிந்தது.

மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்:

“ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே.... பாரீஸ{க்குப் போவமே.......? ”

அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.........ச்சொச்சொச்சொ!

நாங்கள் மெல்ல மாறுவோமே............. ராகுலன் அதை தனியே ரசிக்கட்டும்.


(ஜெர்மனி -பூவரசு- இதழ் தன் ஏழாவது ஆண்டுநிறைவையொட்டி நடாத்திய சிறுகதைப்போட்டியில்1998 முதற்பரிசை பெற்ற கதை.)

Mittwoch, 16. März 2016

பூவரசு - எங்கள் இளந்தளிர்கள்!


















2001 தைத்திங்கள். 
 பூவரசு இனிய தமிழ் ஏட்டின் 10வது ஆண்டு நிறைவு வாசகர் விழாவுக்கென நிகழ்ச்சித் தயாரிப்பில் முனைந்திருந்த நேரம். எங்கள் இளந்தளிர்களுக்கான நிகழ்ச்சிகளை வகுத்துக்கொணடிருந்தபோது இளந்தளிர்களில் ஒருவரான கஜனி சொன்னாள்: 
இம்முறை நான் பூவரசு மேடையில் பாடப்போகிறேன்.!
நல்லது! வழக்கம்போல் பூவரசு மேடைகளில் பாடப்படும் மெல்லிசைப் பாடல்களில் ஒன்றைப் பாடலாம் என்றேன்.
இல்லை நான் ஏற்கனவே பாடலைத் தெரிந்து வைத்திருக்கிறேன் அதே பாடலைத்தான் பாடப் போகிறேன் என்றாள்.
அனுராதா ஸ்ரீராம் பாடிய பக்திப்பாடல்களில் ஒன்றான மாவிளக்கு ஏற்றிவைத்தேன் மாரியம்மா என்ற பாடல் அது.
பாடினால் அந்தப் பாடலைத்தான் பாடுவேன் இல்லாவிட்டால் பாடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். அவளது விருப்பப்படியே அந்தப் பாடலை விழாமேடையில் பாடினாள்.
அவளது குரலில் அந்தப் பாடல் ஒலித்து 15 ஆண்டுகளைக் கடந்தாயிற்று.
இன்று (16.03.2016)அவளது நினைவைச் சுமந்துவரும் 15வது ஆண்டு.



கள்ளமில்லா மலரொன்று
காலத்தை வென்றதின்று!


புன்னகை இதழ் விரியும் உன் பூமுகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
காலம் பொல்லாதது என்று சொல்லாமல் சொல்கிறது அது எனக்கு.
ஆனால் காலம் என்பதற்கு என்ன கணக்கு?
நேற்று இன்று நாளை என்பதெல்லாம் இந்த உடலோடு வாழும் வரைதானே
என்றும் வாழும் உயிர்களுக்கு இந்தக் கணக்கு எதற்கு?
என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன் இப்போதெல்லாம்!
சின்ன வயதில் நீ புலால் மறுத்து முழுமையான ஒரு சைவப்பெண்ணாகவே உன்னை ஆக்கிக் கொண்டாயே.. அப்போது உன்னை ஒரு பிடிவாதக்காரியாகவே என்னால் எண்ணிக்கொள்ள முடிந்தது.
ஆனால் உன்னைப் பெற்றவளும் பெற்றவனும் உன்னில் உன் வார்த்தைகளில் கட்டுண்டு உனக்காகவே தங்களையும் மாற்றிக்கொண்டு உன்விருப்பம் ஒன்றே தமது விருப்பமாக மாற்றிக்கொண்டார்களே- அதை இப்போது நினைக்கிறேன்.
பேச்சில் செயலில் மென்மையே நிறைந்தவளாய் மற்றவர் முகங்களில் துயர்காண விரும்பாதவளாய் வளர்ந்துகொண்டிருந்த நீ எல்லார் இதயங்களையும் கலங்கடித்து மறைந்துவிட எப்படித் துணிந்தாய்?
இயற்கையின் நியதி இதுதான் என்று சொல்லாமல் சொல்கிறாய் நீ
பக்தி நிறைந்த உன் பாசமுகம் படைத்தவனின் பாதார விந்தத்தில் நிலைத்திருக்கும் என்பது நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை
இது நீ எங்களிடம் விதைத்துச் சென்ற நம்பிக்கை.

மாவிளக்கு ஏற்றிவைத்தேன் மாரியம்மா- என்
மனசுக்குள்ளே வெளிச்சமாக வாடியம்மா
- பூவரசு மேடையில் நீ புன்னகையோடு பாடிய பாடல் அது.
பொருள் புரிந்துதான் அதைப் பாடினாயோ!
ஆனால் நாங்கள் புரிந்துகொள்கிறோம் இப்போது.
உன் ஆத்ம சாந்திக்காக அந்தப் பராசக்தியையே  இறைஞ்சுகிறோம்

பூவரசு கலை இலக்கியப் பேரவையோடு
உன் அன்புக்குரிய
இந்துமகேஷ் மாமா.






கஜனி!

அவள் இதழ்விரித்தால் அரும்பும் இளைய புன்னகையில் எத்தனையோ அர்த்தங்கள்!
எல்லாக் குழந்தைகளையும்போல் அவளும் பிறந்தாள், தவழ்ந்தாள், வளர்ந்தாள், நடந்தாள், படித்தாள், ஆளானாள்.
எல்லாம் ஒரு சிறுகதைபோல் சிறியதொரு கவிதையைப்போல் சிறியதொரு திரைப்படம் போல்.!
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுண்டு.
ஆனால் இவளது முடிவு எதிர்பாராதது. எல்லா முடிவுகளுமே எதிர்பாராதவைதான் என்றாலும் இவள் முடிவு எண்ணிப்பார்க்கவே முடியாத முடிவு. இப்படியும் முடிவு வருமா என்று இளைய  உள்ளங்களையே திகைக்கவைத்த முடீவ!

கஜனி!
அவள் ஒரு சிறு காவியம்
எப்போதும் சுறுசுறுப்பு
சுறுசுறுப்பினிடையே சின்னச் சின்னக் குறும்பு.
வளர்ந்தாலும் மாறாத குழந்தைமனம்
ஆனாலும் மனத்தினிலே பெரியமனிதத் தனம்.
சின்ன வயதினிலே உயிர்களிடத்தில் அதிக அன்பு.
அதனால் மாமிசத்தில் வெறுப்பு
மெள்ள மெள்ளஅவள் மாறினாள்.
தெய்வபக்தியும் அவளோடு சேர்ந்தே வளர்ந்தது.
பள்ளிக்குப் போகும்போதும் பயபக்தியாய் விபூதி அணிந்துசெல்வது அவள் வழக்கம்
பள்ளித்தோழர்கள் வேடிக்கை செய்யமாட்டார்களா என்றால் சிரிப்பாள்.
அவர்கள் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்பாள்.
அவள் உலகைவிட்டுப் பிரிவதற்கு சிலநாட்கள் முன்பாக தனது நிறைய ஆசைகளைச் சொன்னாள் அன்னையிடம்.
கலைகள் மீது அவள் கொண்டிருந்த ஆர்வத்தைச் சொன்னாள்.
இசை, நடனம் என்பவற்றில் அவள் கொண்டிருந்த அக்கறை வியப்பைத தந்தது.

பூவரசு மேடையிலே நின்று அவள் ஒரு பாடலை- பக்திப்பாடலை- அம்மனை நினைந்துருகிப் பாடியபோது பார்த்தவர்கள் அதிசயித்தார்கள். மௌனமே முதல்மொழிபோல் மற்றவர்க்குக் காட்சிதரும் கஜனியா  இது என்ற கேள்வியால் எழுந்த ஆச்சரியம். பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் அது பதினைந்து நாட்கள் நிலைப்பதற்குள் காலம் அவளைக் கவர்ந்துகொண்டது.
பள்ளிக் குழந்தைகளோடு நீச்சல்பாடம் கற்கச்சென்றவள் நீரில் நனையாமலே உயிரை நீத்துக்கொண்டாள். இயற்கை மரணம் என்று எழுதிவைத்த அறிக்கை சொல்கிறது.
அவள் அன்பு வடிவானவள்.
ஆம் அது அப்படித்தான்!
அவள்மீது பாசம்காட்டிய ஜெர்மானிய பள்ளித்தோழர்களும் வகுப்பாசிரியர்களும் பாடசாலை நிர்வாகிகளும் அவளது இறுதிக் கிரியையின்போது வடித்த கண்ணீர்வெள்ளம் அதை உறுதிப்படுத்துகிறது.

தெய்வம் உண்டென்பதும் நல்லவர்களை அது விரைவில் அழைத்துக்கொள்கிறது என்பதும் நம்மிடையே வழங்கிவரும் நம்பிக்கை. அதை உறுதிப்படுத்தியிருக்கிறாள் கஜனி.
அவள் ஆத்மா சாந்தியடைவதாக!


(கஜனியின் நினைவாக 2001இல் வெளியிடப்பட்ட நினைவுப் பூக்கள் மலரிலிருந்து)