Mittwoch, 10. Dezember 2014

பூவரசு - 3வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய பரிசளிப்பு விழா 1994




ஜேர்மனியில் பூவரசு சஞ்சிகை நடத்திய
முத்தமிழ் விழா!


15.01.1994 




















பூவரசு சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய பரிசளிப்பு விழா பூரணத்துவமான முத்தமிழ் விழாவாக நிறைவு பெற்றது.

ஜேர்மனியின் பிறேமன் நகரில் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஏழுமணி நேரங்களாக நடைபெற்றது இங்கு
விசேடமாகக் குறிப்பிடத் தக்கது.

திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி நடேஸ்வரி சிவநாதன் ஆகியோர் மங்களவிளக்கேற்ற, திருமதி வசந்தாதேவி புவனேந்திரனின் இறைவணக்கப் பாடலுடன் விழா ஆரம்பித்தது. 

உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம் என்று ஒலித்த ஒற்றுமைப் பாடலை அடுத்து திருமதி இந்துமகேஷ் வரவேற்புரை வழங்கினார்.



மழலையர்கள வண்ணத்துப் பூச்சிகளாய் கண்ணைக் கவர்ந்தனர்.




சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த சிவனடியான் ஸ்ரீபதி பூவரசு ஆண்டுமலரின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


திருமதி மகேஸ்வரி வரதராஜா, பிறேமன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு இரா.சுவேந்திரராஜா, பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திருமதி சாந்தராணி பத்மகுமார், திருமதி பெனடிக்ரா ஞானச்செல்வம், திருமதி வசந்தமலர் விஜயகுமார் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடையிடையே இடம்பெற்றன.


 
















நடன ஆசிரியை ஸ்ரீரஞ்சனி குணரத்தினம் அவர்களின் மாணவிகள் பரதநாட்டிய விருந்தளித்தனர்.







திருமதி கன்னிகா சந்திரபாலன் தயாரித்து வழங்கிய செம்பு நடனம் பூவரசை வாழ்த்துவதாக அமைந்திருந்தது.


அடுத்து இடம்பெற்ற அவர்களும் இவர்களும் துள்ளிசை நாடகம் புதிய பாணியில் மேலைத்தேச கீழைத்தேச தாளக்கலப்பில் அற்புதமாக அமைந்திருந்தது. பங்குகொண்டு நடித்தவர்கள் அனைவரும் தத்தமது பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருந்தனர்.








கவிஞர் அமுதநதி சுதர்சன் தலைமையில் விடிகின்ற பொழுதுவரை விளக்கேந்தி வாருங்கள் என்னும் தலைப்பில் கவியரங்கு இடம்பெற்றது. தாயக விடுதலை உணர்வையே மையமாகக் கொண்டு கவிதைகள் புனையப்பட்டிருந்தபோதிலும் ஒவ்வொரு கவிஞரும் தத்தமது பாணியில் அதை வெளிப்படுத்திய விதம் இரசிக்கத் தக்கதாய் அமைந்திருந்தது.



இக்கவியரங்கில் க.ஸ்ரீதாஸ், க.சிவானந்தன், இ.த.இராஜன், திருமதிகள் சித்திரா மணிவண்ணன், ஜெகதீஸ்வரி இராஜரட்ணம், ஆகியோர் பங்குகொண்டனர்.

பூவரசு நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கான பரிசளிப்புக்களும் இடம்பெற்றன.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. பிறேமன் கலை நிலா இசைக்குழுவினர் வழங்கிய இந்த இசைநிகழ்ச்சியில் முற்றிலும் புதிதாய் இயற்றி இசையமைக்கப்பட்ட பாடல்கள் இடம்பெற்றன. இரசிகர்களிடையே இவை பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டன.

நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் அன்ரன் பீலிக்ஸ் தனது இனிய குரலால் நிகழ்ச்சிகளுக்கேற்ற வண்ணம் (கவியரங்கினை கவிதை நடையிலும், நாடகத்தை நாடகபாணியிலும்) அமைத்து அறிவித்த விதம் சுவையானதாக அமைந்திருந்தது.


-வீ.ஆர்.வரதராஜா



(நன்றி:  தமிழன் பத்திரிகை இலண்டன் 09-15 மார்ச் 1991)


புகைப்படங்கள்:  “ஜெகா” எஸ் . தேவராஜ

Sonntag, 7. Dezember 2014

பூவரசு-கவிதைப் பக்கங்கள் -8

பாட்டுக்குள் அடங்காத 
பாசங்கள்






 















தேசம் எனது நேசத்தாய்
அவள் தேகமே
நான் தவழ்ந்த பாய்
மண்வாசமே என்
மனதுக்குத் தேன்
வாழும் நாளெலாம்
அவள் அன்பை நினைத்திருப்பேன்

கதிரின் ஒளி எனக்கு
ஊட்டச்சத்து
காற்று தரும் எனது
உயிருக்கு மூச்சு
பறவை இனங்களெல்லாம்
பாடும் தாலாட்டு
அவள் பாசங்கள் எனது
பாட்டுக்குள் அடங்காது

அன்னையின் தமிழே
நான் அருந்துகின்ற பால்
அவள் அங்கத்துச் செல்வமெல்லாம்
எந்தனுக்குச் சீர்
என் அன்பே அவளை
சூழ்ந்த பெருங்கடல்
அவள் மடியைத் தேடிவரும்
என் உணர்வு அலைகள்
இதயமெனும் உலகினிலே
அவளுக்கு நிலம்
இதைவிடவும் இருக்குமா
எனக்கு வேறு சுகம்!

- ஜெகதீஸ்வரி இராஜரட்னம்

  (பிரசுரம்: பூவரசு புரட்டாதி - ஐப்பசி 1991)





(சர்வதேச புலம்பெயர்  எழுத்தாளர் ஒன்றியம் வெளியிட்ட
ஜெகதீஸ்வரியின் - புலமும் புலராத பொழுதுகளும்
 கவிதை நூலுக்கென நான்  அளித்த வாழ்த்துரை )



நினைத்துப் பார்க்கிறேன்!


                        பூவரசு கைஎழுத்துப் பிரதியாக வெளிவரத் தொடங்கிய நேரம் (1991)
ஒரு இதழை கவிதைச்சிறப்பிதழாக வெளியிடவேண்டும் என்ற ஆவலோடு அறிவிப்புச் செய்திருந்தேன். வந்திருந்த கவிதைகள் பலவற்றில் ஒரு கவிதை சிறகடித்துக் கிடந்தது.

.. ..
தேசம் எனது நேசத்தாய்
அவள் தேகமே
நான் தவழ்ந்த பாய்
மண்வாசமே என் 
மனதுக்குத் தேன்
வாழும் நாளெலாம்
அவள் அன்பை நினைத்திருப்பேன்
- என்று தொடரும் அந்தக்கவிதையின் சொந்தக்காரியாய் முகம் காட்டினார் திருமதி ஜெகதீஸ்வரி இராஜரத்தினம்.

அந்தக்கவிதையோடுதான் எனக்கும் பூவரசுக்கும் அறிமுகமானார்  இந்தக் கவிதாயினி.

ஊரைவிட்டு ஓடிப்போனவர்களெல்லாம்   உணர்வற்றவர்கள் என்பதாக புலம்பெயர்ந்த படைப்பாளர்களை  ஒருசிலர்  ஊரிலிருந்து பரிகசித்துக் கொண்டிருந்தபோது-
ஊரைப்பிரிந்த சோகமும் ஊரின்மீதான தாகமும் புலம்பெயர்வாழ்வின் அவலமும் மனதைக் கிழித்துக்கொண்டிருக்க இரத்தக்கண்ணீர் வடித்த உள்ளங்களிலிருந்து உணர்வுக்கவிதைகள் புரண்டுகொண்டிருந்தன.

புலம்பெயர் இலக்கியத்தை அவைகளே  ஆக்கிரமித்துக்கொண்டுமிருந்தன.
அத்தகைய படைப்புக்களின் வரிசையிலேயே ஜெகதீஸ்வரியின் கவிதைகளும் உருப்பெற்றன.

ஆயினும் ஏனைய படைப்பாளர்களிலிருந்து தனக்கென வரித்துக்கொண்ட தனிநடையால் ஜெகதீஸ்வரியின் கவிதைகள்  தனித்துவம் பெற்றன.

அந்தக் காலகட்டத்தில் புலம்பெயர் இலக்கியத்துக்குப் புத்துயிரளித்துக் கொண்டிருந்த பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஜெகதீஸ்வரியின் கவிதைகளைச் சுமந்து  வந்தபோதும் ஏலையா சஞ்சிகையே அவரது ஏராளமான படைப்புக்களை ஏந்தி வந்தது.
அவரது  பெரும்பாலான கவிதைகளை வாசகர்மத்தியில் பரவலாக்கி அவரது திறமையை வெளிக்கொணர்ந்ததில் ஏலையாவுக்கும் அதன் ஆசிரியர் திரு. கா.க.முருகதாசன் அவர்களுக்கும் பெரும்பங்குண்டு.

0
புலமும் புலராத பொழுதுகளும்-
இது இந்தக் கவிதைநூலுக்கான தலைப்பு.

ஆனால் புலராமலேயே போய்விடுமோ நம் தேசம் என்ற கேள்விக்கு இனி இடமில்லை.
இருளுக்குப்பின் ஒளி என்பது இயற்கையின் நியதி.
அதிகாலைச்சூரியனின் வரவுக்கு முன்னால் விடிகாலைத் தாரகை கண்சிமிட்டுகின்றது.

உணர்ச்சிக் கவிஞர்களின் வரிகளும் இந்த நட்சத்திரங்களைப் போலத்தான்.
நாளைய விடிவுக்கு முன்னால் விடிகாலை நட்சத்திரங்களாக.
நமது மண்ணின் சுதந்திர விடியலில் ஜெகதீஸ்வரியின் கவிதைகளும் நம்பிக்கை நட்சத்திரங்களாக.

ü
வாளும் வேலும் துப்பாக்கிகளும் வரலாறு படைத்தனவா இல்லை 
அவை வரலாறுகளை முடித்தன.
ஆனால் எழுதுகோல்கள்... அவை வரலாற்றை எழுதின - வரலாறுகள் ஆயின இதுவே வரலாறு.

ஜெகதீஸ்வரி  சொல்வதுபோல்-
..விடுதலை எனுமோர்
எல்லை தொட வேண்டும்;
உன் விழிகளை இனியும்
மூடாதே
விடுமுறை எடுத்து
சூரியன் படுத்தால்
உலகினில் ஏது
இயக்கமே
தலைகுனிவு
எங்கள் தமிழுக்கு
எனும்போது
தணலாய் கொதிக்கட்டும்
உன் இரத்தமே
.. .. .. ..
-சொந்த மண்ணைப் பிரிந்து வந்தாலும் இவர்கவிதைகள் அந்த மண்ணில் கலந்தன. மண்ணோடிணைந்தன. எனவே மண்ணுள்ளவரை இவர் வரிகளும் வாழும்.

எழுதுகோல் ஏந்திய இவர் இன்னும் தொடரவேண்டும்.
இவரது கவிதைகளின் ஒரு பகுதியை நூல்வடிவாக்கியுள்ள சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினரினது  இதுபோன்ற முயற்சிகளும் தொடரவேண்டும்.

புலம்பெயர் இலக்கியத்தின் உயிர்த்துடிப்பான படைப்புக்களும் படைப்பாளர்களும் மறக்கடிக்கப்படாமல் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சர்வதேச புலம்பெயர்  எழுத்தாளர் ஒன்றியம் தனது இலக்கில் வெற்றியீட்டவேண்டும் என இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.

அன்பன்
இந்துமகேஷ்
(ஆசிரியர்: பூவரசு)








 (பிரசுரம்: பூவரசு புரட்டாதி - ஐப்பசி 1991) 

Freitag, 7. November 2014

பூவரசு- கவிதைப் பக்கங்கள்-7

எப்போது?




மலைபோல்
பொன்பொருளைக் குவித்து
அதன்மேல்-
மமதையுடன்
வீற்றிருக்கும் மனிதா!
தன்மானத்தை விலைபேசியா -உன்
தகுதியை உயர்த்தினாய்?
தாய்நாட்டையே
ஏலம் விடுகின்ற
ஆயுதத் தரகனா நீ?-இல்லை
ஆரணங்கின் தலைவனா{

அதோ பார்-
உனக்குக் கீழே
அந்த ஏழை
ஏந்துவதோ
பிச்சைப் பாத்திரம்

உழைத்துழைத்து
ஓடாய்த் தேய்ந்தவன் கீழே
உழைப்பையே அட்டையென
உறிஞ்சிக் கொழுத்தவன் மேலே

நீயோ
வசதிகளின் எல்லை
அவனோ-
வறுமையின் எல்லை

தீபாவளி வந்து போகும்
தீமைகள் விலகுமா-இந்த
உயர்வு தாழ்வு
நீங்கிச் செல்லுமா

பங்களாக்களின்
பகட்டான கதவுகளைப்
பார்த்துப் பார்த்து
தட்டுகின்ற தீபாவளியே
ஏழை வீட்டின்
இதயக் கதவுகளை
எப்போது போய்த்
தட்டப் போகின்றாய்?!




கவிவாணன் 
இ.சம்பந்தன்
(இராட்டிங்கன்)



(பிரசுரம்: பூவரசு வைகாசி-ஆனி 1999)

Donnerstag, 6. November 2014

பூவரசு- சிறுகதைப் பக்கங்கள்- 2

சிறுகதை


ஆதியைத் தேடி 
ஆழியில் சயனம்
                       




 -இராஜன் முருகவேல்


அது ஒரு ~சொக்கலேற்~ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. 

பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி, அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை ~சொக்கலேற்~ வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி, அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி, குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி, தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளால் சுற்றி பெட்டிகளில் அடைக்கும் பகுதி, களஞ்சியப் பகுதி, விநியோகப் பகுதி என வேலை செய்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்குக் குறையாது.

அந்த ஆயிரத்தில் ஒருவனாய், அந்தப் பகுதியில் ஒன்றில்... அதாவது வர்ணத் தாளால் சுற்றப்பட்டு வரும் ~சொக்கலேற்~களுள், தவறாகச் சுற்றப்பட்டவைகளை பிறிம்பாகத் தவிர்க்கும் பகுதியில் எனக்கு வேலை.

கேட்பவர்களுக்கு, ~ப்பூ... இவளவுதானா வேலை.. மிகவும் இலகுவானதாச்சே..~ என்பதுபோல இருக்கும். தப்பில்லை. ஆனால் அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்களைப் பொறுத்து வேலை சுகமாகவோ அல்லது சுமையாகவோ அமையும். இயந்திரங்களின் வேகக் கட்டுப்பாடு பொறுப்பாளர்களின் கையில். தொழிற்சாலை நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவதற்கு ஆசைப்படும் பொறுப்பாளர்கள் இயந்திரத்தின் வேகத்தைக் கூட்டிவிடுவார்கள். வேகம் கூடினால் தப்பானவைகளைத் தவிர்க்கும் வேலையும் கூடும். ஆக, இயந்திரத்தின் வேகத்துடன் போட்டியிட வேண்டும்.

அன்று காலை... ~காட்~டை நேரத்தைக் குறிக்கும் இயந்திரத்தினுள் தள்ள, அது நேரத்தைக் குறித்ததற்கு அறிகுறியாக பச்சைநிற குமிழை மினுக்கி, ~காட்~டை வெளியே கக்கியது.

எனது பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். எதேட்சையாக பொதிகளாக்கும் பகுதியில் ஒரு பெண் என் கண்ணில் தென்பட்டாள். அவளை அதற்கு முன் அங்கே கண்டதில்லை. 

கருமையான கூந்தல்.. கறுத்தக் கண்மணிகள்... முக அமைப்பு...
நிச்சயமாக எனது நாட்டுக்காரியாகத்தான் இருக்கவேண்டும். அந்தத் தொழிற்சாலையில் இலங்கையர் எவரையும் நான் கண்டதில்லை. ஆகவே, நான் ஒருவன்தான் இலங்கை நாட்டவன் என்பது என் கணிப்பு.
இப்போது இவள்.. 
ஆனால் அவளது சிகை அலங்காரமும், காதணிகளும் சற்று வித்தியாசமாக, அந்தத் தொழிற்சாலைக்குரிய சீருடைக்காலும் ஐரோப்பிய யுவதிகளுக்குரியதாக வித்தியாசம் காட்டியது.
~சிங்களத்தியோ..?~
~இல்லை... இல்லை. தமிழிச்சியாகத்தான் இருக்கவேணும்...~
தொழிற்சாலைக்கு புதுவரவு. எனது நாட்டவள். சற்று சந்தோசம் பொங்கியது.
எதேட்சையாக நிமிர்ந்தவளின் பார்வை எனது கண்களைச் சந்தித்தது. முகத்தில் மலர்ச்சி தோன்றியது போலிருந்தது. புன்னகைத்தாளா? புரியவில்லை. ஏதோ ஒருவகை உணர்வு மாற்றம் தெரிந்தது அவள் முகத்தில்.
மீண்டும் பார்வையை விலக்கி வேலையில் மும்முரமானாள்.
~என் நாட்டுக்காரி..!~
அவளைப்பற்றி மேலும் அறிய ஆவல் ஊறியது. நான் எனது வேலைப்பகுதிக்கு விரைந்தேன்.
~சொக்கலேற்~ வாசம் நாசித்துவாரம் வழியாக மனதை நிறைத்தது.

0
அதற்குப் பின் சில தினங்களாக அவளைக் காண முடியவில்லை. சிலவேளை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது வேலைநேரம் மாற்றமடைந்திருக்கலாம்.
எனினும் அவளைச் சந்திக்கவேண்டும்... அறிமுகமாக வேண்டும்... அவளைப்பற்றி அறிய வேண்டும்... உரையாட வேண்டும் என மேலெழும் ஆசைகளை அடக்க முடியவில்லை. ஆசைகள் மேலெழுந்தால் நிம்மதியின் அழிவு நெருங்குகிறது என்றுதானே அர்த்தம்?! அதே நிலையில் நான்.

வாரம் ஒன்று நகர்ந்தது. அந்த வாரம் எனக்குக் காலை வேலை. காலை ஆறு மணியில் இருந்து பிற்பகல் இரண்டு மணிவரை.

மதியம் பன்னிரண்டு மணி. 
எல்லோருக்கும் உணவு இடைவேளை. 
சகல பகுதிக்கும் பொதுவாக அங்கே உணவருந்தவென ~கண்டீன்~ ஒன்றுள்ளது. வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் உணவையும் அங்கே இருந்து சாப்பிடலாம். அல்லது கண்டீனிலும் தொழிற்சாலை வேலையாட்களுக்கென சலுகை விலையில் விதம் விதமான உணவுவகைகள் விற்கப்படும்.
பொருட்கொள்வனவு, சமைக்கும் நேரம், அதற்கான மின்சாரச் செலவு, உபயோகித்தவற்றை சுத்தப்படுத்தும் நேரம் போன்றவற்றிலும் பார்க்க கண்டீன் சாப்பாடே சிறந்தது என்பது எனது கண்டுபிடிப்பு. அதனால் அங்கே சில உணவுப் பொருட்களை தட்டொன்றில் எடுத்து வைத்தவாறு பணம் செலுத்தும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.
“ஏய் ராணி!"
ஒருத்தி சத்தமாக அழைக்கும் குரல் வந்த திசையை நோக்கினேன்.

அங்கே ஒரு மேசையில் அவளும், அவளுடன் சில பெண்களும் அமர்ந்து எதைப்பற்றியோ பலத்த சத்தமுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
~ஓ.. அவளது பெயர் ராணியா?!~
அப்போ அவள் இலங்கைப் பெண்தான்.
தீர்மானம் உறுதியாகியது.
அவளின் முன்னால் ஒரு கப் கோப்பி. அவளும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கருவிழிகளில் மலர்ச்சி. கண்கள் பளபளக்க, ~சிகரட்~டை உதடுகளில் பொருத்தி, ஆழமாக உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியவாறு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
என்னால் புன்னகைக்க முடியவில்லை. எதிர்பாராத அதிர்ச்சியால் புன்னகைக்க மறந்தவனாய் திகைத்து நின்றேன்.
~எங்கடை பெட்டை சிகரட் பிடிக்குது. அதுவும் புகையோடை சிரிக்குது..~
என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
எங்களுடைய தமிழ்ப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நானே எனக்குள் போட்டிருந்த கணக்கு தவறாகிவிட்ட புழுக்கம் என்னுள் வியாபிப்பதை உணர முடிந்தது.
தமிழ் ஆண்மகனானவன் பல தவறுகளைச் செய்யும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்னால், அவள் புகைப்பதை ஏன் தாங்க முடியவில்லை?
இதைத்தான் ~ஆணாதிக்கம்~ என்கிறார்களோ?!
மரியாதைக்காவது பதிலுக்குச் சிரித்திருக்கலாம்.
மனம் குறுகுறுக்க, தலை குனிந்தவாறு உணவுத் தட்டுடன் மேசையொன்றில் அமர்ந்தேன்.

0
அதன்பின்னர் சிலநாட்களாக அவளைப்பற்றி எழுந்த எண்ணங்களும் சிந்தனைகளும் என்னையே குதறிக் கொண்டிருந்தன.
~அவள் சிகரட் பிடித்தால் எனக்கென்ன? வலியச் சிரித்தவளுக்கு பதிலாக புன்னகைக்க முடியாத பண்பாடு துறந்த மனிதனாக எவ்வாறு மாறினேன்?!~
இப்படிப் பலவகையான குதறல்கள்.
அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
வேலை முடிந்து பஸ் நிலையத்தை நாடிச் சென்றபோது, அவளும் நின்றாள்.
எனக்குள் ஒருவகைக் குற்ற உணர்வு குறுகுறுக்க, அவளைத் தயக்கத்துடன் நோக்கினேன். மீண்டும் அதே புன்னகை. 
"ஹலோ.."
"எனக்குப் பெயர் ராணி.."
~டொச்~சில் கூறினாள்.
"நான் ராஜா.."
அதுவும் ~டொச்~சில்தான்.
"ஓ... நீ அரசன்.. நான் அரசி.."
பலமாகச் சிரித்தாள். பதிலுக்குச் சிரித்துக்கொண்டேன்.

அவளது முகத்தில் சிறிது வாட்டம். கண்களில் சிறு கலக்கம். நெற்றியில் சுருளாக விழுந்து அலையாய் அசைந்த கேசத்தை கையால் ஒதுக்கிவிட்டு, கைப்பையைத் திறந்து சிகரட் ஒன்றை உருவிப் பற்றவைத்துக் கொண்டாள்.
"என் பெற்றோர் இந்த அரசியை நாடு கடத்திவிட்டார்கள்..."
"என்ன..?"
"என்னை இந்த நாட்டுப் பெற்றோருக்கு ராணியாக்கிவிட்டார்கள்."
புரியாமல் பார்த்தேன்.
"நான் தத்துப்பிள்ளை."
வியப்புடன் பார்த்தேன்.
"நீ தமிழ் என்று நினைத்தேன்.."
"தமிழ்தான். என் பெற்றோர் தமிழ்தான். ஆனால் அவர்கள் ஜேர்மன் தம்பதிகளை எனக்கு பெற்றோர் ஆக்கிவிட்டார்கள். ராணி... அரசி என்று தெரியும். அதேபோல ராஜா.. அரசன் என்று தெரியும்.."
"பரவாயில்லை.. அதாவது தெரிந்து வைத்திருக்கிறாய்..."
"நிறைய அறியவேண்டும்.. இப்போது உன் அறிமுகம் கிடைத்திருக்கிறது. மேலும் நிறைய அறியவேண்டும்.. உன் மூலமாக..."
ஆர்வத்துடன் கூறினாள்.

அதன் பின்னர் அடிக்கடி என்னைத் தேடி வந்து உரையாடினாள். பார்வையில் குமரியானவள் பலவற்றை அறிவதில் குழந்தையானாள்.
"உன்னுடைய பெற்றோரைப் பார்த்திருக்கிறாயா?"
"படத்தில் பார்த்திருக்கிறேன். அதாவது இருபது வருடத்துக்கு முதல் எடுத்த படத்தில். அந்தப் படமும் இந்த ராணி என்ற பெயரும்தான் என்னோடு கூட வந்தவை.."
"ஓ..."
வெறுமையாகச் சிரித்தாள். கைப்பையை கரம் நாட, விரல்களில் மேலும் ஒரு சிகரட்.
அவள்மீது அன்பா? அனுதாபமா? ஏதோ ஒன்று என்னை அவள் வசம் ஈர்த்தது.
"ராணி! நீ சிகரட் புகைப்பதைப் பார்க்க எனக்குக் கஸ்டமாக இருக்கிறது.."
"ஏன்..?"
"எங்களுடைய பெண்கள் புகைக்கமாட்டார்கள்.."
"ஓ... வேறு..?"
"காதல்... கலியாணம்... குடும்பம் எல்லாம் ஒருவனோடுதான்.."
"ஓ... நோ... சுத்தப் பட்டிக்காட்டுத்தனம்.."
"ஏன் அப்படிச் சொல்கிறாய்? அதுதான் ஒழுக்கமான வாழ்க்கை. அத்துடன் நான் எம்மைப்பற்றி பெருமைப்படும் விசயமும்கூட."
அவள் சத்தம்போட்டுச் சிரித்தாள். கேலி செய்வது புரிந்தது. ஆத்திரம் எழுந்தது. அடக்கிக் கொண்டேன்.
"ராஜா... உங்கள் பெண்கள் ஒருவனோடே வாழலாம். ஆனால் பெற்ற பிள்ளையை இன்னொருவருக்குக் கொடுக்கலாம். அப்படித்தானே..?"
கோபத்துடன் கேட்டாள். அவள் வாழும் வாழ்க்கையால் தோன்றிய கேள்வி அது.
"அவர்களுக்கு என்ன கஸ்டமோ? என்ன பிரச்சினைகளோ?" என்று அவளது கொந்தளிப்பைத் தணிக்க முயன்றேன்.
"கஸ்டமும் பிரச்சினையும் வந்தால்... ஒழுக்கம் பண்பாடு எதுவுமே தேவையில்லையா? புருசன் மனைவியை மாற்றலாம். மனைவி புருசனை மாற்றலாம். தாய் பிள்ளையை மாற்றலாம். அப்படித்தானே?"
நான் வாயடைத்து நின்றேன்.

"உனக்குப் புரியுமா என்னுடைய நிலை? என்னால் எதையுமே ஒழுங்காக செய்ய முடியவில்லை. படிக்க முயற்சித்தால் என்னுடைய பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்ற சிந்தனை. என்னை ஏன் பிரித்தார்கள் என்ற சிந்தனை. அவர்களுக்கு நான்மட்டும்தானா பிள்ளை அல்லது வேறு பிள்ளைகளும் உள்ளார்களா என்ற சிந்தனை. அவர்களையாவது தங்களுடன் வைத்திருக்கிறார்களா என்ற சிந்தனை. அவர்கள் என்னை பிரியும் அளவுக்கு என்னில் ஏதாவது குறையோ என்ற சிந்தனை. இப்படி பற்பல சிந்தனைகள். யோசனைகள். இவற்றுக்கால் என் மனதை என்னால் ஒருநிலைப்படுத்த முடிவில்லை. ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. சுதந்திரமாக, சந்தோசமாக, நிம்மதியாக வாழ முடியவில்லை. நான் யார்... எங்கே எப்படிப் பிறந்தேன்... ஏன் இங்கே வந்தேன்... எல்லாமே குழப்பம்... குழப்பம்."
மனதைத் திறந்து கொட்டிவிட்டு, புகைந்து தீர்ந்த சிகரட் அடிக்கட்டையை தூர வீசினாள்.
அவளுக்காகப் பரிதாபப்படுவதா? பரிவு காட்டுவதா? புரியவில்லை. என்னைச் சோகம் கவ்விக்கொண்டது.
"ஆனால் ஒன்று... விரைவில் இலங்கைக்குப் போவேன். அவர்களைத் தேடிப் பிடிப்பேன். அவர்கள் என் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லவேண்டும். அப்போதுதான் எனது குழப்பங்களுக்கு எல்லாம் விடைகிடைக்கும் என்று நம்புகிறேன்..."
அவள் உறுதியுடன் கூறினாள்.

ஆறேழு மாதங்கள் கழிந்திருக்கும்.
"ராஜா..."
குதூகலத்துடன் ஓடி வந்தாள்.
"ராஜா... நாளை நான் இலங்கைக்குப் போகிறேன்.."
"என்ன?"
"என் பெற்றோரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறேன்.."
"எப்படித் தேடுவாய்?"
"சகல வழிகளிலும்... ரீவி, பேப்பர் என்று எல்லாவற்றிலும் அவர்களின் படத்தை விளம்பரப்படுத்தி முயற்சிக்கப் போகிறேன்..."
நம்பிக்கையோடு கூறினாள்.
"ராணி! உன் முயற்சி வெற்றிபெற நானும் கடவுளை மன்றாடுவேன்..."
அவளது கண்களில் சிறுகலக்கம்.
"மிகவும் நன்றி. வெற்றியோடு உன்னைச் சந்திப்பேன்."

0
நான் அவள் வந்து கூறப் போகும் நல்ல செய்திக்காக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அந்தப் பேரிடி என்னைத் தாக்கியது.

இயற்கையின் கோரமுகம் காட்ட ஆழிக்கூத்தாக வடிவெடுத்து ஆசிய நாடுகளில் அவலம் விளைத்ததை தொலைக்காட்சிகள் கண்முன்னே காட்டின. குழந்தைகள், பெண்கள், முதியவரென பலியெடுத்த ~சுனாமி~ கடற்கொந்தளிப்பின் அனர்த்தத்தினால், மனம் பேதலித்து சோகம் மனதைப் பாரமாக்க தொலைக்காட்சி முன் மணித்தியாலங்கள் கழிவது தெரியாமல் அமர்ந்திருந்தேன்.
இப்படி ஒரு அழிவா? இனம் மதம் மொழி என்ற பேதமின்றி மக்களைக் காவு கொண்ட கடலலைக்குள் இத்தனை கொடூரமா?
நினைத்துப் பார்க்கையில் திகைப்பாயிருந்தது.
நிலையில்லா உலகில் நிலைதடுமாறும் மனித குலத்துக்கு இயற்கை அவ்வப்போது புகட்டும் பாடமா? புரியவில்லை. 

தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் இருந்து ஜேர்மன் தொலைக்காட்சி அலைவரிசைக்கு மாற்றினேன்.
இலங்கைக்கு உல்லாசப்பயணிகளாகச் சென்று ~சுனாமி~யில் உயிர்துறந்த சில ஜேர்மனியரின் அடையாள அட்டைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது... அந்த அடையாள அட்டையில்... அதிலே புன்னகை புரிந்தவாறு கருவிழிகள் பளிச்சிட இருக்கும் கரிய மங்கை... ஓ... அது ராணி அல்லவா? 
ராணி... ராணியேதான்.

அதிர்ச்சியால் நிலைகுலைந்தவனாய் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பெற்றோரைத் தேடச் சென்றவளையும் கடலலை தன் கோரப் பிடிக்குள் இழுத்துக் கொண்டதா?
என் கண்களில் பெருக்கெடுத்த நீர்த்துளிகளில் தொலைக்காட்சி மங்கலானது. 

0


(பிரசுரம்: பூவரசு 15வது ஆண்டுச் சிறப்பிதழ் தை - மாசி 2005) 

Mittwoch, 5. November 2014

பூவரசு-கவிதைப் பக்கங்கள் -5






விதவை



ஏ! பெண்ணே!
நீ இழந்தது ஒன்றை மட்டுமே
எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக
வீண்பிரமை கொள்ளாதே!
ஈடுசெய்ய முடியாத எதுவுமே
உலகத்தில் இல்லை
உணர்ந்து கொள்!

உன்னைப்போல் வாழ்ந்த உன் முன்னோர்
வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு
தங்களுக்குத் தாங்களே
சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்
அவர்கள் அழுத கண்ணீரில்
அவர்களே ஆழ்ந்து போனார்கள்!

நீயும் அதே தவறைச் செய்யாதே!
உன் தடைகளை படிகளாக்கு
சமுதாயம் உனக்கு விதித்த
கோடுகளை தூக்கி நிமிர்த்து
அதனை பாய்மரமாக்கி
பயணம் செய்!
;
கலைந்த உன் கூந்தலை துடுப்பாக்கு
அழகை வெளிக்காட்டு!
அழிந்துவிட்ட நித்திலத்துக் கீடாக
ஆதவனை எடுத்து வை!
முக்காட்டை விலக்கிவிடு
உன் கதிரொளியில் பல
வெள்ளைப் பூக்கள்
நிறங்களைப பெறட்டும்!





கவிதையும் சித்திரமும்:
அமுதநதி சுதர்சன்






பூவரசு அட்டைப்படத்துக்கான கவிதை.
(பிரசுரம்: பூவரசு புரட்டாதி - ஐப்பசி 1992)






















Montag, 3. November 2014

பூவரசு - இரண்டாவது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய பரிசளிப்பு விழா -1993



பூவரசு இனிய தமிழ் ஏடு
இரண்டாவது ஆண்டுநிறைவுக் கலை இலக்கிய பரிசளிப்பு விழா
18.01.1993 

























பூவரசு சஞ்சிகை விழாவில் 
இலக்கிய மணம் கமழ்ந்தது







ஜெர்மனியின் பிறேமன் நகரிலிருந்து வெளியாகும் தமிழ் ஏடான பூவரசு தனது இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் சிறுவர்களுக்கான எழுத்து, சித்திரப் போட்டிகளிலும் பரிசுபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கலை இலக்கிய விழாவாக பிறேமன் நகரில் சிறப்புற நடைபெற்றது.


ஜெர்மனியின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவுக்கு வாசகர்களும் இலக்கிய ஆர்வலர்களும் வருகை தந்திருந்த இவ்விழாவை திருமதி வரதராஜா திருமதி இந்துமகேஷ் ஆகியோர் விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் இறைவணக்கப் பாடல் பாடினார். செல்வி பிரியா மகேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழருவி பத்திரிகையின் ஆசிரியர் திரு. நயினை விஜயன் பூவரசு ஏட்டின் இரண்டாவது ஆண்டு மலரின் முதற்பிரதியை  பூவரசு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த திரு.சு.மகேந்திரமூர்த்தி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தாய்மொழிப்பற்று அருகிவிடக்கூடாது என்பதை வலியுறுத்திய அவர் இன்று பல்வேறு நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்கு தமிழே தொடர்புமொழியாக இருக்கவேண்டும் என்றார்.



தொடர்ந்து வாசகர்களின சார்பில் திருமதி சசிகலா தேவராஜா, திருவாளர்கள் பீற்றர்குலம், இராஜகருணா, திருமதி சித்திராதேவி தங்கராஜா ஆகியோர் பூவரசுக்கு வாழ்த்துச் செய்திகளை வழங்கினர். சேல்விகள் வதனி நவரத்தினம், சுரேகா கமலநாதன் ஆகியோர் நமது தாய்மொழி என்னும் தலைப்பில் உரையாற்றினர். 






பூவரசு நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசுகள் விழாவுக்கு வந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் மூலம் வழங்கப்பட்டன.





திருமதி சாந்தராணி பத்மகுமார் தயாரித்து வழங்கிய மழலையர் நடனம், கண்ணன் நடனம், கும்மி நடனம் ஆகியவை எங்கள் இளந்தளிர்களின் திறமையை வெளிப்படுத்துபவையாய் அமைந்தன.



தொடர்ந்து இடம்பெற்ற பட்டிமன்றத்தில், 
வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு தாய்மொழி கலாச்சாரம் அவசியமா? அவசியமில்லையா? என்ற தலைப்பில் விவாதமேடை அமைந்தது.


வீரகேசரி முன்னாள் பத்திரிகையாளர் திரு.வீ.ஆர்.வரதராஜா நடுவராகக் கலந்துகொள்ள திருவாளர்கள் இ.த.இராஜன், செ.யோகநாதன், மகேந்திரராஜா, பீற்றர்குலம், திருமதிகள் ஞானேஸ்வரி கந்தசாமி, பெனடிக்ரா ஞானச்செல்வம் ஆகியோர் விவாதத்தில் பங்கு கொண்டனர். பார்வையாளர்கள் வழங்கிய கருத்துக் கணிப்பின்படி மூன்றில் இரண்டு பங்கினர் தாய்மொழி கலாச்சாரம் அவசியம் என வாக்களித்து நடுவரால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்ற ஆண்டுவிழாவின்போது இந்துமகேஷின் கைவண்ணத்தில் உருவான அயல்நாடு போயிருந்த அண்ணை இப்ப திரும்பிவாறார் நாடகபாணியில் இந்த ஆண்டு இந்துமகேஷின் கைவண்ணத்தில் உருவான தாள இசைநாடகம் இலக்கியத்தில் இருபக்கங்கள் புறநானூற்று வீரத் தாயையும் இன்றைய தமிழீழ வீரத்தாயையும் ஒப்பீடு செய்து வரையப்பட்டிருந்தது. 

பங்கேற்ற சிறுவர்கள், மங்கையர்;, இளைஞர்கள் பாத்திரங்களுக்கு உயிரூட்ட இசையை செல்வன் பத்மஸ்ரீ சிறப்புற அமைத்திருந்தார்.

தொடர்ந்து க.பாலசுப்பிரமணியம் குழுவினரின் மெல்லிசை இடம்பெற்றது.

பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தின் தயாரிப்பான பாவலன் பெற்ற பரிசு நாடகம் விழாவுக்கு மேலும் மெருகூட்டிற்று.




நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் திரு. அன்ரன் பீலிக்ஸ் அழகுறத் தொகுத்து வழங்கினார்.
(தகவல்: திருமதி சித்திரா மணிவண்ணன்)

படப்பிடிப்பு: ”ஜெகா” எஸ்.தேவராஜா 

நன்றி: ஈழநாடு-பாரிஸ் வாரமலர்  05 - 11 மார்ச் 1993