Mittwoch, 29. Oktober 2014

பூவரசு -ஓராண்டு நிறைவுக் கலை இலக்கிய விழா 1992





பூவரசு சஞ்சிகைக்கு 
ஜெர்மனியில் ஓராண்டு விழா





இந்துமகேஷை ஆசிரியராகக்கொண்டு கடந்த ஒருவருடமாக வெளிவந்துகொண்டிருக்கும் பூவரசு இதழின் ஓராண்டு பூர்த்தி விழா அண்மையில் ஜெர்மனியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது





”உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்!” என்று பரந்துபட்ட உணர்வுடன் உதயமாகியிருக்கும் பூவரசு, வெளிநாடுகளில் ஆங்காங்கே இலைமறை காயாக இருக்கும் படைப்பாளிகளை, இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 
இந்த ஆண்டு தைத்திங்களில் (17.01.1992 ) பூவரசு ஓராண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக கலை இலக்கிய விழாவொன்றினை ஒழுங்கு செய்திருந்தது
பெருந்திரளான வாசகர்களும் ஆதரவாளர்களும் கலைஞர்களும் பங்குகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். திரு வீ.ஆர்.வரதராஜா அவர்களிடம் பூவரசு ஆண்டுமலரின் முதற்பிரதி வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவரது சிறப்புரையைத் தொடர்ந்து எங்கள் தமிழ், வாழும் தமிழ், வெளிநாடுகளில் தமிழ்ச் சஞ்சிகைகள், பூவரசு பற்றி ஒரு பார்வை, பாலர் தமிழ் என்னும் தலைப்புக்களில் முறையே திருமதி ஞானேஸ்வரி கந்தசாமி,திருமதி பத்மினி பரம், திருமதி சித்திரா மணிவண்ணன், திரு, ஜோர்ஜ், திரு இரா.உதயகுமார், செல்வன் வினோத் விஜயரட்னம் ஆகியோர் உரையாற்றினர். 

 

















தமிழர்தம் கலை கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விழா பல்சுவை அம்சங்களைக் கொண்டிருந்தது.



திருமதி சாந்தராணி பத்மகுமார் தயாரித்து வழங்கிய சிறுவர் அபிநயப் பாடல்கள், சிறுமியர் நடனம் என்பன விழாவிற்கு வருகை தந்திருந்த ஜெர்மானியர்களையும் பெரிதும் கவர்ந்தன




ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சிலம்பு என்னும் தலைப்பில் வில்லிசையாக  வழங்கினர் யாழ்.நாச்சிமார் கோயிலடி ராஜன் வில்லிசைக் குழுவினர்.
(ஜெர்மனியில்  முதற்தடவையாக வில்லிசை மேடையேறியது இவ்விழாவில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.)




”புதுயுகம் நோக்கி இனிப் புறப்படுவோம் வாருங்கள்” என்னும் தலைப்பில் கவியரங்கு இடம்பெற்றது.

ஒற்றுமை உணர்வைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இடம் பெற்றன. இளங்கவிஞர்கள்  திரு யோகநாதன்,செல்வன் விக்கினேஷ், செல்வன் குமரேசன், திருமதி கௌரி கணா, திருமதி சசிகலா தேவராஜா ஆகியோர் கலந்துகொண்ட இக்கவியரங்கிற்கு கவிஞர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.




”அயல் நாடு போயிருந்த அண்ணை இப்ப திரும்பி வாறார்!” என்னும் தாளலய நாடகமும் இடம் பெற்றது.

இந்துமகேஷ் எழுதிய தமிழ்க் கீதங்கள் சிலவற்றை திரு பால சுப்பிரமணியம், திருமதி வசந்தா புவனேந்திரன், திருமதி சித்திரா மணிவண்ணன், செல்வன் பிரசன்னா மகேஸ்வரன் ஆகியோர் இசை விருந்தாக தந்தனர்.



ஆக மொத்தத்தில் இயல் இசை நாடம்  என்கின்ற முத்தமிழ் விழாவாக  இவ்விழா அமைந்திருந்தது.

(பூவரசு மூலம் தமிழ்ப் பணியாற்றும்  இந்துமகேஷ் தற்போது பிறேமன் கலாச்சார நிலையத்தில் பணியாற்றிவருவதுடன் பிறேமனிலுள்ள பொது நூலகத்தில் தமிழ்ப் பிரிவொன்றை உருவாக்குவதற்குப் பெரிதும் உழைத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது பிறேமன் நூலகத்தில் நூற்றுக் கணக்கான தமிழ்நூல்கள் தமிழ்வாசகர்களுக்கு மகிழ்வூட்டி வருகின்றன.)



(தகவல் - எஸ்.கந்தசாமி)

நன்றி> வீரகேசரி - மாசி 1992


புகைப்படங்கள்
புகைப்படக் கலைஞர்- ”ஜெகா” எஸ்.தேவராஜா.

Donnerstag, 16. Oktober 2014

பூவரசு கட்டுரைப் பக்கங்கள் -2

நேற்று இன்று நாளை

-இந்துமகேஷ்



"நேற்றுப்போனார்!" என்பது எங்கள் மூத்த சந்ததியின் கதை.
நேற்றுப் பிறந்தோம் - இன்று வாழ்கிறோம் - நாளை போவோம்!
-இது எங்கள் கதை.

நேற்று என்பது கனவு
நாளை என்பது எதிர்பார்ப்பு
இன்று என்பதே வாழ்வு.

அதனால்-
நாம் இன்றைக்கு வாழ்ந்தாகவேண்டும்.
ஆனால் இந்த இன்றைக்கு என்பதும் நாளைக்கு நேற்றாகப் போய்விடும்.
நாளைக்கும் நாங்கள் உயிரோடு இருந்தால் - 
இருப்போம் என்ற நம்பிக்கையே - நாளை.
இருந்தோம் என்கின்ற அத்தாட்சியே நேற்று.
இருக்கிறோம் என்கின்ற நிதர்சனமே இன்று

நேற்றுகள் எத்தனையோ நமக்கு வந்து போயிற்று. நாளைகள் எத்தனையோ நமக்கு வரலாம் இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதே உண்மை.

நாளைகள் நமக்கு வராமல் போனாலும்
நேற்று நாங்கள் இருந்தோம் என்பதே சரித்திரம்.
இந்த நேற்றுகள் என்பதும் நாளைக்கு நினைக்கையில் இன்றுதான். 
இன்று என்பது நாளைக்கு நேற்றாகப் போவதைப்போல.

நேற்று நாங்கள் எங்களைப் பெற்றவர்களோடு இருந்தோம்.
இன்று நாங்கள் நாங்கள் பெற்றவர்களோடு இருக்கிறோம்.
நாளை நாங்கள் இல்லாமல் நாங்கள் பெற்றவர்கள் இருப்பார்கள். 
அப்போது அவர்களுக்கு நாங்கள் நேற்றைய மனிதர்கள்.
அதற்குப்பிறகு எங்களைப்பர்றி நினைக்க அவர்களுக்கு அவசியமில்லை.
ஏனெனில் நாங்கள் என்பது நேற்று. 
இன்று என்பது அவர்கள். 
நாளை என்பது அவர்களது மக்கள்.
ஆக-
நேற்று இன்று நாளை என்பது மனித வாழ்க்கைத் தொடர்.
இதில்-
இன்று என்பதே நிதர்சனம்.

நாங்கள் இழந்துபோன நேற்றுகளை எண்ணிக் கவலைப் படுவதாலும் வரப்போகிற நாளைகளுக்காக காத்திருப்பதாலும் நாம் எதைச் சாதித்துவிடப் போகிறோம்{

அதனால் இன்றாக இருக்கிற இன்றைக்கே உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். இன்று நேற்றாகுமுன் இன்றையப் பொழுதை நாளையாக எண்ணிக்கொள்ளுங்கள்.
நாளை நமதே என்று இன்று நாம் சும்மா இருந்தால் இன்று நேற்றாகும்போது  நாளைய தலைமுறை நம்மை ஏளனம் செய்யும்.
இன்று எமதே இன்று எமதே என்று எழுக!



(பூவரசு 1991 ஆடி ஆவணி இதழில் வெளியானது)

Mittwoch, 8. Oktober 2014

பூவரசு- கட்டுரைப் பக்கங்கள் - பாதை தெரிந்திருந்தால்




             
பாதை தெரிந்திருந்தால்
பயணம் இலகுவாகும்    
















சிந்தனைச் செல்வர் எழிலன்


வாழ்க்கையென்னும் தடாகத்தில் நீந்துகின்ற மனித மீன்குஞ்சுகளாகிய நம்மில் பலருக்கு இயல்பாகவே நமக்குள் பதிந்திருக்கும் வெற்றிக்கான தூண்டுகோலாகிய உற்சாகம் என்னும் நீச்சல் கலையைப ;பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பதால்தான் அல்லது குறைவாக இருப்பதால்தான் “நமக்கெப்படி நீந்த முடியும்?” என்கின்ற அனாவசியமான அவநம்பிக்கை நம்மில்  பொதிந்து கிடக்கின்றது. அதனால்தான்; இயன்றதைக் கூடச் செய்யாதவர்களாக பலமிருந்தும் பயனற்ற முடங்களைப்போல நம்மை நாமே பலவீனப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

நமது உள்ளங்களில் பெரும் பகுதி வெறுமையாகவே இருப்பது போலவும் அவற்றுக்குள் நிறைந்திருப்பவை அநேகமாக ஏமாற்றங்களும் துயரங்களும் தளர்ச்சிகளும்தான் என்பது போலவும் நாமே நம்மைப் பற்றி தவறாக உறுதிப்படுத்திக் கொண்டு அவசியமற்ற தவறுகளுக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றோம். 


துயரமும் மகிழ்ச்சியும் செல்வமும் வறுமையும் கஷ்டமும் சுலபமும் வெற்றியும் தோல்வியும் தள்ளத் தள்ளத் தயங்காமல் திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளைப்போல நமக்கு  முன்பாக எப்போதுமே மாறி மாறி வந்து போய்க் கொண்டிருப்பவை.

அவற்றைத் தள்ளி விரட்ட முயலும்போதுதான் நாம் தோற்றுப் போகின்றோம் என்பதையும் நாம் செய்ய வேண்டியது அதனைத் தள்ளி விரட்டிவிட முயற்சிப்பதல்லவென்றும் அவற்றைத் தாண்டிச் செல்வதே என்பதையும் முதன் முதலில் தெட்டத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றித் தெளிந்து கொள்ள வேண்டும்.      

அப்போதுதான் நமது இலட்சியத்தைப் பற்றி நமக்குத் தெளிவு கிடைக்கும். எல்லாரும் ஓடுகின்றார்களே என்று நாமும் ஓடக் கூடாது. அவர்கள் ஏன் ஓடுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டு நாமும் சேர்ந்து ஓடுவதைப்பற்றிச் சிந்தித்து விட்டுப் பிறகு சரியாக முடிவெடுத்து விட்டுத்தான்  ஓட வேண்டும்.

ஒரு கள்ளன் திருடிக் கொண்டு ஓடுவான். ஒரு கூட்டம் அவனைத் துரத்திக் கொண்டு ஓடும். விபரம் என்னவென்று தேடாமல் சும்மா ஓட முனைந்து நீங்கள் கள்ளனின் பக்கமாக அவனோடேயே ஓடினால் என்ன நடக்கும்? கள்ளனுக்கு விழும் உதைகளில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும். தெரிந்து கொண்டு ஓடினால்?

இதைத்தான் நான் வெற்றிக்கான அடிப்படையாக முதலில் வைத்து உங்களுடன் பேசப் போகின்றேன்.

மலையென்றால் அதில் பாறைகளும் இருக்கும் புதர்களும் இருக்கும் மரங்களும் இருக்கும் மலர்களும் இருக்கும். ஆனால் பொதுவாகப் பார்க்கையில் அது மலைதான். ஒருமைதான். ஆனால் உண்மையில் என்ன? பன்மையான பல உண்மைகளைச் சுமந்து நிற்கின்ற ஒரு பொதுச் செல்வம் அது. அல்லவா? 

அதே மலையின் பாறைகளுக்குள்தான் எத்தனையோ விதவிதமான சிற்பங்கள் மறைந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றன. சரியான சிற்பியின் கை தீண்டாமையினால்தானே அவை வெறும் பாறையாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன? செய்வதைச் சரியாகச் செய்தால்?

மலர்களின் அழகை மட்டுமே நாம் பார்க்கின்ற அதே வேளையில் தேனீக்கள் எதைத் தேடிப் பார்க்கின்றன? அவற்றிற்குள் தேனை. அல்லவா? நாம் இரசிப்பதோடே நின்று விடுகின்றோம். அவை உள்நுழைந்து சேகரித்துத் தமதில்லத்துக்குள் கொட்டித் தமது சகாக்களின் மூலம் தேனாக மாற்றிக் கடைசியில் நமக்கு உணவாகவே கிடைக்கும்படி செய்து விடுகின்றனவே!

கடும் குளிகாலம் நெருங்கு முன்பாக நகரவே இயலாத மரமானது என்ன செய்கின்றது? அக்குளிர்காலம் நெருங்குமுன் கிடைக்கின்ற நீரையெல்லாம் இழுத்து உறிஞ்சிச் சேர்த்து வைத்துக் கொள்ளுகின்றது. 

தனது இலைகளிலிருப்பதையும் அது விட்டு வைப்பதில்லை. அதனால்தான் இலைகள் உதிர்ந்து போகின்றன. நாம்? அந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல் “இலையுதிர் காலம்” என்று பாடம் படிப்பித்துக் கொண்டு இருக்கின்றோம்.

குளிர்காலம் வந்து போகும் வரை அது தன்னில் தானே சேர்த்து வைத்த நீரை நம்பி அதனால்தான் வாழ்ந்து கொள்கின்றது. காலம் மாறியதும் திரும்பவும் தளிர்த்து நின்று சிரித்துக் கொண்டு நிற்கின்றது.

நாமோ துன்பம் வந்ததும் என்ன செய்கின்றோம்? துவண்டு விடுகின்றோம். அது நசுக்க, நசுக்க அழுந்தி, அழுந்தி அதற்கு விட்டுக் கொடுக்கின்றோமே தவிர அதை உதைத்துத் தள்ளிவிடத் தெரியாமல் உதவிக்கு அலறுகின்றோம். 

அதையும் கூட சரியாகச் செய்யத் தெரியாமல் கடைசியில் ஏமாற்றத்துடன் “கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?” என்று கூப்பாடு போட்டு குமுறுகின்றோம்.

கடவுள் சொல்லுகின்றார்: “உனக்கு நான் தந்த மண்ணில்லையா? பதப்படுத்தி முன்னேற வழியில்லையா? எல்லாவற்றையுமே உனக்கு நான் தந்திருக்கிறேன். நீயோ  முக்கியமான உனது மூளையை விட்டு விட்டு, மற்றவற்றையெல்லாம் இயக்கிக் கொண்டிருந்தால் எப்படி உருப்படுவாய்? எப்போது உருப்படுவாய்?” என்று எள்ளி நகையாடுகின்றார்.

இறைவன் நம்மைப் படைத்திருப்பது சன்னியாசிகளாக வாழ்வதற்கல்ல. சத்தியனாக அதாவது எல்லாரின் தேவைகளும் எல்லார்க்கும் கிடைக்கும்படியான சிந்தனை கொண்ட தூய மனத்தினராக வாழவே அவர் நம்மைப் படைத்திருக்கின்றார்.

கூர்ந்து அவதானித்துப் பாருங்கள். தன்னைக் கொடுத்து மற்றதை வாழ வைக்கும் உன்னதமே இறைவனது படைப்புக்களாக எங்கணும் பரவி நிற்பது தெரியும். விதை மரிக்காமல் மரம் பிறக்காது. உயிர் இழக்காமல் உயிர் பிறக்காது. இதுதான் இறைமையில் பொதிந்திருக்கும் அடிப்படை. அதாவது தூய்மையான தியாகமே தெய்வீகமானது. நிரந்தரத்தைத் தொடரச் செய்வது. நித்தியத்தை உறுதி செய்வது.

சரியான வாழ்க்கை சன்னியாசமல்ல. இன்றைய காலகட்டத்தில் எந்தச் சன்னியாசியும் உலகை விட்டு விலகுபவனாக இன்றைய உலகில் எங்குமே இல்லை. ஆலயங்களையும் தேசங்களையும் கட்டிப்பிடித்து ஆட்டம் செய்து ஆளும் வெறிக்குள் சிக்கியவனாக ஒரு சிறு மனிதனாகவே எங்கணும் அவனிருக்கின்றான்.

அதாவது உண்மையான உலகைத் துறந்த சன்னியாசிகள் இன்றைய உலகில் எங்குமே இல்லை. அந்த வேடத்தில் சன்னியாச விரோதிகளே இருக்கின்றார்கள். அதனால்தான் வெறும் கதைகளையும் நம்பிக்கைகளையும் மூலதனமாக்கி அவர்கள் பணம் பண்ணுவதிலும் பகை பண்ணி அதில் வளர்வதிலும் மட்டும் முனைப்பாக இருக்கின்றார்கள். அடங்காத மதங்கொண்ட யானையைப் போல எழுந்து நின்று மதவெறியாடுகின்றார்கள்.

அன்பே தெய்வமாம். ஆனால் பகைமையே கொள்கையாம். இது யார் தவறு? அவர்களின் தவறா? அல்லவே அல்ல. உங்களின் தவறு. நீங்கள் சிந்திக்கத் தவறுவதால் விளைந்திருக்கும் தவறு.
புரிகிறதா? நடு நிலைக்குள் நிற்க வேண்டாம். சரி நிலைக்குள் வாருங்கள். மதத்தை விட்டு விட்டு மனத்தைத் தொட்டுப் பாருங்கள். அப்போதுதான் அது புரியும்.

நாம் நாமாக அதாவது சரியான மனிதர்களாக நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தப்பிப் பிழைப்போம்.

அதற்கு அடிப்படையாக நாம் தளராமல் நிமிர்ந்து உயர்ந்து நிற்க வேண்டும். அதற்கான மிகச் சிறந்த திரவம் அதாவது “டானிக்” உற்சாகம் என்கின்ற உன்னத பானமேயாகும். அது மட்டும் உங்களுக்குள் குறையாமலேயிருந்தால் நீங்கள் விழவோ விழுத்தப்படவோ முடியவே முடியாது.

நமக்கு முன் இருக்கும் பாதை நமக்கு முதலில் தெரிவதற்கு நமது பார்வை சரியாக இருக்க வேண்டும். 
நம்மை நாம் புரிந்து கொண்டால்தான் அது நடக்கும். நடக்க முடியும்.

சரியாகச் சிந்தித்துச் சரியைக் கையிலெடுங்கள்.
நேர்மையும் உண்மையும் சத்தியமும் நம்முடனிருந்தால் அநாவசியமான மனச்சோர்வுகள் நம்மை அணுக மாட்டா. அப்போதுதான் நமது இதயங்களில் உற்சாகம் பிறக்கும்.

உற்சாகம் பிறந்தால்? பிறகென்ன? உயர்ந்தே விடலாம்.



(பூவரசு 100வது  இதழில் -ஆடி-ஆவணி 2006இல்- பிரசுரமானது)


Montag, 6. Oktober 2014

பூவரசு -கவிதைப் பக்கங்கள்- 4

இயற்கை


இயற்கை மிக எனக்குப் பிடிக்கும்
அதன் இயக்கங்கள் எல்லாம்
என் உணர்வுடன் கலக்கும்

பச்சை மரங்கள்போல்
என் மனம் குளிர்ந்திருக்கும்
பாதங்கள் பூமியிலே
படம் வரைந்து நடக்கும்
காற்று என் உயிரை
காதலாற் குலவும்
கண்ணீரில் மழைமேகம்
சிலநேரம் பொழியும்-அதில்
கடல்நீரின் சாயலும்
கலந்தே யிருக்கும்
என்
கற்பனைகள் வானத்தை
கைநீட்டித் தொட்டுவிடும்
அற்புதமாய் இதயத்தில்
நம்பிக்கை ஒளி வீசும்
செந்தீபோல் சிந்தனைகள்
திக்கெல்லாம் படர்ந்திருக்கும்
செழிப்பான வளங்களைப்போல்
என் உள்ளமும் உயர்ந்திருக்கும்

இயற்கை மிக எனக்குப் பிடிக்கும்
அதன் இயக்கங்கள் எல்லாம்
என் உணர்வுடன் கலக்கும்.

- ஜெகதீஸ்வரி இராஜரட்ணம்

(பூவரசு 1991  ஆடி-ஆவணி இதழில் பிரசுரமானது)

பூவரசு-சிறுகதைப் பக்கங்கள் 1


சிறுகதை


அவன் - அம்மா - அது

ஜெர்மன் மூலம். wolfgang Borchert (1921-1947)
தமிழில். சஞ்சயன்




அவன் தொலைவில் வரும்போதே அவர்கள் அவனைக் கண்டுகொண்டார்கள்.
அவன் அவர்களை நோக்கியே வந்துகொண்டிருக்கவேண்டும். அவர்கள் அவனை முன்பே அறிந்திருக்காவிட்டாலும்கூட அவனைப் பற்றிய ஓர் பரிச்சய உணர்வு அவர்களிடம் தொற்றிக் கொண்டுவிட்டிருந்தது.

அவனது முகம் வயதில் முதிர்ச்சியையும் அதேவேளை அவனது செய்கைகள் நடை அவனை இருபதுகளின் ஆரம்பத்திலும் காட்டின.
அவன் அவர்களை நெருங்கிவந்து எதிரே அந்தச் சீமந்து வாங்கில் அமர்ந்துகொண்டான்.
அவனை ஏதோ ஓர் உள்ளுணர்வு பலமாக ஆட்கொண்டிருந்தது.
தனது கையிலிருந்த அந்தச் சுவர் மணிக்கூண்டை அவன் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். பிறகு தன்னையறியாமலேயே அதை அவர்கள் பார்க்கும்படி தூக்கிப் பிடித்து அவர்களுக்குக் காண்பித்தான்.

„இதுதான் எங்கள் வீட்டுச் சுவர்மணிக்கூடு!“
சொல்லியவாறே எதிரில இருந்தவர்களை ஒவ்வொருவராக அவதானித்தான். 
அவர்கள் அங்கே சூரிய ஒளியில் காய்ந்துகொள்வதற்காக வந்தவர்கள்.
„எப்படியோ இதைமட்டும் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. ப்ச்..! இதுமட்டும்தான் அங்கே உருப்படியாகக் கிடந்தது. மற்ற எல்லாமே போய்விட்டன.“
அவன் அந்த வெள்ளை மணிக்கூட்டை உயர்த்திக் காட்டியவாறே அதன் நீலநிற இலக்கங்களைத் தடவிப் பார்த்துக்கொண்டான்.
„இது ஒன்றும் அழகிய பொக்கிஷமல்ல.!“ 
-தன்னைத்தானே நொந்துகொண்டான்.

„சாதாரண வெள்ளைச் சுவர்மணிக்கூடு. அழகிய நீலநிற இலக்கங்கள் அவ்வளவுதான்...முட்களைப் பார்த்தீர்களா? அவை மேற்கொண்டு நகர்வதுகூட இல்லை.உள்ளே இயந்திரம் உடைந்துபோய்விட்டது. ஆனால் அதை எப்போதும் இவ்வாறு பார்த்ததுதான் எனக்கு ஞாபகம். இப்போது அது ஓடுவதைக்கூட நிறுத்திவிட்டது.!“
அவன் மணிக்கூட்டை மார்போடு அணைத்துக் கொண்டான்.
„இதுமட்டும்தான் எனக்காக மிஞ்சியிருக்கிறது.!“
எதிரே அமர்ந்திருந்தவர்கள் அவனைப் பார்க்கத் துணியவில்லை.
அவர்கள் தங்கள் சப்பாத்துக்களையும் குழந்தைகளையும் அவதானிப்பதுபோலக் காட்டிக்கொண்டார்கள்.
அமைதி நிலவியது.
யாரோ சொன்னார்கள்:
„நீ எல்லாவற்றையுமே இழந்துவிட்டாய் போலிருக்கிறது.?“
„ஆமாம் எல்லாவற்றையுமே!“
அவர்கள் பேசுவது அவனுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
„எல்லாமே போய்த்தான் விட்டன. இந்த மணிக்கூடுமட்டும் எனக்காக மிஞ்சியிருக்கிறது பார்த்தீர்களா?“
-அவன் அந்த மணிக்கூட்டை உயர்த்திப் பிடித்துக்கொண்டான்.
அவன் முகத்தில் ஓர் பெருமிதம் தொற்றிக்கொண்டுவிட்டது.
„அதுகூட ஓடவில்லையே?!“
 -ஓர் பெண்கரல்.
“ஆமாம் அதுவும் உடைந்துதான் போய்வி;ட்டது. அது எனக்குத் தெரியும் ஆனாலும் அது எப்போதும்போல் அழகாக இருக்கிறது. அதுமட்டுமல்ல அந்த இரகசியத்தை நான் இன்னும் உங்களுக்குச் சொல்லவே இல்லையா? எத்தனைமணி என்று அவதானித்தீர்களா? சரியாக இரண்டரையில் அது நின்றுவிட்டது. அதுதான் அந்த இரகசியம்!”
அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
திடீரென்று ஒருவர் சொன்னார்
„எனக்குப் புரிகிறது.. சரியாக இரண்டரை மணிக்கு உங்கள் வீட்டின்மேல் குண்டொன்று விழுந்திருக்கிறது அதுதான் எல்லாமே உடைந்துவிட்டன. மணிக்கூடும் இரண்டரையில் நின்றுபோய்விட்டது.!“
-அவன் விரக்தியாகத் தலையை ஆட்டிக்கொண்டான்.
„தவறு தவறு நீங்கள் இன்னும் போரையும் குண்டையும் பற்றியே பேசக்கூடாது. இது இரண்டரையோடு நின்று போனதுதான் ஆச்சரியமானது!“
அவன் சிறிது யோசித்துவிட்டுத் தொடர்ந்தான்.
„நான் தினமும் வீட்டிற்கு வரும்போது இந்த மணிக்கூட்டில் இரண்டரை மணியாகத்தான் இருக்கும். ப்ச்..! கிட்டத்தட்ட எப்போதுமே!“
அவன் மற்றவர்களை நோக்கினான்:
அவர்கள் தங்கள் பார்வையை அவனிடமிருந்து விலக்கிக்கொண்டார்கள். அவன் மணிக்கூட்டை அசைத்தவாறே தொடர்ந்தான்.


“இரண்டரை மணி... .வீட்டிற்கு வரும்போது நல்ல பசியாயிருக்கும். சரியாக இரண்டரை. நேராகச் சமையலறைக்குப் போய் இருட்டில் எதையாவது தேடிக்கொண்டிருக்கும்போதுதான் அம்மாவும் உள்ளே வந்துவிடுவாள். நான் கதவுகளை எவ்வளவோ மெதுவாக நகர்த்தித் திறந்தாலும் அவளுக்கு அது கேட்கத் தவறுவதில்லை. அம்மா உள்ளே வந்துதான் விளக்கைப் போடுவாள். அந்தச் சிவப்புக் கம்பளிச் சட்டையும் கம்பளித் துண்டும்தான் எப்போதுமே! வெளிச்சம் அவளது கண்களைக் கூசச் செய்யும். அவள் பதினோரு மணிக்கு தூங்கப் போயிருப்பாள் அவள் கால்களைப் பார்க்க எனக்குள் வேதனைதான்.
தரை சில்லிட்டிருக்கும். ஆனால் அவள் செருப்புக்களை அணியவே மாட்டாள்.
ஆமாம் அது இரவு மணி இரண்டரை.!”

„இன்றும் இவ்வளவு நேரம் சென்று வந்திருக்கிறாயே?!
„அதுமட்டும்தான் அம்மா சொல்வாள். மேலே பேசவே மாட்டாள்.
இரவுச் சாப்பாட்டைச் சூடாக்கி எனக்குப் பரிமாறிவிட்டு நான் சாப்பிட்டு முடிக்கும்வரை அருகில் அமைதியாகப் பாத்துக்கொண்டிருப்பாள். அவள் கால்கள் குளிரை விரட்டுவதற்காக ஒன்றோடு ஒன்று உரசுவது தெளிவாகக் கேட்கும்.

„இன்றும் இவ்வளவு நேரம் சென்று வந்திருக்கிறாயே?!“
„அவ்வளவுதான் வேறு எதுவுமே பேசுவதில்லை. நான் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில்தான் அவளுக்கு எவ்வளவு திருப்தி.அதுவும் இரவு இரண்டரை மணி. கடும்குளிர்.. நான் கட்டிலில் அயரும்போதும் அவளது நடமாட்டம் சமையலறையில் கேட்கும். பிறகு அவளும் படுத்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு இரவிலும் இப்படித்தான் இரவு இரண்டரை மணி . அவள்  அதே வரிகளைச் சொல்வதும் எனக்கு உணவு பரிமாறுவதும் என்னால் அதை நிறுத்தவும் முடியவில்லை. அம்மாவால் தன்னை மாற்றிக்கொள்ளவும் முடியவில்லை.“

எதிர்ப்புற வாங்கில் அமைதியைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை.
அவன் அவர்களை நோக்கினான். அவர்கள் அவனது பார்வையைச் சந்திக்கத் துணியவில்லை. அவன் அந்த வெள்ளைநிற வட்டக் கடிகாரத்தை நோக்கினான். அது இரண்டரையில் நின்று போயிருந்தது.

„எனக்கு இப்போது புரிகிறது. இதுதான் சொக்கம் என்பது. இதுவரை கதைகளில் படித்த அந்த சொர்க்கம் இதுதான். தினமும் இரவு இரண்டரை மணிக்கு...!
திரும்பவும் அந்தப் பெண்குரல் அச்சத்தோடு-
“அப்படியானால் உன் குடும்பம்...?”
அவள் நிறுத்திக்கொண்டாள். அமைதி. அவன் நகைத்துக்கொண்டான்
“நீங்கள் என்னுடைய அம்மாவையும் அப்பாவையும்தான் கேட்கிறீர்கள். அவர்களும்தான். இந்த மணிக்கூட்டைத்தவிர ஒன்றுமே மிச்சமில்லை. எல்லாமே போய்விட்டன.!”
-அவன் ஒவ்வொருவராகப் பார்த்துப் புன்னகைத்தான்.
வேதனை தெரிந்தது. அவனை நேரடியாகப் பார்க்கும் தைரியம் அவர்களுக்கு இன்னும் இல்லை.

அவன் நகைத்தவாறே மணிக்கூட்டை உயரே தூக்கி அசைத்துக்கொண்டான்.
“ஆம் எல்லாமே போய்விட்டன..இந்தச் சுவர் மணிக்கூட்டைத தவிர.!”
மேலே எதுவும் பேசவில்லை.
அவன் முகம் மீண்டும் வயதானதுபோல் மாறிக்கொண்டது. அவர்கள் இன்னும் தங்கள் சப்பாத்துக்களையும் குழந்தைகளையும் அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தங்கள் சப்பாத்துக்களையோ குழந்தைகளையோ கூடக் காணவில்லை. அவர்கள் அவன் சொன்ன அந்தச் சொர்க்கத்தை தங்களிடம் தேடிக்கொண்டிருந்தார்கள்.



இந்தக் கதை பற்றி-

ஜேர்மன் எழுத்தாளர்  wolfgang Borchert 1921-1947 இரண்டாம் உலகப் போரின் பின்பு எழுதிய Küchenuhr  என்ற சிறுகதையின் வடிவமே இது.
இந்தக்கதையை எழுதும்போது தன்னுடைய இருபதுகளின் கடைசிக் கட்டங்களில் வாழ்ந்திருந்த அவர் வெகு இளமையில் இறந்துபோனார். இவரது படைப்புக்கள் இக்கால ஜெர்மன் இலக்கியத்தில் தரமானவையாக மதிக்கப்படுகின்றன.

(பூவரசு 1991 வைகாசி-ஆனி இதழில் பிரசுரமானது).


Samstag, 4. Oktober 2014

என்னோடு பூவரசு!





மட்டுவில் ஞானக்குமாரன்



பூவரசு சஞ்சிகை என்பது இலக்கியப் பரப்பிலே தனக்கென தடம் பதித்த ஒரு ஆவரசு ஆகும். 
நூறாவது மலரை வாழ்த்தும் பேறு எனக்கும் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி. நூறாவது இதழ் என்பது ஏதோ விரல்களை மடித்துவிட்டு எண்ணிக் கொள்ளும் இலகுவான காரியமல்ல. வீட்டைக் கட்டிப்பார் கலியாணத்தைப் பண்ணிப்பார் என்று பெரியவர் கூறுவதைப் போல ஒரு சஞ்சிகையை நடாத்திப் பார் என்று தான் நான் கூறுவேன் அவ்வளவு தூரத்திற்குக் கடினமான பணி இது

           அன்றொரு மாலை என் காதுகளுக்குள் வந்து விழுகிறது சுடு நீராக ஒரு செய்தி! இந்த இதழோடு பூவரசு நிறுத்தப்படுகிறதாம் என்கிறது அச்செய்தி.  மறுத்தேன் அதை! சாத்தியமில்லையே! கடல் வற்றப்போகுதென்று யார் நாள் குறித்துக் கொண்டது. எழுதிய கையும் பேசிய வாயும் ஓயாது ஒருநாளும் என்பது பூவரசு பற்றிச் சொன்னவருக்கு தெரியாது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.  ஆதவன் மேற்கே உதயமாகும் ஓரு நாளிலே இதை வந்து சொன்னால் நானும் நம்பி இருப்பேன் தம்பி! என்று சொன்னவருக்குச் சொன்னேன். எனது நான்குவயது மகன் பிறைநிலவைப் பார்த்து நிலா உடைந்து விட்டதென்று சொன்னதைப் போலல்லவா இது இருக்கிறது?! பகற்பொழுதிலே கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங்களைப் பார்த்து இனி அவை வாராது என்பதை காண்பிக்கும் ஒருவன் போலவே தென்பட்டது இந்தச் செய்தியும் எனக்கு.  இருந்தாலும் உறுதிப் படுத்துவதற்காக விழைந்தேன்.

பூவரசு! 
-மேலைத் தேசத்திற்கு நான் வந்து எழுதிய முதலாவது சஞ்சிகை.
எனது இதயப்பாத்திரம் நிரம்பி வழிய வழிய எண்ணங்களை சேர்த்து வைத்துக் கொண்டு நான் திரிந்தபோது, எனது சிறகுகள் சோகக் கண்ணீரிலே நனைந்து தனிமைத் தீவிலே நான் தரை இறங்கியபோது எனக்கு சாமரம் வீசியவை இரண்டு: ஒன்று எனது தந்தையிடம் இருந்து வரும் கடிதம் மற்றையது பூவரசு சஞ்சிகை.  
பத்துமாதத்தை எட்டிய நிறைமாதக் கர்ப்பிணி தனது மகவை வெளித்தள்ளத் துடிப்பது போலவே எனது கருத்துக்கள் சித்தனைகளை யாரிடமாவது பங்கிட வேண்டி நான் திரிந்தபோது அவற்றைப் பெத்துப்போடவும் சமுகத்தோடு ஒட்டி உறவாடவும் இடம் தந்த பூவரசு இத்துப் போவதை அறிந்து சும்மா விடுவதா?!

இந்துமகேஷ் அண்ணாவுக்கும் எனக்கும் வாதம் - வாக்குவாதம்! 
எள்ளளவேனும் என் மனது புண்பட்டுவிடக் கூடாது என்கிற கரிசனையில் அவரும், துரோணரின் நிழல்கூட காயப்பட்டுவிடக்கூடாது என்கின்ற ஏகலைவனின் ஏக்கத்துடன் அவதானமாக நானும் அட்டைக்கத்தியால் சண்டையிடும் சிறுவர்போல காயம்படாமல் நெட்டை நேரம் கருத்துப் போர் செய்தோம்.
தனது முடிவிலே மாற்றம் இல்லை என்பதே உறுதியானபோது தோற்றுவிடுவேன் என்று தெரிந்தும் காற்றோடு மோதும் சிறு தீபம் போல மீண்டும் எனது நியாயங்களை நிறுத்தினேன். இறுதியிலே தோற்று விட்ட உணர்வோடு கண்ணாடிக்கும் காயமில்லாது பிரியும் விம்பம் போல தொடர்பை நான் துண்டிக்கிறேன்.
நீண்ட நாட்கழித்து தபாலிலே வருகிறது புதிதாக ஒரு பூவரசு. 
மாணவனை தோற்க வைக்கக்கூடாது என்கிற ஒரு ஆசிரியரின் கனிவை அதிலே பார்த்தேன் 
வென்றது நான் என்று ஏற்றுக் கொண்டு தந்த பட்டயம் போலவே அந்தப் பூவரசு இப்போது எனக்குத் தோன்றியது.
தொடர்ந்து வரவேண்டும் பூவரசு எனும் இலக்கியக் களிறு, இந்துமகேஷ் எனும் பாகனை ஏற்றி. நாமும் வாழ்த்துவோம் அவர் பணி சாற்றி!


(பூவரசு 100வது இதழில் -ஆடி ஆவணி 2006- வெளியானது)