மட்டுவில் ஞானக்குமாரன்
பூவரசு சஞ்சிகை என்பது இலக்கியப் பரப்பிலே தனக்கென தடம் பதித்த ஒரு ஆவரசு ஆகும்.
நூறாவது மலரை வாழ்த்தும் பேறு எனக்கும் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி. நூறாவது இதழ் என்பது ஏதோ விரல்களை மடித்துவிட்டு எண்ணிக் கொள்ளும் இலகுவான காரியமல்ல. வீட்டைக் கட்டிப்பார் கலியாணத்தைப் பண்ணிப்பார் என்று பெரியவர் கூறுவதைப் போல ஒரு சஞ்சிகையை நடாத்திப் பார் என்று தான் நான் கூறுவேன் அவ்வளவு தூரத்திற்குக் கடினமான பணி இது
அன்றொரு மாலை என் காதுகளுக்குள் வந்து விழுகிறது சுடு நீராக ஒரு செய்தி! இந்த இதழோடு பூவரசு நிறுத்தப்படுகிறதாம் என்கிறது அச்செய்தி. மறுத்தேன் அதை! சாத்தியமில்லையே! கடல் வற்றப்போகுதென்று யார் நாள் குறித்துக் கொண்டது. எழுதிய கையும் பேசிய வாயும் ஓயாது ஒருநாளும் என்பது பூவரசு பற்றிச் சொன்னவருக்கு தெரியாது போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆதவன் மேற்கே உதயமாகும் ஓரு நாளிலே இதை வந்து சொன்னால் நானும் நம்பி இருப்பேன் தம்பி! என்று சொன்னவருக்குச் சொன்னேன். எனது நான்குவயது மகன் பிறைநிலவைப் பார்த்து நிலா உடைந்து விட்டதென்று சொன்னதைப் போலல்லவா இது இருக்கிறது?! பகற்பொழுதிலே கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங்களைப் பார்த்து இனி அவை வாராது என்பதை காண்பிக்கும் ஒருவன் போலவே தென்பட்டது இந்தச் செய்தியும் எனக்கு. இருந்தாலும் உறுதிப் படுத்துவதற்காக விழைந்தேன்.
பூவரசு!
-மேலைத் தேசத்திற்கு நான் வந்து எழுதிய முதலாவது சஞ்சிகை.
எனது இதயப்பாத்திரம் நிரம்பி வழிய வழிய எண்ணங்களை சேர்த்து வைத்துக் கொண்டு நான் திரிந்தபோது, எனது சிறகுகள் சோகக் கண்ணீரிலே நனைந்து தனிமைத் தீவிலே நான் தரை இறங்கியபோது எனக்கு சாமரம் வீசியவை இரண்டு: ஒன்று எனது தந்தையிடம் இருந்து வரும் கடிதம் மற்றையது பூவரசு சஞ்சிகை.
பத்துமாதத்தை எட்டிய நிறைமாதக் கர்ப்பிணி தனது மகவை வெளித்தள்ளத் துடிப்பது போலவே எனது கருத்துக்கள் சித்தனைகளை யாரிடமாவது பங்கிட வேண்டி நான் திரிந்தபோது அவற்றைப் பெத்துப்போடவும் சமுகத்தோடு ஒட்டி உறவாடவும் இடம் தந்த பூவரசு இத்துப் போவதை அறிந்து சும்மா விடுவதா?!
இந்துமகேஷ் அண்ணாவுக்கும் எனக்கும் வாதம் - வாக்குவாதம்!
எள்ளளவேனும் என் மனது புண்பட்டுவிடக் கூடாது என்கிற கரிசனையில் அவரும், துரோணரின் நிழல்கூட காயப்பட்டுவிடக்கூடாது என்கின்ற ஏகலைவனின் ஏக்கத்துடன் அவதானமாக நானும் அட்டைக்கத்தியால் சண்டையிடும் சிறுவர்போல காயம்படாமல் நெட்டை நேரம் கருத்துப் போர் செய்தோம்.
தனது முடிவிலே மாற்றம் இல்லை என்பதே உறுதியானபோது தோற்றுவிடுவேன் என்று தெரிந்தும் காற்றோடு மோதும் சிறு தீபம் போல மீண்டும் எனது நியாயங்களை நிறுத்தினேன். இறுதியிலே தோற்று விட்ட உணர்வோடு கண்ணாடிக்கும் காயமில்லாது பிரியும் விம்பம் போல தொடர்பை நான் துண்டிக்கிறேன்.
நீண்ட நாட்கழித்து தபாலிலே வருகிறது புதிதாக ஒரு பூவரசு.
மாணவனை தோற்க வைக்கக்கூடாது என்கிற ஒரு ஆசிரியரின் கனிவை அதிலே பார்த்தேன்
வென்றது நான் என்று ஏற்றுக் கொண்டு தந்த பட்டயம் போலவே அந்தப் பூவரசு இப்போது எனக்குத் தோன்றியது.
தொடர்ந்து வரவேண்டும் பூவரசு எனும் இலக்கியக் களிறு, இந்துமகேஷ் எனும் பாகனை ஏற்றி. நாமும் வாழ்த்துவோம் அவர் பணி சாற்றி!
(பூவரசு 100வது இதழில் -ஆடி ஆவணி 2006- வெளியானது)
Keine Kommentare:
Kommentar veröffentlichen