நேற்று இன்று நாளை
-இந்துமகேஷ்
"நேற்றுப்போனார்!" என்பது எங்கள் மூத்த சந்ததியின் கதை.
நேற்றுப் பிறந்தோம் - இன்று வாழ்கிறோம் - நாளை போவோம்!
-இது எங்கள் கதை.
நேற்று என்பது கனவு
நாளை என்பது எதிர்பார்ப்பு
இன்று என்பதே வாழ்வு.
அதனால்-
நாம் இன்றைக்கு வாழ்ந்தாகவேண்டும்.
ஆனால் இந்த இன்றைக்கு என்பதும் நாளைக்கு நேற்றாகப் போய்விடும்.
நாளைக்கும் நாங்கள் உயிரோடு இருந்தால் -
இருப்போம் என்ற நம்பிக்கையே - நாளை.
இருந்தோம் என்கின்ற அத்தாட்சியே நேற்று.
இருக்கிறோம் என்கின்ற நிதர்சனமே இன்று
நேற்றுகள் எத்தனையோ நமக்கு வந்து போயிற்று. நாளைகள் எத்தனையோ நமக்கு வரலாம் இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதே உண்மை.
நாளைகள் நமக்கு வராமல் போனாலும்
நேற்று நாங்கள் இருந்தோம் என்பதே சரித்திரம்.
இந்த நேற்றுகள் என்பதும் நாளைக்கு நினைக்கையில் இன்றுதான்.
இன்று என்பது நாளைக்கு நேற்றாகப் போவதைப்போல.
நேற்று நாங்கள் எங்களைப் பெற்றவர்களோடு இருந்தோம்.
இன்று நாங்கள் நாங்கள் பெற்றவர்களோடு இருக்கிறோம்.
நாளை நாங்கள் இல்லாமல் நாங்கள் பெற்றவர்கள் இருப்பார்கள்.
அப்போது அவர்களுக்கு நாங்கள் நேற்றைய மனிதர்கள்.
அதற்குப்பிறகு எங்களைப்பர்றி நினைக்க அவர்களுக்கு அவசியமில்லை.
ஏனெனில் நாங்கள் என்பது நேற்று.
இன்று என்பது அவர்கள்.
நாளை என்பது அவர்களது மக்கள்.
ஆக-
நேற்று இன்று நாளை என்பது மனித வாழ்க்கைத் தொடர்.
இதில்-
இன்று என்பதே நிதர்சனம்.
நாங்கள் இழந்துபோன நேற்றுகளை எண்ணிக் கவலைப் படுவதாலும் வரப்போகிற நாளைகளுக்காக காத்திருப்பதாலும் நாம் எதைச் சாதித்துவிடப் போகிறோம்{
அதனால் இன்றாக இருக்கிற இன்றைக்கே உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். இன்று நேற்றாகுமுன் இன்றையப் பொழுதை நாளையாக எண்ணிக்கொள்ளுங்கள்.
நாளை நமதே என்று இன்று நாம் சும்மா இருந்தால் இன்று நேற்றாகும்போது நாளைய தலைமுறை நம்மை ஏளனம் செய்யும்.
இன்று எமதே இன்று எமதே என்று எழுக!
(பூவரசு 1991 ஆடி ஆவணி இதழில் வெளியானது)
Keine Kommentare:
Kommentar veröffentlichen