பாதை தெரிந்திருந்தால்
பயணம் இலகுவாகும்
சிந்தனைச் செல்வர் எழிலன்
வாழ்க்கையென்னும் தடாகத்தில் நீந்துகின்ற மனித மீன்குஞ்சுகளாகிய நம்மில் பலருக்கு இயல்பாகவே நமக்குள் பதிந்திருக்கும் வெற்றிக்கான தூண்டுகோலாகிய உற்சாகம் என்னும் நீச்சல் கலையைப ;பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பதால்தான் அல்லது குறைவாக இருப்பதால்தான் “நமக்கெப்படி நீந்த முடியும்?” என்கின்ற அனாவசியமான அவநம்பிக்கை நம்மில் பொதிந்து கிடக்கின்றது. அதனால்தான்; இயன்றதைக் கூடச் செய்யாதவர்களாக பலமிருந்தும் பயனற்ற முடங்களைப்போல நம்மை நாமே பலவீனப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
நமது உள்ளங்களில் பெரும் பகுதி வெறுமையாகவே இருப்பது போலவும் அவற்றுக்குள் நிறைந்திருப்பவை அநேகமாக ஏமாற்றங்களும் துயரங்களும் தளர்ச்சிகளும்தான் என்பது போலவும் நாமே நம்மைப் பற்றி தவறாக உறுதிப்படுத்திக் கொண்டு அவசியமற்ற தவறுகளுக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றோம்.
துயரமும் மகிழ்ச்சியும் செல்வமும் வறுமையும் கஷ்டமும் சுலபமும் வெற்றியும் தோல்வியும் தள்ளத் தள்ளத் தயங்காமல் திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளைப்போல நமக்கு முன்பாக எப்போதுமே மாறி மாறி வந்து போய்க் கொண்டிருப்பவை.
அவற்றைத் தள்ளி விரட்ட முயலும்போதுதான் நாம் தோற்றுப் போகின்றோம் என்பதையும் நாம் செய்ய வேண்டியது அதனைத் தள்ளி விரட்டிவிட முயற்சிப்பதல்லவென்றும் அவற்றைத் தாண்டிச் செல்வதே என்பதையும் முதன் முதலில் தெட்டத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றித் தெளிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நமது இலட்சியத்தைப் பற்றி நமக்குத் தெளிவு கிடைக்கும். எல்லாரும் ஓடுகின்றார்களே என்று நாமும் ஓடக் கூடாது. அவர்கள் ஏன் ஓடுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டு நாமும் சேர்ந்து ஓடுவதைப்பற்றிச் சிந்தித்து விட்டுப் பிறகு சரியாக முடிவெடுத்து விட்டுத்தான் ஓட வேண்டும்.
ஒரு கள்ளன் திருடிக் கொண்டு ஓடுவான். ஒரு கூட்டம் அவனைத் துரத்திக் கொண்டு ஓடும். விபரம் என்னவென்று தேடாமல் சும்மா ஓட முனைந்து நீங்கள் கள்ளனின் பக்கமாக அவனோடேயே ஓடினால் என்ன நடக்கும்? கள்ளனுக்கு விழும் உதைகளில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும். தெரிந்து கொண்டு ஓடினால்?
இதைத்தான் நான் வெற்றிக்கான அடிப்படையாக முதலில் வைத்து உங்களுடன் பேசப் போகின்றேன்.
மலையென்றால் அதில் பாறைகளும் இருக்கும் புதர்களும் இருக்கும் மரங்களும் இருக்கும் மலர்களும் இருக்கும். ஆனால் பொதுவாகப் பார்க்கையில் அது மலைதான். ஒருமைதான். ஆனால் உண்மையில் என்ன? பன்மையான பல உண்மைகளைச் சுமந்து நிற்கின்ற ஒரு பொதுச் செல்வம் அது. அல்லவா?
அதே மலையின் பாறைகளுக்குள்தான் எத்தனையோ விதவிதமான சிற்பங்கள் மறைந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றன. சரியான சிற்பியின் கை தீண்டாமையினால்தானே அவை வெறும் பாறையாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன? செய்வதைச் சரியாகச் செய்தால்?
மலர்களின் அழகை மட்டுமே நாம் பார்க்கின்ற அதே வேளையில் தேனீக்கள் எதைத் தேடிப் பார்க்கின்றன? அவற்றிற்குள் தேனை. அல்லவா? நாம் இரசிப்பதோடே நின்று விடுகின்றோம். அவை உள்நுழைந்து சேகரித்துத் தமதில்லத்துக்குள் கொட்டித் தமது சகாக்களின் மூலம் தேனாக மாற்றிக் கடைசியில் நமக்கு உணவாகவே கிடைக்கும்படி செய்து விடுகின்றனவே!
கடும் குளிகாலம் நெருங்கு முன்பாக நகரவே இயலாத மரமானது என்ன செய்கின்றது? அக்குளிர்காலம் நெருங்குமுன் கிடைக்கின்ற நீரையெல்லாம் இழுத்து உறிஞ்சிச் சேர்த்து வைத்துக் கொள்ளுகின்றது.
தனது இலைகளிலிருப்பதையும் அது விட்டு வைப்பதில்லை. அதனால்தான் இலைகள் உதிர்ந்து போகின்றன. நாம்? அந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல் “இலையுதிர் காலம்” என்று பாடம் படிப்பித்துக் கொண்டு இருக்கின்றோம்.
குளிர்காலம் வந்து போகும் வரை அது தன்னில் தானே சேர்த்து வைத்த நீரை நம்பி அதனால்தான் வாழ்ந்து கொள்கின்றது. காலம் மாறியதும் திரும்பவும் தளிர்த்து நின்று சிரித்துக் கொண்டு நிற்கின்றது.
நாமோ துன்பம் வந்ததும் என்ன செய்கின்றோம்? துவண்டு விடுகின்றோம். அது நசுக்க, நசுக்க அழுந்தி, அழுந்தி அதற்கு விட்டுக் கொடுக்கின்றோமே தவிர அதை உதைத்துத் தள்ளிவிடத் தெரியாமல் உதவிக்கு அலறுகின்றோம்.
அதையும் கூட சரியாகச் செய்யத் தெரியாமல் கடைசியில் ஏமாற்றத்துடன் “கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?” என்று கூப்பாடு போட்டு குமுறுகின்றோம்.
கடவுள் சொல்லுகின்றார்: “உனக்கு நான் தந்த மண்ணில்லையா? பதப்படுத்தி முன்னேற வழியில்லையா? எல்லாவற்றையுமே உனக்கு நான் தந்திருக்கிறேன். நீயோ முக்கியமான உனது மூளையை விட்டு விட்டு, மற்றவற்றையெல்லாம் இயக்கிக் கொண்டிருந்தால் எப்படி உருப்படுவாய்? எப்போது உருப்படுவாய்?” என்று எள்ளி நகையாடுகின்றார்.
இறைவன் நம்மைப் படைத்திருப்பது சன்னியாசிகளாக வாழ்வதற்கல்ல. சத்தியனாக அதாவது எல்லாரின் தேவைகளும் எல்லார்க்கும் கிடைக்கும்படியான சிந்தனை கொண்ட தூய மனத்தினராக வாழவே அவர் நம்மைப் படைத்திருக்கின்றார்.
கூர்ந்து அவதானித்துப் பாருங்கள். தன்னைக் கொடுத்து மற்றதை வாழ வைக்கும் உன்னதமே இறைவனது படைப்புக்களாக எங்கணும் பரவி நிற்பது தெரியும். விதை மரிக்காமல் மரம் பிறக்காது. உயிர் இழக்காமல் உயிர் பிறக்காது. இதுதான் இறைமையில் பொதிந்திருக்கும் அடிப்படை. அதாவது தூய்மையான தியாகமே தெய்வீகமானது. நிரந்தரத்தைத் தொடரச் செய்வது. நித்தியத்தை உறுதி செய்வது.
சரியான வாழ்க்கை சன்னியாசமல்ல. இன்றைய காலகட்டத்தில் எந்தச் சன்னியாசியும் உலகை விட்டு விலகுபவனாக இன்றைய உலகில் எங்குமே இல்லை. ஆலயங்களையும் தேசங்களையும் கட்டிப்பிடித்து ஆட்டம் செய்து ஆளும் வெறிக்குள் சிக்கியவனாக ஒரு சிறு மனிதனாகவே எங்கணும் அவனிருக்கின்றான்.
அதாவது உண்மையான உலகைத் துறந்த சன்னியாசிகள் இன்றைய உலகில் எங்குமே இல்லை. அந்த வேடத்தில் சன்னியாச விரோதிகளே இருக்கின்றார்கள். அதனால்தான் வெறும் கதைகளையும் நம்பிக்கைகளையும் மூலதனமாக்கி அவர்கள் பணம் பண்ணுவதிலும் பகை பண்ணி அதில் வளர்வதிலும் மட்டும் முனைப்பாக இருக்கின்றார்கள். அடங்காத மதங்கொண்ட யானையைப் போல எழுந்து நின்று மதவெறியாடுகின்றார்கள்.
அன்பே தெய்வமாம். ஆனால் பகைமையே கொள்கையாம். இது யார் தவறு? அவர்களின் தவறா? அல்லவே அல்ல. உங்களின் தவறு. நீங்கள் சிந்திக்கத் தவறுவதால் விளைந்திருக்கும் தவறு.
புரிகிறதா? நடு நிலைக்குள் நிற்க வேண்டாம். சரி நிலைக்குள் வாருங்கள். மதத்தை விட்டு விட்டு மனத்தைத் தொட்டுப் பாருங்கள். அப்போதுதான் அது புரியும்.
நாம் நாமாக அதாவது சரியான மனிதர்களாக நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தப்பிப் பிழைப்போம்.
அதற்கு அடிப்படையாக நாம் தளராமல் நிமிர்ந்து உயர்ந்து நிற்க வேண்டும். அதற்கான மிகச் சிறந்த திரவம் அதாவது “டானிக்” உற்சாகம் என்கின்ற உன்னத பானமேயாகும். அது மட்டும் உங்களுக்குள் குறையாமலேயிருந்தால் நீங்கள் விழவோ விழுத்தப்படவோ முடியவே முடியாது.
நமக்கு முன் இருக்கும் பாதை நமக்கு முதலில் தெரிவதற்கு நமது பார்வை சரியாக இருக்க வேண்டும்.
நம்மை நாம் புரிந்து கொண்டால்தான் அது நடக்கும். நடக்க முடியும்.
சரியாகச் சிந்தித்துச் சரியைக் கையிலெடுங்கள்.
நேர்மையும் உண்மையும் சத்தியமும் நம்முடனிருந்தால் அநாவசியமான மனச்சோர்வுகள் நம்மை அணுக மாட்டா. அப்போதுதான் நமது இதயங்களில் உற்சாகம் பிறக்கும்.
உற்சாகம் பிறந்தால்? பிறகென்ன? உயர்ந்தே விடலாம்.
(பூவரசு 100வது இதழில் -ஆடி-ஆவணி 2006இல்- பிரசுரமானது)
Keine Kommentare:
Kommentar veröffentlichen