Montag, 6. Oktober 2014

பூவரசு -கவிதைப் பக்கங்கள்- 4

இயற்கை


இயற்கை மிக எனக்குப் பிடிக்கும்
அதன் இயக்கங்கள் எல்லாம்
என் உணர்வுடன் கலக்கும்

பச்சை மரங்கள்போல்
என் மனம் குளிர்ந்திருக்கும்
பாதங்கள் பூமியிலே
படம் வரைந்து நடக்கும்
காற்று என் உயிரை
காதலாற் குலவும்
கண்ணீரில் மழைமேகம்
சிலநேரம் பொழியும்-அதில்
கடல்நீரின் சாயலும்
கலந்தே யிருக்கும்
என்
கற்பனைகள் வானத்தை
கைநீட்டித் தொட்டுவிடும்
அற்புதமாய் இதயத்தில்
நம்பிக்கை ஒளி வீசும்
செந்தீபோல் சிந்தனைகள்
திக்கெல்லாம் படர்ந்திருக்கும்
செழிப்பான வளங்களைப்போல்
என் உள்ளமும் உயர்ந்திருக்கும்

இயற்கை மிக எனக்குப் பிடிக்கும்
அதன் இயக்கங்கள் எல்லாம்
என் உணர்வுடன் கலக்கும்.

- ஜெகதீஸ்வரி இராஜரட்ணம்

(பூவரசு 1991  ஆடி-ஆவணி இதழில் பிரசுரமானது)

Keine Kommentare: