சிறுகதை
அவன் - அம்மா - அது
ஜெர்மன் மூலம். wolfgang Borchert (1921-1947)
தமிழில். சஞ்சயன்
அவன் தொலைவில் வரும்போதே அவர்கள் அவனைக் கண்டுகொண்டார்கள்.
அவன் அவர்களை நோக்கியே வந்துகொண்டிருக்கவேண்டும். அவர்கள் அவனை முன்பே அறிந்திருக்காவிட்டாலும்கூட அவனைப் பற்றிய ஓர் பரிச்சய உணர்வு அவர்களிடம் தொற்றிக் கொண்டுவிட்டிருந்தது.
அவனது முகம் வயதில் முதிர்ச்சியையும் அதேவேளை அவனது செய்கைகள் நடை அவனை இருபதுகளின் ஆரம்பத்திலும் காட்டின.
அவன் அவர்களை நெருங்கிவந்து எதிரே அந்தச் சீமந்து வாங்கில் அமர்ந்துகொண்டான்.
அவனை ஏதோ ஓர் உள்ளுணர்வு பலமாக ஆட்கொண்டிருந்தது.
தனது கையிலிருந்த அந்தச் சுவர் மணிக்கூண்டை அவன் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். பிறகு தன்னையறியாமலேயே அதை அவர்கள் பார்க்கும்படி தூக்கிப் பிடித்து அவர்களுக்குக் காண்பித்தான்.
„இதுதான் எங்கள் வீட்டுச் சுவர்மணிக்கூடு!“
சொல்லியவாறே எதிரில இருந்தவர்களை ஒவ்வொருவராக அவதானித்தான்.
அவர்கள் அங்கே சூரிய ஒளியில் காய்ந்துகொள்வதற்காக வந்தவர்கள்.
„எப்படியோ இதைமட்டும் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. ப்ச்..! இதுமட்டும்தான் அங்கே உருப்படியாகக் கிடந்தது. மற்ற எல்லாமே போய்விட்டன.“
அவன் அந்த வெள்ளை மணிக்கூட்டை உயர்த்திக் காட்டியவாறே அதன் நீலநிற இலக்கங்களைத் தடவிப் பார்த்துக்கொண்டான்.
„இது ஒன்றும் அழகிய பொக்கிஷமல்ல.!“
-தன்னைத்தானே நொந்துகொண்டான்.
„சாதாரண வெள்ளைச் சுவர்மணிக்கூடு. அழகிய நீலநிற இலக்கங்கள் அவ்வளவுதான்...முட்களைப் பார்த்தீர்களா? அவை மேற்கொண்டு நகர்வதுகூட இல்லை.உள்ளே இயந்திரம் உடைந்துபோய்விட்டது. ஆனால் அதை எப்போதும் இவ்வாறு பார்த்ததுதான் எனக்கு ஞாபகம். இப்போது அது ஓடுவதைக்கூட நிறுத்திவிட்டது.!“
அவன் மணிக்கூட்டை மார்போடு அணைத்துக் கொண்டான்.
„இதுமட்டும்தான் எனக்காக மிஞ்சியிருக்கிறது.!“
எதிரே அமர்ந்திருந்தவர்கள் அவனைப் பார்க்கத் துணியவில்லை.
அவர்கள் தங்கள் சப்பாத்துக்களையும் குழந்தைகளையும் அவதானிப்பதுபோலக் காட்டிக்கொண்டார்கள்.
அமைதி நிலவியது.
யாரோ சொன்னார்கள்:
„நீ எல்லாவற்றையுமே இழந்துவிட்டாய் போலிருக்கிறது.?“
„ஆமாம் எல்லாவற்றையுமே!“
அவர்கள் பேசுவது அவனுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
„எல்லாமே போய்த்தான் விட்டன. இந்த மணிக்கூடுமட்டும் எனக்காக மிஞ்சியிருக்கிறது பார்த்தீர்களா?“
-அவன் அந்த மணிக்கூட்டை உயர்த்திப் பிடித்துக்கொண்டான்.
அவன் முகத்தில் ஓர் பெருமிதம் தொற்றிக்கொண்டுவிட்டது.
„அதுகூட ஓடவில்லையே?!“
-ஓர் பெண்கரல்.
“ஆமாம் அதுவும் உடைந்துதான் போய்வி;ட்டது. அது எனக்குத் தெரியும் ஆனாலும் அது எப்போதும்போல் அழகாக இருக்கிறது. அதுமட்டுமல்ல அந்த இரகசியத்தை நான் இன்னும் உங்களுக்குச் சொல்லவே இல்லையா? எத்தனைமணி என்று அவதானித்தீர்களா? சரியாக இரண்டரையில் அது நின்றுவிட்டது. அதுதான் அந்த இரகசியம்!”
அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
திடீரென்று ஒருவர் சொன்னார்
„எனக்குப் புரிகிறது.. சரியாக இரண்டரை மணிக்கு உங்கள் வீட்டின்மேல் குண்டொன்று விழுந்திருக்கிறது அதுதான் எல்லாமே உடைந்துவிட்டன. மணிக்கூடும் இரண்டரையில் நின்றுபோய்விட்டது.!“
-அவன் விரக்தியாகத் தலையை ஆட்டிக்கொண்டான்.
„தவறு தவறு நீங்கள் இன்னும் போரையும் குண்டையும் பற்றியே பேசக்கூடாது. இது இரண்டரையோடு நின்று போனதுதான் ஆச்சரியமானது!“
அவன் சிறிது யோசித்துவிட்டுத் தொடர்ந்தான்.
„நான் தினமும் வீட்டிற்கு வரும்போது இந்த மணிக்கூட்டில் இரண்டரை மணியாகத்தான் இருக்கும். ப்ச்..! கிட்டத்தட்ட எப்போதுமே!“
அவன் மற்றவர்களை நோக்கினான்:
அவர்கள் தங்கள் பார்வையை அவனிடமிருந்து விலக்கிக்கொண்டார்கள். அவன் மணிக்கூட்டை அசைத்தவாறே தொடர்ந்தான்.
“இரண்டரை மணி... .வீட்டிற்கு வரும்போது நல்ல பசியாயிருக்கும். சரியாக இரண்டரை. நேராகச் சமையலறைக்குப் போய் இருட்டில் எதையாவது தேடிக்கொண்டிருக்கும்போதுதான் அம்மாவும் உள்ளே வந்துவிடுவாள். நான் கதவுகளை எவ்வளவோ மெதுவாக நகர்த்தித் திறந்தாலும் அவளுக்கு அது கேட்கத் தவறுவதில்லை. அம்மா உள்ளே வந்துதான் விளக்கைப் போடுவாள். அந்தச் சிவப்புக் கம்பளிச் சட்டையும் கம்பளித் துண்டும்தான் எப்போதுமே! வெளிச்சம் அவளது கண்களைக் கூசச் செய்யும். அவள் பதினோரு மணிக்கு தூங்கப் போயிருப்பாள் அவள் கால்களைப் பார்க்க எனக்குள் வேதனைதான்.
தரை சில்லிட்டிருக்கும். ஆனால் அவள் செருப்புக்களை அணியவே மாட்டாள்.
ஆமாம் அது இரவு மணி இரண்டரை.!”
„இன்றும் இவ்வளவு நேரம் சென்று வந்திருக்கிறாயே?!
„அதுமட்டும்தான் அம்மா சொல்வாள். மேலே பேசவே மாட்டாள்.
இரவுச் சாப்பாட்டைச் சூடாக்கி எனக்குப் பரிமாறிவிட்டு நான் சாப்பிட்டு முடிக்கும்வரை அருகில் அமைதியாகப் பாத்துக்கொண்டிருப்பாள். அவள் கால்கள் குளிரை விரட்டுவதற்காக ஒன்றோடு ஒன்று உரசுவது தெளிவாகக் கேட்கும்.
„இன்றும் இவ்வளவு நேரம் சென்று வந்திருக்கிறாயே?!“
„அவ்வளவுதான் வேறு எதுவுமே பேசுவதில்லை. நான் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில்தான் அவளுக்கு எவ்வளவு திருப்தி.அதுவும் இரவு இரண்டரை மணி. கடும்குளிர்.. நான் கட்டிலில் அயரும்போதும் அவளது நடமாட்டம் சமையலறையில் கேட்கும். பிறகு அவளும் படுத்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு இரவிலும் இப்படித்தான் இரவு இரண்டரை மணி . அவள் அதே வரிகளைச் சொல்வதும் எனக்கு உணவு பரிமாறுவதும் என்னால் அதை நிறுத்தவும் முடியவில்லை. அம்மாவால் தன்னை மாற்றிக்கொள்ளவும் முடியவில்லை.“
எதிர்ப்புற வாங்கில் அமைதியைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை.
அவன் அவர்களை நோக்கினான். அவர்கள் அவனது பார்வையைச் சந்திக்கத் துணியவில்லை. அவன் அந்த வெள்ளைநிற வட்டக் கடிகாரத்தை நோக்கினான். அது இரண்டரையில் நின்று போயிருந்தது.
„எனக்கு இப்போது புரிகிறது. இதுதான் சொக்கம் என்பது. இதுவரை கதைகளில் படித்த அந்த சொர்க்கம் இதுதான். தினமும் இரவு இரண்டரை மணிக்கு...!
திரும்பவும் அந்தப் பெண்குரல் அச்சத்தோடு-
“அப்படியானால் உன் குடும்பம்...?”
அவள் நிறுத்திக்கொண்டாள். அமைதி. அவன் நகைத்துக்கொண்டான்
“நீங்கள் என்னுடைய அம்மாவையும் அப்பாவையும்தான் கேட்கிறீர்கள். அவர்களும்தான். இந்த மணிக்கூட்டைத்தவிர ஒன்றுமே மிச்சமில்லை. எல்லாமே போய்விட்டன.!”
-அவன் ஒவ்வொருவராகப் பார்த்துப் புன்னகைத்தான்.
வேதனை தெரிந்தது. அவனை நேரடியாகப் பார்க்கும் தைரியம் அவர்களுக்கு இன்னும் இல்லை.
அவன் நகைத்தவாறே மணிக்கூட்டை உயரே தூக்கி அசைத்துக்கொண்டான்.
“ஆம் எல்லாமே போய்விட்டன..இந்தச் சுவர் மணிக்கூட்டைத தவிர.!”
மேலே எதுவும் பேசவில்லை.
அவன் முகம் மீண்டும் வயதானதுபோல் மாறிக்கொண்டது. அவர்கள் இன்னும் தங்கள் சப்பாத்துக்களையும் குழந்தைகளையும் அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் தங்கள் சப்பாத்துக்களையோ குழந்தைகளையோ கூடக் காணவில்லை. அவர்கள் அவன் சொன்ன அந்தச் சொர்க்கத்தை தங்களிடம் தேடிக்கொண்டிருந்தார்கள்.
இந்தக் கதை பற்றி-
ஜேர்மன் எழுத்தாளர் wolfgang Borchert 1921-1947 இரண்டாம் உலகப் போரின் பின்பு எழுதிய Küchenuhr என்ற சிறுகதையின் வடிவமே இது.
இந்தக்கதையை எழுதும்போது தன்னுடைய இருபதுகளின் கடைசிக் கட்டங்களில் வாழ்ந்திருந்த அவர் வெகு இளமையில் இறந்துபோனார். இவரது படைப்புக்கள் இக்கால ஜெர்மன் இலக்கியத்தில் தரமானவையாக மதிக்கப்படுகின்றன.
(பூவரசு 1991 வைகாசி-ஆனி இதழில் பிரசுரமானது).
Keine Kommentare:
Kommentar veröffentlichen