Donnerstag, 25. September 2014

பூவரசு- கவிதைப் பக்கங்கள் -3




பூ



இறைவன் படைப்பு-
மனிதன் பிறப்பு!
இறைவன் படைத்தான்
மனிதனுக்காய் பல படைப்பு
படைப்பிலும் பலரிடம் உள்ளது
வேற்றுமை வெறுப்பு
படைபலம் கொண்டு
நம் மண் பறித்திடவே
பகைவர்கள் எடுத்தது
படை எடுப்பு

எங்கள் நாட்டிலே
உள்ளதோ இரு இன சேர்ப்பு
இதில் நாம் சிறுபான்மையினராம்
என்றவர் சொல்லித் தள்ளினர் புறம்பு
தமிழர்க்கு உரிமைகள் மறுப்பு
சிங்களம் நமக்குத் திணிப்பு
கல்வியில் விகிதாசாரம்
என்னுமோர் பகுப்பு
கண்டதும் கொண்டோம்
நாங்கள் அங்கு மனக்கொதிப்பு

எழுந்தது இளைஞர் தம்
நெஞ்சினில் உணர்ச்சித் துடிப்பு
எங்கணும் ஒலித்தது எம்மவர்
விளைத்த போர் வெடிப்பு
போரினில் தமிழர் தம்
வாழ்வினில் விளைந்தது பாதிப்பு
புகுந்தது எங்கள் உடமையைவிட்டு
இடம் பெயர்ப்பு

மண்ணுக்கென்றே தம்
உயிரினைத் தந்தவர் நினைப்பு
வாழும்வரை எங்கள்
சந்ததிக்கே ஆழப்பதிப்பு
மானிடர் அனைவர்க்கும்
நிச்சயம் ஓhநாள் இறப்பு
மண்ணுக்கென்றே தமைத்
தந்தவர் கொள்வர் நற் சிறப்பு
விடியலுக்கே தமிழ்
நெஞ்சங்கள் கொண்டது விழிப்பு
விடியும் வரை
போரிடுவோம் அதுநம் பொறுப்பு


புஷ்பராணி ஜோர்ஜ்

(பூவரசு 1991 பங்குனி - சித்திரை இதழில் வெளியானது)

Mittwoch, 24. September 2014

பூவரசு- கவிதைப் பக்கங்கள்-2

உள்ளும் புறமும்





ஒரு இரவின் நடுநிசித் தனிமையில்
ஒரு மதுக்கோப்பையும் நானும்!

என்னைத் தேடிவர எவருமில்லை
என் மனைவி
என் மக்கள்
என் நண்பர் என்று
எவருமில்லை!
எனினும் நான் விழித்திருந்தேன்

ஒரு இரவின் நடுநிசித் தனிமையில்
ஒரு மதுக்கோப்பையும் நானும்

என் தேடுதல்கள் இங்கே
தேர்ச்சி பெறவில்லை!
என் சிந்தனைகள் இங்கே
தெளிவு பெறவில்லை!

ஒரு பொழுது
என் தொலைக்காட்சி விழித்துக்கொண்டது.
இது மேற்கத்தைய நெஞ்சங்களின விழிப்பு
இருளில்தான் இவர்கள்
விழித்துக் கொள்கிறார்கள்
இந்தத் தேசத்து மக்கள்
தமைப்பிரித்த பெரும்சுவரை
இப்போது தகர்க்கையில்
நான் மட்டும்..?

இரண்டாவது உலக மகா யுத்தத்தில்
இவர்கள் சுதந்திரத்தை இழந்தபோது
நான் பிறந்ததாய் ஓர் ஞாபகம்
என் சுதந்திரத்துக்காய்
என் தேசத்தில் என் சிறார்கள்
விழித்திருக்கையில்
நான் இங்கே ஓடி வந்தேன்
எனினும்
இவர்களும் என்னை ஒரு
சுதந்திரனாய் ஏற்கவில்லை

நானும் ஓர் அடிமையா?
இல்லை இல்லை
நிச்சயமாய் இல்லை.
இருந்தும்-
என் சுதந்திரத்தின்
பறிபோன பக்கங்களுக்காய்
பரிதவித்து நிற்கிற நான்
புரியாத ஒரு பாதைக்காய் என்
பொழுதுகளைக் கரைத்துக்கொண்டு!

எனக்குத் தெரியும்
என் தேசத்தில் என் சிறார்கள்
இனி ஒருகாலம்
இல்லையெனில்
இப்போதும் என்னை
ஏளனமாய் நினைப்பார்கள்
என்றோ ஒருநாள் ஓடிவந்தவன்
மறுபடி திரும்புவேனோ மாட்டேனோ
என்றாலும்
எனக்குள்ளே சுதந்திரமனிதனாய்
என்னை எண்ணி...

இந்த இரவின் நடுநிசித் தனிமையில்
ஒரு மதுக்கோப்பையும் நானும்!


-இளந்தீவகன்

(பூவரசு 1991 தை- மாசி இதழில் 
வெளியான கவிதை)

பூவரசு- கவிதைப் பக்கங்கள்


கவிதை-1









தொடுவானம்

கிட்டத்தில் தெரிகின்ற வானமது
நெருங்குகையில்
எட்டத்தில் போகின்ற
எழிற்கோலம்!
பட்டுப் பட்டென்றே அடித்தந்த
வான் வெளியில்
பாடிக் களிக்கின்ற
சிட்டுக்கள் அங்கே
எதைத் தேடிச் செல்கிறது?

மண்ணுக்குத் தோன்றிவந்த காலமுதல்
மனிதனவன்
எண்ணச் சிறகுகளை
விரித்துப் பறக்கின்றான்
கிட்டத்தில் நிற்கின்ற தொடுவானம்
அவனைவிட்டு
எட்டத்தில் போகின்ற
இயல்புதனைக் கண்டபின்னும்
விட்டுவிடா ஆசைகள் போல்
விரிகின்ற வானத்தில்
பட்டுப்பட்டென்றே தன்
மனச்சிறகை விரிக்கின்றான்.
தொட்டுத் தொடர்கின்றான்
தொடுவானம் சிக்கிடுமா?

விட்டுவிடா ஆசைகள் போல்
விரிகின்ற வானமது
எட்டிப் பிடித்துவிட
இன்னும் நாம் மேலே போய்...
ஓ.. அந்தத் தொடுவானம்..?


- கே.விக்கினேஷ்


(பூவரசு  1991 தை-மாசி  இதழில் 
வெளியான கவிதை)

Sonntag, 14. September 2014

பூவரசு முதல் இதழ் 1991 தை




பூவரசு இனிய தமிழ் ஏடு
முதல் இதழ்



முதல் இதழ் வெளியீட்டுவிழா ஜெர்மனி பிறேமன் நகர் ரெனேவர் கலாச்சார நிலையத்தில் (Kultur Büro - Tenever) 1991 தைப்பொங்கல் திருநாளன்று, ஒரு சிறு இலக்கிய விழாவாக அமைந்தது.



கலை இலக்கிய ஆர்வம் கொண்ட பல இதயங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பூவரசு இனிவரும் காலங்களில் தான் ஆற்றவேண்டிய பங்களிப்புக் குறித்து கவனத்தில் கொண்டது.





கலாச்சார நிலையத்தைச் சேர்ந்த ஜெர்மானிய மாது திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி இந்திராதேவி மகேஸ்வரன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைக்க திரு.மா.சுந்தரமூத்தி அவர்களது தலைமையில் விழா ஆரம்பித்தது.










தமிழ்வணக்கப் பாடல் பாடினார் திரு.க.பாலசுப்பிரமணியம்.





சிறப்புரை வழங்கியவர்களின் உரைகளிலிருந்து 
சில வார்த்தைகள்.



பூவரசு போன்ற கலை இலக்கிய முயற்சிகள் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்க்கு மிகவும் அத்தியாவசியமானது.


-திரு. எஸ்.சிவானந்தன்.





பூவரசில் சிறுவர் பகுதி, மாதர் பகுதி போன்ற அம்சங்கள் இணைக்கப்படவேண்டும். எமது சிறார்களின் தமிழ் வளர்ச்சிக்கும் பூவரசு உதவ வேண்டும்.
-திருமதி பத்மினி பரம்.





எமது மொழிவழியில் நமது மண்ணுக்குரிய உணர்வுகளோடு படைக்கப்படும் படைப்புக்களே நமது படைப்பாளர்களின் படைப்புக்களாகும். நம்மவர்களின் படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது வாசகர்களாகிய நமது கடமையாகும்.
-திரு. ஜோர்ஜ்.
பூவரசு என்கின்ற இந்தச் சஞ்சிகையின் பெயரே எம்மை எல்லாம் எங்கள் மண்ணுக்கு இழுத்துச் செல்கிறது. அது மட்டுமல்ல பூக்களுக்கெல்லாம் 
சஞ்சிகைகளுக்கெல்லாம் அரசாக தான் விளங்கப்போவதையும் அது குறிக்கிறது.

-இரா.உதயகுமார்.



பிறேமனில் தளிர்விடும் பூவரசை 

நீரூற்றி வேரூன்ற வளர்த்திடுவோம்.
நேரத்தைக் கொல்ல அல்ல 
நேரத்தை வாழவைக்க வழிதேடுவோம்

-திரு.அன்ரன் பீலிக்ஸ்








தமிழ்க் கீதங்கள் என்ற தலைப்பில் 
இனிய கானங்கள் இசைத்த 
திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் 
இரசிகர்களின் வரவேற்பை 
நிறையக் கைத்தட்டல்கள் மூலம் 
பெற்றுக்கொண்டார். 
(வளர்க அவர் இசைப்பணி)








இடைவேளைக்குப் பிறகு 
பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும் என்கின்ற தலைப்பில் கவியரங்கு இடம் பெற்றது.

செல்வன் கே.விக்கினேஷ், திருமதி ராஜினி தவராஜா,
திருமதி சித்திரா மணிவண்ணன் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றன.













திரு.எஸ்.செல்வரத்தினம்.
செல்வன் கே.முருகானந்தன் ஆகியோர் வாசகர் கருத்து வழங்கினர்.
இதழாசிரியரின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.







பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும்.
பூவரசு வெளியீட்டு விழாவில் ஒலித்த கவிதைகளில் சில துளிகள்.


.....தமிழ்மொழியின் விடிவுக்காய் 
தமைத்தரும் மக்களின்
துயரநிலை நீங்கவும் கொடிய 
அவல நிலை மாறவும்
மண்ணில் மகிழ்வான நாள் வந்துவிட
பேதமாறுதல்கள் ஓடிவிட - சேர்ந்து
பொங்கிடும் நெஞ்சங்கள்
 புது உலகு படைக்கட்டும்......
-கே.விக்கினேஷ்.






......பானையிலே பொங்கலிட்டுப்
பகிர்ந்துண்ணும் நம் தமிழர்
பேனையினால் பொங்கலிட்டுப் 
படைக்கின்ற நல்லதமிழ்
இங்கே நாம் கண்டோம்
;இதுபோலும் இனிமேலும்
பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும்......

-திருமதி ராஜினி தவராஜா






.....நகைச்சுடர் காணா நம்மக்கள்
நம்பிக்கையின் ஒளிச்சுடரில்
நலமுடனே வாழ்ந்திடவும்
நங்கை நல்லாள் தைமகளும்
நயந்தோடி வந்துவிட்டாள்
முதற் பிரசவமாம் நெற்கதிரின் 
ஆறுசுவைப் பொங்கலைப் போல் 
பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும்......

-திருமதி சித்திரா மணிவண்ணன்.



நல்ல விஷயங்களைச் சொல்கின்ற 
தரமான ஒரு பத்திரிகையை 
வளர்த்துவிட வேண்டியது 
தமிழறிந்த தமிழ்கற்ற 
ஒவ்வொருவருடைய கடமையுமாகும்..
தலைமையுரையில் திரு.மா.சுந்தமூர்த்தி அவர்கள்.





விழாவில் கலந்து சிறப்பித்த அன்பு நெஞ்சங்களுக்கும் 
பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வரவை மகிழ்வோடு ஏற்றுள்ள 
வாசக நெஞ்சங்களுக்கும்
எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.
-இதழாசிரியர்.



புகைப்படங்கள்: ஜெகா

Montag, 8. September 2014

சலிப்பு எதற்கு?


ஒரு கட்டுரை
(பூவரசு முதல் இதழ் தை-1991)


சலிப்பு எதற்கு?

-இந்துமகேஷ்



பல சந்தர்ப்பங்களில் நாம் சலித்துப்போகிறோம்.

“ஓடி ஓடி உழைக்கிறேன் ஒரு பலனையும் காணோம்!”

“என் வாழ்க்கையில் எல்லாம் இருக்கிறது -நிம்மதியைத் தவிர!”

“எத்தனை மனிதர்களுடன் பழகிப் பார்த்துவிட்டேன்.. ஒருவன்கூட அல்லது ஒருத்திகூட என்மீது உள்ளன்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் எங்கள் கையில் காசிருக்கும்வரை அல்லது என்னால் ஒரு காரியம் ஆகும்வரைதான்! உலகமே வெறும் வேஷம்!

- இப்படியெல்லாம் பலரிடமிருந்து பலவகையான சலிப்புக்கள். பலசமயங்களில் நாமும் சலித்துப் போகிறோம்.
இந்தச் சலிப்பு எதனால் வருகிறது? 
காரணங்கள் பலவாக இருக்கலாம்.
ஒன்று எங்கள் எதிர்பார்ப்புப்பற்றிய எங்கள் சந்தேகம்.

நாம் ஒரு காரியத்தைத் தொடங்குகிறோம். நல்லகாரியம்தான். ஆனால் ஒத்துழைப்புத் தருவதற்கு மறுக்கின்ற சில மனிதர்கள்.. அவர்கள் முன்வைக்கின்ற அபிப்பிராயங்கள்
“எல்லாரும் தன்தன் வேலையைப் பார்க்கிறபோது உனக்குமட்டும் இந்த வீண்வேலை ஏன் தம்பி?” என்று அவர்கள் தொடங்குவார்கள்.
தாங்கள் மிக மேலான காரியங்களைச் சாதித்துவிட்டு ஓய்ந்திருப்பவர்களைப் போலக் கதை வரும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் தெரியும் - அவர் தன் காரியத்திலேயே குறியான மனிதர் என்று.
தான் தன்சுகம் என்பது அவரது குறி.
அவர் ஒருவருக்காக நாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நமது காரியம் என்னவாகும்?
சலிப்பு வருகிறது.
எடுத்துக்கொண்ட காரியத்துக்கு இந்த மனிதர் தடைக்கல்லாக நிற்கிறாரே! என்று.
இப்படிப்பட்ட தடைக்கற்களை நாம் இலகுவில் கடந்துவிட முடியாதுதான். என்றாலும் கடந்தாகவேண்டும்.
இல்லாவிட்டால் நமது சலிப்பை நாம் விரட்டிவிட முடியாது.

“ஓடி ஓடி உழைக்கிறேன் ஒரு பலனையும் காணோம்!” என்கிறோம். 
ஏன் காணோம்? எங்கள் தேவைகள் அதிகரித்துவிட்டன. தேவைகள் என்பது உணவு உடை உறைவிடம்பற்றியதல்ல. அதற்கும் மேலாய் ஆடம்பரம். ஆரவாரம்.. வெள்ளைக்காரனுக்குச் சமமமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். வெள்ளைக்காரனைவிட நாம் அதிகமாய் சாப்பிடுவதால் குடிப்பதால் உடுத்திக்கொள்வதால் ஆடம்பரமாய் வாழ்வதால் அவனைவிட நாம் உயர்ந்தவர்களாய்க் காட்டிக்கொள்ளமுடியுமா? முடியாது!
என்னதான் அவன் பாணியில் நாம் காட்டிக்கொண்டாலும் அவன் சிரிப்பதையும் ஏளனம் செய்வதையும் நாம் தடுத்துவிட முடியாது. மாறாக ஒன்று செய்யலாம்.
எங்களது பண்பாடு கலாச்சாரம்  இவைகளை அவனுக்குக் காண்பித்துப் பாருங்கள் நமக்கு ஒரு தனிமரியாதை அவனிடமிருந்து வரும்.

உடலை வருத்தி உழைக்கிறோம் - தேவைகள் தீர்வதற்காகத்தான்! தேவைகளை வளர்த்துக்கொள்ள இல்லை. இங்கே நாங்கள் கார் வாங்க முடியவில்லையே என்று கவலைப்படும்போது (அதுவும் ஒருவகைக் கவலைதான்!) காலில் செருப்புக்காக நாங்கள் கஷ்டப்பட்டோமே செருப்புக்குப் பதிலாகச் சப்பாத்துப் போட்டிருக்கிறோமே என்று சந்தோஷப்படக் கற்றுக்கொண்டு விட்டோமானால் நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பது நமக்கு விளங்கும். இதில் சலிப்படைவானேன்?

“எத்தனை மனிதர்களுடன் பழகிப்பார்த்துவிட்டேன் ஒருவன்கூட அல்லது ஒருத்தி கூட என்மீது உள்ளன்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லையே எல்லாம் எங்கள் கையில் காசிருக்கும்வரை அல்லது என்னால் ஒரு காரியம் ஆகும்வரைதான்!” என்பது நம் அடுத்த சலிப்பு.
முதலில் நம்மைச் சார்ந்தவர்களை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்: இளவயதில் புத்தகப் படிப்புக்குப் பின்னால் நாம் கற்றுக்கொள்கிற உலகப்படிப்பு இருக்கிறதே. இந்த உலகப் படிப்புக்கு மூலப் புத்தகங்கள் மனித மனங்கள்தாம்.

நம்மைப் புரிந்துகொண்டு நம்மீது அன்பு செலுத்துகிற மனிதர்கள், அல்லது நம்மால் புரிந்துகொள்ளப்பட்டு நாம் அன்பு செலுத்துகிற மனிதர்கள். இந்த இருவகை மனிதர்களுமே நமக்குத் தேவையானவர்கள்தாம். இவர்கள்தாம் எங்கள் வாழ்க்கையின் உலகப் படிப்புக்கான மூலப் புத்தகங்கள். 

“எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் என்னை எமாற்றிப்போட்டான்!” என்கின்ற வார்த்தையை நாமோ அல்லது நமக்கு எதிராக நம்மோடு பழகுகிறவர்களோ சொல்லும்போது நமக்குச் சலிப்பு வருகிறது.

அப்பா தன் வயது வந்த காலத்தில் நமக்குச் சுமையாகிவிடுவாரோ என்று அவரை  வயோதிபர் மடத்திலும், மகன் என் பேச்சைத் தட்டிவிட்டான் என்று அவனைச் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், மனைவி என்னோடு ஒட்டி வாழவில்லை என்பதால் விவாகரத்து வரையிலும் போவதைத் தடுத்து வாழ்வது நம்  பண்பு.
இந்தப் பண்புக்கு மூலவேர் ஒன்றேதான்.
அன்பு! அன்பு!! அன்பு!!!

நம்மோடு பழகுபவர்கள் அல்லது நாம் பழகுபவர்கள் நம்மில் அன்பு வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ச்சிசெய்வதை விட்டுவிட்டு நாம் உண்மையான அன்பை அவர்கள்மீது வைத்திருக்கிறோமா என்பதை ஆராய்வதே நல்லது.
நம் அன்பு உண்மையானதெனில் இதில் சலிப்பு வராது. அவர்களை நாம் ஒரு குடும்பமாக ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்கிறோம்
சலிப்பு மறைகிறது! 
மகிழ்ச்சி நிறைகிறது!



(பிரசுரம்: பூவரசு முதல் இதழ் தை-1991)

Donnerstag, 4. September 2014

இறைவனின் நாடகம் தொடராகும்!

ஒரு கவிதை
(பூவரசு முதல் இதழ் தை-1991)


இறைவனின் நாடகம் தொடராகும்


விந்தைகள் புரிகின்றாய் இறைவா!
வேடிக்கை வாழ்வுதனில்  நீ
விதிதனை அனுப்பி வைத்து எம்
விதிதனை முடித்திட நினைத்தாயோ- இந்த
மானிடப் பிறவிதனைக் கொடுத்தாயோ?

உனக்கெனக் கிடைத்தது அழியாவரம் -ஏன்
எமக்கெனக் கொடுத்தாய் அழியும் வரம்?
கணக்கொன்றைக் கொடுத்து அதன்
விடைதனை மறைத்து – ஏன்
வேள்வியின் ஆடாய் வளர்க்கின்றாய்
வெட்டிட நாள்தனைப் பார்க்கின்றாய்.?

தாயிடம் பிறந்தோம் தாலாட்டில் மகிழ்ந்தோம்
தாய்மகன் என்னும் உறவுகொண்டோம்
தனித்தனிப் பாதையில் பயணம் கண்டோம் -எம்
தாயையும் என்றோ நாம் பிரிவோம்!

ஆசைகள் மனதில் அடைக்கலம் நிலத்தில் - எம்
ஆவியை எடுத்து கூட்டை வைப்பாய் - அதை
அடக்கிட ஆளையும் அனுப்பிவைப்பாய்
அவனையும் நீயே முடித்து வைப்பாய்!

இறைவனின் நாடகம் தொடராகும் - வாழ்வு
இடைவெளிப் பாதையில் முடிவாகும்.

சித்திர புத்திரன் எழுதி வைத்தான்
சீராக கணக்கை முடித்து வைத்தான்
இளமைக்கும் முதுமைக்கும் அழிவுண்டு
இனிவரும் பிறவிக்கும் தொடருண்டு
இறைவனின் நாடகம் தொடராகும் வாழ்வு
இடைவெளிப் பாதையில் முடிவாகும்

- சிறுப்பிட்டி எஸ். தேவராஜா

(பூவரசு முதல் இதழில் தை – 1991 வெளியான கவிதை இது.








இன்று இசைத்துறையில் பிரபலமாகி இசைக்கவிஞன் - ஈழத்து இசைத் தென்றல் என்னும் பட்டங்களோடு  சிறந்த இசையமைப்பாளராகவும் திகழும் சிறுப்பிட்டி எஸ். தேவராஜா- stsstudio.com என்னும் இணையத் தளத்தின்மூலம் சமகாலக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வாழ்த்துவதன்மூலம் தாயகக் கலைஞர்கள் மத்தியில் தனித்துவமானவராகவும் திகழ்கின்றார். 

பூவரசு விழாக்களில் இடம்பெற்றிருந்த இசைநிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றியதோடு இன்றும் பூவரசின் தமிழ்ப் பணிகளைப் பெருமைப்படுத்தும்  அவரது நல்லுள்ளத்துக்கு நன்றிகள்.

- ஆசிரியர் பூவரசு

Mittwoch, 3. September 2014

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?

-பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) 





ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது. 

இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன். இணைய இதழ்களின் வரவால் இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். 

ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பணநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர். 

பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏனைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன். ”அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே!” என்று கேட்டேன். 
அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். 
என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். 
அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். 
"இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன். இளந்தலை முறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள். [திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். 
"ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி. இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை. காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன். 'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை. ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில் (Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது. 


16.10.2006

நன்றி:
http://kalapathy.blogspot.de/2006/10/blog-post_116106401618516138.html

Montag, 1. September 2014

பூவரசும் நானும்


- இந்துமகேஷ்

- பூவரசு 10வது ஆண்டு (தை-2001) நிறைவு மலரில்  வெளியான கட்டுரை -




0
பூவரசுக்கு வயது பத்து!
பத்து ஆண்டுகள்- ஒரு தசாப்தம்.
நேற்றுப் போல் இருக்கிறது என்று சொல்லும்படியாக நினைவுகள் பல, நெஞ்சத்தின் மிக அருகாமையில்...
இந்த நினைவுகளில் நீரும்உண்டு. நெருப்பும் உண்டு.

0
கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளாகப் புலம் பெயர் மண்ணில் வாசம்:
|ஏரோப்பிளேனில்| ஏறிப் பறந்தபோது சொந்த மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்படும் ஒரு சோகம். நான் ஒரு புறமும் என் எழுத்து மற்றொருபுறமுமாக திசைமாறிப் பறந்து கொண்டிருக்கிறோம் என்ற தவிப்பு.
எழுதுகோலை மறுபடி ஏந்துவேன் என்ற நினைப்பும் அங்கேயே அழிந்திருந்தது.


0
||உங்களை எழுத்தாளர் என்று அறிந்திருக்கிறேன். உங்கள் படைப்புக்களை அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் இங்குதான் சந்திக்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறது!|| என்று பேர்லினில் (1984ல்) கரம் கோர்த்துக்கொண்ட பல அன்பர்களைச் சந்தித்தபொழுதுகளில் மனது பரவசப்பட்டது உண்மை.
|ஊரிலிருந்தால் இப்படியெல்லாம் ஒன்றாகச் சந்தித்திருப்போமா?| என்று கேட்டு இந்த |அவதி| வாழ்விலும் ஆனந்தம் வந்தது.
ஆனால் மறுபடி காற்றில் மிதக்கும் காகிதங்களாய் அடிக்கடி சந்தித்துப் பிரியும் |ரயில்சினேகிதங்கள்!|

ü
ஜெர்மனியில் கையெழுத்துப்பிரதிகளாக சில நவீனங்களை நான் எழுத ஆரம்பித்த எண்பதுகளின் நடுப்பகுதிகளில் (1986-1987) ஏராளமான வாசகர்கள். அப்போதெல்லாம் வாசிப்பதற்கும் நேரமிருந்தது. தேவையிருந்தது.
ஆனால் வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன.

எங்கெங்கோ சிதறுண்டு கிடக்கும் என் வாசகர்களை, என் கலை இலக்கிய நண்பர்களை எழுத்தின் மூலம் தேடிச் சென்றடைந்துவிட வேண்டும் என்ற ஒரு ஏக்கம் என்னுள் ஒளிந்து இருந்திருக்கவேண்டும் என்று இப்போது நினக்கிறேன்.

0
இந்துமகேஷின் எழுத்துக்களைப் படிப்பவர்களோடு எழுதத் துடிக்கும் பல இளைய தலைமுறைகளைச் சந்திக்க நேர்ந்தபோதுதான்-
பூவரசு துளிர்த்தது என்னுள்.
என் எழுத்துக்களை ஓரம்கட்டிவிட்டு இளையதலைமுறைக்கு களமமைக்கும் முயற்சியாய்
-பூவரசு. (1991 தைத்திங்களில் முதல் இதழ்)


0

பூவரசு முதல் இதழில் வெளியான ஒரு கட்டுரை இது-


|நாங்களும் நானும்!|

நான்?
நான் என்கின்ற நான் யார்?
எனக்கு விடை தெரியவில்லை....
விடியும்போது விழித்து இருளும்போது உறங்கி,இடையில் இந்தப் பகல் பொழுதுகளில் கடமை என்று 
ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கிற நான்...!
எனக்குள் ளே இருக்கிற என்னை எனக்குத் தெரியவில்லை. என்னை யாரென்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ அந்த உருவத்தையும் எனக்குத்தெரியவில்லை.
எப்போதாவது என்னை நான் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது அல்லது புகைப்படத்தில் என்னைக் கண்டுகொள்கிறபோது அதுதான் நான்என்று ஊகிக்கிறேன்.
ஆனால் உண்மயில் அதுதானா நான்?
எனக்குத்தெரியவில்லை!
|நான்..?|
|நான் என்கின்ற நான் யார்?|
-உங்களைக் குழப்புகிறேனா? இல்லையே!
உங்களை எனக்குத் தெரிகிறது. என்னையும் உங்களுக்குத்தெரிகிறது.
என்னை எனக்குத்தெரியவில்லை. உங்களையும் உங்களுக்குத் தெரியவில்லை.
இப்போது உங்களுக்கு என்ன புரிகிறது?
ஒவ்வொருவரும் தனக்காக வாழ்ந்தாலும் தானாக வாழவில்லை என்பதுதானே?
நானாக இல்லாத நான் எனக்காக வாழ்வதில் என்ன பயன்?
என்னைத் தெரியாத நானும் உங்களைத் தெரியாத நீங்களும் சந்தித்துக் கொள்கிறபோது இரண்டு பேரும் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.
எதனால்..?
என் முகத்தில் வருகிற புன்னகை உங்களையும் உங்கள் முகத்தின் மலர்ச்சி என்னையும் குளிர்வூட்டுகிறது.
ஆக-
வெளியிலிருந்து,அதாவது என்னிலிருந்து நீங்களும் உங்களிலிருந்து நானும் மகிழ்ச்சியை வாங்கிக்
கொள்கிறோம். கவலகளும் அப்படித்தானே?
என்மீது சினம்கொண்டு நீங்கள் எரிந்து விழும்போது என்னைத்தெரியாத எனக்கு உங்கள்மீது கோபம் வருகிறது.
உங்களைத்தெரியாத உங்களுக்காய் நான் பரிதாபப்படுவதைவிட்டுவிட்டு, என்னைத் தெரியாத நானும் உங்களுக்கெதிராக கையைத் தூக்குகிறேனே..
இது எப்படி?
ஒட்டுமொத்தமாய் எனக்குப் புரிவது ஒன்றுதான்.
என்னைத்தெரியாத எனக்குள் நான் இருக்கிறேன்.
உங்களைத் தெரியாத உங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்.
நானாக எனக்குள்ளே இருக்கிற நானும்-நீங்களாக உங்களுக்குள்ளே இருக்கிற நீங்களும் நம்மை நாமே புரிந்துகொண்டுவிட்டால் போதும். நமக்குள்ளே இருக்கிற நாங்கள் மனிதர்கள் என்பது புரிந்துவிட்டால்-
நாங்கள் யாரென்பதில் நமக்குள்ளே முரண்பாடு இல்லை.
|நான்| என்று நீங்கள் நினைக்கிற |நீங்களும்|-
|நான்| என்று நான் நினைக்கிற |நானும்|
ஒரேவிதமானவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய சங்கதிதானே?

0
இந்தக் கட்டுரையை நான் எழுதியது ஏன் என்பது ஒரு சுவாரஸ்யமான
விஷயம்.
பொதுவாக சஞ்சிகைகளுக்கு உள்ளே இருக்கிற விடயங்களுக்காகவே அட்டைப்படத்தில்
படங்கள் இருக்கும்.
இது அட்டைப்படத்துக்காகவே எழுதப்பட்டது.
பூவரசு முதல் இதழுக்கு ஒரு அட்டைப்படம் வேண்டும்.
கண்ணா போன்ற பிரபல ஓவியர்களை நான் சந்திக்காத நேரம். சந்தித்தாலும்அவர்களிடமிருந்து
உடனடியாக ஒரு படம் வாங்கிவிட முடியுமா?
பூவரசு முதல் இதழை வெளியிட்டாகவேண்டும்.

வீட்டினுள் இருந்து |ஏதோ படம் கீறுகிறேன்| என்று என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தான் என் பெரியவன் (அப்போது அவனுக்கு வயது 13).
சற்றுநேரம் அவதானித்தேன்.
|வளரும் தலைமுறைக்காகத்தானே சஞ்சிகை ஆரம்பிக்கிறாய். இவனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப்பாரேன்!| என்று எனக்குள் இருந்த |இந்துமகேஷ்| சொன்னான்.
|வேண்டாமப்பா வேண்டாமப்பா!| என்று அவன் கையிலிருந்த படத்தோடு வீடு முழுதும் ஓடினான். ஒருவாறு பிடித்து அந்தப் படத்தை பிடுங்கிக்கொண்டேன்.
(பல காலம் பூவரசுக்கான ஆக்கங்களைப் புதிய படைப்புhளர்களிடமிருந்தும் இப்படித்தான் பிடுங்கிக் கொள்ளவேண்டியிருந்தது)
அந்த அட்டைப்படத்திற்காக நான் எழுதிய கட்டுரைதான் அது.
பின்னாளில் ஓவியக் கலைவேளால் பாராட்டுப்பெறும் அளவுக்கு |அருண்| படங்களை வரையத்தொடங்கிவிட்டான்

0

பூவரசின் முகத்துக்குப் 
பொலிவு சேர்த்தவர்கள்