Sonntag, 14. September 2014

பூவரசு முதல் இதழ் 1991 தை




பூவரசு இனிய தமிழ் ஏடு
முதல் இதழ்



முதல் இதழ் வெளியீட்டுவிழா ஜெர்மனி பிறேமன் நகர் ரெனேவர் கலாச்சார நிலையத்தில் (Kultur Büro - Tenever) 1991 தைப்பொங்கல் திருநாளன்று, ஒரு சிறு இலக்கிய விழாவாக அமைந்தது.



கலை இலக்கிய ஆர்வம் கொண்ட பல இதயங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பூவரசு இனிவரும் காலங்களில் தான் ஆற்றவேண்டிய பங்களிப்புக் குறித்து கவனத்தில் கொண்டது.





கலாச்சார நிலையத்தைச் சேர்ந்த ஜெர்மானிய மாது திருமதி வில்ரூட் கடெல்கா, திருமதி இந்திராதேவி மகேஸ்வரன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைக்க திரு.மா.சுந்தரமூத்தி அவர்களது தலைமையில் விழா ஆரம்பித்தது.










தமிழ்வணக்கப் பாடல் பாடினார் திரு.க.பாலசுப்பிரமணியம்.





சிறப்புரை வழங்கியவர்களின் உரைகளிலிருந்து 
சில வார்த்தைகள்.



பூவரசு போன்ற கலை இலக்கிய முயற்சிகள் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்க்கு மிகவும் அத்தியாவசியமானது.


-திரு. எஸ்.சிவானந்தன்.





பூவரசில் சிறுவர் பகுதி, மாதர் பகுதி போன்ற அம்சங்கள் இணைக்கப்படவேண்டும். எமது சிறார்களின் தமிழ் வளர்ச்சிக்கும் பூவரசு உதவ வேண்டும்.
-திருமதி பத்மினி பரம்.





எமது மொழிவழியில் நமது மண்ணுக்குரிய உணர்வுகளோடு படைக்கப்படும் படைப்புக்களே நமது படைப்பாளர்களின் படைப்புக்களாகும். நம்மவர்களின் படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது வாசகர்களாகிய நமது கடமையாகும்.
-திரு. ஜோர்ஜ்.
பூவரசு என்கின்ற இந்தச் சஞ்சிகையின் பெயரே எம்மை எல்லாம் எங்கள் மண்ணுக்கு இழுத்துச் செல்கிறது. அது மட்டுமல்ல பூக்களுக்கெல்லாம் 
சஞ்சிகைகளுக்கெல்லாம் அரசாக தான் விளங்கப்போவதையும் அது குறிக்கிறது.

-இரா.உதயகுமார்.



பிறேமனில் தளிர்விடும் பூவரசை 

நீரூற்றி வேரூன்ற வளர்த்திடுவோம்.
நேரத்தைக் கொல்ல அல்ல 
நேரத்தை வாழவைக்க வழிதேடுவோம்

-திரு.அன்ரன் பீலிக்ஸ்








தமிழ்க் கீதங்கள் என்ற தலைப்பில் 
இனிய கானங்கள் இசைத்த 
திருமதி வசந்தாதேவி புவனேந்திரன் 
இரசிகர்களின் வரவேற்பை 
நிறையக் கைத்தட்டல்கள் மூலம் 
பெற்றுக்கொண்டார். 
(வளர்க அவர் இசைப்பணி)








இடைவேளைக்குப் பிறகு 
பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும் என்கின்ற தலைப்பில் கவியரங்கு இடம் பெற்றது.

செல்வன் கே.விக்கினேஷ், திருமதி ராஜினி தவராஜா,
திருமதி சித்திரா மணிவண்ணன் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றன.













திரு.எஸ்.செல்வரத்தினம்.
செல்வன் கே.முருகானந்தன் ஆகியோர் வாசகர் கருத்து வழங்கினர்.
இதழாசிரியரின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.







பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும்.
பூவரசு வெளியீட்டு விழாவில் ஒலித்த கவிதைகளில் சில துளிகள்.


.....தமிழ்மொழியின் விடிவுக்காய் 
தமைத்தரும் மக்களின்
துயரநிலை நீங்கவும் கொடிய 
அவல நிலை மாறவும்
மண்ணில் மகிழ்வான நாள் வந்துவிட
பேதமாறுதல்கள் ஓடிவிட - சேர்ந்து
பொங்கிடும் நெஞ்சங்கள்
 புது உலகு படைக்கட்டும்......
-கே.விக்கினேஷ்.






......பானையிலே பொங்கலிட்டுப்
பகிர்ந்துண்ணும் நம் தமிழர்
பேனையினால் பொங்கலிட்டுப் 
படைக்கின்ற நல்லதமிழ்
இங்கே நாம் கண்டோம்
;இதுபோலும் இனிமேலும்
பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும்......

-திருமதி ராஜினி தவராஜா






.....நகைச்சுடர் காணா நம்மக்கள்
நம்பிக்கையின் ஒளிச்சுடரில்
நலமுடனே வாழ்ந்திடவும்
நங்கை நல்லாள் தைமகளும்
நயந்தோடி வந்துவிட்டாள்
முதற் பிரசவமாம் நெற்கதிரின் 
ஆறுசுவைப் பொங்கலைப் போல் 
பொங்கிடும் நெஞ்சங்கள் 
புது உலகு படைக்கட்டும்......

-திருமதி சித்திரா மணிவண்ணன்.



நல்ல விஷயங்களைச் சொல்கின்ற 
தரமான ஒரு பத்திரிகையை 
வளர்த்துவிட வேண்டியது 
தமிழறிந்த தமிழ்கற்ற 
ஒவ்வொருவருடைய கடமையுமாகும்..
தலைமையுரையில் திரு.மா.சுந்தமூர்த்தி அவர்கள்.





விழாவில் கலந்து சிறப்பித்த அன்பு நெஞ்சங்களுக்கும் 
பூவரசு இனிய தமிழ் ஏட்டின் வரவை மகிழ்வோடு ஏற்றுள்ள 
வாசக நெஞ்சங்களுக்கும்
எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.
-இதழாசிரியர்.



புகைப்படங்கள்: ஜெகா

Keine Kommentare: