- இந்துமகேஷ்
- பூவரசு 10வது ஆண்டு (தை-2001) நிறைவு மலரில் வெளியான கட்டுரை -
0
பூவரசுக்கு வயது பத்து!
பத்து ஆண்டுகள்- ஒரு தசாப்தம்.
நேற்றுப் போல் இருக்கிறது என்று சொல்லும்படியாக நினைவுகள் பல, நெஞ்சத்தின் மிக அருகாமையில்...
இந்த நினைவுகளில் நீரும்உண்டு. நெருப்பும் உண்டு.
0
கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளாகப் புலம் பெயர் மண்ணில் வாசம்:
|ஏரோப்பிளேனில்| ஏறிப் பறந்தபோது சொந்த மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்படும் ஒரு சோகம். நான் ஒரு புறமும் என் எழுத்து மற்றொருபுறமுமாக திசைமாறிப் பறந்து கொண்டிருக்கிறோம் என்ற தவிப்பு.
எழுதுகோலை மறுபடி ஏந்துவேன் என்ற நினைப்பும் அங்கேயே அழிந்திருந்தது.
0
||உங்களை எழுத்தாளர் என்று அறிந்திருக்கிறேன். உங்கள் படைப்புக்களை அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் இங்குதான் சந்திக்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறது!|| என்று பேர்லினில் (1984ல்) கரம் கோர்த்துக்கொண்ட பல அன்பர்களைச் சந்தித்தபொழுதுகளில் மனது பரவசப்பட்டது உண்மை.
|ஊரிலிருந்தால் இப்படியெல்லாம் ஒன்றாகச் சந்தித்திருப்போமா?| என்று கேட்டு இந்த |அவதி| வாழ்விலும் ஆனந்தம் வந்தது.
ஆனால் மறுபடி காற்றில் மிதக்கும் காகிதங்களாய் அடிக்கடி சந்தித்துப் பிரியும் |ரயில்சினேகிதங்கள்!|
ü
ஜெர்மனியில் கையெழுத்துப்பிரதிகளாக சில நவீனங்களை நான் எழுத ஆரம்பித்த எண்பதுகளின் நடுப்பகுதிகளில் (1986-1987) ஏராளமான வாசகர்கள். அப்போதெல்லாம் வாசிப்பதற்கும் நேரமிருந்தது. தேவையிருந்தது.
ஆனால் வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன.
எங்கெங்கோ சிதறுண்டு கிடக்கும் என் வாசகர்களை, என் கலை இலக்கிய நண்பர்களை எழுத்தின் மூலம் தேடிச் சென்றடைந்துவிட வேண்டும் என்ற ஒரு ஏக்கம் என்னுள் ஒளிந்து இருந்திருக்கவேண்டும் என்று இப்போது நினக்கிறேன்.
0
இந்துமகேஷின் எழுத்துக்களைப் படிப்பவர்களோடு எழுதத் துடிக்கும் பல இளைய தலைமுறைகளைச் சந்திக்க நேர்ந்தபோதுதான்-
பூவரசு துளிர்த்தது என்னுள்.
என் எழுத்துக்களை ஓரம்கட்டிவிட்டு இளையதலைமுறைக்கு களமமைக்கும் முயற்சியாய்
-பூவரசு. (1991 தைத்திங்களில் முதல் இதழ்)
0
பூவரசு முதல் இதழில் வெளியான ஒரு கட்டுரை இது-
பூவரசு முதல் இதழில் வெளியான ஒரு கட்டுரை இது-
|நாங்களும் நானும்!|
நான்?
நான் என்கின்ற நான் யார்?
எனக்கு விடை தெரியவில்லை....
விடியும்போது விழித்து இருளும்போது உறங்கி,இடையில் இந்தப் பகல் பொழுதுகளில் கடமை என்று
ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கிற நான்...!
எனக்குள் ளே இருக்கிற என்னை எனக்குத் தெரியவில்லை. என்னை யாரென்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ அந்த உருவத்தையும் எனக்குத்தெரியவில்லை.
எப்போதாவது என்னை நான் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது அல்லது புகைப்படத்தில் என்னைக் கண்டுகொள்கிறபோது அதுதான் நான்என்று ஊகிக்கிறேன்.
ஆனால் உண்மயில் அதுதானா நான்?
எனக்குத்தெரியவில்லை!
|நான்..?|
|நான் என்கின்ற நான் யார்?|
-உங்களைக் குழப்புகிறேனா? இல்லையே!
உங்களை எனக்குத் தெரிகிறது. என்னையும் உங்களுக்குத்தெரிகிறது.
என்னை எனக்குத்தெரியவில்லை. உங்களையும் உங்களுக்குத் தெரியவில்லை.
இப்போது உங்களுக்கு என்ன புரிகிறது?
ஒவ்வொருவரும் தனக்காக வாழ்ந்தாலும் தானாக வாழவில்லை என்பதுதானே?
நானாக இல்லாத நான் எனக்காக வாழ்வதில் என்ன பயன்?
என்னைத் தெரியாத நானும் உங்களைத் தெரியாத நீங்களும் சந்தித்துக் கொள்கிறபோது இரண்டு பேரும் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.
எதனால்..?
என் முகத்தில் வருகிற புன்னகை உங்களையும் உங்கள் முகத்தின் மலர்ச்சி என்னையும் குளிர்வூட்டுகிறது.
ஆக-
வெளியிலிருந்து,அதாவது என்னிலிருந்து நீங்களும் உங்களிலிருந்து நானும் மகிழ்ச்சியை வாங்கிக்
கொள்கிறோம். கவலகளும் அப்படித்தானே?
என்மீது சினம்கொண்டு நீங்கள் எரிந்து விழும்போது என்னைத்தெரியாத எனக்கு உங்கள்மீது கோபம் வருகிறது.
உங்களைத்தெரியாத உங்களுக்காய் நான் பரிதாபப்படுவதைவிட்டுவிட்டு, என்னைத் தெரியாத நானும் உங்களுக்கெதிராக கையைத் தூக்குகிறேனே..
இது எப்படி?
ஒட்டுமொத்தமாய் எனக்குப் புரிவது ஒன்றுதான்.
என்னைத்தெரியாத எனக்குள் நான் இருக்கிறேன்.
உங்களைத் தெரியாத உங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்.
நானாக எனக்குள்ளே இருக்கிற நானும்-நீங்களாக உங்களுக்குள்ளே இருக்கிற நீங்களும் நம்மை நாமே புரிந்துகொண்டுவிட்டால் போதும். நமக்குள்ளே இருக்கிற நாங்கள் மனிதர்கள் என்பது புரிந்துவிட்டால்-
நாங்கள் யாரென்பதில் நமக்குள்ளே முரண்பாடு இல்லை.
|நான்| என்று நீங்கள் நினைக்கிற |நீங்களும்|-
|நான்| என்று நான் நினைக்கிற |நானும்|
ஒரேவிதமானவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய சங்கதிதானே?
0
இந்தக் கட்டுரையை நான் எழுதியது ஏன் என்பது ஒரு சுவாரஸ்யமான
விஷயம்.
பொதுவாக சஞ்சிகைகளுக்கு உள்ளே இருக்கிற விடயங்களுக்காகவே அட்டைப்படத்தில்
படங்கள் இருக்கும்.
இது அட்டைப்படத்துக்காகவே எழுதப்பட்டது.
பூவரசு முதல் இதழுக்கு ஒரு அட்டைப்படம் வேண்டும்.
கண்ணா போன்ற பிரபல ஓவியர்களை நான் சந்திக்காத நேரம். சந்தித்தாலும்அவர்களிடமிருந்து
உடனடியாக ஒரு படம் வாங்கிவிட முடியுமா?
பூவரசு முதல் இதழை வெளியிட்டாகவேண்டும்.
வீட்டினுள் இருந்து |ஏதோ படம் கீறுகிறேன்| என்று என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தான் என் பெரியவன் (அப்போது அவனுக்கு வயது 13).
சற்றுநேரம் அவதானித்தேன்.
|வளரும் தலைமுறைக்காகத்தானே சஞ்சிகை ஆரம்பிக்கிறாய். இவனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப்பாரேன்!| என்று எனக்குள் இருந்த |இந்துமகேஷ்| சொன்னான்.
|வேண்டாமப்பா வேண்டாமப்பா!| என்று அவன் கையிலிருந்த படத்தோடு வீடு முழுதும் ஓடினான். ஒருவாறு பிடித்து அந்தப் படத்தை பிடுங்கிக்கொண்டேன்.
(பல காலம் பூவரசுக்கான ஆக்கங்களைப் புதிய படைப்புhளர்களிடமிருந்தும் இப்படித்தான் பிடுங்கிக் கொள்ளவேண்டியிருந்தது)
அந்த அட்டைப்படத்திற்காக நான் எழுதிய கட்டுரைதான் அது.
பின்னாளில் ஓவியக் கலைவேளால் பாராட்டுப்பெறும் அளவுக்கு |அருண்| படங்களை வரையத்தொடங்கிவிட்டான்
பூவரசின் முகத்துக்குப்
பொலிவு சேர்த்தவர்கள்
Keine Kommentare:
Kommentar veröffentlichen