Mittwoch, 24. September 2014

பூவரசு- கவிதைப் பக்கங்கள்-2

உள்ளும் புறமும்





ஒரு இரவின் நடுநிசித் தனிமையில்
ஒரு மதுக்கோப்பையும் நானும்!

என்னைத் தேடிவர எவருமில்லை
என் மனைவி
என் மக்கள்
என் நண்பர் என்று
எவருமில்லை!
எனினும் நான் விழித்திருந்தேன்

ஒரு இரவின் நடுநிசித் தனிமையில்
ஒரு மதுக்கோப்பையும் நானும்

என் தேடுதல்கள் இங்கே
தேர்ச்சி பெறவில்லை!
என் சிந்தனைகள் இங்கே
தெளிவு பெறவில்லை!

ஒரு பொழுது
என் தொலைக்காட்சி விழித்துக்கொண்டது.
இது மேற்கத்தைய நெஞ்சங்களின விழிப்பு
இருளில்தான் இவர்கள்
விழித்துக் கொள்கிறார்கள்
இந்தத் தேசத்து மக்கள்
தமைப்பிரித்த பெரும்சுவரை
இப்போது தகர்க்கையில்
நான் மட்டும்..?

இரண்டாவது உலக மகா யுத்தத்தில்
இவர்கள் சுதந்திரத்தை இழந்தபோது
நான் பிறந்ததாய் ஓர் ஞாபகம்
என் சுதந்திரத்துக்காய்
என் தேசத்தில் என் சிறார்கள்
விழித்திருக்கையில்
நான் இங்கே ஓடி வந்தேன்
எனினும்
இவர்களும் என்னை ஒரு
சுதந்திரனாய் ஏற்கவில்லை

நானும் ஓர் அடிமையா?
இல்லை இல்லை
நிச்சயமாய் இல்லை.
இருந்தும்-
என் சுதந்திரத்தின்
பறிபோன பக்கங்களுக்காய்
பரிதவித்து நிற்கிற நான்
புரியாத ஒரு பாதைக்காய் என்
பொழுதுகளைக் கரைத்துக்கொண்டு!

எனக்குத் தெரியும்
என் தேசத்தில் என் சிறார்கள்
இனி ஒருகாலம்
இல்லையெனில்
இப்போதும் என்னை
ஏளனமாய் நினைப்பார்கள்
என்றோ ஒருநாள் ஓடிவந்தவன்
மறுபடி திரும்புவேனோ மாட்டேனோ
என்றாலும்
எனக்குள்ளே சுதந்திரமனிதனாய்
என்னை எண்ணி...

இந்த இரவின் நடுநிசித் தனிமையில்
ஒரு மதுக்கோப்பையும் நானும்!


-இளந்தீவகன்

(பூவரசு 1991 தை- மாசி இதழில் 
வெளியான கவிதை)

Keine Kommentare: