ஒரு கட்டுரை
(பூவரசு முதல் இதழ் தை-1991)
சலிப்பு எதற்கு?
-இந்துமகேஷ்
பல சந்தர்ப்பங்களில் நாம் சலித்துப்போகிறோம்.
“ஓடி ஓடி உழைக்கிறேன் ஒரு பலனையும் காணோம்!”
“என் வாழ்க்கையில் எல்லாம் இருக்கிறது -நிம்மதியைத் தவிர!”
“எத்தனை மனிதர்களுடன் பழகிப் பார்த்துவிட்டேன்.. ஒருவன்கூட அல்லது ஒருத்திகூட என்மீது உள்ளன்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் எங்கள் கையில் காசிருக்கும்வரை அல்லது என்னால் ஒரு காரியம் ஆகும்வரைதான்! உலகமே வெறும் வேஷம்!
- இப்படியெல்லாம் பலரிடமிருந்து பலவகையான சலிப்புக்கள். பலசமயங்களில் நாமும் சலித்துப் போகிறோம்.
இந்தச் சலிப்பு எதனால் வருகிறது?
காரணங்கள் பலவாக இருக்கலாம்.
ஒன்று எங்கள் எதிர்பார்ப்புப்பற்றிய எங்கள் சந்தேகம்.
நாம் ஒரு காரியத்தைத் தொடங்குகிறோம். நல்லகாரியம்தான். ஆனால் ஒத்துழைப்புத் தருவதற்கு மறுக்கின்ற சில மனிதர்கள்.. அவர்கள் முன்வைக்கின்ற அபிப்பிராயங்கள்
“எல்லாரும் தன்தன் வேலையைப் பார்க்கிறபோது உனக்குமட்டும் இந்த வீண்வேலை ஏன் தம்பி?” என்று அவர்கள் தொடங்குவார்கள்.
தாங்கள் மிக மேலான காரியங்களைச் சாதித்துவிட்டு ஓய்ந்திருப்பவர்களைப் போலக் கதை வரும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் தெரியும் - அவர் தன் காரியத்திலேயே குறியான மனிதர் என்று.
தான் தன்சுகம் என்பது அவரது குறி.
அவர் ஒருவருக்காக நாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நமது காரியம் என்னவாகும்?
சலிப்பு வருகிறது.
எடுத்துக்கொண்ட காரியத்துக்கு இந்த மனிதர் தடைக்கல்லாக நிற்கிறாரே! என்று.
இப்படிப்பட்ட தடைக்கற்களை நாம் இலகுவில் கடந்துவிட முடியாதுதான். என்றாலும் கடந்தாகவேண்டும்.
இல்லாவிட்டால் நமது சலிப்பை நாம் விரட்டிவிட முடியாது.
“ஓடி ஓடி உழைக்கிறேன் ஒரு பலனையும் காணோம்!” என்கிறோம்.
ஏன் காணோம்? எங்கள் தேவைகள் அதிகரித்துவிட்டன. தேவைகள் என்பது உணவு உடை உறைவிடம்பற்றியதல்ல. அதற்கும் மேலாய் ஆடம்பரம். ஆரவாரம்.. வெள்ளைக்காரனுக்குச் சமமமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். வெள்ளைக்காரனைவிட நாம் அதிகமாய் சாப்பிடுவதால் குடிப்பதால் உடுத்திக்கொள்வதால் ஆடம்பரமாய் வாழ்வதால் அவனைவிட நாம் உயர்ந்தவர்களாய்க் காட்டிக்கொள்ளமுடியுமா? முடியாது!
என்னதான் அவன் பாணியில் நாம் காட்டிக்கொண்டாலும் அவன் சிரிப்பதையும் ஏளனம் செய்வதையும் நாம் தடுத்துவிட முடியாது. மாறாக ஒன்று செய்யலாம்.
எங்களது பண்பாடு கலாச்சாரம் இவைகளை அவனுக்குக் காண்பித்துப் பாருங்கள் நமக்கு ஒரு தனிமரியாதை அவனிடமிருந்து வரும்.
உடலை வருத்தி உழைக்கிறோம் - தேவைகள் தீர்வதற்காகத்தான்! தேவைகளை வளர்த்துக்கொள்ள இல்லை. இங்கே நாங்கள் கார் வாங்க முடியவில்லையே என்று கவலைப்படும்போது (அதுவும் ஒருவகைக் கவலைதான்!) காலில் செருப்புக்காக நாங்கள் கஷ்டப்பட்டோமே செருப்புக்குப் பதிலாகச் சப்பாத்துப் போட்டிருக்கிறோமே என்று சந்தோஷப்படக் கற்றுக்கொண்டு விட்டோமானால் நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பது நமக்கு விளங்கும். இதில் சலிப்படைவானேன்?
“எத்தனை மனிதர்களுடன் பழகிப்பார்த்துவிட்டேன் ஒருவன்கூட அல்லது ஒருத்தி கூட என்மீது உள்ளன்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லையே எல்லாம் எங்கள் கையில் காசிருக்கும்வரை அல்லது என்னால் ஒரு காரியம் ஆகும்வரைதான்!” என்பது நம் அடுத்த சலிப்பு.
முதலில் நம்மைச் சார்ந்தவர்களை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்: இளவயதில் புத்தகப் படிப்புக்குப் பின்னால் நாம் கற்றுக்கொள்கிற உலகப்படிப்பு இருக்கிறதே. இந்த உலகப் படிப்புக்கு மூலப் புத்தகங்கள் மனித மனங்கள்தாம்.
நம்மைப் புரிந்துகொண்டு நம்மீது அன்பு செலுத்துகிற மனிதர்கள், அல்லது நம்மால் புரிந்துகொள்ளப்பட்டு நாம் அன்பு செலுத்துகிற மனிதர்கள். இந்த இருவகை மனிதர்களுமே நமக்குத் தேவையானவர்கள்தாம். இவர்கள்தாம் எங்கள் வாழ்க்கையின் உலகப் படிப்புக்கான மூலப் புத்தகங்கள்.
“எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் என்னை எமாற்றிப்போட்டான்!” என்கின்ற வார்த்தையை நாமோ அல்லது நமக்கு எதிராக நம்மோடு பழகுகிறவர்களோ சொல்லும்போது நமக்குச் சலிப்பு வருகிறது.
அப்பா தன் வயது வந்த காலத்தில் நமக்குச் சுமையாகிவிடுவாரோ என்று அவரை வயோதிபர் மடத்திலும், மகன் என் பேச்சைத் தட்டிவிட்டான் என்று அவனைச் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், மனைவி என்னோடு ஒட்டி வாழவில்லை என்பதால் விவாகரத்து வரையிலும் போவதைத் தடுத்து வாழ்வது நம் பண்பு.
இந்தப் பண்புக்கு மூலவேர் ஒன்றேதான்.
அன்பு! அன்பு!! அன்பு!!!
நம்மோடு பழகுபவர்கள் அல்லது நாம் பழகுபவர்கள் நம்மில் அன்பு வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ச்சிசெய்வதை விட்டுவிட்டு நாம் உண்மையான அன்பை அவர்கள்மீது வைத்திருக்கிறோமா என்பதை ஆராய்வதே நல்லது.
நம் அன்பு உண்மையானதெனில் இதில் சலிப்பு வராது. அவர்களை நாம் ஒரு குடும்பமாக ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்கிறோம்
சலிப்பு மறைகிறது!
மகிழ்ச்சி நிறைகிறது!
(பிரசுரம்: பூவரசு முதல் இதழ் தை-1991)
Keine Kommentare:
Kommentar veröffentlichen