Donnerstag, 4. September 2014

இறைவனின் நாடகம் தொடராகும்!

ஒரு கவிதை
(பூவரசு முதல் இதழ் தை-1991)


இறைவனின் நாடகம் தொடராகும்


விந்தைகள் புரிகின்றாய் இறைவா!
வேடிக்கை வாழ்வுதனில்  நீ
விதிதனை அனுப்பி வைத்து எம்
விதிதனை முடித்திட நினைத்தாயோ- இந்த
மானிடப் பிறவிதனைக் கொடுத்தாயோ?

உனக்கெனக் கிடைத்தது அழியாவரம் -ஏன்
எமக்கெனக் கொடுத்தாய் அழியும் வரம்?
கணக்கொன்றைக் கொடுத்து அதன்
விடைதனை மறைத்து – ஏன்
வேள்வியின் ஆடாய் வளர்க்கின்றாய்
வெட்டிட நாள்தனைப் பார்க்கின்றாய்.?

தாயிடம் பிறந்தோம் தாலாட்டில் மகிழ்ந்தோம்
தாய்மகன் என்னும் உறவுகொண்டோம்
தனித்தனிப் பாதையில் பயணம் கண்டோம் -எம்
தாயையும் என்றோ நாம் பிரிவோம்!

ஆசைகள் மனதில் அடைக்கலம் நிலத்தில் - எம்
ஆவியை எடுத்து கூட்டை வைப்பாய் - அதை
அடக்கிட ஆளையும் அனுப்பிவைப்பாய்
அவனையும் நீயே முடித்து வைப்பாய்!

இறைவனின் நாடகம் தொடராகும் - வாழ்வு
இடைவெளிப் பாதையில் முடிவாகும்.

சித்திர புத்திரன் எழுதி வைத்தான்
சீராக கணக்கை முடித்து வைத்தான்
இளமைக்கும் முதுமைக்கும் அழிவுண்டு
இனிவரும் பிறவிக்கும் தொடருண்டு
இறைவனின் நாடகம் தொடராகும் வாழ்வு
இடைவெளிப் பாதையில் முடிவாகும்

- சிறுப்பிட்டி எஸ். தேவராஜா

(பூவரசு முதல் இதழில் தை – 1991 வெளியான கவிதை இது.








இன்று இசைத்துறையில் பிரபலமாகி இசைக்கவிஞன் - ஈழத்து இசைத் தென்றல் என்னும் பட்டங்களோடு  சிறந்த இசையமைப்பாளராகவும் திகழும் சிறுப்பிட்டி எஸ். தேவராஜா- stsstudio.com என்னும் இணையத் தளத்தின்மூலம் சமகாலக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வாழ்த்துவதன்மூலம் தாயகக் கலைஞர்கள் மத்தியில் தனித்துவமானவராகவும் திகழ்கின்றார். 

பூவரசு விழாக்களில் இடம்பெற்றிருந்த இசைநிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றியதோடு இன்றும் பூவரசின் தமிழ்ப் பணிகளைப் பெருமைப்படுத்தும்  அவரது நல்லுள்ளத்துக்கு நன்றிகள்.

- ஆசிரியர் பூவரசு

Keine Kommentare: